தந்தை பெரியாருடைய கொள்கை என்பது நம்மை வாழ வைக்கக் கூடிய கொள்கை; சமத்துவத்தை அளிக்கக் கூடிய கொள்கை; அறிவுச் சுதந்திரத்தை அளிக்கக் கூடிய கொள்கை
பெரியார் ஒரு வாழ்க்கை நெறி! அந்நெறிப்படி வாழும் அன்புராஜா குடும்பத்தினர் எல்லாவற்றிலும் மேலும் வளரவேண்டும்!
ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் பங்கேற்ற மூத்த பெரியார் பெருந்தொண்டர்களுக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து மரியாதை (கீழவாளாடி, 8.7.2023)
லால்குடி, ஜூலை 18 தந்தை பெரியாருடைய கொள்கை என்பது நம்மை வாழ வைக்கக் கூடிய கொள்கை; நமக்கு சமத்துவத்தை அளிக்கக் கூடிய கொள்கை; நமக்கு அறிவுச் சுதந்திரத்தை அளிக்கக் கூடிய கொள்கை. பெரியார் ஒரு வாழ்க்கை நெறி. அந்த வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்துவரும் அன்புராஜா குடும்பத்தினர் எல்லாவற்றிலும் மேலும் மேலும் வளரவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘சங்கப்பிள்ளை அன்பகம்”
இல்ல அறிமுக விழா!
கடந்த 8.7.2023 அன்று காலை திருச்சி – இலால்குடி வட்டம் கீழவாளாடியில் பெரியார் பெருந்தொண்டர் சங்கப்பிள்ளை அன்பகம் இல்லத்தினை திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிமுக உரையாற்றினார்.
அவரது அறிமுக உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
அன்புராஜா இலால்குடி, புள்ளம்பாடியில் பெரியார் பயிற்சிப் பட்டறையில் பயிற்சி பெற்று மாவட்ட, மண்டல இளைஞர் அணியில் பொறுப்பாளராக இருந்தவர்.
இவர் இணையர் செல்வி, பகுத்தறிவாளர் கழகத்தில் பொறுப்பு வகித்து, தற்போது மாவட்ட மகளிர் பாசறை தலைவராக உள்ளார்.
இதைவிட எங்களுக்குப் பெரிய பெருமை வேறு இருக்க முடியாது.
ஆகவே, இந்தக் குடும்பம் ஒரு நல்ல குடும்பம் – பல்கலைக் கழகம் – ஒரு கொள்கைப் பல்கலைக் கழகம்.
சில நாள்களுக்கு முன்பு சொன்னேன், இயக்கத்தில் செய்யவேண்டிய பணி என்னவென்று சொன்னேன்.
கொடி – ஒரு செடி – படி!
நான் வரும்பொழுது என்ன செய்யவேண்டும் என்றால், கழகக் கொடி – ஒரு செடி – படி!
இம்மூன்றையும் செய்யவேண்டும் என்றேன்.
இங்கே வீட்டிற்குமுன் அய்யா சிலை – மிகப்பெரிய அளவிற்கு வீட்டிற்குமுன் கொடியேற்றினோம் – வீட்டிற்குள் சென்றவுடன் நூலகம் – படி!
இயக்கத் தோழர்கள் எப்படியெல்லாம் பக்குவப்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லும்பொழுது, இதைவிட மகிழ்ச்சி வேறு இருக்க முடியாது.
இந்தக் கொள்கைதான் நம்மை வாழ வைக்கக்கூடிய கொள்கைகள்.
நீங்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருக்க லாம்; அது உங்கள் உரிமை. எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும், நம்முடைய திராவிடர்கள் தன்மானத் திற்காக, இனமானத்திற்காக, பகுத்தறிவிற்காக, சுயமரியா தைக்காக, பெண்ணுரிமைக்காக, மூடநம்பிக்கை ஒழிப் பிற்காக நாம் இருக்கவேண்டும்.
இன்னும் நமக்கு பணிகள் நிறைய இருக்கின்றன.
மனிதாபிமானமற்ற செயல்!
காலையில் ஒரு செய்தியைப் படித்தேன். மனிதாபி மானம் இல்லாமல் வேங்கைவயலில், ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் பயன்படுத்தும் குடிதண்ணீர் தொட்டி யில், மலத்தைக் கரைக்கிறார்கள். இச்செயலை செய்தவர் களைக் கண்டுபிடிக்க அரசாங்க அதிகாரிகள் படாதபாடு படுகிறார்கள். அவர்களைக் கண்டுபிடிக்க டி.என்.ஏ. ஆய்விற்குச் சென்றிருக்கிறார்கள்.
இந்தக் காலகட்டத்திலும், சுடுகாட்டிற்குச் செல் வதற்குப் பாதை இல்லை. வாழத்தான் விடமாட்டேன் என்கிறீர்கள்; கீழ்ஜாதி என்கிறீர்கள்; தொடக்கூடாத ஜாதி என்கிறீர்கள்; படிக்கக்கூடாத ஜாதி என்கிறீர்கள்; எட்டி நில் என்று சொல்கிறீர்கள் – பெரியார் மட்டும் பிறந்திருக் காவிட்டால், நாம் இப்படி ஒன்றாக இருப்போமா?
இதுவரையில், நமக்கு யார், யார் என்ன ஜாதி என்று தெரியாது; ஒரே ஜாதிதான், அதுதான் மனித ஜாதி.
நாமெல்லாம் மனித குலத்தைச் சார்ந்தவர்கள்.
நமக்கு சமத்துவத்தை
அளிக்கக் கூடிய கொள்கை!
ஆகவேதான், இளைஞர்களே, இந்தக் கொள்கை என்பது நம்மை வாழ வைக்கக் கூடிய கொள்கை; நமக்கு சமத்துவத்தை அளிக்கக் கூடிய கொள்கை; நமக்கு அறிவுச் சுதந்திரத்தை அளிக்கக் கூடிய கொள்கை.
எனவேதான், இந்தக் கொள்கையைப் பின்பற்றினால், வீழ்ந்துவிடமாட்டோம்; கடவுள் இல்லை என்று சொல் கிறவர்கள் ஆயிற்றே; பார்ப்பனரைப்பற்றி பேசுகிறவர் கள் ஆயிற்றே என்றெல்லாம் நினைப்பார்கள்.
கடவுள் இல்லை என்று ஏன் சொல்கிறோம்? கடவுள் மேல் உள்ள கோபத்தினால் சொல்கிறோமா? இல்லையே! கடவுள் இல்லை, அதனால் இல்லை என்று சொல்கிறோம்.
கடவுள் கருணையே வடிவானவன் என்கிறான். கருணையே வடிவானவன் கரோனா காலத்தில் என்ன செய்தார்? கோவில்களையெல்லாம் பூட்டி வைத்தார்கள்; சிலைகள்மேல் போர்வையைப் போர்த்தினார்களே!
கருணையே வடிவானவன் என்று சொல்கிறீர்களே, நம்மாள் இவ்வளவு பேர் சாகிறார்களே! பூரிஜெகந்நாதர் கோவில் அருகேதான் பெரிய ரயில் விபத்து நடந்தது. இதுவரையில் காணாத அளவிற்கு 300-க்கும் மேற் பட்டோர் இறந்தனர்.
இவர்கள் பொம்மையைத் தூக்கிக் கொண்டு அலை கிறார்கள்; ‘சர்வ ஜெகன்னாதம்’ என்கிறார்கள்.
நேற்றுகூட வடலூருக்குச் சென்று, வள்ளலாரைப்பற்றி பேசிவிட்டு வந்தோம்.
பசிதான் மனிதனுக்கு அடிப்படையான விடயமாகும்!
வள்ளாலர் அவர்கள ‘சத்ய ஞான சபை”யை உரு வாக்கியது மட்டுமல்ல, ‘‘பசித்த மக்களுக்கு புசி” என்று சாப்பாடு போட்டார். இன்றைக்கும் அங்கே சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், பசிதான் மனிதனுக்கு அடிப்படையான விடயமாகும்.
தந்தை பெரியார் அவர்களின் குடிஅரசு இதழில்,
‘‘அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி
அரும்பசி எவர்க்கும் ஆற்றி
மனத்துளே பேதாபேதம்
வஞ்சனை, பொய், களவு சூது
சினத்தையும் தவிப்பாயாகில்
செய்தவம் வேறுண்டோ?”
என்ற வள்ளலாரின் பாடலை பதியச் செய்தார்.
மனிதனுக்கு அடிப்படை தேவை – மனிதன் குற்றம் செய்வதற்கே அடிப்படை காரணம் – ஒழுக்கமில்லாமல் நடந்துகொள்வதற்குக் காரணமே – பசிதான்.
பெரியார் இன்றைக்கு உலகளாவிய தத்துவமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்!
மனிதநேயத்தோடு அன்றைக்கு இந்த இயக்கத்தைத் தந்தை பெரியார் கட்டினர். பெரியார் அவர்கள் மறைந்து அரை நூற்றாண்டு ஆகிறது. பெரியார் இன்றைக்குத் தத்துவமாக உலாவிக் கொண்டிருக்கிறார். உலகளாவிய தத்துவமாக இருக்கிறார்.
அய்யா காலத்தில், டோல்கேட்டில் இருந்து தொடங்கி, நம்முடைய கொடியும், கிளைக் கழகமும் இல்லாத பகுதியே கிடையாது. அதேபோன்று, ஒவ்வொரு ஊரி லும் படிப்பகம் இருக்கிறது. போராட்டம் என்றால், புற்றீசல் போன்று கிளம்பக்கூடிய தோழர்கள் இருக்கின்ற பகுதி இது.
நீறுபூத்த நெருப்புப் போன்று இருந்தோம்;
இவையெல்லாம் இன்றைக்கு இல்லையோ என்று இடையில் நினைத்தோம். இல்லை, இல்லை, நாங்கள் எல்லாம் நீறுபூத்த நெருப்புப் போன்று இருந்தோம்; இப்பொழுது, அடுத்த தலைமுறையினரிடம் கொடுத் திருக்கின்றோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறது.
அன்புராஜா அவர்கள் மிக அழகாக இந்த வீட்டைக் கட்டியிருக்கிறார், இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டு.
‘‘கடவுளை மற – மனிதனை நினை” என்று சொன்ன தந்தை பெரியாருடைய கொள்கையை ஏற்றுக்கொண்டு, இளைஞராக இருந்து படித்து, ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டு மிகச் சிறப்பாக இரண்டு பேரும் அரசுப் பணியில் இருக்கிறார்கள்.
பெரியார் கொள்கையை ஏற்றுக்கொண்டதினால், இவர்கள் தாழ்ந்துவிட்டார்களா? இல்லையே!
இரண்டு விஷயம் கடினம் என்பார்கள்!
நடைமுறையில் இரண்டு செயல் மிகப்பெரிய அள விற்குக் கடினம் என்று நம்மை பயமுறுத்தி வைத் திருந்தார்கள்.
அது என்னவென்றால், ‘‘வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணத்தைப் பண்ணிப் பார்” என்பதுதான்.
பெரியாரின் கொள்கையைப் பின்பற்றிய எங்கள் தோழர்களான அன்புராஜா – செல்வி ஆகியோர் திரு மணத்தையும் செய்துவிட்டோம்; வீட்டையும் கட்டிவிட் டோம் என்று மிக எளிமையாக சொல்லக்கூடிய அள வில், இவ்வளவு பெரிய சாதனைகளைச் செய்திருக் கிறார்கள்.
இந்தக் கொள்கையை ஏற்றவர்கள் வீழ்ந்துவிட மாட்டார்கள், தாழ்ந்துவிடமாட்டார்கள். எப்பொழுதும் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். எங்களுடைய வாழ்க்கை என்பது திட்டமிட்ட வாழ்க்கையாகும்!
தன்மானம், தன்னம்பிக்கை, தன்னிறைவு!
ஏனென்றால், பெரியாருடைய கொள்கையை ஒருவர் உண்மையாகப் பின்பற்றினால், பெரியாருடைய சுயமரி யாதை இயக்கக் கொள்கையை, திராவிட இயக்கக் கொள்கையை ஒருவர் பின்பற்றினால் மூடநம்பிக்கைகள் இருக்காது.
எங்கே மூடநம்பிக்கைகள் இல்லையோ, அங்கே தன்னம்பிக்கை இருக்கும்.
எங்கே தன்னம்பிக்கை இருக்கிறதோ, அங்கே தன்னிறைவு ஏற்படும்.
தன்மானம், தன்னம்பிக்கை, தன்னிறைவு என்கிற மூன்றும் மிக முக்கியமானதாகும்.
அன்புராஜா போன்ற தோழர்கள் இந்தப் பகுதியில் நிறைய பேர் இருக்கிறார்கள். மாவட்டத் தலைவர் வால்டர் அவர்களானாலும், ஆல்பர்ட் அவர்களானாலும், பழைய தோழர்கள் வாழுகின்ற தோழர்களானாலும் இந்தப் பகுதிக்கு வந்து திரும்பும்பொழுது, அய்யா காலத்திலிருந்து, அன்னை மணியம்மையார் அவர்கள் காலத்திலிருந்து ஒரு பெரிய எழுச்சியைப் பெறுவோம்.
லால்குடி வட்டாரம் என்றால், மிக முக்கியமானதாகும். பயிற்சி முகாம், கழகப் பணிகள் எல்லாவற்றிற்கும்.
‘‘சங்கப்பிள்ளை அன்பகம்‘’
இயக்கம் விடுக்கின்ற எந்தக் கட்டளையாக இருந் தாலும், நம்மவர்கள் அதனை சிறப்பாக நிறைவேற்றிக் காட்டுவார்கள். அப்படிப்பட்ட ஓர் அற்புதமான பகுதியில், அய்யா சங்கப்பிள்ளை அவர்களின் பெயரில், ‘‘சங்கப்பிள்ளை அன்பகம்” என்று மிகச் சிறப்பாக இந்த வீட்டைக் கட்டியிருக்கிறார்கள்.
நம்முடைய நாட்டில் மனுதர்மத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா?
கீழ்ஜாதிக்காரனா, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் வை! அவர்கள் கட்டடங்கள் கட்டக்கூடாது; நெய் ஊற்றிக்கூட சாப்பிடக் கூடாது. குடிசை வீட்டில்தான் இருக்க வேண்டும்; நல்ல பெயர்கூட வைக்கக்கூடாது.
அதனால்தான், மண்ணாங்கட்டி, அமாவாசை என்று பெயர் இருந்த ஒரு சமுதாயத்தில், இன்றைக்கு நன்றாகப் படித்து, பட்டதாரிகளாகி, அரசு பணியில் இருக்கிறார்கள்.
இந்தக் குடும்பம் ஒரு நல்ல கொள்கைக் குடும்பமாக இன்றைக்கு வளர்ச்சியடைந்து இருக்கிறது என்றால், இதற்கு யார் காரணம்?
பெரியாரின் கொள்கையைப் பின்பற்றினால்…
பெரியார் காரணம்! பெரியார் காரணம்!! பெரியார் காரணம்!!! என்பதை மறந்துவிடாதீர்கள். பெரியாரின் கொள்கையைப் பின்பற்றினால், வாழ்க்கையில் நிச்சயம் முன்னேறலாம்.
அன்புராஜா – செல்வி ஆகியோரின் ஜாதி மறுப்புத் திருமணம் -ஜாதி மறுப்புத் திருமணம் என்றால், தங்க மெடல் வாங்கவேண்டிய திருமணம். அத்திருமணம் ஒரு மணிக்கு நடைபெற்றதால், செல்வியின் அம்மா அவர்கள், மிகவும் கவலைப்பட்டார்களாம். ஆனால், இப்பொழுது ‘‘என்னுடைய மாப்பிள்ளை போன்ற தங்கமான பிள்ளை வேறு யாரும் கிடையாது” என்று மகிழ்ச்சியாக சொல்கிறாராம்.
பெரியார் ஒரு வாழ்க்கை நெறி!
‘‘மாப்பிள்ளையைப் புகழ்ந்த மாமியார்” என்று இவர்கள் வாழுகிறார்கள் என்றால், அதுதான் இந்தக் கொள்கையினுடைய சிறப்பு. பெரியார் ஒரு வாழ்க்கை நெறி. அந்த வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்துவரும் இவர் கள் எல்லாவற்றிலும் மேலும் மேலும் வளரவேண்டும்.
இது பெரியார் இல்லம். சங்கப்பிள்ளை போன்று பல தியாகிகள் இருக்கிறார்கள். இங்கே எதிரே அமர்ந்துள்ள முதியோரைப் பார்த்தீர்களேயானால், போராட்டத்தில் பங்கேற்று சிறைச்சாலைக்குச் சென்றவர்கள். நாளைக்கும் போராட்டம் என்று அறிவித்தால், பங்கேற்கக்கூடிய வர்கள்.
அழைப்பிதழ் கொடுப்பதற்காக சென்னைக்கு வந்த பொழுது, அவர்களைக் கண்டித்தேன், ‘‘அழைப்பிதழ் கொடுப்பதற்காக சென்னைக்கு வரவேண்டுமா? இதற் காக ஏன் செலவு செய்யவேண்டும்?” என்று.
‘‘இல்லை, இல்லை, வேறு பணிகள் இருந்ததினால் வந்தோம்” என்று சொன்னார்கள்.
அய்யா – அம்மா படங்கள்தான் முக்கியம்
அழைப்பிதழைப் பார்த்தேன், ‘‘என்னுடைய படத்தை மிகப்பெரிய அளவில் அச்சிட்டிருந்தார்கள். எதற்காக என்னுடைய படத்தை இவ்வளவு பெரிதாகப் போட்டிருக்கிறீர்கள்; அய்யா – அம்மா படங்கள்தான் முக்கியம்” என்றேன்.
அவர்களுடைய அன்பினால், இன்றைக்குத் திரு விழா போன்று இந்த இல்லத் திறப்பு விழா நடைபெறுகிறது. நானும் உற்சாகத்தைப் பெறுகிறேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்பொழுது, எனக்கு வயது குறைந்து கொண்டு வருகிறதே தவிர, வயது கூடியதாகத் தெரியவில்லை.
இங்கே இளைஞர்களைப் பார்க்கும்பொழுது, மறுபடி யும் பழைய லால்குடியை நான் பார்க்கிறேன். அய்யா காலத்திலிருந்த லால்குடி நடுவில் காணாமல் போயிற்றோ என்று நினைத்தேன். வால்டர், ஆல்பர்ட் மற்றும் நம்மு டைய தோழர்கள், இளைஞர்கள் எல்லாம் சேர்ந்து, ‘‘இல்லை, இல்லை, பழைய காலத்தைத் தாண்டக் கூடிய அளவில் இருக்கிறோம்” என்று சொல்லக்கூடிய அளவில் இருக்கிறார்கள்.
துறையூர் மாவட்டத்தைத் தனியாகப் பிரித்து, மணி வண்ணன் தலைமையில், நம்முடைய இளைஞர்கள் அங்கே ஏராளமாக இருக்கிறார்கள்.
அய்யாவினுடைய நூல்கள் அளித்து பாராட்டு!
இப்படிப்பட்ட ஓர் அற்புதமான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைந்து, இந்த இல்லத்தைத் திறந்து வைப்பதோடு, இல்லத்தில் அவர்கள் நூலகம் வைத்திருக்கிறார்கள் – நான் எந்த இல்லத்தைத் திறந்து வைத்தாலும், அதில் அய்யாவினுடைய நூல்களை அந்த இல்லத்தைச் சேர்ந்தவர்களுக்கு அன்பளிப்பாக தலைமைக் கழகத்தின் சார்பாக அளித்துப் பாராட்டுவது, அவர்களுக்கு சிறப்பு செய்வது வழக்கம்.
அன்புராஜா – செல்வி ஆகியோர் நூல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொண்டு, என் உரையை நிறைவு செய்கிறேன்.
இந்தப் பகுதியில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அப்பொழுது உங்களையெல்லாம் மீண்டும் சந்திக்கிறேன்.
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிமுகவுரை யாற்றினார்.