மாட்டுப் பொங்கலன்று எருமையை ஒதுக்குவது வர்ணபேதமே!
எருமையையும் அன்று குளிப்பாட்டி, மாலையிட்டு ஊர்வலமிடுவீர்!!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
திராவிடர் –தமிழர் வேறு வேறு அல்ல; எல்லாம் ஒன்றே! பொங்கல் விழா என்பது நமது பண்பாட்டுத் திருவிழா – மாட்டுப் பொங்கலன்று எருமையை ஒதுக்குவது ஏன்? நிறம் கருப்பு என்பதாலா? அதிலும் வர்ண பேதமா? எனவே, மாட்டுப் பொங்கலன்று எருமையையும் குளிப்பாட்டி, மாலை அணிவித்து பசு, காளைகளோடு ஊர்வலமிடுவீர் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பொங்கல் விழா என்ற அறுவடைத் திருநாள் திராவிடர் திருநாள்.
பொங்கல் விழாவை தமிழர் திருவிழா என்றாலும், திராவிடர் திருவிழா என்றாலும், ஒன்றேதான்; முரண் அல்ல; சிலரின் குழப்பம் அல்லது குதர்க்கம் தேவை யற்றது.
தமிழர் – திராவிடர் ஒருவரே!
இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் எளிதாகக் குறிப்பிட்டார்.
‘‘‘தமிழர்’ என்று கூறிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்; ‘திராவிடர்’ என்பதால் நான் உரிமை பெறுகிறேன்’’ என்றார்!
பண்பாட்டுப் பெருவிழா இத்திருவிழா!
ஆரியம் தனது ‘மனுஸ்மிருதியில்‘ வேளாண்மையைக் கேவலப்படுத்துகிறது.
‘‘சிலர் பயிரிடுதலை நல்ல தொழிலென்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்பு பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது; ஏனெனில், இரும்புக் கொழுநுதி உடைய கலப்பை, மண்வெட்டி இவற்றைக் கொண்டு பூமியையும், பூமியிலுண்டான சிறிய உயிரினங்களையும் வெட்டுகிறதல்லவா?’’
(மனுஸ்மிருதி – அத்தியாம் 10, சுலோகம் 84)
திராவிடப் பண்பாட்டில் இந்த ஆரியப் பண்பாட்டுக்கு எதிராக திருக்குறளில் ‘உழுவோர் உலகத்தார்க்கு அச்சாணி!’
‘‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்’’
என்று பலபடப் புகழுகின்றனர். அதுமாத்திரமா?
ஹிந்து மதப் பண்டிகைகள் எல்லாம்
ஆரிய மயமானவையே!
இன்று மாதந்தவறாமல் கொண்டாடப்படும் ஹிந்து மதப் பண்டிகைகள் எல்லாம் ஆரிய மயமானவை, மனிதர்களைக் கொல்லுதல், அழித்தல் என்ற கொடுமை யையும், அறிவுக்கு ஒவ்வா மூடநம்பிக்கைகளையும் கொண்ட பண்டிகைகள்.
பொங்கல் ஒன்றுதான் திராவிடப் பண்பாட்டுக்கானது.
யாகத்தை வெறுத்த, எதிர்த்த பண்பாடு – திராவிடர் பண்பாடு.
வேளாண்மை – உழவு கலப்பைப்பற்றி கருணை யுடன்(?) பொங்கும் மனுவாதிகள், யாகம் என்ற பெயரில் எத்தனைப் பிராணிகளைக் (உயிர்களை) கொன்று பொசுக்கி, அவற்றின் ‘அவிர்ப்பாகங்களை’ உண்ணும் இவர்கள்தான்; கலப்பை மண்ணைக் கீறி பல உயிர்களைக் கொல்கிறது என்று போலிக் காரணம் கூறு கின்றனர் – எவ்வளவு முரண்பாடு முட்டும் வேடிக்கை!
மாட்டுப் பொங்கல் கொண்டாடி மகிழ்கிறவர்கள் உழவர்கள்!
எருமை மாடு என்ன குற்றம் செய்தது?
அதில்கூட பின்னாளில் ஆரிய போதனையால்,
காளை மாடு, பசு மாடு ஆகியவற்றை மட்டும் மாட்டுப் பொங்கலில் சிறப்புச் செய்து கொண்டாடுவது– எருமை மாடு என்ன குற்றம் செய்தது? வடநாட்டில் இன்றும்கூட பல மாநிலங்களில் எருமை தானே ஏர் பூட்டப்பட்டு உழவுப் பணிக்கு உதவுகின்றது!
பின் ஏன் அதற்கு ஏதும் செய்யாது அரண்? கருப்பு! கருப்பு!!
புராணக் கதைப் புளுகுப்படி
அது எமன் ஏறும் வாகனமாம்!
வர்ண தருமம் அதில்கூட!
கருப்பைக் கண்டால் அவ்வளவு எரிச்சல்!
திரு.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். திராவிட நாகரிக ஆய்வுப் பெருமகனார்.
‘எருமை’ எப்படி நமது பண்டைய இலக்கியங்களில் சிறப்புப் பெற்று, பின்னர் கருப்பு நிற வெறுப்பே முதன்மையாகி உழைக்கும் அதனை ஒதுக்கிவிட்ட கொடுமை அரங்கேற்றப்பட்டதுபற்றி, விளக்கமாக எழுதியுள்ளார்!
மாட்டுப் பொங்கலன்று எருமை மாட்டுக்கும் சிறப்பு செய்வீர்!
பொங்கல் விழாவான திராவிடர் திருவிழாவில் மாட்டுப் பொங்கல் கொண்டாடும்போது, எங்கெங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ, அங்கெல்லாம் எருமைகளையும் குளிப்பாட்டி மாலையிட்டு, காளை, பசுமாட்டின் பக்கத்திலேயே நிறுத்திக் கொண்டாடி, பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் பணியினைச் சிறப்புடன் நடத்திட முயலுங்கள்!
சிறுசிறு நிகழ்வுகளைக்கூட பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள் ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ உரியோர் என்பதற்கு இம்மாதிரி பண்பாட்டுப் புரட்சிகளை மேலும் சிறப்புடன் நடத்தி, வழிகாட்டிட முன்வரவேண்டும்!
தைப் பொங்கலைக்
கொண்டாடுவோம்!
திராவிடர் திருவிழாவாக தைப் பொங்கல் என்ற தமிழர் திருநாளை ஊக்கம் பொங்க, உணர்ச்சி கொப்பளிக்க உலகம் உவக்கக் கொண்டாடி மகிழவேண்டும்!
ஆயத்தமாவீர்!
கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
12.1.2025