ஈரோடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து
வெற்றி வாகை சூடி, ஒன்றிய பி.ஜே.பி. அரசுக்கு எச்சரிக்கைக் குரலாக ஒலிப்போம்!
திராவிடர் கழகம் தன் பங்களிப்பை உறுதியாக அளிக்கும்!
தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை
ஈரோட்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து, ஒன்றிய பி.ஜே.பி. அரசுக்கு எச்சரிக்கைக் குரலாக அமைய பாடுபடுவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கழகக் கொள்கை உறவுகளுக்கு, ஈரோட்டில் நமது கொள்கைச் செல்வம் ஈ.வெ.கி.ச.இளங்கோவனின் ஈடுசெய்ய இயலாத இழப்பின் காரணமாக ஏற்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி காலியிடத்தை நிரப்ப, இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இன்னும் 10, 12 மாதங்களேதான் அந்தப் பதவியின் காலம் என்றாலும், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், தி.மு.க.வின் அன்பான வேண்டுகோளை ஏற்று, அத்தொகுதியைத் தி.மு.க.வுக்குக் காங்கிரஸ் விட்டுக் கொடுத்ததன்மூலம், தமிழ்நாட்டில், ‘திராவிட மாடல்’ ஆட்சி நாயகரின், தி.மு.க.வின் தலைமையில் உள்ள கூட்டணி கொள்கைக் கூட்டணிதான், வெறும் பதவிக் கூட்டணி அல்ல என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பெருந்தன்மை
காங்கிரஸ் கட்சித் தலைமையின் முடிவு, அதன் பெருந்தன்மையையும், கொள்கைப் பார்வையையும் சிறப்பாக வெளிப்படுத்துகின்ற ஓர் இசைவு என்பதற்காக அதனைப் பாராட்டுகிறோம்.
இடைத்தேர்தல் என்பது நடைபெறும் ஆட்சியின் சாதனைகளுக்கான ஓர் உரைகல் ஆகும்!
அந்த வகையில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் சாதனைக்கு மேல் சாதனைகளை நமது முதலமைச்சர் தலைமையிலான தி.மு.க. அரசு நிகழ்த்தி, உலகம் தழுவிய பாராட்டினைப் பெற்று, புகழ் மகுடம் சூட்டிக் கொண்டுள்ளது!
சாதனைகளை எப்படிப்பட்ட சூழலில் முதலமைச்சர் செய்து வரலாறு படைக்கிறார் என்பது முக்கியமாகக் கோடிட்டுக் காட்டப்பட வேண்டியதாகும்!
ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையையும் கடந்து சாதனைகளைக் குவிக்கும் ‘திராவிட மாடல்’ அரசு!
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஒருபுறம் தங்களுடைய கொள்கை கூட்டுறவு கூட்டாட்சி (Co-operative Federation) என்று வாயால் உச்சரித்துக் கொண்டு, மறுபுறத்தில் உரிய நிதிகளைக்கூட பாரபட்சமின்றித் தராமல், பேரிடர் காலங்களிலும், புயல், மழை, வெள்ளம் பாதிப்பில்கூட ஓர் அணா கூடத் தராது, வெறும் ஆய்வுக் குழுக்களை, சடங்காச்சாரமாக அனுப்பி, ஓரவஞ்சனை ஆட்சி செலுத்தும் நிலையில், நிதிப் பற்றாக்குறை, நிதி நெருக்கடிக்கு இடையிலும் மக்கள் நலத் திட்டங்களில் கல்வி, குறிப்பாகப் பெண் கல்வி, ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரோடி
உலகத்தாரை வியப்பின் விளிம்பிற்குத் தள்ளுகிறது!
ஆர்.எஸ்.எஸ். கொள்கை பரப்பும் ஆளுநர்!
மாநில ஆளுநர் என்ற பெயரில், ஆர்.எஸ்.எஸ். கொள்கை பரப்பு பொறுப்பாளராக தன்னைக் கருதி, ராஜ்பவனத்தைக் காவி மயமாக்கி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு முட்டுக்கட்டை போட்டு, தினமும் ஒரு போட்டி அரசு நடத்துவதையும் தாண்டி, மரபுகளையும், அரசமைப்புச் சட்ட விதிகளையும்கூட பின்பற்றாத அநீதிக்கான ஏஜெண்டாக திட்டமிட்டு நடந்து, தி.மு.க. ஆட்சிக்குத் அன்றாடத் தொல்லைக் கருவியாக உள்ள ஒருவருக்கும், மாநில உரிமைகளை அடகு வைத்து, அப்படிப்பட்ட ஆளுநரின் ஏவுகணைகள்போல் (எடுபிடிகள் என்ற சொல்லைத் தவிர்த்து) நடந்துவரும் கடமை தவறும் பல எதிர்க்கட்சிகளுக்கும் நல்ல வண்ணம் அவ்வப்போது பதிலளித்து, கடமையாற்றுவதில் கண்ணும்
கருத்துமாய் இருக்கிறார் நமது முதலமைச்சர்!
ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு
நெருக்கடியிலும், நிதி மேலாண்மையினை (Fiscal Management) மிக அற்புதமாகச் செய்து, ஏழை, எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட கோடானு கோடி மக்களின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க ஆட்சியைக் கடந்த 3 ஆண்டுகளுக்குமேல் நடத்தி, நல்லவர்களின் – நடுநிலையாளர்களின், தாய்மார்களின் பாராட்டைப் பெறத் தவறவில்லை.
இதனை வெளிப்படையாகச் சாதித்துள்ளனர். அதற்கு ஈரோடு இடைத்தேர்தல்மூலம், இந்த ஆட்சிக்கு உரிய நற்சான்றிதழை மக்கள் நிச்சயம் வழங்குவர்.
ஈரோடு எப்போதும் திராவிடத்தின் தாய் வீடு!
தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரு.சந்திரகுமார் அவர்களை, திராவிடர் கழகம் ஆதரித்து, வெற்றி பெறச் செய்ய முனைப்புடன் ஆயத்தமாகும்.
இத்தருணத்தில் ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி என்பது, தி.மு.க. ஆட்சிக்கு மேலும் ஊக்க மாத்திரையாக அமைவதோடு, மாநில அரசின் உரிமைக்கு எதிராக, ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடர்ந்து நடத்திடும் ஒன்றிய அரசுக்கு மக்கள் தரும் எச்சரிக்கைக் குரலாகவும் அமையும் என்பது நிச்சயம்!
அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் திரு.சந்திரகுமார் அவர்கள், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனுபவமும் பெற்ற அரசியல் பண்பாளர்.
திராவிடர் கழகம் திண்ணைப் பிரச்சாரம், தெருப் பிரச்சாரம் எல்லாவற்றிலும் தன் பங்களிப்பை அளித்து மகிழும்!
தி.மு.க. கூட்டணியின் வெற்றி மகுடத்தில், மற்றொரு முத்தை ரோட்டு வாக்காளப் பெருமக்கள் பதித்து, தங்களது
நன்றி உணர்வைக் காட்டுவார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்!
திராவிடர் கழகம் திண்ணைப் பிரச்சாரம், தெருப் பிரச்சாரம், மேடைப் பிரச்சாரம் எல்லாவற்றிலும் தனது பங்களிப்பை அளித்து மகிழும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
11.1.2025