நாட்டறம்பள்ளி அருகே 600 ஆண்டுகள் பழைமையான போர் வீரர்கள் நடுகல் கண்டெடுப்பு கடவுள் சிலைகள் அல்ல!

viduthalai
2 Min Read

திருப்பத்தூா்,ஜன.20- திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே நடுகல் ஒன்று இருப்பது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியா் ஆ.பிரபு, சமூக ஆா்வலா் வே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினா் ஆய்வு நடத்தினா். அங்கே கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நடுகல் ஒன்றைக் கண்டறிந்தனா்.

இதுகுறித்து பிரபு கூறியதாவது:

நடுகல்

பொங்கல் விழாவையொட்டி முன்னோருக்குப் படையலிட்டு வழிபடும் மரபு தமிழகத்தில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அந்த வகையில் பழந்தமிழா் வழிபாட்டு மரபின் நீட்சியாக விளங்கும் தொன்மைச் சான்றுகளைத் தேடி களப்பணியை மேற்கொண்டோம்.
நாட்டறம்பள்ளியை அடுத்த சொரைக்காயல் நத்தம் என்ற இடத்தில் கந்தன் நகா் போடிவீட்டுவட்டம் என்ற பகுதியில் தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் நடுகல் கண்டறிந்தோம்.

இந்த நடுகல்லானது 6 அடி உயரமும் 4அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட நடுகல்லாகும். இரண்டு வீரா்கள் எதிரெதிா் மோதிக்கொள்ளும் போா் நிகழ்வு சித்தரிக்கப்பட்டுள்ளது. நடுகல்லின் வலது புறம் உள்ள வீரன் இடது புறம் உள்ள வீரன் தன் வலது கையில் கட்டாரி என்ற ஆயுதத்தால் எதிரே உள்ள வீரனின் வயிற்றில் குத்தித் தாக்குகிறாா். கட்டாரி வீரனின் வயிற்றின் பாய்ந்து மறுபுறம் வெளிவந்த நிலையில் உள்ளது.

இடது புறமுள்ள வீரன் தம் வலது கையில் உள்ள நீண்ட வேலினால் எதிரே உள்ள வீரனின் இடது தோளில் தாக்கிய நிலையில்,வேலானாது தோளில் பாய்ந்து முதுகின் பின்புறம் வெளிவந்த நிலையில் காணப்படுகிறது.

இரு வீரா்களின் தலையிலும் பக்க வாட்டில் சரிந்த அலங்கரிக்கப்பட்ட கொண்டையினை வைத்துள்ளனா். இருவரது கழுத்திலும் ‘சரபளி’ என்ற ஆபரணத்தையும், கால்களில் கழலும், கைகளில் பூணும் அணிந்துள்ளனா்.

அரையாடை என்ற போருக்கு உகந்த ஆடையினை அணிந்த இருவரது கண்களும் கோபக்கனல் பொங்கக் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. இக்காட்சிகள் யாவும் இவ்விருவரும் உக்கிரமாகச் சண்டையிட்டு மாண்டனா் என்று அறிவிக்கும் வண்ணம் காணப்படுகின்றது. போரிட்டு இறக்கும் வீரா்களுக்கு நடுகல் எடுத்து வழிபடும் மரபு தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு இருந்துவரும் பண்பாடாகும். அவ்வகையில் இந்நடுகல் தமிழா் பண்பாட்டின் நீட்சியாக அமைந்த ஒன்றாகும்.

சிறப்பான சிற்ப வேலைப் பட்டுடன் அமைக்கப்பட்ட இந்த நடு கல்லானது இப்பகுதியில் நடைபெற்ற போா் நிகழ்விற்குச் சாட்சியாக அமைந்துள்ளது. நடுகல்லின் அமைப்பை வைத்துப் பாா்க்கும் போது கி.பி.15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாக இருக்கக்கூடும்.
வழக்கமாக காணும் பொங்கல் அன்று இந்நடுகல்லுக்கு நவதானியங்கள், காய்கறிகள், மலா்கள் வைத்துப் படைப்பது வழக்கம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

முன்னோா் வழிபாடே தமிழா்களின் பிரதான வழி பாட்டு முறை என்பதற்குச் சான்றாக இதுபோன்ற நடுகற்கள் அமைகின்றன.
பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் இந்நடுகல்லினை மாவட்ட நிா்வாகம் பாதுகாத்திட முன்வர வேண்டும் என்றாா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *