மனிதரின் அறிவுக்கு எங்கெல்லாம் விலங்குகள் பூட்டப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் உடைக்கவே சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது. கைவிலங்கு, கால்விலங்கு போன்றவை கண்ணுக்குத் தெரியும் விலங்குகள் மூளைக்கு இடப்படும் விலங்குகளோ கண்ணுக்குத் தெரியாதவை, ஆனால், கடும் விளைவுகளை உருவாக்குபவை.
அப்படி புதிய பார்வையோடு அறிவுக்கு ஒவ்வாத மடமைகளை ஒழித்து, தன்மதிப்புடன் உருவாக்கப்பட்டதே சுயமரியாதைத் திருமணமுறை.
அதற்கு முன்பும் சில புரோகித மறுப்புத் திருமணங்கள் நடைபெற்று வந்தன. பார்ப்பனர்களை அழைக்காவிட்டாலும் அவர்களுக்கு செலுத்த வேண்டிய புரோகித வரியை செலுத்தியே ஆகவேண்டும் என்று பம்பாய் மாகாணத்தில் இருந்த சட்டத்தினை எதிர்த்து புதிய சட்டம் கேட்டுப் போராடும் நிலையை உருவாக்கியிருந்தன.
இந்த திருமணங்கள், நாகை என்.பி.காளியப்பன் – செல்லம்மாள் திருமணம் 19.08.1926 அன்று புரோகித மறுப்புத் திருமணமாக, கதராடை அணிந்த திருமணமாக பட்டுக்கோட்டை அருகே படப்பைக்காடு கிராமத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சில புரோகித மறுப்புத் திருமணங்கள் நடைபெற்றன. சில திருமணங்கள் குறித்து ‘குடிஅரசி’ல் பதிவான சில செய்திகள். இதோ :
‘பிராமணியத்தை ஒழித்த திருமணம்’
என்ற தலைப்பில் சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களின் மைத்துனர் ஸ்ரீமான் ஜி. ராமச்சந்திர நாயுடு அவர்கள் தன் சகோதரர் ஸ்ரீமான் கோவிந்தராஜுலு நாயுடுவுக்கு நடத்திவைத்த திருமணத்தில் மணமகனும் மணமகளும் முழுக் கதர் உடையோடு இருந்ததல்லாமல் மணச் சடங்குக்குக் கொஞ்சமும் பார்ப்பன சம்பந்தமில்லாமலே நடந்தது. ஆனால் அதிலும் ஒரு கஷ்டத்தை நாம் உணர்ந்தோம். அதாவது அம் மணச்சடங்கை நடத்தியவர் பார்ப்பனரல்லாதாரும் நாயுடு வகுப்பைச் சேர்ந்தவராகவே இருந்தாலும், ஒரு அய்ந்து ஆறு பார்ப்பனர்கள் பூணூலைச் சேர்த்துப் பார்த்தால் எவ்வளவு மொத்தம் இருக்குமோ அவ்வளவு மொத்தப் பூணூலும் பார்ப்பனர் எவ்வளவு சப்தமாய் மந்திரங்கள் சொல்லுவார்களோ அதைவிட அதிக சப்தமாகவும், பார்ப்பனர்கள் எப்படி மணமகனுக்கும் மணமகளுக்கும் மற்றும் அங்குள்ள உறவினர் சுற்றத்தார் நண்பர்கள் முதலியவர்களுக்கும் தெரியாத பாஷையாகிய சமஸ்கிருத பாஷையில் அனாவசியமான விஷயங்களைச் சொல்லிக் காலத்தை வீணாக்குவார்களோ அதைவிட அதிக விஷயத்தையும், அதிக காலத்தையும், சொல்லிக் கழித்தார்கள். இதன் மூலம் பார்ப்பனர் அங்கில்லை என்பது மாத்திரம் ஏற்பட்டதே அல்லாமல் மூடநம்பிக்கை ஒழிந்தது என்பது அங்கு ஏற்படவில்லை;
‘குடிஅரசு’ – செய்தி – 26.09.1926
சேலம் அடுத்த தாதம்பட்டி என்னும் கிராமத்தில் அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையாரின் கிராமம் பலிஜ நாயுடு வகுப்பைச் சேர்ந்த வீடுகளில் மூன்று கல்யாணங்கள் வெகு விமரிசையாய் நடந்தன. அம்மூன்று கலியாணங்களுக்கும் பார்ப்பன புரோகிதர்கள் இல்லாமல் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே முகூர்த்தம் செய்விக்கப்பட்டது. இவைகளில் ஒரு கலியாண வீட்டுக்காரருக்கு மாத்திரம் ஆரம்பத்தில் நாம் ஏன் இதை முதன் முதலாகச் செய்ய வேண்டும், மற்றும் யாராவது செய்து பிறகு நாம் செய்யலாம் என்கிற எண்ணம் மனதுக்குள்ளாக இருந்திருக்கிறது. அதற்கேற்றாற்போல் அவர் ஒரு பார்ப்பனப் புரோகிதரையும் தருவித்து விட்டார். ஆனால் மற்ற இரண்டு கலியாண வீட்டுக்காரரும் தைரியமாய்ச் செய்ய ஆரம்பித்த பிறகு தான் தருவித்த பார்ப்பனப் புரோகிதருக்கு ஏதோ பணம் கொடுத்தனுப்பிவிட்டு அவரும் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே தனது வீட்டு முகூர்த்தத்தையும் நடத்திக் கொண்டார்.
ஆகவே, இந்த மூன்று கலியாணங்களும் எவ்வித சடங்கும் பார்ப்பன சம்பந்தமில்லாமலே இனிது நிறைவேறிற்று. அதோடு அங்கு வந்திருந்த மற்ற பந்து மித்திரர்களும் தங்கள் தங்கள் வீட்டு சுபா சுப காரியங்களையும் இனி பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே செய்து கொள்வது என்னும் அபிப்பிராயத்தையும் தெரிவித்துக் கொண்டார்கள்.
(‘குடிஅரசு’ – செய்திக்குறிப்பு – 21.11.1926)
புரோகித மறுப்பு இந்த திருமணமுறை தமிழகம் மட்டுமல்லாமல் சுயமரியாதை இயக்கம் போலவே மலாயா நாட்டிலும் நடைபெற்றது ‘குடிஅரசு’ ஏட்டிலிருந்து அப்படியே தருகிறேன்.
நம்மவர்களின் வீட்டு சுபா சுப காரியாதிகளில் “பிராமணியம்’’ அதாவது ஜன்மசனி போன்ற “புரோகிதவரி” என்னும் பெரும் பேய்வாய்ப்படாது தப்பி தாய்நாட்டில் நடந்த காரியாதிகள் நமது செவிக்கெட்டிய வரையில் ஒரு சிறிது இருப்பினும் நேரில் கண்டவைகள் ஒன்றுமேயில்லை. பல்லாண்டுகளாகப் பல்லவி பாடி வரும் நம் தாய்நாட்டின் சீர்திருத்த முன்னேற்றம் நாட்டின் விஸ்தீர்ணத்தையும் ஜனசங்கியையும், கல்வி கேள்வி யாதியவைகளின் சிறப்பையும் சீர்தூக்கிப்பார்க்குமளவில் அச்சில காரியாதிகளையும் சொல்லளவே யெனக் கொள்ளக் கிடப்பிலும்;
நம்மிந்திய மக்கள் குடியேறியுள்ள இம்மலாய்நாட்டில் கூறியவாறே செய்கையாலுஞ் செய்து காட்டிய “புரோகித வரி” என்னும் பேயை இருந்த இடந்தெரியாது ஓட்டிய சிறந்த விவாக மொன்று “தெலுக் ஆன்ஸன்” எனும் நகரில் நிகழ்ந்ததை நேரிற் கண்டு ஆனத்தித்தோம்.
மணமக்களின் தந்தை பேரா. இந்துமகா ஜன சங்கத் தலைவரும், பலதரப்பட்ட தேச ஊழியத்தில் சதா ஈடுபட்டு மெய்த்தொண்டு புரிந்து வருபவருமாகிய தைபிங் நந்நகர ஏலாதிபர் ஸ்ரீமான் மா. இரத்தினசாமி பிள்ளையவர்கள் – மணமகனின் குடும்பத்தலைவர், அவர் தம் சகோதரர் பேரா. இந்து சங்கத்தின் காரியதரிசியும் பொது ஜன சேவையிற் சலிப்படையாதவருமான தெலுக் ஆன்ஸன் சேனிடரி இன்ஸ்பெக்டர் ஸ்ரீமான் தி.சுப்பையா அவர்கள் குறித்த விவாக வைபவம் சென்ற (22.04.1927) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கும் 3 1/2 மணிக்கும் இடையே ‘பார்ப்பனப் புரோகித’மின்றி தமிழ் ஓதுவாரொருவரையும், ஸ்ரீமத் சுவாமி அர்ப்புதானந்தரவர்களையும், இந்து மகாஜன சங்கப் பொதுக் காரியதரிசி ஸ்ரீமான் அய்யாரு அவர்களையும் முற்கொண்டு ஜாதி பேதம் தீண்டாமை என்பதை அறவே ஒழித்த பல இந்தியப் பெருமக்களின் திருக்கூட்டத்தினிடையே முறையிற் சிறிதும் பிழையாது சிறப்பாக நிறைவேறியது. அச்சமயம் மணமக்களுடையவும் அவர்தம் குடும்பத்தாருடையவும், மணப்பந்தலில் கூடியிருந்தாரிற் பெரும்பாலருடையவும் ஆடைகள் முழுதும் பரிசுத்தக் கதராடையாகவே இருந்ததானது குறிப்பிடத்தக்க தொன்றாம்.
விவாகம் முடிந்த 9ஆம் நாள் அதாவது 30.4.1927 சனிக்கிழமை மாலை 7 மணி ரெயிலில் தைபிங்குக்கு மணமக்களை அழைத்து வந்தபோது, மணமகளின் தந்தை ஸ்ரீமான் மா.இரத்தினசாமி பிள்ளையவர்களைத் தலைவராகவும், டிரஸ்டியாகவும் கொண்டுள்ள தைபிங் இந்து தேவாலய சபையின் அங்கத்தினர்கள் மணமக்களை ரெயில்வே ஸ்டேஷனிலிருந்தபடியே ஸ்ரீமாரியம்மன் தேவாலயத்திற்கு அழைத்து வந்து விசேஷ அபிஷேகாதிகள் செய்வித்து மாலை சூட்டி சுமார் 300 பெயர்களில் அதிகம் கூடியிருந்தவர்களுக்கும் தேனினுமினிய சிற்றுண்டியளித்துச் சிறப்பித்த பெருமையை உள்ளபடி எழுத இங்கு இடம் பெறாதென அஞ்சுகின்றோம்.
மேற்கண்ட திருமணங்கள் யாவும் புரோகிதர் மறுப்பு அல்லது புரோகித மறுப்புத் திருமணங்கள் தானே தவிர சுயமரியாதை திருமணங்கள் அல்ல.
முதல் சுயமரியாதைத் திருமணம்!
முதல் “சுயமரியாதைத் திருமணம்’’ நடைபெற்றதன் பின்னணியைப் பார்ப்போம்.
அருப்புக்கோட்டையின் அருகே உள்ளது சுக்கிலநத்தம் என்னும் சிற்றூர். பருத்தி விளையும் பண்பட்ட நிலங்களுக்கு உரிமை உடையது இவ்வூர். மாடமாளிகைகளில் இவ்வூரார் வாழ்ந்து வந்தனர். திருமலை நாயக்கர் காலத்தில் பாண்டி நாட்டில் குடியேறிய மக்களில் ஒரு பிரிவினரான கெண்டிக்கோட்டை ரெட்டியார்கள் வாழும் ஊர் இச்சுக்கிலநத்தம். இவ்வூரில் துரைசாமி ரெட்டியார் என்ற சுப்பாரெட்டியார் பெருஞ்செல்வர்; இவர் மதப்பற்றும் மாந்தப்பற்றும் மிக்கவர். பார்ப்பனர்களையே தெய்வமாகக் கருதி 55 ஆண்டுகள் ஒழுகினவர்; ஒத்துழையாமைக் கிளர்ச்சியின்போது ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பிரச்சாரத்தில் கட்டுண்டு காங்கிரசைச் சார்ந்தவர். ஈ.வெ.ராமசாமி நாயக்கர் சுயமரியாதை இயக்கம் தொடங்கியதும் அதில் ஈடுபட்டு ‘குடிஅரசு’ இதழைப் படிப்பதைத் தம் கடமையாகக் கொண்டார். “நாயக்கரே என் குரு” என்று கொண்டவர். அருப்புக்கோட்டை வட்டாரத்தில் (போடம்பட்டி) தி. கருப்பையா பிள்ளையையும் வா.து. கைலாசம் பிள்ளையையும் சுயமரியாதை இயக்கத் தொண்டர்களாக்கினார். சுக்கில நத்தம் ஊரைச்சுற்றி உள்ள சிற்றூர்களிலும் ‘குடிஅரசு’, படிப்பதை ஊக்குவித்தார். இருபது வயதுள்ள தம் ஒரே மகனாகிய அரங்கசாமி ரெட்டியாரையும் சுயமரியாதை நெறியில் இயங்கச் செய்தார்.
வீட்டில் திருமணப் பேச்சு வந்தது; அரங்கசாமி ரெட்டியார் பார்ப் பனரை விடுத்து தந்தை பெரியாரை கொண்டே திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இத்திருமண முறைக்கு ஆதரவளிக்கும் பெற்றோர் இலரே என துரைசாமி ரெட்டியார் கவலை அடைந்தார்.
சுக்கிலநத்தத்திலுள்ள அழகர்சாமி ரெட்டியாரையும் சீநிவாச ரெட்டியாரையும் சந்தித்து இதுகுறித்துத் துரைசாமி ரெட்டியார் பேசினார். அவர்கள் இருவரும் தத்தம் மகளை துரைசாமி ரெட்டியாருக்கு அளிக்க முன் வந்தனர். அழகர்சாமி ரெட்டியார் மகள் நாகம்மாளும் சீநிவாச ரெட்டியாரின் மகள் ரத்தினத்தாயம்மாளும் அரங்கசாமி ரெட்டியாரைத் திருமணம் செய்ய விரும்பினர். மாப்பிள்ளையும் மாப்பிள்ளை வீட்டாரும் இதை ஏற்றுக் கொண்டனர்.
ஈ.வெ.ராமசாமியார் 28.05.1928 அன்று சுக்கிலநத்தம் வந்து திருமணத்தை நடத்தி வைப்பதாக எழுதினார். திருமண அழைப்புகள் அவருக்கு அனுப்பப்பட்டன.
நாகையில் பார்ப்பனரில்லாத திருமணமும் பிரார்த்தனையும் நாகப்பட்டணம் தென் இந்தியா ரயில்வேயைச் சேர்ந்த தொழிலாளரும், ஸ்ரீமான் பாலையத் தேவர் குமாரருமான ஸ்ரீமான் பா.காளியப்பத் தேவர் அவர்களுக்கும் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த படப்பக்காட்டிலிருக்கும் ஸ்ரீமான் இராமசாமித் தேவரவர்கள் குமாரத்தி ஸ்ரீமதி செல்லம்மாளுக்கு இவ்வாவணி மாதம் மூன்றாந்தேதி (19-08-1926) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நாகை கோட்டை மேட்டுத் தெருவில் உள்ள மணமகன் இல்லத்தில் திருமணம் நடைபெறும். அத்திருமணத்தில் மணமகனும் மணமகளும் கதராடையே அணிவதுடன், பார்ப்பனர் சம்பந்தமே இல்லாமல் அத்திருமணச் சடங்கும் நடைபெறும். நம் தென்னாட்டில் இம்மாதிரி கதருடையுடன் இதுவரை பல திருமணங்கள நிகழ்ந்திருந்தாலும் பார்ப்பனப் புரோகிதரில்லாமல் திருமணங்கள் நடப்பது அதிசயமாகக் கருதப்படுவதுடன் வெகுசில திருமணங்களே இதுவரை நடைபெற்றிருக்கின்றன. அவற்றுள் சென்ற மாதம் வட ஆற்காடு ஜில்லா ஆம்பூர் சாணாங்குப்பத்திலிருக்கும் திருவாளர்கள் வெங்கிடசாமி முதலியாரும் அவரது உறவினர் இருவரும் சேர்ந்து நடத்தி வைத்த மூன்று திருமணங்களும் நாகையில் நடக்கப் போகும் இத் திருமணமும் முக்கியமானதென்றே சொல்லலாம். இனியும் தமிழ்நாட்டில் நடக்கும் அநேக திருமணங்களும் இதுபோலவே தங்கள் தங்கள் வகுப்பிலுள்ள முதிர்ந்த பரிசுத்தம் பொருந்திய பெரியோர்களைக் கொண்டே நடத்திக்கொள்வது திராவிட மக்களின் சுயமரியாதையைக் காப்பதாகுமென்று விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம். சுமார் 30,40 வருஷங்களுக்கு முன்னால் தென்னாட்டில் விசேஷமாய்ப் பார்ப்பனரின்றியே விவாகம் முதலிய அநேக சடங்குகளும் நடைபெற்று வந்திருக்கிறது.
முக்கியமாய் இன்னாட்டுக் கொங்கு வேளாள சமூகமாகிய பெரும் சமூகத்தார் தங்கள் மணச்சடங்குகளைத் தங்கள் சமூகத்திலேயே உள்ளவரான அருமைக்காரர் என்னும் பெரியார்களைக் கொண்டே நடப்பித்து வந்திருக்கிறார். கொஞ்சம் செல்வமோ, அல்லது நாகரிகப்பேயோ எதாவது ஒரு குடும்பத்திற்குப் புதிதாய் ஒட்டிக் கொண்டால் அவர்கள் பார்ப்பனரைக் கொண்டு சடங்குகள் செய்வது ஒரு பெருமை என்று நினைத்து பார்ப்பனர்களே இருந்து நடத்த வேண்டும் என்று செய்து விட்டார்கள். இன்னமும் அவ்வகுப்புகளிலும் மற்றும் பல வகுப்புகளிலும் 100க்கு 90 குடும்பங்கள் பார்ப்பனர் இல்லாமலே நடைபெற்று வருகின்றன. சிரார்த்தம் முதலிய சடங்குகள் வேளாள சமூகமாகட்டும், பலிஜா சமூகமாகட்டும் மற்றும் பல
சமூகங்களாகட்டும் இப்பொழுதும் பெரும்பான்மையான குடும்பங்கள் பார்ப்பனரைக் கொண்டு செய்வதே இல்லை. இப்படி இருந்தும் பார்ப்பனர்கள் சூழ்ச்சியினால் பார்ப்பனர்களைக் கொண்டு செய்யும் சடங்குகளும் ஒரு பெருமை இருப்பதாக கருதிப் புதிது புதிதாய் அவ்வழக்கங்களை Þதாபித்து வருகிறார்கள். இவை பார்ப்பனர்கள் வயிற்றுப் பிழைப்புக்கு அனுகூலமே தவிர நமக்காவது நமது பெற்றோர்களுக்காவது, நமது மணமக்களுக்காவது யாதொரு பயனும் இல்லை. அவர்கள் சொல்லும் மந்திரங்கள் என்னும் சமÞகிருத வார்த்தைகளிலும் யாதொரு விசேஷப் பொருளும் இல்லை. அதைச் செய்து வைக்கும் புரோகிதர்களோ உபாத்தியாயர்களோ அப்படி ஒன்றும் விசேஷ சக்தியோ யோக்கியதையோ பெருமையோ படைத்தவர்களுமல்ல. வீண் பிரமையும் போலி நாகரிகம் என்கிற முட்டாள் தனமுமேயல்லாமல் இதில் வேறு ஒரு பலனும் இல்லை.
உண்மையாகவே பார்ப்பனர் இல்லாமலும் பார்ப்பனரைக் கொண்டு சடங்குகள் செய்யாமலும் சிரார்த்தம் தர்ப்பணம் முதலிய பார்ப்பனர் வயிறு வளர்க்கும் போலிச் சடங்குகளில்லாமலும் இருக்கும் ஜனங்களும் சமூகமும் ஜாதியும் சேர்த்து கணக்குப் பார்த்தால் இவைகளையெல்லாம் பார்ப்பனர்களைக் கொண்டு செய்கிறவர்களை விட எத்தனையோ மடங்கு அதிகமாய்த்தானி ருப்பார்கள்.
இதனாலேயே அவர்கள் சேமமாய் வாழவில்லையென்றாவது அவர்கள் பெற்றோர் மோட்சம் அடையவில்லை என்றாவது சொல்லி விட முடியுமா? ஆதலால் பார்ப்பனரல்லாத இந்து மக்கள் இனிமேலாவது தங்கள் சுயமரியாதையையும் தத்துவத்தையும் உத்தேசித்தாவது பார்ப்பனர் இருந்து நடத்தும் காரியங்கள்தான் உண்மையானது என்றும், உயர்ந்தது என்றும், கடவுள்களும் மோட்சத்திற்கும் பிரீதியானது என்றும் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் என்றும் எண்ணி தங்கள் தங்கள் சமூகத்தையே தாழ்த்திக் கொள்வதற்குத் தாங்களே பணங்கொடுத்து ஆளாகாமல், தங்கள் தங்கள் சமூகத்தாரைக் கொண்டே செய்து கொள்ள வேண்டுமாய் பிரார்த்திக்கிறோம்.
குறிப்பு:-இத்திருமணத்திற்கு ஸ்ரீமான் நாயக்கரையும் அவசியம் வரும்படி வேண்டிக் கொண்டிருப்பதால் அநேகமாய் ஸ்ரீமான் நாயக்கரும் போகலாம்.
‘குடிஅரசு’ – செய்திக்குறிப்பு – 15.08.1926
துரைசாமி ரெட்டியார் என்ற அய்யாரெட்டியாரின் சகலப்பாடி ஆவல்சூரன்பட்டி நாராயண ரெட்டியார். இவர் மகன் கோபால்சாமி ரெட்டியார். இவரும் தம் திருமணத்தை தந்தை பெரியாரை கொண்டே முடித்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தார். அரங்கசாமி ரெட்டியாருக்கு வாழ்க்கைப்பட விரும்பியவர் இருவர். இவர்களைப் போலவே கோபால்சாமி ரெட்டியாரை இணைத்துக் கொள்ளவும் இரு பெண்கள் முன் வந்தனர். சிரோன்மணி அம்மாளும் கமலத்தம்மாளுமே ஆவர் இம்மணப் பெண்கள்.
முதல் திருமண மேடையிலேயே இந்தத் திருமணம் நடைபெற முடிவாயிற்று. அரங்கசாமி ரெட்டியாரை மணம் புரிய இருக்கும் ரத்தினத்தாயம்மாளும், கோபால்சாமி ரெட்டியாரை மணம் புரிய இருக்கும் சிரோன்மணி அம்மையாரும் உடன்பிறந்தவர்கள்.
27.05.1928-இல் மதுரையில் இளைஞூர் மாநாடு நடைபெற்றது; அது முடிவடைந்ததும் அம்மாநாடு முடிந்தவுடன் 28.02.1929 அன்று காலை சுக்கிலநத்தத்திற்கு தந்தை பெரியாருக்கு சுக்கிலநத்தத்தில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்ட நெருக்கடி மிகுதியாக இருந்தது. சரியாகக் காலை பத்து மணிக்குத் திருமணம் நடைபெறத் தொடங்கியது.
கும்பகோணத்தில் இரு சுயமரியாதைத் திருமணங்கள் கும்பகோணம் அழகப்ப முதலியார் தெரு தோழர் தி.சா.கோவிந்தசாமி அவர்கள் இல்லத்தில் 16.09.1931 தேதி புதன்கிழமையன்று திருச்சி திரு.கே.சாமிய புதல்வர் திருச்செல்வர் டி.எஸ். நடேசம் அவர்கட்கும் கூத்தூர் திரு.டி. எஸ். குமாரசாமி புதல்வி திருச்செல்வி சாரதாம்பாள் அவர்கட்கும், தஞ்சை திரு. கிருஷ்ணசாமி புதல்வர் திருச்செல்வன் டி.கே.கண்ணையா அவர்கட்கும் கூத்தூர் திரு. சோமசுந்தரம் புதல்வி திருச்செல்வி திருபுரசுந்தரி அவர்கட்கும் எவ்வித புரோகித கலப்புமின்றி அர்த்தமற்ற சடங்குமின்றி சுயமரியாதை இயக்க முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமண வைபவத்திற்கு திருச்சி, ஈரோடு, தஞ்சை, மாயூரம், சுவாமிமலை, சாக்கோட்டை, நாச்சியார் கோவில், பட்டுக்கோட்டை முதலிய வெளியிடங்களிலிருந்தும் பல அன்பர்கள் வந்திருந்தனர். உள்ளூர் பிரபலஸ்தர்களும் சுயமரியாதை வாலிப சங்கத் தலைவரும் மணமக்கள் உறவினருமாக ஆண்களும் பெண்களும் நூற்றுக்கணக்காக வந்திருந்தார்கள். திருமண அழைப்பில் குறிப்பிட்ட காலத்தில் மணமக்கள் தங்கள் ஒப்பந்தத்தை சபை முன் படித்து மலர் மாலை சூடி மாங்கல்யம் பூட்டிக்கொண்டார்கள்.
தோழர் கா.கு.நீலமேகம் அவர்கள் எழுந்து, இத்திருமண நிகழ்ச்சியிலேற்பட்ட மாறுதலைப்பற்றியும், மாறுதலடைய வேண்டிய அவசியத்தைபற்றியும் திருமணம் என்ற பெயரால் நாம் புரோகிதர்கட்கும் அர்த்தமற்ற பழக்கவழக்க சடங்குகட்கும் எத்தனை எத்தனை காலமாக அடிமைப்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறோம் என்பதைப் பற்றியும் திருமண சுதந்திரம் மணமக்கட்கு வழங்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் மிக விளக்கமாய்ப் பேசியமர்ந்தார். பின் தோழர்களான அ.பொன்னம்பலம் அவர்களையும் கே.வி. அழகர்சாமி அவர்களையும் “சீர்திருத்தத் திருமணம் – மதமும் மக்களும்” என்பது பற்றி பேசும்படி தோழர் கா.கு.நீலமேகம் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதன்படி தோழர்கள் அ.பொன்னம்பலம், கே.வி.அழகர்சாமி ஆகிய இருவரும் மூன்று மணி நேரம் மிக விளக்கமாகவும் விரிவாகவும் பேசி மண மக்களைப் பாராட்டினர். மணமக்களாலும் தோழர் நீலமேகம் அவர்களாலும் வந்தனோபசாரம் கூறி சந்தனதாம்பூலம் பழவகை வழங்கினார்கள். பின் யாவருக்கும் சம்பந்தி விருந்து ஒன்று நடைபெற்றது. மாலை 5:00 மணிக்கு தோழர் கே.வி.அழகர்சாமி, அ.பொன்னம்பலம் ஆகியவர்கள் ஈரோட்டிற்கு ரயிலில் பயணமானார்கள்.
– ‘குடிஅரசு’ – 27.09.1931
அரங்கசாமி ரெட்டியார் வலது கையில் நாகரத்தினம் அம்மாளையும், இடது கையில் ரத்தினத்தாயம்மாளையும் பற்றிக் கொண்டு நாயக்கரை வணங்கி மணவறையில் அமர்ந்தார். ஆடம்பரமான ஆடைகளை மணமக்கள் அணியவில்லை. கதராடைகளே அணிந்திருந்தனர். பூமாலைகள் சூட்டப்பட்டிருந்தன.
ஓமம் வளர்க்கப்படாமல், திருவிளக்கு ஏற்றப்படாமல், கற்பூரம் கொளுத்தப்படாமல் திருமணம் நடந்தது !
தந்தை பெரியார் பெற்றோர்களிடமும் மணமக்களிடமும் விருப்பத்தை அறிந்து அதன்மேல் திருமண வாக்குறுதி வாங்கினார்.
இத்திருமணம் முடிந்ததும் அதே மேடையில் இரண்டாம் தம்பதிகளுக்கு முற்பகல் 11 மணிக்கு நடைபெற்றது. கோபால்சாமி ரெட்டியார் தம் வலப்பக்கத்தில் ஸ்ரீமதி கமலத்தம்மாளையும் இடப்பக்கத்தில் சிரோன்மணி அம்மாளையும் கைக்கொண்டு மணையில் வந்து அமர்ந்தார். இவர்களும் கதருடையே அணிந்திருந்தனர். இத்திருமணமும் இனிது நிறைவேறியது.
இந்த இரண்டு திருமணங்களின் நடைமுறையையும் சிறப்பையும் சுக்கிலநத்தம் பார்த்துக் கொண்டிருந்தது. அதே நாளில் பார்ப்பனரைக் கொண்டு தம் திருமணத்தை நடத்த மாரிரெட்டியார் என்பார் எண்ணி யிருந்தார். இவர் சுயமரியாதைச் சிறப்பு கண்டு தாமும் அதே மேடையில் இத்தகைய திருமணம் செய்ய விரும்பினார். சுப்புரெட்டியாரும் தம் பந்தலில் மாரி ரெட்டியார் திருமணம் நடைபெற ஒப்புதல் அளித்தார். எனவே மாரிரெட்டியார் – சீதாலட்சுமி அம்மாள் திருமணமும் சரியாக பகல் 12 மணிக்கு அங்கு இனிது நடைபெற்றது.
கூடியிருந்த 5000 பேர்களும் மூன்று திருமணங்களையும் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்!
வைதிகக் கிழவர்கள் இப்படிப் பழைய பழக்கங்களுக்கு மாறுபட்டுப் பார்ப்பனர்களை நீக்கி பழைய முறைகளை நீக்கித் திருமணம் செய்வதனால் என்ன விளையுமோ! ஏது விளையுமோ! என அஞ்சினர். திண்ணைகளில் உட்கார்ந்து ‘குசுகுசு’ என்று பேசத் தொடங்கினர்.
மாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சர்வஜாதி மதத்தவர்களும் சமத்துவத்துடன் பல சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து வந்து கலந்து கொண்டனர்.
29-ஆம் நாளன்று நாயக்கரை வழி அனுப்பிய சுப்பாரெட்டியார் இனி 116 ஊர்களிலும் சடங்குகளை நீக்கி, பார்ப்பனர்கள் நீக்கி நம்மவர்களைக் கொண்டு திருமணங்கள் செய்விக்க உறுதிபூண்டார்.
திருமணத்திற்காகவும், நாயக்கரின் சுயமரியாதைச் சொற்பொழிவுக் காகவும் வந்திருந்த அத்தனை ஆயிரம் மக்களுக்கும் அவர் தகுதியறிந்து குறையில்லாமல் சமபந்தியாக விருந்து அளித்தார் சுப்பாரெட்டியார். இவர் திறமையையும் தியாகத்தையும் போற்றாதாரில்லை.
இந்த ஒரு செல்வர் வீட்டுத் திருமணத்தால், மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களையும்
சுயமரியாதை இயக்கம் ஈர்த்துக் கொண்டது. 1928-ஆம் ஆண்டு முதல் 1950 வரை நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்கள் ஏராளமாகும். இடையில் சுயமரியாதைத் திருமணங் களிலேயே காதல் கலப்பு (ஜாதி விட்டு ஜாதி மாறி) திருமணங்கள், விதவை மறுமணங்கள் – திருச்சியில் இம்மாதிரித் திருமணங்களை நடத்தி வைக்க புரோகித மறுப்புச் சங்கம் (Anti-Prohit Association) என்று ஒரு சங்கம் கூட நிறுவப்பட்டு அச்சங்கம் இவ்வாறு காதல், கலப்பு, சுயமரியாதை முறையில் திருமணம் செய்துகொண்ட பல தம்பதியர்களின் புகைப்படங்களைக் கொண்டு ஒரு காலண்டரே வெளியிட்டது. ஏராளமாய் நடைபெற்ற இந்த திருமணமுறை திடீரென ஒரு சட்ட சிக்கலை சந்தித்தது.
(தொடரும்…)