இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் உத்தராகண்ட் மாநிலத்தில் 16 வயது சிறுமியை பேருந்தில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர் உள்ளிட்ட அய்ந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் பெண்கள் நிர்வாண ஊர்வலம், மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை, உத்தரப்பிரதேசத்தில் சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை என்று சமீபகாலமாக நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அந்த வரிசையில் உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் ஒரு அதிர்ச்சி நிகழ்வு நடந்திருக்கிறது.
கடந்த 13 ஆம் தேதி, டேராடூன் அய்.எஸ்.பி.டி பேருந்து நிலையத்தில் 16 வயது மதிக்கத்தக்க சிறுமி மயக்க நிலையில் இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நலக் குழுவினர் அங்கு விரைந்து வந்து சிறுமியை மீட்டனர். தொடர்ந்து சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிறுமி எதுவும் பேசாமல் தொடர்ந்து அதிர்ச்சி நிலையிலேயே இருந்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. அந்த சிறுமி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந் தவர். அவர் டேராடூன் வருவதற்கு முன்பு, டில்லிக்கும், பின்னர் உத்தரப்பிரதேச மாநிலம் மொராடாபாத்துக்கும் பயணம் செய்திருக்கிறார். நீண்ட நெடிய பயணம் செய்தாலும், எதற்காக பயணம் செய்தார் என்ற தகவலே சிறுமிக்கு தெரியவில்லை. தொடர்ந்து அவருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்ட பிறகுதான், சிறுமியை ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் வெளியில் வந்துள்ளது.
சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலத்தால் மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உத்தராகண்ட் மாநில மகளிர் ஆணையத் தலைவர் குசும் காண்ட்வாலும் பாதிக்கப்பட்ட சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உரையாடியுள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த காண்ட்வால், “நிகழ்வு குறித்து சிறுமியிடம் பேசியுள்ளோம். மேலும் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளோம். சிறுமியை கூட்டு பாலியல் செய்த அனைத்துக் குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “இந்த நிகழ்வு தொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், காசாளர் ஆகிய அய்ந்து பேரை கைது செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம். பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்.
பேருந்து சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் போது, நள்ளிரவு நேரத்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. பேருந்து மற்றும் பேருந்து நிலையத்தில் தடயவியல் பிரிவினர் ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்துள்ளனர். அதேபோல சிறுமிக்கு மருத்துவ சோதனையும் நடத்தியுள்ளோம். அதன் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சிறுமியின் பெற்றோருக்கு தகவல் சொல்லிவிட்டோம். அவர்களும் உத்தராகண்ட் வந்துவிட்டனர்.” என்று கூறியுள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணிக்கு சென்ற செவிலியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அதே மாநிலத்தில் அடுத்த அதிர்ச்சி நிகழ்வு நடந்துள்ளது.
கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி பயிற்சி மாண விக்கு நடந்த கொடூரத்தை நினைத்தாலே கொதிக்கிறது குருதி!
அண்மைக் காலமாக பெண்களுக்கு எதிராக (சிறுமிகள் குழந்தைகள் உட்பட) நடக்கும் இந்தக் கொடூரங்களுக்கு முடிவுதான் என்ன?
பெண்களைக் கோழைகளாக வளர்ப்பதாலா? ‘ஆண் என்றால் சதை பலம், பெண் என்றால் பலகீனம்’ என்ற நிலை மாற்றப்பட வேண்டும்.பெண்ணுரிமை குறித்து தந்தை பெரியாரின் கருத்துகள் அடங்கிய நூல் பாடத் திட்டத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும். உடல் வலிமை பெற பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். தற்காப்பு ஆயுதங்களும் அளிக்கப்பட வேண்டும். நான்கு இடங்களில் வன்கொடுமை செய்ய முயற்சித்த ஆண்கள் பெண்களால் தாக்கப்பட்டனர் என்ற தகவல் வந்தால் மற்ற மற்ற பெண்களுக்கும் துணிவு வரும் – திமிர் பிடித்த ஆண்களும் அடங்குவார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் காவல்துறையினர் பாதுகாப்புக் கொடுக்க முடியுமா?
திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தை நிைனவூட்டுகிறோம். பெண்களுக்குத் துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட வேண்டும்! இனியும் பொறுப்பதற்கில்லை.