இந்தியாவில் பிற மாநிலங்களில் நடைபெறும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூ.35, 125 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக நாடாளுமன்றத்தில் கூறியுள்ள ஒன்றிய அரசு சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒரு பைசா கூட வழங்கவில்லை என தெரிவித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு, சென்னை நகரில் முதல் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் திருவொற்றியூர் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் தொடங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கடந்த 2021-ஆம் ஆண்டு, 2-ஆம் கட்டமாக மாதவரம் முதல் சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி, மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடங்களில் மெட்ரோ பணிகள் தொடங்கப்பட்டன. 118.9 கி.மீ. நீளம் கொண்ட இந்த பணிகளுக்கான திட்ட மதிப்பீடு மட்டும் ரூ.63,246 கோடி ஆகும்.
இதில் ஒன்றிய அரசின் பங்கு 7,424.9 கோடி ரூபாயாகும். இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தப் பணிகளை முடிக்கும் நோக்கில் தற்போது தீவிரமாக பணிகள் நடந்து வருகின்றன.
ஆனால் இதுவரை இந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசு தனது பங்களிப்புத் தொகையை வழங்கவில்லை. இருப்பினும் திட்டப்பணிகள் நின்று விடக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு அதற்கான நிதியை செலவு செய்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட, ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் சென்னை மெட்ரோவின் 2-ஆம் மற்றும் 3-ஆம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை வைத்தார். இருந்த போதிலும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை.
இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் சென்னை மெட்ரோ திட்டம் குறித்தும், பிற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி விவரம் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஒன்றிய வீட்டு வசதி மற்றும் ஊரகத்துறை இணை அமைச்சர் தோக்கன் சாகு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதன்படி, தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்கள் மற்றும் டில்லியில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. அதற்காக கடந்த 2 ஆண்டுகளில் இந்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ரூ.35,125 கோடி நிதி வழங்கியுள்ளது.
அதில் கருநாடகாவிற்கு ரூ.7,658 கோடி, மகாராட்டிராவுக்கு ரூ,6,958 கோடி, குஜராத்துக்கு ரூ,6,557 கோடி, டில்லிக்கு ரூ,5,925 கோடி, உத்தரப்பிரதேசத்திற்கு ரூ,4,542 கோடி, மத்தியப் பிரதேசத்திற்கு ரூ,2,196 கோடி, பீகாருக்கு ரூ,1,138 கோடி, கேரளாவிற்கு ரூ,146 கோடி ஒதுக்கியுள்ளது.
ஆனால் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் நடைபெறும் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ஒரு பைசா கூட நிதி வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மெட்ரோவின் 2ஆம் கட்ட பணிகளுக்கான முழுச் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, சென்னையில் 3-ஆம் கட்டமாக பூவிருந்தவல்லியில் இருந்து பரந்தூர் வரையும், கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரையும், மீனம்பாக்கத்தில் இருந்து பூவிருந்தவல்லி வரையும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு திட்டமிட்ட வகையில் வஞ்சிக்கப்பட்ட நிலையிலும் அவற்றை எல்லாம் கடந்து திராவிட மாடல் அரசான தி.மு.க. அரசு சக்திக்கு மீறிய நிலையிலும் நம் கடன் நாட்டுக்கு நலன் செய்து கிடப்பதே என்ற ஒரே குறிக்கோளில் வளர்ச்சிப் பணிகளில் கண்ணும் – கருத்துமாக ஆக்க ரீதியாக செயல்பட்டு வருகிறது.
2026இல் நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் இதற்கெல்லாம் சேர்த்துத் தமிழ்நாட்டு மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என்பதில் அய்யமில்லை.