பாப்பாத்தி – ஆத்தூர்
தங்கள் பெயர் பாப்பாத்தி என்று சொன்னீர்கள்,
வித்தியாசமாக இருக்கிறதே?
ஆமாம்! எனது அம்மாவின் அத்தை பெயர் பாப்பாத்தி. அதையே எனக்கும் வைத்துவிட்டார்கள். 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். பெரிய விவரங்கள் தெரியாது. “படித்தால் சோறு கிடைக்காது; வேலை செய்தால்தான் சோறு கிடைக்கும்!”, எனச் சொல்லப்பட்ட காலம். 18 வயது வரை வெளியில் எங்கும் சென்றது கிடையாது. கொள்கை, இயக்கம் என்று வந்த பிறகுதான் வாழ்க்கையே மாறியது. அதற்கு உதாரணம், 5 ஆம் வகுப்பு வரை படித்திருந்தாலும், புத்தக வாசிப்பு என் உயிர் மூச்சாக உருவானது. ஆசிரியர் எழுதிய வாழ்வில் சிந்தனைகள் 17 தொகுதிகளையும் படித்துவிட்டேன். நாதோறும் விடுதலை வாசிப்பது என் வழக்கம். விடுதலை வராத நாட்களில் வாழ்வியல் சிந்தனைகளை மீண்டும் வாசிக்கத் தொடங்கிவிடுவேன். என் தலையணை அருகில் எப்போதும் ஒரு நூல் இருக்கும்.
கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது!
உங்கள் காலத்தில் பெரியார் கூட்டங்கள் கேட்டுள்ளீர்களா?
1964 – 1965 என நினைக்கிறேன், எங்கள் ஊர் ஜேடர் பாளையத்திற்குப் பெரியார் வந்திருந்தார். இது நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது. “பார்ப்பான் ஒரு கல்லை வைத்துக் கொண்டு சம்பாதிக்கிறான், நீங்கள் இருப்பதைத் தொலைச் சிட்டு இருக்கீங்க,” எனக் கோபமாகப் பேசினார். எனக்குக் கேட்கவே பயமாக இருந்தது. தென்னை மரத்தடியில் மேடை கட்டி அதில் கூட்டம் நடந்தது. அப்போது எனக்கு 19 வயது இருக்கும். என் முதல் கூட்ட அனுபவமும் அதுதான். அதேநேரம் எனது பெற்றோர் வேலப்பர் – முத்துலட்சுமி ஆகியோரின் சுயமரியாதைத் திருமணம் 1940இல் நடை பெற்றது. பத்திரிகையில் “நல்லறிவே வெல்லும் துணை! சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு!” என இருந்தது.
உங்கள் பெற்றோரே சுயமரியாதைக் கருத்தில் இருந்தவர்களா?
ஆமாம்! எனினும் நான் பெரியளவில் கொள்கையை அறிந்திருக்கவில்லை. அதேநேரம் எனக்கு 1963இல் சுய மரியாதைத் திருமணம் நடைபெற்றது. இணையர் பெயர் கொமுரு. 1975இல் தொழில் நிமித்தம் ஆத்தூர் வந்தோம். இங்கு நெல், பருத்தி, மரவள்ளிக்கிழங்கு போன்ற விவசாயம் அதிகம். மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஜவ்வரிசி தயார் செய்வார்கள். அதேபோல அதை மாவாக்கி, மருந்துப் பொருட்களுக்கும் பயன்படுத்துவார்கள். இது தொடர்பாகவே இங்கு வந்தோம்.
இந்தப் பகுதியில் “ஒரு கை முத்து” என ஒருவர் இருந்தார். அவர் பெரியார் கொள்கையைப் பின்பற்றி வந்தவர்.
‘வெள்ளைச் சேலை ஒழிப்பு இயக்கம்’ என ஒரு அமைப்பும் வைத்திருந்தார். அதேபோன்று நிலக்கடலை வியாபாரம் செய்து வந்த தங்கவேலு என்பவரும் இங்கிருந்தார். இவர்கள் மூலம் நாங்கள் அதிகமான கூட்டங்களுக்குச் சென்றோம். வீட்டிற்கும் தோழர்கள் வருவார்கள். கொள்கைத் தொடர்பாய் நிறைய பேசுவோம்.
பழைய தோழர்கள் எல்லாம் நினைவில் இருக்கிறார்களா?
சிறிது மறந்துவிட்டது. நிறைய தோழர்கள் இருந்தார்கள். எனினும் அம்சா, பவுனாம்பா, ஜெயம், அங்கம்மாள், விருதகிரி இணையர், அணுகுண்டு பொன்னையா இணையர் நான் உள்ளிட்ட 8 பேர் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஒன்றாகச் செல்வோம். தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், சென்னை உட்பட பல மாநாடுகளுக்குச் சென்றுள்ளேன். கருப்பு சட்டைகளைப் பார்த்தாலே எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். சொந்த ஊருக்குப் போவது, திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற் பதில் கூட ஆர்வம் இருக்காது. இயக்கக் கூட்டங்கள் என்றால் அவ்வளவு விருப்பம். தோழர்களுக்குள் வணக்கம் சொல்லிக் கொள்வதும், சிரித்து மகிழ்வதுமாக அந்தச் சந்திப்புகளே நெகிழ்வாக இருக்கும்.
அதேபோல கடந்த சில ஆண்டுகளாகத் தான் குற்றாலம் பயிற்சி முகாம் செல்லவில்லை. அதற்கு முன்னால் அனைத்திலும் பங்கேற்றுள்ளேன்.
தஞ்சாவூரில் உள்ள வள்ளியம்மை அவர்கள் எனக்கு நெருங்கிய நண்பர். ஒன்றாகக் குற்றாலத்தில் இருப்போம். மிக மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்போம். அதை நினைக்கும் போது, அப்படியே இருந்திருக்கக் கூடாதா என நினைப்பேன்.
ஆண், பெண் பேதம் இன்றி எல்லோரும் நன்றாகப் பழகுவார்கள். இயக்க வாழ்க்கையே தனி ரகம்தான்!
உங்கள் இணையர் கொமுரு அவர்கள்
குறித்த நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்?
2016ஆம் ஆண்டு, தம் 78ஆவது வயதில் இணையர் மறைந்துவிட்டார். ஆத்தூர் ஒன்றியத் தலைவர், மாவட்டத் தலைவர், பொதுக்குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளில் இருந்தவர். 1977இல் ஆத்தூர், முல்லைவாரி எனும் இடத்தில் 11 ஏக்கர் இடம் வாங்கி விவசாயம் செய்தோம். இப்போது தென்னந்தோப்பாக உள்ளது. மதுரை தேவசகாயம்,
துரை.சக்ரவர்த்தி, திருமகள், பார்வதி, மனோரஞ்சிதம், பிறை நுதல் செல்வி, அருள்மொழி, டெய்சி மணியம்மை உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் இங்கு வந்துள்ளனர்.
ஆசிரியர் அய்யா சொன்னதற்கிணங்க பெரியாரியல் பயிற்சி முகாம் 2 நாட்கள் தென்னந்தோப்பில் நடத்தினோம். ஆசிரியர் அவர்கள், கோ.சாமிதுரை, கவிஞர் கலி.பூங்குன்றன், துரை.சந்திரசேகரன், டாக்டர் கவுதமன், அதிரடி அன்பழகன் உள்ளிட்ட பலர் வகுப்பு எடுத்தார்கள். பயிற்சியில் பங்கேற்ற வர்களுடன் குழுவாக எடுத்துக் கொண்ட படமும் வீட்டில் உள்ளது.
அந்தத் தோப்பில் அடிக்கடி நிகழ்ச்சிகள்
நடைபெறுவதாகக் கேள்விப்பட்டோமே?
ஒவ்வொரு பெரியார் பிறந்த நாளிலும் அங்குதான் விருந்து நடைபெறும். 100 பேர் தொடங்கி 800 பேர் வரையிலும் கூட விருந்து நடைபெற்றுள்ளது. பெரியார் பிறந்த நாளை வாய்ப்பாகப் பயன்படுத்தி உறவினர்கள், நண்பர்களையும் அழைப்போம். ஒருமுறை சுற்றுவட்டாரக் கிராம மக்கள் அனைவரையும் அழைத்திருந்தோம். அதிகபட்சமாக 25 ஆடுகள் வரை சமைத்துள்ளோம். தவிர ஆத்தூர் பகுதிகளில் கழகக் கூட்டங்கள் நடந்தால் இங்கிருந்து உணவு தயார் செய்து அனுப்பிடுவோம். எத்தனைப் பேராக இருந்தாலும் நானே ஆர்வமாகச் சமைப்பேன். அதில் எனக்கொரு தனி மகிழ்ச்சி! ஆசிரியர் அய்யா அவர்களும் சிலமுறை வந்துள்ளார்கள். கடைசியாக எனக்கு அறுவைச் சிகிச்சை நடந்த நிலையில் பார்ப்பதற்காகவும் வந்தார்கள்.
தங்கள் குடும்பத்தில் அனைவருமே
கொள்கை வழியில் தான் இருக்கிறார்களா?
ஆமாம்! மகன் முருகேசன், மகள் தனலட்சுமி இருவருக்குமே சுயமரியாதைத் திருமணம் தான் நடந்தது. ஆசிரியர் அவர்கள் நடத்தி வைத்தார்கள். எங்கள் பேத்தி கொஞ்சம் பயந்த சுபாவத்துடன் இருந்தார். தைரியமும், தன்னம்பிக்கையும் வரட்டும் எனத் தஞ்சாவூர் பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தில் படிக்க வைத்தோம். அதேபோல சிறப்பாகப் படித்து தற்சமயம் ஸ்காட்லாந்து நாட்டில் வசிக்கிறார். இன்னொரு பேத்தி ஜெர்மனியில் இருக்கிறார். பேரன், பேத்திகள் வரை அனைவருமே கொள்கைப் பற்றுடன் இருக்கிறார்கள்.
எனது இணையர் கோவிலுக்கு எந்த நன்கொடையும் வழங்கமாட்டார். எங்கள் பிள்ளைகளும் அவ்வாறே இருக்கிறார்கள். அதேநேரம் கல்வி, பொதுச் சேவை எனும் போது முடிந்த உதவிகளைச் செய்வார்கள்.
தங்களின் இயக்க நடவடிக்கைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?
கோயம்புத்தூரில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், “தொடக்கக் கல்வி ஆசிரியர் பணிக்குப் பெண்களை மட்டுமே நியமிக்க வேண்டும்”, என்கிற ஒரு தீர்மானத்தை நான் வாசித்தேன். அந்த நினைவுகளைப் பொக்கிசமாக வைத்துள்ளேன். ஆசிரியர் அவர் களுக்கு ஆத்தூரில் எடைக்கு எடை நாணயம் வழங்கிய போது மேடையில் நானும் இருந்தேன். தஞ்சாவூர் பெரியார் மணியம்மைப் பல் கலைக் கழகத்திற்குச் “சிறு துளி பெரு வெள்ளம்” என்கிற பெயரில் நன்கொடை பெறப்பட்டது. அந்தச் சமயம் எங்கள் தொழிற்சாலையில் நட்டம் ஏற்பட்டுவிட்டது. எனவே எனது இணையர் ரூ. 5 ஆயிரம் மட்டும் நன்கொடை கொடுத்தார். ஒருவேளை நட்டம் அதிகமானால் அதையும் கணக்கில் தானே எழுதுவோம். எனவே, சமாளித்துக் கொள்ளலாம் என ரூ. 25 ஆயிரம் வழங்கச் செய்தேன்.
அதேபோல ஆசிரியர் அவர்கள் மேட்டூருக்கு வந்திருந்த போது, எடைக்கு எடை தங்கம் வழங்க எனது இணையர் ஒரு பவுன் வழங்கினார். நான் என் பங்காக இருக்கட்டும் எனத் தோடு, வளையல் போன்றவற்றைக் கொடுத்தேன். டில்லி பெரியார் மய்யத்திற்கு ரூ. 25 ஆயிரம், பெரியார் உலகத்திற்கு ரூ. 25 ஆயிரம் நன்கொடை வழங்கினோம். இணையரின் நினைவு நாளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 500 வளர்ச்சி நிதியாக கொடுத்து வருகிறோம். இதையெல்லாம் சொல்வதற்கு மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். இவையெல்லாம் எங்கள் கடமையும் கூட! 20 வயது வரை வெளியுலகம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தேன். ஆனால், என் பேரன், பேத்திகள் அந்த வயதில் ஸ்காட்லாந்து, ஜெர்மனி என்று போய்விட்டார்கள்.
இதற்குக் காரணம் இந்த இயக்கம் அல்லவா! தந்தை பெரியார் அல்லவா!
தங்கள் பேச்சில் உற்சாகமும், தன்னம்பிக்கையும்
அதிகமாகத் தெரிகிறதே?
ஆமாம்! இந்த இயக்கம், கொள்கைக் கற்றுக் கொடுத்தது தான். “உன் வாழ்வியல் முறையே இதுதான்”, என உறவினர்கள் அனைவருமே கூறுவார்கள். பெரியார் கூட்டம் மட்டுமின்றி, அன்னை மணியம்மையார் கூட்டமும் கேட்டுள்ளேன். அவர்களுடன் நேரடியாகப் பேசியும் இருக்கிறேன். பெரியார் நூற்றாண்டை வி.பி.சிங் அவர்கள் புதுடில்லியில் நடத்திய போது 1200 தோழர்கள் தமிழ்நாட்டில் இருந்து தனி ரயிலில் சென்றோம். 10 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வந்திருந்தனர். ஒரு வாரம் டில்லியில் இருந்துவிட்டு, லக்னோவும் சென்று திரும்பினோம். ஆத்தூரில் இருந்து மட்டும் 17 பேர் சென்றிருந்தோம்.
அதேபோல சென்னையில் நடந்த மாநாடு ஒன்றிற்கு வி.பி.சிங் வந்தபோதும் சென்றிருந்தேன்.
9 ஆயிரம் வருமான உச்ச வரம்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம், 8 கி.மீ தூரம் நடந்தே சென்றது, ஓரிரு முறை போராட்டங்களில் கைதாகி வெளியானது என நம்மை இயக்கிக் கொண்டே இருக்கிறது இயக்கம். ஆத்துரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகக் கொடியும் ஏற்றியுள்ளேன்.
இணையர் இருந்த போது தனித்தனிப் படமும், இருவரும் இணைந்த படமும் எடுத்து வைத்துக் கொண்டோம். அதேபோல இறப்பு நேர்கிற போது தேவைப்படும் என்கிற எண்ணத்தில் இரண்டு கழகக் கொடிகளும் புதிதாகத் தைத்து வைத்துக் கொண்டோம். இணையர் இறந்துவிட்டதால் ஒரு கொடியைப் பயன்படுத்திவிட்டோம். மற்றொரு கொடி இருக்கிறது…”, என நெகிழும் வகையில் பேசினார் பாப்பாத்தி அம்மாள்!
தங்களைத் தாங்களே உற்சாகமாக்கிக் கொண்டு, மன ஆரோக்கியத்தோடு வாழும் ஒவ்வொரு திராவிடர் கழக மகளிருமே சமூகத்திற்கு வழிகாட்டிதான்!
வி.சி.வில்வம்