அசாம் தலைநகர் குவஹாத்தி இந்த ஆண்டு கடுமை யான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. நகரின் பல முக்கிய பகுதிகளில் நீர் வடியவே அதிக நாள்கள் ஆகிவிட்டன. இந்த நிலையில் அசாம் மாநில முதலமைச்சர் தனது ஆற்றாமையை மறைக்க இந்த வெள்ளம் ”வெள்ள ஜிகாத்” – அதாவது இஸ்லாமியர்கள் அசாமின் வளர்ச்சியைத் தடுக்க இது போன்ற வெள்ளத்தை ஏற்படுத்த செய்த சூழ்ச்சியின் விளைவு என்று கூறியுள்ளார் – எத்தகைய அறிவுச் சூன்யம்!
ஹிந்துபெண்களை இஸ்லாமியர்கள் காதலித்துத் திருமணம் செய்வதை ‘லவ்ஜிகாத்’ என்று குறிப்பிடுவார்கள். இதனால் பல நூறு இளம் ஜோடிகள் பிரிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை வீணாகிவிட்டது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலம் எதிலும் இந்த லவ்ஜிகாத் தடுப்புப் படை என்ற பெயரில் ஹிந்துத்துவ அமைப்பினர் இளம் ஜோடிகளைக் குறிவைத்து தாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் அசாம் முதலமைச்சர் வெள்ள ஜிகாத் என்று பேசியுள்ளார். குவஹாத்தியில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை குறித்து அசாம் அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், மாநிலத்தின் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, குவஹாத்தி புறநகரில் உள்ள ஒரு இஸ்லாமியருக்குச் சொந்தமான பல்கலைக்கழகத்தை குறி வைத்து, “வெள்ள ஜிஹாத்” நடத்தப்படுவதாகக் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 5 அன்று, குவஹாத்தியில் சில மணிநேரம் தொடர்ந்து பெய்த மழை நகரையே நிலை குலையச் செய்தது. இரண்டு நாள்களுக்குப் பிறகு, குவஹாத்தி உயர் நீதிமன்றம், நகரத்தில் தண்ணீர் தேங்குவது தொடர்பான பொது நல வழக்கை விசாரித்து பிஸ்வா சர்மா தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக சாடியது.
குவஹாத்தி நகரின் குடிமக்கள் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சினையைக் கவனத்தில் கொண்டு, தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய் தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு, “குவஹாத்தியில் தண்ணீர் தேங்குதல்/வெள்ளம் போன்ற பிரச்சினைகளை சமாளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நகரத்தில் இந்தப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கடிந்து கூறியது.
இதன் பின் அடுத்த சில நாள்களில், அசாமின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர், நகரத்தை மூழ்கடித்த “பாதிக்கும் அதிகமான தண்ணீர்” “மேகால யாவில் இருந்து வந்தது, குவஹாத்தியில் உருவானது அல்ல” என்று கூறினார்.
நகரில் 1.5 மணி நேரத்தில் 136 மி.மீ மழை பெய்துள்ள தாகவும், தற்போதுள்ள வடிகால் அமைப்பால் ஏற்க முடியாத அளவு மழை பெய்துள்ளதாகவும் அவர் கூறினார். நகரமும் அதன் நிர்வாகமும் “மேகாலயாவிலிருந்து வரும் தண்ணீரைக் கையாள முடியாது” என்று அவர் சப்பைக் கட்டுக் கட்டினார்.
இந்த நிலையில் அம்மாநில முதலமைச்சர் தன்னுடைய இயலாமையை மறைக்க புதுக்கதை ஒன்றைக் கூறியுள்ளார்
அண்டை மாநிலமான மேகாலயாவில் ரி-போய் மாவட்டத்தில் அமைந்துள்ள மேகாலயா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின்மீது அவர் குறிப்பாக குற்றம் சாட்டினார். இந்தப் பல்கலைக்கழகம் குவஹாத்தி மாவட்டத்தின் எல்லையில் உள்ளது. இந்த எல்லை மேகாலயா மற்றும் அசாமைப் பிரிக்கும் ஜோராபத்தில் உள்ளது
யுஎஸ்டிஎம், ஒரு தனியார் பல்கலைக்கழகம், கல்வி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது. இந்தப் பல்கலைக் கழகம் மஹ்புபுல் ஹோக்கால் நிறுவப்பட்டது. ஹோக் பல்கலைக் கழகத்தின் வேந்தராகவும் உள்ளார். இவர் அசாமில் உள்ள ஏழை மாணவர்களுக்காக இந்த பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறார். இந்தப் பல்கலைக்கழகத்தில் ஏறக்குறைய 6,000 மாணவர்கள் படிக்கின்றனர், அவர்களில் பெரும்பாலோர் அசாமைச் சேர்ந்தவர்கள்.
குவஹாத்தியில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு, அப்பல்கலைக்கழகம் அதன் பகுதியில் உள்ள காடு களை அழித்ததே காரணமாகக் சுட்டிக் காட்டினார் இப் பல்கலைக்கழகம் வெள்ள ஜிகாத்தை உருவாக்குகிறது என்று குற்றம் சாட்டினார். அங்கு மருத்துவக் கல்லூரிக்கான வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை காரணம் காட்டுகிறார் முதலமைச்சர்.
பல்கலைக்கழக வேந்தர் அசாமிற்கு எதிராக ஜிஹாத்தை ஆரம்பித்துவிட்டார் என்று நினைக்கிறேன் என்றார். அதாவது அவர் அசாமுக்கு எதிராக வெள்ள ஜிகாத் தொடங்கியுள்ளாராம்.
“இயற்கையை நேசிக்கும் எவரும், குறிப்பாக ஒரு கல்வி நிறுவனம் மரங்களை வெட்டியது ஒரு சூழ்ச்சிதான். நாம் அதை திட்டமிட்ட ‘வெள்ள ஜிஹாத்’ என்று அழைக்க வேண்டும். இது வேண்டுமென்றே செய்வது என்று நான் நம்புகிறேன்.
அசாமில் இருந்து மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அங்கு படிப்பதையும், வேலை செய்வதையும் நிறுத்து வதுதான் ‘ஒரே தீர்வு’’’ என்று முதலமைச்சர் சர்மா அறிவித்திருக்கிறார். மேலும் அவர்கள் அங்கு செல்வதை புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
“நாளை முதல், குவஹாத்தியில் இருந்து மாணவர்கள் அங்கு படிக்க செல்வதை நிறுத்திவிட்டால், குவஹாத்தியின் வெள்ளம் நின்றுவிடும்… நான் மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மாவிடம் ஒரு கடிதம் கொடுத்துள்ளேன், அவரையும் சந்திப்பேன்’’ என்றார்.
முன்னதாக, ‘‘முஸ்லிம் உர வியாபாரிகள் உரத்தில் நஞ்சைக் கலந்து ஹிந்து விவசாயிகளிடம் விற்பனை செய்கின்றனர். இது ஹிந்துக்களின் விவசாயத்தைக் கெடுக்கும் சூழ்ச்சி ஆகும்’’ என்று கூறி, அதற்கு ‘உர ஜிகாத்’ என்று பெயர் வைத்து தனது மதவெறியை வெளிப்படுத்தினார். தற்போது வெள்ளத்தால் மாநிலத்தின் தலைநகர் பாதிக்கப்படுவதைத் தடுக்க திட்டங்களைத் தீட்டாமல் பல்கலைக்கழக விரிவாக்கத்திற்கு மரங்களை வெட்டியதுதான் குவஹாத்தி வெள்ளத்திற்குக் காரணம் என்று கூறியதும் அல்லாமல் அப்பல்கலைக்கழகத்தில் தனது மாநிலத்தவர் படிக்கக்கூடாது’ வேலையும் பார்க்க கூடாது என்று கூறியுள்ளார்.
எதை எடுத்தாலும் மதவெறிக் கண்ணோட்டம் தானா?
பிரதமரே இந்நிலையில் இருக்கும்போது ஒரு மாநில முதலமைச்சர் இப்படித்தான் நடந்து கொள்வார்!
மனிதநேயத்தை மாய்த்து மதவெறியைத் தூண்டும் இந்த சக்திகளை வேரோடு களைய ஜனநாயக சக்திகளும், மதச் சார்பின்மையை விரும்புவோரும், சமூகநீதி சக்தியினரும், ஒன்றிணைந்து ஓங்கி எழ வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.