கோவை, செப்.5- தமிழ்நாட்டில் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப் பட்ட 13 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.942 கோடி நிவாரண தொகையாக வழங்கப்பட்டு உள் ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.
ஆய்வுக் கூட்டம்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலை வகித்தார்.
இதில், விவசாயிகளின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து அரசுத்துறை அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து 12 பயனாளிகளுக்கு ரூ.26.14 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.
கல்லாறு பழப்பண்ணை
கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
யானை வழித்தடத்தில் உள்ள கல்லாறு பழப் பண்ணையை அகற்றுவது குறித்து நீதிமன்றம் இதில் உத்தரவிட்டுள்ளது. கொப்பரை தேங்காய் கொள்முதல் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு நெல் ஊக்கத்தொகையாக ரூ.985 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இயற்கை பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட 13 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரண தொகையாக ரூ.942 கோடி தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
– இவ்வாறு அவர் கூறினார்.