சென்னை,ஜன.20- சென்னை பச்சையப்பன் கல்லூரி வாசகர் வட்டம் 7ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ‘சொல்’ ஆண்டு மலர் வெளியீட்டு விழா சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கடந்த 7 ஆம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பங்கேற்றுச் சிறப்பு உரையாற்றியிருந்தார். இவ்விழாவில் ஆ.ராசா பேசிய பல விடயங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது.
இந்நிலையில், பச்சையப்பன் வாசகர் வட்டத்தின் பொறுப் பாளராக இருந்த முனைவர்
ஆ.தே.ரேவதி, கல்லூரி நிர்வாகத்தால் சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பச்சையப்பன் வாசகர் வட்டம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தவறான முன்னுதாரணம்
இதுகுறித்து அது வெளி யிட்டிருக்கும் அறிக்கையில், ”பச்சையப்பன் வாசகர் வட்டத்தின் 7 ஆண்டு நிறைவு விழா மற்றும் மாபெரும் முப்பெரும் விழாவை தொடர்ந்து வாசகர் வட்டத்தின் பொறுப்பாளராக இருந்த முனைவர் ஆ.தே.ரேவதியை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. எந்தவொரு தகவலும் இன்றி பொய் குற்றச்சாட்டை முன்வைத்து நடவடிக்கை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமின்றி, மிகவும் தவறான முன்னுதாரணம் ஆகும்.
நிகழ்வு நடைபெறுவதற்கு முன்பே அதாவது சிறப்பு விருந்தினரை தேர்வு செய்வதற்கு முன்பே வாசகர் வட்டத்தின் பொறுப்பாளர் என்ற முறையில் முனைவர் ஆ.தே.ரேவதி கல்லூரி முதல்வர் முனைவர் பேபி குல்னாஸை நேரில் சந்தித்து அனுமதி கோரினார். கல்லூரியில் நடக்கின்ற நிகழ்வுகள் அனைத்தும் கல்லூரியின் தலைவராக இருக்கும் கல்லூரி முதல்வர் முடிவுக்கு உட்பட்டு நடைபெறுதல் வேண்டும் என்பது விதி.
ஆனால், அதற்கு மாறாக கல்லூரி முதல்வர் பச்சையப்பன் அறக்கட்டளையின் செயலர் துரைக்கண்ணுவிடம் அனுமதி பெற கூறினார். அனுமதி கேட்க சென்றிருந்த இடத்தில் துரைக்கண்ணு அவர்கள் கல்லூரி பேராசிரியர்களையும் மாணவர் களையும் தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு, ‘ஏதோ செஞ்சுக்கோ’ என்னும் வார்த்தைகளால் விழா நடத்துவதற்கு அனுமதி தந்தார்.
துரைக்கண்ணு பதவிக்காலம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது என்பதை இங்கு மீண்டும் குறிப்பிட விரும்புகிறோம். அதன் பிறகும் கல்லூரி முதல்வரிடம் இதனை முழுமையாக கூறி, அனுமதி பெற்ற பிறகே நிகழ்விற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
அச்சுறுத்தும் போக்கு
நிகழ்விற்கு முதல் நாள் திட்டமிட்டு, பல நெருடலான சூழ்நிலையை கல்லூரி முதல்வரும், துரைக்கண்ணுவும் ஏற்படுத்தினர். அத்தனையையும் பொறுத்துக் கொண்டு நாங்கள் அந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கிறோம்.
மாணவர்களின் சிந்தனைகளை அடியோடு நசுக்கும் – அச்சுறுத்தும் இந்த போக்கு, அவர்கள் யார் என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறது. மாணவர்களை நசுக்குவதும், மாணவர் நலன் பேசும் – அவர்கள் உரிமை பேசும் பேராசிரியர்களை துரைக்கண்ணு மற்றும் அவர் சார்ந்த கும்பல் அச்சுறுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.
கல்லூரியின் பெயர் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது கவலை அளிக்கும் அதே வேளையில், துரைக்கண்ணு மற்றும் அவரது கும்பலின் செயல்கள் மாணவர்களை சமூக நலன் சார்ந்து இயங்கவிடாமல் தடுப்பது கவனத்தில் கொள்ள வேண்டும்.
துரைக்கண்ணு போன்றவர்களின் இத்தகைய பிற்போக்குத்தனமான கோழைத்தனமான முடிவுகளை பச்சையப்பன் வாசகர் வட்டத்தின் மாணவர்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
முனைவர் ஆ.தே.ரேவதியின் பணியிடை நீக்க உத்தரவை எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்” என தெரிவித்துள்ளது.