கூண்டோடு காலியாகும் நாம் தமிழர் – அடுத்தடுத்து வெளியேறிய நிர்வாகிகள்

Viduthalai
3 Min Read

கடலூர்,ஜன.13- பெரியார் பற்றிய சீமானின் விமர்சனம்
காரணமாக பலரும் நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறத் தொடங்கி யுள்ளனர்.

கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் மகாதேவன் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன விடுதலை அரசியல் என்று இது நாள் வரை நான் பயணித்து வந்த 10 ஆண்டுகளுக்கு மேலான இனிமையான பயணத்தை இன்றோடு முடித்துக்கொள்கிறேன் “இன்றோடு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன்” இது நாள் வரையிலும் உடன் பயணித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று (12.1.2025) நூற்றுக்கும் மேற்பட்டோர் நாதக-வில் இருந்து விலகி உள்ளனர். சேலம் மாநகர மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் அழகரசன், மாநகர மாவட்ட வணிகர் பாசறை இணைச் செயலாளர் தலைமையில் பலர் விலகி உள்ளனர்.

என்ன காரணம்?
பெரியாரை அவமதிக்கும் விதமாக ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் பேசி இருந்தார். இதற்கு அவர் விளக்கமும் அளித்து இருந்தார். பெரியார் தத்துவங்களை மட்டுமே பேசி ஓட்டு சேகரிக்க எந்த தலைவராவது தயாராக இருக்கிறாரா? வள்ளலார், அய்யா வைகுண்டர் போல் என்ன புரட்சியை செய்தார் பெரியார்? பெரியார் குறித்த விவாதத்திற்கு இரு கரம் நீட்டி தயாராக இருக்கிறேன். பெரியார் ஆரியத் தலைமையுடன் நட்புடன் இருந்தார் என்று சீமான் விளக்கம் அளித்தார்.
ஆனால் இதை சீமானின் நாம் தமிழர் கட்சியினர் பலர் ஏற்கவில்லை. இந்த நிலையில்தான் நாம் தமிழர் நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து வெளியேற தொடங்கி உள்ளனர்.

விலகல்
நாம் தமிழர் கட்சியின் முகமாக.. மாவட்ட அளவில் இருந்த பல தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேற தொடங்கி உள்ளனர். கட்சியின் முக்கிய தலைவர்கள் என்று கருதப்பட்ட பல உள்ளூர் தலைகள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். அதிலும் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் வெளியேறத் தொடங்கி உள்ளனர். அதற்கான காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாம் தமிழரில் இருந்து பலர் வெளியேறி திமுக, அதிமுகவில் இணைந்தனர். இதன் காரணமாக நாம் தமிழர் கட்சி பெரிய பிளவை சந்தித்தது. தற்போது மீண்டும் நாம் தமிழரின் அஸ்திவாரம் ஆட தொடங்கி உள்ளது. அந்த கட்சியில் மீண்டும் கட்சி மாறும் படலம் தொடங்கி உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலரும் வரும் நாட்களில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்தன. நாம் தமிழர் கட்சியில் தற்போது உட்கட்சி மோதல் எழுந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் வருகையே நாம் தமிழரில் பலர் வெளியேற மிக முக்கியமான காரணமாக மாறியது. ஆனால் எதிர்பார்க்காத வகையில் இதுவரை தமிழக வெற்றிக் கழகம் பக்கம் யாரும் போகாமல் திமுகவில் தஞ்சம் அடைந்து உள்ளனர். .
தமிழக வெற்றிக்கழகம்.. அதிமுகவை எதிர்க்கிறது.. திமுகவை எதிர்க்கிறது.. பாஜகவை எதிர்க்கிறது. இது கிட்டத்தட்ட நாம் தமிழரின் சாயல்தான்.. இதை மனதில் வைத்தே நாம் தமிழர் நிர்வாகிகள் பலர் வெளியேறுவதாக கூறப்பட்ட நிலையில் இவர்கள் தவெக பக்கம் போகாமல் திமுக பக்கம் செல்ல தொடங்கி உள்ளனர்.

சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் தலைமையில் அண்மையில் அறிவித்தனர். இதுதான் நாம் தமிழர் கட்சியின் பிரிவினைக்கு தொடக்க புள்ளியாக இருந்தது. கட்சியில் சீமான் தங்களின் பேச்சுக்கு மரியாதையே கொடுக்கவில்லை என்பதை காரணமாக கூறி இருந்தனர். அதைத்தொடர்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் சுகுமார், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது கட்சியில் மேலும் பிரச்சினையை ஏற்படுத்தியது. ஆனால் இவர்கள் யாரையும் தடுத்து நிறுத்த நாம் தமிழர் கட்சியின் சீமான் நினைக்கவில்லை.

சீமான் இவர்களிடம் பேசாமல் போனதே இதற்கு முக்கிய காரணம். போனால் போகட்டும்.. கட்சி யாரையும் நம்பி இல்லை என்று சீமான் கூறியதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

சமீபத்தில் சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் அழகாபுரம் தங்கம், கட்சியிலிருந்து விலகுவதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கட்சியில் தனக்கு மரியாதையை இல்லை என்று கூறி இவர் வெளியேறி உள்ளார். இவர்களும் விரைவில் திமுகவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *