சென்னை, ஜன.9 தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தையும், இலவச வேட்டி சேலைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 77 இலட்சத்து 22 ஆயிரம் வேட்டிகள், ஒரு கோடியே 77 இலட்சத்து 64 ஆயிரம் சேலைகள் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ‘‘ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும்” என்று அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு இலவச வேட்டி-சேலைகள் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (9.1.2025) சென்னை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம் சைதாப்பேட்டை, சின்னமலையில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தையும், இலவச வேட்டி – சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இலவச வேட்டி சேலை
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தின் மூலம், 249.76 கோடி ரூபாய் செலவில் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள்.
மேலும், பொங்கல் திருநாளையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி – சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், ஒரு கோடியே 77 இலட்சத்து 22 ஆயிரம் எண்ணிக்கையிலான வேட்டிகள் மற்றும் ஒரு கோடியே 77 இலட்சத்து 64 ஆயிரம் எண்ணிக்கையிலான சேலைகள் நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,224 நியாய விலைக்கடைகளில் இன்று (9.1.2025) முதல் வருகிற 13ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டது. கூட்டுறவுத்துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கைத்தறித்துறையைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொங்கல் விழாவிற்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர்மு. மகேஷ்குமார், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பெ. அமுதா, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை செயலாளர் வே. அமுதவல்லி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் டாக்டர் ந. சுப்பையன், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.