மும்பை சித்தி விநாயகர் கோயில் லட்டு பைகளில் எலிக்குஞ்சுகள்
மும்பை, செப்.26- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டு இருந்ததாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இதையடுத்து லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் நெய்யில் கலப்படம் செய்து இருப்பது உறுதியானது. திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டில் விலங்குகள் கொழுப்பு கலந்த நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் மும்பையில் சித்தி விநாயகர் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாத பாக்கெட் வைக்கப்பட்டு இருந்த பெரிய தட்டு மற்றும் லட்டு பாக்கெட்டுகளை எலிகள் கடித்து சேதப்படுத்தி இருப்பதையும், அதில் எலி குஞ்சுகள் கிடப்பதையும் காட்டும் காட்சிப் பதிவு சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.லட்டு பாக்கெட்டுகளை எலிகள் சேதப்படுத்தி, அதில் தாய் –- எலிக் குஞ்சுகளை போட்டு சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. சமூகவலைதள காட்சிப் பதிவு குறித்து கோவில் அறக்கட்டளை தலைவரும், சிவசேனா சட்டமன் உறுப்பினருமான சதாசர்வன்கர் கூறுகையில், ‘‘காட்சிப் பதிவில் காட்டப்படும் இடம் அசுத்தமாக உள்ளதாம். அந்த காட்சிப் பதிவு கோவிலில் எடுக்கப் பட்டது அல்ல. வெளியில் எங்கோ அந்த காட்சிப் பதிவு எடுக்கப்பட்டுள்ளதாம். இது தொடர்பாக கோவில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்படுமாம். மேலும் இந்த விவகாரம் குறித்து துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தகுந்த காரணங்களுடன் சிபிஅய் விசாரணைக்கு உயா்நீதிமன்றங்கள் உத்தரவிட வேண்டும்:
உச்சநீதிமன்றம்
புதுடில்லி, செப்.26 ‘மாநில காவல் துறையின் விசாரணை ஏன் நியாயமாக இல்லை என்பதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு சிபிஅய் விசாரணைக்கு உயா்நீதிமன்றங்கள் உத்தரவிட வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மேற்கு வங்கத்தில் கூா்க்காலாந்து பிராந்திய நிர்வாகத்தின் (ஜிடிஏ) கீழ் டார்ஜிலிங், கலிம்போங் மாவட்டங்கள் உள்ளன. இந்த நிர்வாகத்தில் தன்னார்வ ஆசிரியா்களை நியமித்து முறைப்படுத்தும் விவகாரம் தொடா்பாக சில கடிதங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடா்பாக முதல்கட்ட விசாரணை மேற்கொள்ளுமாறு சிபிஅய்க்கு கொல்கத்தா உயா்நீதிமன்றத்தின் ஜல்பைகுரி அமா்வு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமா்வு முன்பாக 24.9.2024 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘அரசமைப்புச் சட்டப் பிரிவு 226-ஆவது பிரிவு அளித்துள்ள அதிகாரங்கள் மூலம், சிபிஅய் விசாரணைக்கு உயா்நீதிமன்றங்களால் உத்தரவிட முடியும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், மாநில காவல் துறையின் விசாரணை ஏன் நியாயமாக இல்லை என்ற காரணத்தை குறிப்பிட்டு சிபிஅய் விசாரணைக்கு உயா்நீதிமன்றங்கள் உத்தரவிட வேண்டும்.
இந்நிலையில், ஜிடிஏ விவகாரத்தில் சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிட்டதற்கான காரணத்தை உயா்நீதிமன்ற நீதிபதி குறிப்பிடவில்லை. சில கடிதங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிடுவது தேவையற்றது’ என்று தெரிவித்தது.
இதையடுத்து ஜிடிஏ விவகாரத்தில் சிபிஅய் விசாரணை மேற்கொள்ள உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் அமா்வு ரத்து செய்தது.