தஞ்சாவூர்
மருத்துவர் தமிழ்மணி
பெரியார் பேச்சை 5 மணி நேரம் கேட்டீர்களா… வியப்பாக இருக்கிறதே?
ஆமாம்! அப்போது எனக்கு 12 வயது. 7 ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அப்பா தர்மராஜ் அவர்கள் திருச்சி மாவட்டம் கீரனூரில் இரயில்வே நிலைய அதிகாரியாக (Station Master) இருந்தார்கள். அதுசமயம் பெரியாரை அழைத்து கீரனூரில் பொதுக்கூட்டம் நடத்தினார்கள். ஜமுக்காளம் விரித்து, தரையில் அமர்ந்து குடும்பத்தோடு கலந்து கொண்டோம். இரவு 9 மணிக்குப் பேசத் தொடங்கிய பெரியார், அதிகாலை 2 மணிக்குத் தான் நிறைவு செய்தார். என் வாழ்நாளில் அப்படி ஒரு கூட்டத்தை இதுவரை கேட்டதே இல்லை.
இதற்கிடையே உடல்நிலைக் கோளாறால் வலி ஏற்பட்டு “அம்மா, அம்மா” எனக் கதறினார்கள். வலி சற்றுக் குறைந்ததும் மீண்டும் பேசினார். இப்படியே 5 மணி நேரம் பேசினார்.
அப்பா இரயில்வே துறையில்
பணி செய்தவர்களா?
ஆமாம்! பல ஊர்களிலும் வேலை செய்தார்கள். பணி முடிந்ததும் நேராக திருச்சி பெரியார் மாளிகைக்குச் சென்றுவிடுவார்கள். அங்கு பெரியாரைச் சந்திப்பது, அவர்களுடன் கூட்டங்களுக்குச் செல்வது, தோழர்களுடன் பேசிக் கொண்டிருப்பது என அலுவல் பணி ஒருபுறம் இருந்தாலும், இயக்கப் பணிகளையும் சரிநிகராகச் செய்தார்கள். அப்பாவைப் பல நேரங்களில் நாங்கள் வீட்டில் பார்க்க முடியாது. ஆளவந்தான், பி.வி.இராமச்சந்திரன் போன்றோருடன் அப்பா நெருங்கிய தோழமையாக இருந்தார்கள்.
பள்ளி விடுமுறை காலம் மற்றும் முக்கியமான நிகழ்ச்சிகளின் போது எங்களையும் பெரியார் மாளிகைக்கு அப்பா அழைத்துச் செல்வார். அப்போது நான் பி.யு.சி. முடித்திருந்த நேரம். “என்னம்மா படிக்கிற?”, என்று கேட்டார் பெரியார். சொன்னதும், “நீ டாக்டருக்குப் படிம்மா”, என்றார். அந்த ஒற்றை வார்த்தை தான், எங்கள் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிட்டது.
அதுகுறித்துக் கொஞ்சம் கூறுங்களேன்?
எங்கள் முந்தைய தலைமுறையில் பெரிய படிப்பு இருந்ததில்லை. இன்றைக்கு எங்கள் குடும்பத்தில் மட்டும் 2 மருத்துவர்கள், 2 வழக்குரைஞர்கள், ஒரு அரசு ஊழியர் உள்ளோம். இதுதவிர எங்கள் மகன், மகள் உள்ளிட்ட இந்தத் தலைமுறையில், மொத்தமாக 7 மருத்துவர்கள் உருவாகி இருக்கிறோம். இதற்கு அடிப்படைக் காரணம் தந்தை பெரியார்!
“டாக்டருக்குப் படிம்மா” என்று சொன்ன பெரியார், 1965இல் மதுரை மருத்துவக் கல்லூரியில் இடமும் வாங்கிக் கொடுத்தார். மதுரை பகுதிக்குப் பெரியார் வந்தால், எங்கள் அப்பா விடுதியில் வந்து என்னை அழைத்துக் கொண்டு கூட்டத்திற்குப் போய்விடுவார். அப்போது 5 ரூபாய், 10 ரூபாய் எனப் பெரியாரிடம் நன்கொடை கொடுப்பேன்.
எவ்வளவு காலம் மருத்துவராக இருக்கிறீர்கள்?
1971இல் படித்து முடித்ததும் திருச்சி அருகேயுள்ள புதூர் உத்தமனூரில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியைத் தொடங்கினேன். முதல் மாதச் ஊதியமான 725 ரூபாயைத் தந்தை பெரியாரிடம் கொடுத்தேன். அருகில் அன்னை மணியம்மையார் அவர்களும் இருந்தார்கள். புதூர் உத்தமனூரை தொடர்ந்து கடியாபட்டி, அம்மாபேட்டை, சீர்காழி, சிங்கம்புணரி, திருத்துறைப்பூண்டி எனப் பல இடங்களிலும் பணிபுரிந்தேன். இரவு எந்த நேரத்தில் வந்தாலும் கிராம மக்களுக்குச் சிகிச்சை செய்வேன்.
எனவே சென்ற இடமெல்லாம் நல்ல மருந்துவர் என்கிற பெயரும் கிடைத்தது. நான் பெரியார் கொள்கையில் இருந்ததால், பார்ப்பன அதிகாரிகள் சிலர் சில சிரமங்களைக் கொடுத்தனர். ஆனால் பெரியார் கொள்கை வலியுறுத்தும் உண்மை, நேர்மை, உழைப்பு நம்மிடம் இருந்ததால் மேற்கொண்டு அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இதற்கிடையே தஞ்சை மருத்துவக் கல்லூரியில் டிஜிஓ முடித்து, எம்.டி படிப்பும் முடித்தேன். 1988 தொடங்கி 2003 வரை தஞ்சை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர், பிறகு பேராசிரியர் என மருத்துவத் துறையில் 31 ஆண்டுகள் பணி செய்தேன். தற்போது தனியாக மருத்துவமனை மற்றும் செயற்கை கருத்தரிப்பு மய்யமும் தஞ்சாவூரில் செயற்படுத்தி வருகிறோம்.
உங்களது திருமண வாழ்க்கைக்
குறித்துக் கூறுங்கள்?
அது உணர்ச்சிகரமான மற்றும் நெகிழத்தக்க நிகழ்வாகும். அதாவது 1965 ஆம் ஆண்டு பெரியார் அவர்கள் எனக்கு மருத்துவம் படிக்க இடம் வாங்கித் தந்தார். அப்போது, “நீ படித்து முடிக்கும் வரை நான் உயிரோடு இருப்பது சந்தேகமே”, எனக் கூறினார். அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் அய்யா என நாங்கள் கூறினோம். அதன் பிறகு 1971 ஆம் ஆண்டு நான் மருத்துவம் முடித்து வந்ததும், 1973 டிசம்பர் 2 ஆம் தேதி பெரியார் தலைமையில், தஞ்சை பெரியார் மாளிகையில் (குடும்பநல நிதி அலுவலகம் இருக்கும் இடம்) சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து 22 நாட்கள் கழித்து பெரியார் அவர்கள் மறைந்துவிட்டார்கள்.
ஆக, “என்னை மருத்துவர் ஆக்கியதோடு, எனக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெரியார் தான்”, என்பது என் நினைவுகளில் சதா சுழன்று கொண்டே இருக்கும் வரலாற்று நினைவுகள்! எங்கள் திருமணத்தில் தமிழர் தலைவர், ஆசிரியர் அய்யாவும் கலந்து கொண்டார்கள். அதே நேரத்தில் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளான டிசம்பர் 2 ஆம் தேதிதான், எனது திருமண நாள்! அதேபோல பெரியாரின் நினைவு நாளான டிசம்பர் 24, என்னுடைய பிறந்தநாள்!
தங்கள் பெற்றோர் குறித்துக் கூறுங்கள்?
அப்பா தர்மராஜ், அம்மா மணியம்மாள். குடும்பத்தில் அனைவரிடமும் பெரியார் கொள்கை இருந்தது. நாங்கள் சிறு வயதில் இருந்த போதே கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வது மட்டுமின்றி, வெகு இயல்பாகத் திருச்சி பெரியார் மாளிகைக்கும் அப்பா அழைத்துச் செல்வார். நன்றாக எனக்கு நினைவு இருக்கிறது. அப்போது எனக்கு வயது 12. மாளிகைக்குச் செல்கிறேன். பெரியார் அமர்ந்திருக்கிறார், “வாங்க! வாங்க! என வரவேற்று, என்னை அருகில் அமர வைத்துக் கொண்டார். பெரியார் அனைவரையுமே மரியாதையாகப் பேசுவார் என்றாலும், 12 வயதில் எனக்கே அந்த அனுபவம் கிடைத்தது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. அதேபோல மணியம்மையார் அவர்களும் மிகுந்த அன்புடன் நலம் விசாரிப்பார்கள்.
சிறு வயதில் எங்களின் வெளியூர் பயணம், சுற்றுலா, பொழுதுபோக்கு அனைத்துமே கழக நிகழ்ச்சிகள் தான். எங்கள் அம்மாவும் கொள்கையில் உறுதியானவர்கள். தந்தை பெரியார் இறந்த நிலையில், குடும்பத்தோடு அனைவரும் சென்னை சென்றோம். இராஜாஜி மண்டபத்தில் அய்யாவிற்கு வீர வணக்கம் செய்துவிட்டு, பிறகு பெரியார் திடல் வந்து, இறுதிவரை பக்கேற்றுத் திரும்பினோம். கருத்தியலாக இல்லாமல், செயல்பாட்டுத் தளத்திலும் எங்கள் பெற்றோர் எங்களைப் பழக்கினார்கள். ஒழுக்கம், நேர்மை, கொள்கைப்பற்று போன்றவை மிக, மிக முக்கியம் என எங்கள் தாயார் அடிக்கடி சொல்வார். அதேபோல “பெண்கள் எதற்கும் அழக்கூடாது”, என எங்கள் அப்பா அடிக்கடி கூறுவார்.
இன்றைய பெண்கள் வளர்ச்சி எப்படி இருக்கிறது?
மிகப் பெரிய அளவில் இருக்கிறது. அதுவும் தமிழ்நாட்டில் பெரியாரின் கொள்கைகளால் பெரும் புரட்சியே ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களில் ஆண்கள் 2 பங்கு என்றால், பெண்கள் ஒரு பங்கு மட்டுமே இருப்பார்கள். சில துறைகளில் அதற்கும் குறைவாகவே இருப்பார்கள். ஆனால் இன்றைக்கு ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் வந்துவிட்டார்கள். அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேறிவிட்டார்கள்.
எங்கள் அம்மா மணியம்மாள் அவர்களைத் திடீரென பெரியார் திடலில் ஒருமுறை பேசச் சொன்னார்கள். நாங்கள் வியந்து போகுமளவு பேசினார்கள். நானும் கூட துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அய்யா வீட்டில் தங்கியிருந்து, பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். எங்கள் வீட்டில் ஏழெட்டுப் பேரப் பிள்ளைகள் இருக்கிறார்கள். விடுமுறைக்கு வந்தால் அவர்களைச் சுற்றி அமர்ந்து, கொள்கைகளை ஒரு கதை போல சொல்லுவேன். அண்மையில் கூட வைக்கம் போராட்டம் குறித்துக் கதை வடிவில் கூறினேன். அதேபோல சக பெண் மருத்துவர்கள் பலரும் முற்போக்குடன் சிந்தித்து, சிறப்பாக வாழ்கிறார்கள்!
ஆசிரியர் அவர்கள் குறித்து
நினைவு கூருங்கள்?
ஆசிரியர் என்றால் சுறுசுறுப்பு, ஆசிரியர் என்றால் புத்தக வாசிப்பு! தஞ்சாவூர், சென்னையில் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சந்தித்துவிடுவேன். பெரியாருக்குப் பிறகு இயக்கம் இருக்காது என்றார்கள். ஆனால் அரசுகளுக்கு ஆலோசனைகள் சொல்வதோடு, தமிழ்நாட்டிற்கே கொள்கை வழிகாட்டுதலாய் இருக்கிறார்கள்.
வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இரண்டிலும், ஆசிரியரின் வழிகாட்டுதலில் மாணவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை செய்தேன். பின்னர் தொழில் நுட்பக் கல்லூரியில் நிரந்தரமாய் மருத்துவமனை ஒன்றினை ஆசிரியர் ஏற்படுத்திவிட்டார்கள்.
“தாம் சுவாசிப்பதே பெரியார் கொள்கை”, என்பார் ஆசிரியர். ஆசிரியர் போல வேறு எவரையும் பார்க்க முடியாது. தினமும் விடுதலை வாசிக்கிறேன். தமிழ்நாட்டின் பாதுகாப்பிற்குத் தந்தை பெரியார் கொள்கையும், ஆசிரியர் உழைப்பும் மிக முக்கியமானது என நான் நம்புகிறேன்!
சுயமரியாதை இயக்கப் பவள விழா மாநாட்டையொட்டி (1925-2000) ஒரு பவுன் தங்க நாணயம் உருவாக்கினார்கள். அதில் தந்தை பெரியார் படமும், கடவுளை மற; மனிதனை நினை என்கிற வாசகமும்
பொறிக்கப்பட்டிருந்தது. அந்த நாணயத்தை எனது 4 சகோதர்களுக்கும் வாங்கிக் கொடுத்தேன். அதை இன்னமும் ஒரு மருத்துவராகக் கழுத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் எங்களின் “தந்தை” பெரியார்!”, என நெகிழ்ச்சிப் பொங்கக் கூறினார் மருத்துவர் தமிழ்மணி அவர்கள்!