சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா – 2025! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்!

viduthalai
4 Min Read

சென்னை, ஜன. 17– சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா–2025 (மூன்றாம் ஆண்டு) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

மூன்றாம் ஆண்டு

சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2025 (மூன்றாம் ஆண்டு)– இல் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து விழாவில் பேசியதாவது.

‘‘கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.’’

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பொருள்:

இல்லாதவற்றைத்தனது குறை கள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன் படி நடக்க வேண்டும் என்பதாகும்.
‘‘உலகைத் தமிழுக்கும்
தமிழை உலகிற்கும்’’
–என்ற முழக்கத்தோடு தொடங்கியுள்ள சென்னைப்பன்னாட்டு புத்தக திரு விழாவில் கலந்து கொண்டு நேற்று (16.01.2025) முதல் 17, 18 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் இப்புத்தகத் திரு விழாவினை தொடங்கி வைத்ததில் பெருமகிழ்ச்சியடைகிறேன். முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, துணை முதலமைச்சரின் வாழ்த்துக்களோடு இப்புத்தகத் திருவிழா தொடங்கியுள்ளது. இலக்கியம், மொழி மற்றும் பண்பாட்டின் கொண்டாட்டமாக நடைபெறும் இவ்விழாவில் உலகெங்கிலும் இருந்து இலக்கியம் மற்றும் படைப்புலக ஆளு மைகள் கலந்து கொள்ளும் இந்த மாபெரும் நிகழ்வை தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.

64 நாடுகள்

முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி முதலாம் ஆண்டு பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் 24 நாடுகள் பங்கேற்று 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் ஆண்டு 40 நாடுகள் பங்கேற்று 750 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. நடப்பாண்டில் 64 நாடுகள் பங்கேற்றுள்ளது. 1000 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளத் திட்ட மிட்டுள்ளோம். இதற்காக முதலமைச்சர் அவர்கள் ரூபாய் 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
முதலமைச்சர் வருகின்ற 18.01.2025 அன்று இத்திட்டத்தின் கீழ் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை வெளியிட உள்ளார்கள். வெளி நாடுகள் மட்டுமின்றி இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களும் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளார்கள். தமிழ்நாடு அரசின் அழைப்பினை ஏற்று 64 நாடுகள் இந்தப் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்று பெருமை சேர்த்துள்ளார்கள். இதனைத் தமிழ்நாட்டு மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

2500 ஆண்டுகளுக்கு மேலான இலக்கிய பாரம்பரியம் கொண்ட தொன்மையான வரலாறு நம் தமிழ்நாட்டிற்கு உண்டு. இலக்கியம், இசை, கலைகளின் இதய மாகிய நமது சென்னை எழுத்து மற்றும் படைப்புகளில் புதுமைகள்நிறைந்த மாநகரமாக உள்ளது.

முண்டாசுக் கவிஞர் பாரதியாரின் பொன்மொழிகளின் படி
“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்.
இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்.”

மொழி பெயர்ப்பு

இந்நிகழ்வின் முக்கிய மைல் கல்லாக தமிழ்நாடு மொழி பெயர்ப்பு மானியக்குழு 166 நூல்கள் 32 மொழிகளில் மொழி பெயர்த்திட ரூபாய்3 கோடி மானியத் தொகையினை முதலமைச்சர் அவர்கள் வழங்கியுள்ளார்கள். தமிழ் மொழியை உலகளாவிய அளவில் கொண்டு செல்வதை இனிவரும் காலங்களில் மேலும் அதிகமான அளவில் புத்தகங் களை மொழிபெயர்த்து உலகம் முழுவதும் நமது தமிழ் மொழியின் இலக்கிய வார்ப்புகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.

உலகெங்கும்

தமிழ்நாட்டிலுள்ள நூல்கள் உரிமைக்குழு உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்கள் படைப்புலக ஆளுமை யாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்களை இணைக்கும் ஒரு தனித்துவமான அமைப்பாக விளங்குகிறது. நம்முடைய இலக்கிய முகவர் திட்டமும் மிகப் பெரிய வெற்றியைத் தந்துள்ளது. 35 இலக்கிய முகவர்கள் உலகெங்கும் தமிழ்மொழியை கொண்டு செல்வதில் மிகவும் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிகழ்வினை கட்டமைத்த அமைப்பாளர்களுக்கும் பொது நூலக இயக்ககத்திற்கும், தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழ கத்திற்கும் பதிப்பாளர்கள் மற்றும் எழுத்தா ளர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கலை மற்றும் பண்பாட்டின் கொண்டாட்டமாக அமைந்துள்ள சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி – 2025 மாபெரும் வெற்றி அடைவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.

பங்கேற்றோர்

இவ்விழாவில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் திருமதி. எஸ்.மதுமதி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் அய்.லியோனி, இயக்குநர், பொது நூலக இயக்ககம் மற்றும் மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் முனைவர். பொ. சங்கர், இயக்குநர், பொலோனியா குழந்தைகள் புத்தகக் கண்காட்சி, இத்தாலி (காணொலி) திருமிகு. எலினா பசோலி, மதிப்புறு இயக்குநர் பொலோனியா புக் ப்ளஸ், இத்தாலி திருமிகு. ஜாக்ஸ் தாமஸ், இயக்குநர், திரவுபதி வெர்லாக், ஜெர்மனி, கிறிஸ்டியன் வைஸ், நிறுவனர், எல்லைகளற்ற வெளியீட்டாளர்கள் அமைப்பு சைமன் டி ஜோக்காஸ் (கனடா), தலைவர், ஏசியன் பதிப்பாளர்கள் சங்கம் மலேசியா ஷேக் பைசல் பின் ஷேக் மன்சூர், இணை இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள்கழகம் முனைவர். தே. சங்கர சரவணன், இணை இயக்குநர், பொது நூலக இயக்ககம், ச. இளங்கோ சந்திரகுமார், தலைவர், பபாசி சே. சொக்கலிங்கம், மற்றும் பதிப்பாளர்கள் எழுத்தாளர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *