பாவலர்
சுப. முருகானந்தம்
மாநிலச் செயலாளர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
குன்றக்குடி தந்த
குருமகா சந்நிதானம் வாழ்கவே! – மக்கள்
மன்றங் குடிபுகுந்த
மனித நேயர் வாழ்கவே!!
குன்றக்குடி தந்த
குருமகா சந்நிதானம் வாழ்கவே!
மாற்றாரும் போற்றுகின்ற
மதிநிறைந்த பேராளர்
நூற்றாண்டில் நாம் கூடுவோம்! – அவர்
நாற்றென்றே நாமென்று
நன்றோதிப் பண்பாடுவோம்!!
குறளோதி நம்வாழ்வைக்
குன்றத்து விளக்காக்கி
இறவாத புகழானவர்!!
அறமோதிப் பல்துறையின்
அறிவோதி நம்முளத்தை
அறிவியலின் வழிதோய்த்தவர்!!
எல்லார்க்கும் எல்லாமும்
இனிதுவர வேண்டுமெனும்
நல்வாக்கு மொழிந்தாரவர்!
இல்லாமை கல்லாமை
இல்லையென ஆக்கிடவே
பள்ளிதொழில் தந்தாரவர்!!
(குன்றக்குடி)
சாக்காட்டு வேதாந்தம்
தள்ளுபடி செய்துவிட்டு
பூக்காட்டுத் தமிழோதினார்!
தீக்காட்டு மதமோதல்
தீர்ப்பதற்கு மீன்கூடை
தூக்கியிவர் வழிகோலினார்!!
தீட்டென்று செந்தமிழைச்
சொல்லுகின்ற தீட்சதரைத்
சீயென்றே விட்டேகினார்!
பாட்டொன்றைக் கோயிலிலே
பைந்தமிழில் பாடுதற்குப்
பதறித்தான் விடைதேடினார்!!
ஆண்டவனை அர்ச்சிக்க
அனைவருக்கும் உரிமைதர
வேண்டுமென முரசாகினார்!
மாண்புடைத்தத் திருக்குறளை
மாநிலத்தின் நூலாக்க
மாநாட்டில் கூவிநின்றார்!!
(குன்றக்குடி)
தேன்தோய்த்தத் தமிழ்மொழியைத்
தீய்த்தழிக்க வந்தஹிந்தி
தான்தடுக்கக் கைதாகினார்!
வான்புகழும் பெரியாரின்
வழித்துணையாய்த் தானோடி
நானிலத்தின் நலந்தேடினார்!!
கூட்டுக்குள் அடங்காமல்
கொள்கைவழி வாழ்வேற்றுக்
கூட்டாக வந்தாரிவர்!
வீட்டுக்கு அடையாளம்
‘விடுதலை’யே எனச்சொல்லி
மீட்டாரே மானமிவர்!!
பெரியார்க்குப் பின்னாலும்
பிரியாமல் வீரமணி
பரிந்தேற்றும் பண்பானவர்!
சரியான பாதைவழித்
தடமாகித் தமிழருக்கு
நெறிகாட்டிச் சென்றாரிவர்!!
(குன்றக்குடி)