சென்னை, ஜன.11 சட்டப் பேரவையில் காஞ்சிபுரம் தொகுதியில் வீட்டு வசதி வாரியம் மூலம் வணிக வளாகம் கட்டித் தரப்படுமா? என்று காஞ்சிபுரம் சட்டப் பேரவை உறுப்பினர் எழிலரசன் கேள்வி எழுப்பினார்.
வாடகை
இதற்கு பதிலளித்து வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:-காஞ்சிபுரம் மட்டுமல்ல -– தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் குடியிருப்புகள் மிக மோசமாக இருந்த நிலையில் அவற்றை இடித்து வீட்டுவசதி வாரியம் மூலம் புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் வீடுகளுக்கான தேவை குறித்து தகவல் வாங்கி அவர்கள் குறிப்பிடும் பகுதியில் வீட்டு வசதி வாரியம் முலம் வீடுகள் கட்டுகிறோம்.மேலும், கடந்த ஆட்சியில் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்ட வீடுகளில் 6,912 வீடுகள் விற்கப்படாமல் இருந்தது. அவற்றில் 2,212 வீடுகள் தற்போது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.மேலும், வீட்டுவசதி வாரியம் கட்டிய வீடுகளில் விற்காத வீடுகளை வாடகை வீடுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில்
ரூபாய் 2.69 கோடியில்
நவீன மீன் அங்காடி
சென்னை, ஜன.11 சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.2.69 கோடியில் அமைக்கப்பட்ட சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடியில் உள்ள கடைகளுக்கு மாத வாடகை ரூ.625 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 69 லட்சத்தில் 82 கடைகள் கொண்ட நவீன மீன் அங்காடி சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 1,247 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் 1,022 சதுர மீட்டர் பரப்பளவில் அங்காடி அமைந்துள்ளது.
இந்த அங்காடியில் புயலால் சேதமடையாத வகையில் சென்சைல் கட்டுமானத்துடன் கூடிய மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. மீன் கழிவுகளை வெளியேற்ற சுத்திகரிப்பு நிலையம், குப்பையை எளிதாக அகற்றுவதற்கான அமைப்புகள், வழிகாட்டு பலகைகள், மீன் கழிவுநீரை பயோ டைஜிஸ்ட் கட்டமைப்புக்கு கொண்டு செல்ல பிரத்யேக வடிகால், வாகன நிறுத்தம் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன.
இதில் உள்ள கடைகள் ஒவ்வொன்றும் 25 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளுக்கான வாடகையை மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. அதன்படி ஒரு சதுர அடிக்கு மாத வாடகை ரூ.25 என ஒரு கடைக்கு ரூ.625 நிர்ணயித்துள்ளது. இது விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.