அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை, ஆக.23- தமிழ்நாட்டில் தான் உயர் கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை பாரிமுனையில் உள்ள பாரதி மகளிர் அரசு கல்லூரியில், பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ்ரூ.25 கோடி மதிப்பில் புதிதாக “கலைஞர் நூற்றாண்டு கட்டடம்’ கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் நேற்று (22.8.2024) நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, கலைஞர் நூற் றாண்டு கட்டடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, இந்துசமய அறநிலையத்துறை அமைச் சர் பி.கே.சேகர்பாபு, மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன், சென்னை மாநகராட்சிமேயர் பிரியா, உயர்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ், கல்லூரி கல்வி இயக்கக இயக்குநர் கார்மேகம், கல்லூரி முதல்வர் கிளாடிஸ் உள்பட பலர் பங்கேற்றார்கள்.
தமிழ்நாட்டில் அதிகம்
நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றுகையில் குறிப் பிட்டதாவது,
100 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே வரவும், படிக்கவும் பெண்களுக்கு உரிமை கிடையாது. பெண்களை ஒரு அடிமையாகத்தான் இந்த சமுதாயம் நடத்தியது. அந்த அடிமைத்தனத்தை தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், திராவிட இயக்கம் மற்றும் தி.மு.க.வும்தான் அடித்து நொறுக்கியது. வீட்டுப்படியை பெண்கள் தாண்டக்கூடாது என்றார்கள். ஆனால், அப்படிப்பட்ட பெண்கள், தற்போது நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதலில் சாதனை படைத்து வருகிறார்கள்.
பெண்கள் முன்னேற்றத்துக்காக திராவிட மாடல் அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 3லட்சம் மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள். இதன்காரணமாக, உயர்கல்வி சேரும் மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 3 லட்சம் மாணவர்கள் பயனடைகிறார்கள். நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம்.
மாணவர்கள் படிப்பில் மட்டு மல்லாது, விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். நன்றாக விளை யாடினால்தான் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணிதம் மற்றும் அறிவியல் பேராசிரியர்கள், மாணவிகளுக்கான விளையாட்டு வகுப்புகளை கடன் வாங்க வேண்டாம்.
மாணவிகளும் விளையாட்டு வகுப்புதானே என்று நினைக்காமல் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.