டில்லி உத்தரப் பிரதேச எல்லையில் உள்ள, கவுதம புத்த நகரின் டில்லி பப்ளிக் ஸ்கூல் ஒரு சுற்றறிக்கை விட்டுள்ளது அதில், மாணவர்களுக்கு இறைச்சி உணவை தடை செய்துள்ளது. மத உணர்வுகளை மதிக்கவும், சுற்றுப்புறச்சுழலை பாதுகாக்கவும், கலாச்சார சீரழிவைத் தடுக்கவும் இறைச்சி உணவுகள்(இதில் முட்டை, வெங்காயம், பூண்டும் அடங்கும்) தடை செய்வதாக கூறியுள்ளது.
பள்ளியின் தாளாளர் சுக்ரிதி சவுகான், “பள்ளியின் முடிவு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்டது” என்று கூறியுள்ளார். பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு முட்டையை உணவாக கொடுக்கின்றனர். இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். ஆனால் பள்ளி நிர்வாகம் இதை புறக்கணித்துள்ளது.
குறிப்பாக பள்ளி உள்ள பகுதிகளில் இஸ்லாமியர்கள் மிக மிகக் குறைவு. அதே போல் பள்ளிகளில் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் மட்டுமே படிக்கின்றனர். இந்த அறிவிப்புக்கு எதிராக பெற்றோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தியா முழுவதும் உள்ள பெற்றோர் சங்கத்தின் தலைவர் அனுபமா சிறிவாஸ்தவ சஹாய், “வளரிளம் பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்து மிகவும் தேவை. இறைச்சி, முட்டை மிக அவசியம். இதற்கு மாற்றாக புரதம் வேண்டு மென்றால் உலர் பழங்கள், கொட்டைகள் வேண்டும். ஆனால், நடுத்தர வர்க்க மக்கள் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த கொட்டைகளை எங்கிருந்து வாங்குவார்கள்?
மாணவர்களை சைவ உணவு மட்டுமே கொண்டுவரும்படி கூறுவதன் மூலம் அனைவரின் உணர்வுகளையும் மதிக்கிறோம் என்று பள்ளி எப்படி சொல்ல முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்திந்திய பெற்றோர் சங்கத்தின் சத்ய பிரகாஷ் பாண்டே, இந்த நடவடிக்கையால் மாணவர்களிடையே ஜாதி மற்றும் மத அடிப்படையில் பாகுபாடு ஏற்படும் என்று கூறினார்.
“பார்ப்பனர்களின் இறைச்சி உண்ணாத நிலை அவர்களின் சொந்த விருப்பம். அதை வீட்டிற்குள் வைத்துக்கொள்ளட்டும். ஆனால், அதை பள்ளி நிர்வாகம் பொது இடத்திலும் கொண்டு வருவது ஏற்கத்தக்கது அல்ல என்று கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள பார்ப்பனர்களில் 50 விழுக் காட்டினர் இறைச்சி உணவு சாப்பிடுபவர்கள் என்பதை புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பார்ப்பனர்கள் பீகார், மேற்கு வங்கத்தில் ‘கடல் புஷ்பம்’ என்ற பெயரில் மீன் சாப்பிடுவார்கள். மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய கிழக்கு மாநில பார்ப்பனர்கள் ஆட்டிறைச்சி உண்பார்கள்.
மகாராட்டிராவில் கோழி இறைச்சி சாப்பிடும் பார்ப்பனர்களைப் பார்க்கலாம். வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடு வார்கள் என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும். கோயில் விழாவின் போது பலியிடப்பட்ட மாட்டிறைச்சியை பிரசாதமாக சாப்பிடும் வழக்கம் ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சில பார்ப்பனப் பிரிவுகளில் உண்டு.
இஸ்கானைப் போன்றே கிருஷ்ண பக்தி இயக்கம் என்ற ஒன்று உண்டு. அது ஆண்டுக்கு ஒருமுறை இறைச்சி உணவை உண்பார்கள். காரணம் கிருஷ்ணன் சுழற்சி முறையில் சூத்திர னாகவும் மாறுவானாம். ஆகையால், அவன் சூத்திரனாக மாறியபோது அவனுக்கு மாட்டிறைச்சி உணவு படைத்து அதை உண்பார்கள். இது காட்சிப் பதிவுகளாகவே சமூக வலைதளங்களில் கிடைக்கிறது.
தென் இந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் இங்கு அவர் களுக்கு எதிரான திராவிடக் கொள்கை மக்களிடையே வலுவாக ஊன்றி விட்டதால் வேறு வழியின்றி தாங்கள் பார்ப்பனர்கள் என்பதை காட்டிக்கொள்வதற்காக இறைச்சி உணவை சாப்பிடாமல் உள்ளனர். மும்பை, போபால், லக்னோ, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் இருக்கும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களின் உறவினர்கள் இறைச்சியை ஒரு பிடி பிடிப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். “எங்க அத்திம்பேர் போர்ன் இன் வெஸ்ட் பெங்கால்”- ஆகையால் அவா மீன் சாப்பிடுவா” என்ற உரை யாடல்களை மயிலாப்பூரிலும், மாம்பலத்திலும் பொதுவாகக் கேட்கலாம்.
பார்ப்பனர்களின் இந்த உணவுத் தூய்மை நாடகம் விலங்குகளின் மீதான பரிவால் அல்ல. மாறாக, மிகக் கொடூரமான ஜாதிய வெறியின் வெளிப்பாடே ஆகும்.
டில்லி பொதுப் பள்ளியின் இந்த அறிவிப்பு சூழல் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த கவலை தரும் ஒரு தந்திரமாகும். இது அருவருப்பான பிராமணீய கருத்துகளின் வெளிப்பாடாகும். தங்கள் சுற்றிக்கையில் மிகவும் அருவருப் பான சில தகவல்களைச் சேர்த்துள்ளனர். அதாவது காலையில் இறைச்சி அல்லது முட்டை சாப்பிட்டுவிட்டு வரும் மாணவர் களுக்கு அடிக்கடி மிகவும் கெட்ட வாடையுடன் காற்று பிரிகிறது. மேலும் அவர்கள் பேசும்போது துர்நாற்றம் அடிக்கிறது.
இதனால் பிற மாணவர்களுக்கும் கடுமையான சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. மேலும், அவர்களுக்கு கல்வியிலும் நாட்டம் குறைகிறது என்று பெற்றோருக்கு அனுப்பப்பட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறைச்சி உணவு இல்லாத ஒரு சமூகம் தூய்மையான நல்ல ஒழுக்க முள்ள சுற்றுப்புறச்சூழலை உருவாக்குமாம்!
பள்ளியின் தலைமை ஆசிரியர் சுக்ரிதி சவுகான் இதுபோன்ற அறிவிப்புகளை முன்பும் வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார். “சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, மரியாதை மற்றும் உள்ளடக்கம் ஆகிய இரண்டு காரணங்களை மனதில் கொண்டு இந்த சுற்றறிக்கை பெற்றோருக்கு அனுப்பப்பட்டது.
மேலும் சில மாணவர்கள் சக மாணவர் களுக்கு தாங்கள் கொண்டுவரும் உணவை பகிர்ந்து கொண்ட பிறகு அவ்வாறு பகிர்ந்து கொண்ட இறைச்சி உணவால் அந்த மாணவர்கள் நோய்வாய்ப்பட்டதால் பெற்றோர் கவலை தெரிவித்தனர். ஆகவே, நாங்கள் மாணவர்களை உணவைப் பகிர வேண்டாம் என்று கூறமுடியாது. இதனால் இறைச்சி உணவைக் கொண்டுவரவேண்டாம் என்று பெற்றோருக்கு இந்த அறிவிப்பை அனுப்பினோம்” என்றார் அவர்.
ஜூலை முதல் வாரம் தமிழ்நாட்டில் சேலத்திலும் இதே போன்று ஒரு பள்ளி இறைச்சி கொண்டுவரக்கூடாது என்று சுற்றறிக்கை விட்டது. இதற்கு தமிழ்நாட்டில் எந்த எதிர்ப்பும் எழவில்லை. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஆஸ்ரமம், மந்திர், வித்யாலயா என்ற பெயர்களில் இயங்கும் பள்ளிகள் மறை முகமாவே இறைச்சி உணவைக் கொண்டுவரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளன. இறைச்சி கொண்டுவரும் பிள்ளைகளை ஆசிரியர்கள் வெளியே அனுப்பிய நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசு பிள்ளைகளின் உணவு தொடர்பான விவகாரத்தில் புரதச் சத்திற்காக அன்றாடம் பிள்ளைகள் விரும்பிச் சாப்பிட வேண்டும் என்பதற்காக விதவிதமான சுவைகளில் முட்டைகளை வழங்கிக்கொண்டு இருக்கும்போது வடக்கே முட்டை சாப்பிட்டு பள்ளிக்கு வந்தால் நாற்றம் அடிக்கிறது என்று கூறி சுற்றறிக்கை விடுகிறார்கள்.