வானில் ஒரே நேர்க்கோட்டில் ஏழு கோள்களின் அணிவகுப்பு! நாளை கண்கொள்ளா காட்சி

viduthalai
2 Min Read

சென்னை,ஜன.20- வானில் ஏழு கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து வரும் அதிசயம் நாளை (21.1.2025) நிகழவிருக்கிறது.
ஏழு கோள்கள் அவற்றின் சுற்றுப்பாதையில் ஒரே நேர்க்கோட்டில் வருவதால், அவற்றை நம்மால் காண முடியும் என்பது நமக்குக் கிடைத்த நல்வாய்ப்பு என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.

வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ் மற்றும் புதன் ஆகிய கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து நிற்கும் அதிசய நிகழ்வானது நாளை ஜனவரி 21ஆம் தேதி நிகழவிருக்கிறது.

இது குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருப்பதற்குக் காரணம், இந்த கோள்கள் அனைத்தும் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருப்பது மட்டுமல்ல, அந்தக் கோள்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொலைவுகளில் சுற்றிக்கொண்டிருப்பதும்தான்.

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி முதல் நிலவுக்கு மிக அருகே வெள்ளிக் கோளானது நிலைகொண்டிருக்கிறது. அதன் பிறகு, ஜனவரி 13ஆம் தேதி முழுநிலவு நாளிலிருந்து செவ்வாய் கோளானது நெருங்கி வந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், வெள்ளியும், சனிக் கோளும் இதுவரை இல்லாத வகையில் நெருக்கமாக வந்துகொண்டிருக்கின்றன.
ஜன. 18 முதல், மாலை வேளைகளில், இவ்விரண்டு கோள்களும் ஒரே நேரத்தில் மக்களுக்குக் காட்சியளிக்கத் தொடங்கியது.

எப்போது காணலாம்?

சூரியன் மறைந்து, முழுவதும் இருள் சூழ்ந்த பிறகு உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணி முதல் பார்க்கலாம். ஆனால், வெள்ளி, சனி மற்றும் நெப்ட்யூன் கோள்கள் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவதற்கு இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு ஆகலாம். அது அவரவர் இருக்கும் இடத்தைப் பொறுத்தது. அதன் பிறகு மேலும் சில மணி நேரங்களில் செவ்வாய், வியாழன், யுரேனஸ் கோள்களும் இவற்றுடன் அணிவகுக்கும். சூரிய உதயத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பு செவ்வாய் மறைந்துவிடும்.

கோள்களின் அணிவகுப்புக்கு ஏதேனும் முக்கியத்துவம் உண்டா?

பொதுவாகவே, ஒன்றிரண்டு கோள்கள் ஒன்றாக நெருங்கி வரும். அதனை வானில் அவ்வப்போது காணலாம். ஆனால், ஒன்றல்ல இரண்டல்ல ஏழு கோள்கள் ஒன்றாக அணிவகுத்து வருவதும், இரவு நேரத்தில் பார்க்க முடிவதும் வழக்கமான ஒன்றல்ல. அபூர்வம்தான்.
எப்போதெல்லாம், வானில், இந்த கோள்களில் ஒன்றிரண்டு தென்படுகிறதோ, அவை இந்த சுற்றுப்பாதையில் பயணிக்கும் போதுதான் வானில் தெரிகிறது. இந்தப் பாதையை வைத்துத்தான், வானில் தெரிவது நட்சத்திரமா, கோள்களா என்று கண்டறிகிறார்கள்.
வெறும் கண்களால் இவற்றைக் காண வேண்டும் என்றால், வானம் தெளிவாக, இருட்டாக இருக்க வேண்டும், தொலைநோக்கி இல்லாவிட்டாலும் நெப்ட்யூனைக் காணலாம்.

மார்ச் மாத நடுவில், பகல் நேரத்தின் நீளம் நீண்டுவிடும் என்பதால், அதன்பிறகு இந்த கோள்களைக் காண்பது அரிதாகிவிடும். எனவே, பிப்ரவரி மாத துவக்க மற்றும் மத்திய வாரங்கள் இதனைக் காண ஏற்றதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *