கோமியம் குடித்தால் எலிக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்படும்!

Viduthalai
3 Min Read

அய்.அய்.டி. இயக்குநர் கருத்திற்கு டாக்டர்கள் சங்கம் எச்சரிக்கை!

சென்னை, ஜன.22 கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது என சென்னை அய்.அய்.டி. இயக்குநர் காமகோடி பேசியி ருந்தது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், அய்அய்டி இயக்குநர் காமகோடியின் பேச்சு அபத்தமானது எனவும், மாட்டின் கோமியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் கிருமிகள் உள்ளன எனவும் கூறியுள்ளார் பிரபல மருத்துவரான ரவீந்திரநாத்.

அய்.அய்.டி. இயக்குநர் வி.காமகோடி
அய்.அய்.டி. இயக்குநர் வி.காமகோடி கோசாலையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, ‘‘கோமியம் சிறந்த மருத்துவ குணத்தைக் கொண்டது. இது காய்ச்சலைக் கூட சரியாக்கும். பாக்டீரியா, பூஞ்சை பாதிப்புகளுக்கு எதிராகச் செயல்படுவதால் இதற்கு இந்த தனிச்சிறப்பு உண்டு. ஒருமுறை எனது அப்பாவுக்கு மிகுந்த காய்ச்சல் இருந்தது. அவர் கோமியத்தை குடித்தார். அவருக்கு 15 நிமிடங்களில் காய்ச்சல் விட்டுவிட்டது’’ என்று கூறியிருந்தார்.
கோமியம் குடிக்கக் கூடாது என பல மருத்துவ ஆய்வுகள் கூறியிருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக பார்க்கப்படும் சென்னை அய்.அய்.டி.யின் இயக்குநரே இப்படி பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காமகோடியின் பேச்சு அபத்தமானது!
இந்நிலையில், ‘‘அய்.அய்.டி. இயக்குநர் காமகோடியின் பேச்சு அபத்தமானது எனவும், மாட்டின் கோமியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் கிருமிகள் உள்ளன எனவும்‘‘ கூறியுள்ளார் பிரபல மருத்துவரான ரவீந்திரநாத்.
எந்தக் காய்ச்சலையும் 15 நிமிடத்தில் குணப்படுத்த முடியாது!
இதுதொடர்பாக மருத்துவர் ரவீந்தரநாத் கூறும் போது, ‘‘இது ஒரு மோசமான கருத்து; மக்கள் நலனுக்கு எதிரானது. தற்போது பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் என பல்வேறு காய்ச்சல்களால் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இது போன்ற காய்ச்சல்களை முறையாக கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால் உயிரிழப்பு ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் எந்தக் காய்ச்சலையும் 15 நிமிடத்தில் குணப்படுத்த முடியாது.

நான் சவால் விடுகிறேன்!
ஆனால், அய்.அய்.டி. இயக்குநர் காமகோடி, ‘‘எனது அப்பாவுக்கு காய்ச்சல் வந்தது, சந்நியாசி ஒருவர் கோமியம் குடிக்கச் சொன்னார்; 15 நிமிடத்தில் காய்ச்சல் சரியானது’’ எனக் கூறியிருக்கிறார். இது அபத்தம். நான் சவால் விடுகிறேன், எந்தக் காய்ச்சலையும் 15 நிமிடத்தில் சரி செய்ய முடியாது. டெங்கு காய்ச்சல் நோயாளிக்குக் கோமியம் குடிக்க வைத்து 15 நிமிடத்தில் காய்ச்சலை சரியாக்க முடியுமா? கரோனா நோயாளியை 15 நிமிடத்தில் சரியாக்க முடியுமா?

கடுமையான பின்விளைவுகள் ஏற்படும்!
இது மக்கள் மத்தியில் தவறான கருத்தை கொண்டு போய்ச் சேர்க்கும். இந்தியாவில் பாமர மக்கள் அதிகம். இன்னும் பல நோய்களுக்கு மக்கள் வழிபாட்டுத் தலங்களை நாடிச் செல்கிறார்கள். இதனால், பலர் தாமதம் காரணமாக உயிர் இழக்கிறார்கள். கோமியம் குடித்தால் காய்ச்சல் சரியாகும் என்றால், மக்கள் மருத்துவர்களை நாடிச் செல்ல மாட்டார்கள். நேராக பசு மாட்டின் கோமியத்தை எடுத்துக் குடித்துவிட்டு, வீட்டில் இருப்பார்கள். இதனால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும்.

அறிவியலுக்குப் புறம்பான கருத்தைக் கூறுவது
மிகவும் ஆபத்தானது!
எனவே, இது கடுமையான கண்டனத்திற்குரியது. இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. மிகப்பெரிய பதவியில் இருக்கக்கூடிய ஒருவர், அறிவியலுக்குப் புறம்பான கருத்தைக் கூறுவது மிகவும் ஆபத்தானது. இது கடும் கண்டனத்திற்குரியது. பசு மாட்டின் கோமியத்தில் ஏராளமான நோய்க்கிருமிகள் இருக்கின்றன. மிகவும் ஆபத்தான கிருமிகளும் உள்ளன.
குறிப்பாக ஈ-கோலி என்ற பாக்டீரியா இருக்கிறது. அந்தப் பாக்டீரியா வயிற்றுப்போக்கு, வாந்தியை உருவாக்கும். கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்ட பலர் உயிரிழக்கும் வாய்ப்புகளும் உண்டு. வயது வந்த இளைஞர்கள்கூட சரியான சிகிச்சை எடுக்கவில்லை என்றால் அவர்களுக்கு டிஹைட்ரேஷன் ஏற்பட்டு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

மேலும் இதன் மூலம் எலி காய்ச்சலும் வர வாய்ப்புள்ளது. எலிக்காய்ச்சலுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவில்லை என்றால், சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு மற்றும் பிற உடல் உறுப்புகள் பாதிப்பு ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயம் உள்ளது.
அய்.அய்.டி. ஸநாதன தன்மையில் இருந்து வெளியே வர வேண்டும்
சென்னை அய்.அய்.டி.யின் இயக்குநர் மெத்த படித்தவர். ஆனால், அவர் ஹிந்துத்வா சிந்தாந்தத்தைத் தூக்கிப் பிடிக்க வேண்டும், பசுவை உயர்த்திப் பிடிக்க வேண்டுமென இப்படி பேசியிருக்கிறார். முதலில்
அய்.அய்.டி. ஸநாதன தன்மையில் இருந்து வெளியே வர வேண்டும்” என்றார் அவர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *