பாவேந்தர் போற்றும் திராவிடர் திருநாள் – திராவிட நாட்டுக்குப் பொங்கல் வாழ்த்து

viduthalai
1 Min Read

எண்சீர் விருத்தம்
அகத்தியனும் காப்பியனும் தோன்று முன்னர்!
அரியதமிழ்த் தலைக்கழகம் தோன்று முன்னர்!
மிகுத்தகடல், குமரியினை மறைக்கு முன்னர்!
விண்ணுயர்ந்த பனிமலைதான் நிமிருமுன்னர்ப்!
பகுத்தறிவின் துணையாலே அரசியற்றிப்
பல்கலையின் ஒளியாலே உலகம் காத்துத்
திகழ்பழைய தமிழகமே, இடைநாள் தன்னில்
திராவிடநா டெனப்போற்றும் என்றன் அன்னாய்,
பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல் நன்னாள்,
போற்றிவிழாக் கொண்டாடி உன்ந லத்தைச்
செத்தவரை மறந்தாலும் மறவா வண்ணம்
செந்தமிழால் வானிலெல்லாம் செதுக்கிவைத்தோம்!
பத்தரைமாற் றுத்தங்கம் ஒளிமாய்ந் தாலும்
பற்றுளத்தில் உன்பழஞ்சீர் மங்கிற்றில்லை.
தெலுங்குமலை யாளங்கன் னடமென் கின்றார்
சிரிக்கின்றாய் அன்னாய்நின் மக்கள் போக்கை!
நலங்கெட்டுப் போனதில்லை, அதனாலென்ன?
நான்குபெயர் இட்டாலும் பொருள் ஒன்றன்றோ?
கலங்கரையின் விளக்குக்கு மறுபேர் இட்டால்,
கரைகாணத் தவறுவரோ மீகாமன்கள்?
இலங்குதிரு வே, வையம் செய்த அன்னாய்
எல்லாரின் பேராலும் உனக்கென் வாழ்த்தே!
தமிழகமே, திராவிடமே, தைம்முதல் நாள்
தனிலுன்னை வாயார வாழ்த்துகின்றேன்.
அமிழ்தான பாற்பொங்கல் ஆர உண்டே
அதைஒக்கும் தமிழாலே வாழ்த்துகின்றேன்;
எமைஒப்பார் எவருள்ளார்? எம்மைவெல்வார்
இந்நிலத்தில் பிறந்ததில்லை; பிறப்பதில்லை,
இமைப்போதும் பழிகொண்டு வாழ்ந்ததில்லை
எனும்உணர்வால் வாழ்த்துகின்றேன்; வாய்ப்பேச்சல்ல
அன்றொருநாள் வடபுலத்தைக் குட்டுவன்போய்
அழிக்குமுனம் தன்வீட்டில் இலையி லிட்ட
இன்பத்துப் பொங்கலுண்டான், அதைப்போ லத்தான்
இன்றுண்டேன்; அன்றுன்னை வாழ்த்தினான்போல்
நன்றுன்னை வாழ்த்துகின்றேன் எனைப் பெற்றோயே
நல்லுரிமை உன்மூச்சில் அகன்ற தில்லை.
பொன்னேஎன் பெருவாழ்வே அன்பின்வைப்பே
புத்தாண்டு வாழ்த்துரைத் தேன் நன் றுவாழ்க.

– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *