முட்டுக்காடு, ஜன.9- செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் புதுமையான அனுபவத்தை அளிக்க தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் மிதவை படகு உணவகத்தை பொது மக்களின் பயன்பாட்டுக்காக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ஆர். ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இம்மிதவை படகு உணவகம் 3,000 சதுர அடி பரப்பளவுடன் இரண்டு அடுக்குகள் கொண்ட 100 நபர்கள் அமர்ந்து உணவருந்தும் வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கருத்தரங்குகள், அலுவலக கூட்டங்கள். பிறந்தநாள் கொண்டாட்டங்கள், கேளிக்கை விருந்துகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த ஏதுவாக இப்படகு உணவகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர். ராஜேந்திரன் கூறியதாவது: தனியார் பங்களிப்புடன் தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக ரூ. 5 கோடியே 23 லட்சம் மதிப்பில் மிதக்கும் படகு உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் இதை இனி பயன்படுத்தலாம். தனி நபர் கட்டணம், குழு கட்டணம், தனியார் நிறுவன ஊழியர்களுக்கான கட்டணம் போன்றவை அறிவிக்கப்படும். இங்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து வாய்ப்புள்ள மற்ற இடங்களிலும் இதுபோன்ற படகு உணவகம் தொடங்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் 300 சுற்றுலா மய்யங்களை உருவாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். பி. சந்திர மோகன், சுற்றுலா ஆணையர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், பாலாஜி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.