நம் இயக்கத்தில், திராவிடர் கழகத்தில் உள்ளோருக்கு கருஞ்சட்டை அணிய வேண்டும் என்று வேண்டுகோள் விட்ட தானது, திராவிட சமுதாயத்துக்கு இருந்து வரும் சமுதாய இழிவை நீக்கிக் கொள்ளும் உணர்ச்சியை ஞாபகப்படுத்த வேண்டும் என்பதற்காகும். இதைக் கழக அங்கத்தினர் பலரும் மற்றும் சில திராவிடர்களும், ஆணும் பெண்ணும் ஆதரித்து அணிந்து வருகிறார்கள்.
இந்தப்படியாக கருஞ்சட்டை அணிபவர்களுக்கு எந்தவித நிபந்தனையோ, எந்தவித ரிஜிஸ்டரோ, சேனை போன்ற உடையோ, யூனிபாரமோ, அணிவகுப்போ, ஆயுதமோ மற்றும் இவை போன்ற ஒரு சேனைக்கோ படைக்கோ உள்ள பயிற்சிகளோ மேற்கொண்டது கிடையாது.
இருப்பினும், சென்னை அரசாங்கம் இதை ஒரு அமைப்பாகக் கருதி சட்ட விரோதமாக்கி இருக்கிறது என்ற போதிலும், நான் திராவிடப் பொது மக்களுக்கு அடிக்கடி தெரிவித்து வருவதுபோல், இது விஷயத்தில் நம் கழக அங்கத்தினரும், திராவிடப் பொதுமக்களும் பொறுமையைக் கையாண்டு சாந்தமும் சமாதானமுமாய் நடந்து வரவேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன். இதற்கு மாறாக எங்காவது பயிற்சி அணிவகுப்பு இருக்கு மானால், அதைக் கண்டிப்பாக நிறுத்திவிட வேண்டும் என்பதைத் தவிர, இந்த உத்தரவினால் நமக்குள் எந்தவித மாறுதலும் ஏற்பட்டு விட்டதாக கருதவேண்டாம் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குடிஅரசு – அறிவிப்பு – 06.03.1948
இரண்டு பணிகள்!
பன்னெடுங்காலமாகவே அறிவீனர்களாக ஆக்கி வைக்கப்பட்டிருக்கும் திராவிட மக்களுக்குச் சிந்தனை அறிவை உண்டாக்கி வைப்பதுதான் திராவிடர் கழகத்தின் முதல் பணி. திராவிடர்களின் இழி தன்மையைச் சூத்திரத்தன்மையைப் போக்குவதுதான் அதனுடைய இரண்டாவது முக்கிய பணியாகும்.
– தந்தை பெரியார்
குடிஅரசு – அறிவுரை – 20.03.1948