மதுரை,ஜன.21- நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரனுடன் இருக்கும் போட்டோவை, தான் எடிட் செய்து கொடுத்ததாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியிருந்தது தமிழ்நாடு அரசியலில் பெரும் பேசுபொருள் ஆனது. இதற்கிடையே எடிட் செய்த படத்தை வைத்து ஏமாற்றிய சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது
தமிழ் சினிமாவில் வெங்காயம், பயாஸ்கோப் ஆகிய படங்களை இயக்கியவர் சங்ககிரி ராஜ்குமார். சீமான் பிரபாகரனுடன் உள்ள போட்டோவை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என்று இவர் சொன்னது பரபரப்பைக் கிளப்பியது.
எடிட் செய்யப்பட்ட போட்டோ
இது தொடர்பாக அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தொலைக்காட்சி ஒன்றில் டைட்டில் அனிமேட்டராக வேலை செய்து வந்த போது, நிகழ்ச்சி தயாரிப்பாளர் செங்கோட்டையன் என்பவர் கேட்டுக் கொண்டதால் இந்த போட்டோவை எடிட் செய்து கொடுத்ததாகக் கூறியிருந்தார். சீமானிடம் பரிசு கொடுக்கவே இந்த போட்டோவை கேட்டனர் என்றும் இதன் காரணமாகவே இருவரும் அருகருகே இருப்பதுபோல சேர்த்துக் கொடுத்தேன் என்றும் கூறியிருந்தார்.
இது மட்டுமின்றி போட்டோவை சற்று உற்றுக் கவனித்தால் நிழல் உள்ளிட்ட விஷயங்களில் எடிட் செய்யப்பட்டதில் உள்ள பிழைகள் தெரியும் என்றும் கூட அவர் கூறியிருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. பலரும் இந்த விவகாரத்தில் சீமானை மிக கடுமையாக விமர்சித்து வந்தனர். இதற்கிடையே இப்போது சீமான் மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் புகார்
எடிட் செய்யப்பட்ட போட்டோவை வைத்து ஏமாற்றிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் மதுரை மாநகர காவல் துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. வழக்குரைஞர் அஜித்குமார் என்பவர் அளித்த அந்த புகாரில், எடிட் செய்த போட்டோவை வைத்து ஏமாற்றிய சீமான், அந்த போட்டோவை எடிட் செய்து கொடுத்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் மற்றும் செங்கோட்டையன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது.
ஏமாற்றி வந்துள்ளார்
கடந்த 15 ஆண்டுகளாகப் பிரபாகரன் பெயரைக் கூறி கட்சி நடத்தி வரும் சீமான், பல இலட்சம் இளைஞர்களின் தமிழ் உணர்வைத் தூண்டி தவறான பாதையில் அழைத்துச் சென்றுகொண்டு இருக்கிறார் என்றும் பிரபாகரன் அவர்களின் நெருக்கமாக இருந்ததாகத் தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாகத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி வந்துள்ளார் என்றும் அஜித்குமார் தனது புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், பல ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களில் பொய்யான ஒளிப்படங்களை வெளியிட்டு கோடிக் கணக்கான தமிழ் மக்களின் உணர்வைப் புண்படுத்தி இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
பல கோடி திரள் நிதி
இந்த போட்டோ மூலம் தமிழ் மக்களை ஏமாற்றி, பல கோடிகளைத் திரள் நிதி மூலம் திரட்டி அரசியல் பிழைப்பு நடத்தி வருகிறார் என்றும் போலியான போட்டோவை வைத்து வெளிநாட்டு வாழ் தமிழர்களையும், இலங்கைத் தமிழர்களையும் ஏமாற்றிப் பல கோடி ரூபாய் திரள் நிதி பெற்றுப் பிழைப்பு நடத்தி வரும் சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்த போலியான ஒளிப்படத்தை உருவாக்கிக் கொடுத்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் மற்றும் செங்கோட்டையன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.