இன்று கலைஞர் இருந்திருந்தால்… வினேஷ் போகத்திற்கு தங்கம் வென்றது போன்ற பெருமையை செய்திருப்பார்!
தடகள வீரர் சாந்தி 2006இல், தோஹாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் 15 லட்சம் ரூபாய் பணமும், 1 லட்சம் மதிப்புள்ள தொலைக்காட்சிப் பெட்டியும் பரிசாக வழங்கப்பட்டது; வழங்கியவர் தலைவர் கலைஞர்.
இந்த பரிசு பெறுவதற்கு ஒரு நாள் முன்னர் தான், பாலின சோதனையில் சாந்தி தோல்வியுற்று, அவரின் பதக்கம் பறிக்கப்படப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. மிகவும் வேதனையில் இருந்தார். பன்னாட்டு அளவில் பதக்கம் பெறுவது என்பது கிட்டத்தட்ட உயிரைக்கொடுத்து விளையாடி வெற்றி பெறுவது போன்றது. ஆனால் மனித நேயமற்ற சிலரால் அவரது பாலினம் தொடர்பான விவாதம் எழுப்பப்பட்டு அவரது எதிர்காலமே இருண்டு போகவைத்தனர். ஆனால் கலைஞர் அந்த வேதனையை உணர்ந்தார்.
கலைஞர் நடந்துகொண்டிருந்த விவாதங்கள் பற்றி யெல்லாம் கவலைப்படவில்லை. “ஓடியது இந்தக் கால்கள் தானே – உனது உழைப்பிற்கானது – உனக்கானது என்று கூறி ரூ.15 லட்சம் பரிசைப் பெற, முழுத் தகுதி உனக்கு உண்டு” என்று கூறி காசோலையை கொடுத்தார்.