தந்தை பெரியார் உடலால் மறைவுற்று 50 ஆண்டுகள் நிறைவுற்றன என்றாலும் அவர்தம் சிந்தனைகள் உலகளாவி யளவில் மலர்ந்து மணம் வீசிக் கொண்டுள்ளன.
நம்மிடம் தொடர்பில்லாமலேயே பஞ்சாப் மொழியில் ‘‘தி கலெக்டட் ஒர்க்ஸ் ஆஃப் தந்தை பெரியார்’’ என்று ஆங்கிலத்தில் கழகம் வெளியிட்ட நூல் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. வங்க மொழியில் தந்தை பெரியாரின் ‘இராமாயணப் பாத்திரங்கள்’ என்ற நூல் மொழி பெயர்க்கப்பட்டு நூலாக வெளி வந்துள்ளது.
திராவிட மாடல் அரசான சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசால் – தந்தை பெரியார் நூல்கள் 21 மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டு தற்போது வரை – ஜப்பானிஸ், அரபிக், உருது, பிரஞ்சு, ஸ்பானிஷ், மராத்தி, ரஷ்ய, ஆங்கில மொழிகளில் வெளிவந்து விட்டன.
பெரியார் பன்னாட்டு அமைப்பு உலகம் முழுவதும் கிளை பரப்பி, தந்தை பெரியார் தம் உயர் எண்ணங்களைப் பரப்பி வருகிறது. ஈராண்டுகளுக்கு ஒரு முறை உலகின் பல நாடு களிலும் மாநாடுகளையும் நடத்தி வருகிறது.
‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்!’ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 1958இல் பாடியதன் தொலைநோக்கை இன்று கண்ணெதிரில் காண்கின்றோம் – துய்க்கிறோம்.
இவ்வாண்டு செப்டம்பர் 15 அன்று ஜப்பானில் தந்தை பெரியாரின் 146ஆம் ஆண்டு பிறந்த நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பங்கேற்றுச் சிறப்புரை நிகழ்த்தினார்.
தந்தை பெரியார் பிறந்த நாளான இன்று (17.9.2024) சிங்கப்பூரில் சிறப்புரை நிகழ்த்துகிறார்.
எந்தக் காங்கிரசிலிருந்து வகுப்புரிமைக்காக தந்தை பெரியார் வெளியேறினாரோ, அந்தக் காங்கிரசின் இளந் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவையும் கடந்து வெளிநாடுகளிலும் தந்தை பெரியார் தம் சமூகநீதிக் குரலை சமுத்திர அலையாக முழங்கிக் கொண்டு இருக்கிறார்.
சென்னை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரியங்கா காந்தி பெரியாரின் ‘‘பெண் ஏன் அடிமையானாள்?’’ என்ற நூலை வாசித்திருக்கிறீர்களா?’ என்ற வினாவை எழுப்புகிறார்.
சமூகநீதிப் பிரச்சினையில் பிஜேபியை முட்டுச் சந்தில் நிறுத்தியிருப்பது தந்தை பெரியாரின் சமூகநீதிக் கொள்கையே!
சமூகநீதிக்கு எதிராகவும், உயர் ஜாதியினரை தூக்கிச் சுமக்கும் தன்மையிலும் ஒன்றிய பிஜேபி அரசு நடைபோடுவதால், அதனை எதிர்த்து மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பட்டியலின மக்களும், பிற்படுத்தப்பட்டோரும், சிறுபான்மையினரும், தந்தை பெரியாரின் சமூகநீதிக் கொடியை உயர்த்திப் பிடித்து ஒன்று திரளும் நிலை காலத்தின் கட்டாயமாகி விட்டது.
திராவிட மண்ணாகிய தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணம் – தந்தை பெரியாரின் சித்தாந்தமும் செயல் பாடுகளும்தான் என்பதை மற்ற மற்ற மாநில மக்களும் உணரும் நிலை ஏற்பட்டு விட்டது.
தந்தை பெரியாரின் மாணாக்காராகிய அறிஞர் அண்ணா தான் அருமையாகப் படம் பிடித்துச் சொன்னார்.
‘பெரியார் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அறிவுப் புரட்சி சுலபத்தில் நிற்கப் போவதில்லை. அது போக வேண்டிய தூரத்துக்குப் போய், அடைய வேண்டிய சக்தியை, இலக்கைத் தொட்டுத் தான் நிற்கும். எப்படி வில்லை விட்டுக் கிளம்பிய கணை அடைய வேண்டிய இடத்தில் பாய்ந்தால்தான், அதன் வேகம் நிற்குமோ, அதைப்போல அவர்களிடத்தில் இருந்து பிறந்த அறிவுக் கணை எந்த இலட்சியத்தை அடைய வேண்டுமோ, அதை அடைந்தே தீரும், அதில் அய்யம் யாருக்கும் இல்லை’’ என்றார். (திருச்சியில் அறிஞர் அண்ணா 17.9.1967 அன்று நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் ஆற்றிய உரையிலிருந்து).
அண்ணா அவர்கள் அய்யாவைப் பற்றிச் சொன்னது தானே இப்பொழுது நடந்து கொண்டு இருக்கிறது.
1940ஆம் ஆண்டில் (ஆகஸ்டு 4) திருவாரூரில் நடைபெற்ற தென்னிந்திய நலவுரிமைச் சங்கக் கூட்டத்தில் இந்திய அரசின் இலாகாக்களிலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார் தந்தை பெரியார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு 1990இல் வி.பி. சிங் ஆட்சியில் அது செயலுக்கு வந்ததா இல்லையா?
இந்த இலக்கை எட்டுவதற்காக – தந்தை பெரியாரால் அடையாளங் காட்டப்பட்ட தலைவர் ஆசிரியர் மானமிகு
கி. வீரமணி அவர்களின் தலைமையில் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் திராவிடர் கழகம் முன்னின்று நடத்தி, மக்கள் எழுச்சியை ஏற்படுத்திய காரணத்தால், இந்தியா முழுவதிலும் உள்ள கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டைத் துய்க்கின்றனரே!
முதல் சட்டத் திருத்தம் என்றால் தந்தை பெரியார் பெயர் நினைவிற்கு வரும். 76ஆவது சட்டத் திருத்தம் என்றால் தந்தை பெரியாரின் தனித் தன்மையான சீடர் மானமிகு கி. வீரமணி அவர்களின் பெயர்தான் நினைவிற்கு வரும்.
‘‘சகோதரர் வீரமணியைப் பார்க்கும் பொழுதெல்லாம் சமூகநீதி உணர்ச்சியைப் பெறுகிறேன்’’ என்று சமூகநீதிக்
காவலர் பிரதமர் வி.பி. சிங் சொல்லவில்லையா?
இந்தியத் துணைக் கண்டத்திலேயே 69 விழுக்காடு இடஒதுக்கீடு – அரசமைப்புப் பாதுகாப்பு (9ஆவது அட்ட வணையில் சேர்ப்பு) தலை நிமிர்ந்து நிற்பது தமிழ்நாட்டில் தானே! தந்தை பெரியார் போட்டுத் தந்த அடித்தளத்தின் மீது தந்தை பெரியார் தந்த புத்தியோடு உறுதியாக தமிழர் தலைவர் நின்று களம் அமைத்ததால் கிடைத்த வெற்றியின்
அறுவடையல்லவா இது!
தமிழ்நாட்டின் இந்த வெற்றியும், விளைச்சலும் இந்தியா முழுமைக்கும் தேவையே!
அதைத்தான் இளந் தலைவர் ராகுல்காந்தி, ‘‘50 விழுக் காடு அளவில் மட்டுமே இடஒதுக்கீடு என்ற முட்டுக் கட்டை உடைத்தெறியப்பட வேண்டும்’’ என்று முழங்கி வருகிறார். இந்திய அளவில் நடக்கும் போராட்டம் என்பது – பாசிச பா.ஜ.க. அணிக்கும், தந்தை பெரியாரின் தத்துவத் திற்குமிடையிலான சமுதாயப் போரே என்பது ஞாபகத்தில் இருக்கட்டும்!
வெல்வார் பெரியார் – இலக்கை அடையும் வரை அவர் ஏவிய கணைக்கு இடை முறிவு என்பது இல்லை – இல்லை – இல்லை என்பதுதான் யதார்த்தம்.
தந்தை பெரியார் பணி முடிப்போம் – வாரீர் பகு ஜனங்களே!
வாழ்க பெரியார்!