சுயமரியாதைத் திருமணம் கடந்து வந்த பாதை
கி.வீரமணி
நூற்றாண்டு காணும் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்ற மானிட சமத்துவ, சதமர்மப் போராட்ட இயக்கம் தனது நூற்றாண்டு வரலாற்றில் சாதித்து சரித்திரம் படைத்தவைகளாக உள்ளவைகளில் முதன்மையான இடம் ‘திருமணம்’ என்ற முறையில் ஆரிய முறைகளின் அப்பட்டமான பண்பாட்டுப் படையெடுப்பை அகற்றி, மாற்றுப் புதுமுறையை – எளியதாகச் செய்து, அதற்காக வன்முறை, ஆயுதங்களைத் தூக்காமல், அறிவு விடுதலைக்கான அமைதிப் புரட்சியை நிலைநாட்டியது அகிலத்தின் அதிசயத்தை வரவழைப்பதாகும்.
‘கன்னிகாதானம்’, ‘தாராமுகூர்த்தம்’, ‘பாணிக்கிரகணம்’ என்ற பல சமஸ்கிருத வடமொழிப் பெயர்களைக் கொண்ட ஆரிய திருமண முறைகள் பெண்ணை அடிமை யாக்குபவை. ஆணை எஜமானனாக, பெண்ணை அடிமை யாக்கிடும் மண முறையே இது என்பதே புரியாமல், பலர் சகதியை சந்தனம் என்று தவறாக எண்ணி பூசி மகிழ்ந்த போதைக்கிடங்குகளான ஒரு சமூகத்தில் அது பிறவி அடிமைத்தனத்திலிருந்து மீள முடியாத ஒரு இக்கட்டு என்பதை தனது இடைவிடாத பிரச்சாரம் மூலம் மக்களுக்கு விளக்கி வெற்றி பெற்ற தலைவர் தந்தை பெரியார்; வெற்றி வாகை சூடிய இயக்கம், சுயமரியாதை இயக்கம்!
வடமொழி மந்திரங்களைக் கொண்டு நடத்தப்படும் மேற்காட்டிய ‘கல்யாணங்கள்’ மீள முடியாத அடிமை முறிச் சீட்டு என்பதுதான் ஆதிகால இந்து திருமண முறையாகும். இந்து சட்டப் பாதுகாப்புடன் இருந்த இரும்புத்திரை. அதனை உடைத்தெறிந்து உலகமே புதுமுறையில் சுயமரியாதைத் திருமணங்கள் சமூகத்தின் பல பகுதிகளிலும், பல நாடுகளிலும்கூட நடத்தப்படும் அளவுக்கு வெற்றி பெற்றது!
அறிஞர் அண்ணா திருச்சியில் தந்தை பெரியாரது 89ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடி வாழ்த்தியபோது ஆற்றிய பேருரையில் பேருண்மையாக ஒன்றைப் பதிய வைத்தார்.
‘‘ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. ‘Putting Centuries in to a Capsule’ என்று. பல நூற்றாண்டுகளை ஒரு சிறு (மருந்து) குளிகைக்குள் அடைப்பது போன்ற அற்புதப் பணி அய்யாவின் அரும்பணி. பெரியார் பல நூற்றாண்டு பழைமையை விரட்டி, புத்தாக்கச் சிந்தனையை உருவாக்கக் காரணமானவர்’’ என்றார்!
பல ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் நடத்திக் கொண்ட இந்த சுயமரியாதைத் திருமண முறையை நயவஞ்சக ஆரியம் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாகிய நிலையில் இரண்டு பார்ப்பன நீதிபதிகள் மூலம் அத்திருமணமும் செல்லாது என்பதோடு, அப்படிப்பட்ட சுயமரியாதைத் திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகள் சட்டபூர்வமற்று பிறந்த பிள்ளைகள் (illegitimate children) என்ற அவமான முத்திரையையும் குத்தி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி வெற்றிப் புன்மை காட்டியது!
விடுவாரா பெரியார்? வெறுமனே கைபிசைந்து மூலையில் முடங்கி விட்டதா இந்த இலட்சியப் பயணம்! எதிர்நீச்சல் வேகம் அதிகமாகியது. ஏந்தல் போன்று எம் அண்ணா ஆட்சி 1967இல் அமைந்தது! திராவிட ஒளி அந்த இருளைக் கிழித்தது!
தந்தை பெரியாரால் திருத்தப்பட்டதோடு, சுயமரியாதைத் திருமணச் சட்டம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது!
நடக்கும் சுயமரியாதைத் திருமணம் – செல்லும் என்று சட்டம் கூறியதோடு, முன்பு சுயமரியாதை முறையில் நடைபெற்ற அத்துணை (பல ஆயிரக்கணக்கான) திருமணங்களும் சட்டப்படி செல்லுபடியாகும் என்றும் பிரகடனப் படுத்தியது; சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும் திருமண உரிமையும், சட்ட உரிமையும் பெருமையோடு கிடைத்தது! – இச்சட்டம் மூலம்!
ஒரு தலைவர் உண்டாக்கிய இயக்கம்.
அதன் சமூகப் புரட்சிக் கொள்கையின் வடிவம் சுயமரியாதைத் திருமணம்.
அதனை பல ஆண்டு காலம் மக்கள் கடைப்பிடித்ததைக் கண்டு வெகுண்டெழுந்த சட்ட சூழ்ச்சிப் பொறிமூலம் செல்லாதெனக் கூறிய பின்பு,
அதை அலட்சியம் செய்து, மீண்டும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் சுயமரியாதைத் திருமணங்கள் நடந்தன!
அண்ணா – அய்யாவின் சீடர் ஆட்சி அமைத்து – பெரியாருக்குக் காணிக்கை ஆக்கியதோடு, பெரியார் விரும்பியபடி சுயமரியாதைத் திருமண முறை சட்டம் நிறைவேற்றப்பட்டது!
மறுமுறையும் 50 ஆண்டுக்குப் பின் ஆரியம் வியூகம் வகுத்தது. இம்முறை அது தோல்விப் படுகுழியில் நீதிமன்றத்தில் வீழ்ந்தது!
திராவிடம் வென்றது! திக்கெட்டும் இத்திருணம் முறை, மூன்று, நான்கு தலைமுறைத் திருமணங்கள் நடைபெறுகின்றன – சுயமரியாதைத் திருமண முறையில்.
இதை எழுதுபவனே மூன்று தலைமுறைத் திருமணங்களை பல குடும்பங்களில் தலைமை தாங்கி நடத்தி மகிழ்ந்தவன்.
இன்று அது சமூகத்தின் வரவேற்பையும், சட்டத்தின் பாதுகாப்பையும் பெற்று, வெற்றிக் கொடி நாட்டிய உலகமயமான திருமண முறை!
ஆனால், துவக்க காலப் பாதை எவ்வளவு கரடு முரடானது; கடும் எதிர்ப்பினைச் சந்தித்த களங்களாகவே இருந்தன என்பதை இன்றைய தலைமுறையும், இனி வரக்கூடிய எதிர்காலத்தவரும் புரிந்துகொள்ள வேண்டும்!
மலர்ப்பாதை அல்ல; முட்களும், கண்ணி வெடிகளும் புதைக்கப்பட்ட அபாயப் பாதை.
இன்று பெரியார் போலவே சுயமரியாதைத் திருமணமும் உலகமயம்!
அதில் ஒரு சம்பவம்.
90 ஆண்டுகளுக்கு முன்பு – இதோ படியுங்கள்! உண்மை விளங்கும்.
கடத்தல் கல்யாணம்
‘‘நீலாவதி அம்மையாரின் கணவர் இராமசுப்பிரமணியம் அவர்களை சமீபத்தில் சந்தித்துப் பேசும் போது அவர் சொன்ன சில பழைய நாள் நினைவு கள் சுவையாக இருந்தன. அதில் அவருடைய திருமண நாள் அன்று நிகழ்ந்த சம்பவம் ஒன்று-
தன வணிக சமூகத்தைச் சேர்ந்த இராமசுப்பிரமணித் திற்கு இன்னொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்னுடன் திருமணம் நடக்க விருக்கிறது என்பதை அறிந்ததுமே அதற்கு எதிரானவர்கள், மாப்பிள்ளையை எங்காவது சிறைப்படுத்தி திருமணத்தைத் தடுத்துவிட முயன்றார்கள்.
ஆனால் இந்த சீர்திருத்த மணத்தை நடத்தி விட முனைந்து நின்ற முற்போக்கு சிந்தனை யுடைய ‘குமரன்’ பத்திரிகை ஆசிரியர் சொ. முருகப்பா மிக திறமையுடனும், அக்கறையுடனும் செயல்பட்டு மணமகன் இராம. சுப்பிர மணியத்தை காரைக்குடியில் இருந்து கடத்தி திருமணம் நடக்கவிருக்கும் திருச்சிக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
திருச்சியில் தந்தை பெரியாரின் ஆலோசனைகளின்படி திருமண ஏற்பாடுகளைப் பொறுப்பேற்றுச் செய்தவர் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள். திருமண விருந்துச்செலவுக் காக அக்கால மதிப்பின்படி பெரியார் அய்நூறு ரூபாயை கி.ஆ.பெ. விசுவநாதத்திடம் தந்திருந் தாராம். அன்று அந்தப் புரட்சித் திருமணத்திற்கு தமிழகத்தில் உள்ள சீர்திருத்த சிந்தனை உள்ளம் கொண்ட வர்கள் எல்லாம் வந்து கூடிவிட்டதால் சுமார் இரண்டாயிரம் பேருக்கு மேலுள்ளவர் களுக்கு விருந்தளிக்கப்பட்டதாம். எனவே பெரியார் தந்த பணத்திற்கு மேல் எவ்வளவு செலவு ஆனதோ அதையெல்லாம் கி.ஆ.பெ. விசுவநாதமே சமாளித்துக்கொண்டிருக்கிறார்….
இதுபற்றி இராம.சுப்பிரமணியம் (நீலாவதி அம்மையாரின் இணையர்) கூறும்போது, அந்தக் காலத்தில் ஒவ்வொரு இயக்கத்தில் இருந் தவர்களும் தங்கள் சிரமங்களை வெளியே காட்டா மல் இயக்கம் தனக்களித்த பணியை செவ்வனே செய்து முடிப்பதிலேயே குறியாய் இருந்தார்கள் என்று சொன்னார்…
திருமணம் நடந்து முடிந்த வேளையில் பெரியார் தனது சகாக்களில் ஒருவரான அ. பொன்னம்பலனாரை தனியே அழைத்து ஏதோ பேசினார்.
அதன்பின் மாப்பிள்ளை இராம. சுப்பிரமணியத்தைத் தனியே அழைத்து, “நீங்கள் மட்டும் உடனே பொன்னம்ப லனாருடன் புறப்படுங்கள்… அவர் சொல்கிறபடி அவரைப் பின்தொடருங்கள்… இது அவசரம் “ என்று சில வார்த்தைகளைக் கூறி நிறுத்திக்கொண்டார்…
ஏதோ நடக்கவிருப்பதைத் தடுக்கவே பெரியார் இவ்விதம் கட்டளையிடுகிறார் என்பதைப் புரிந்த வராக இராம. சுப்பிரமணியம் அடுத்த கணம் பொன்னம் பலனாரைப் பின் தொடர்ந்தார். வெளியே தயாராக நின்ற காரில் பொன்னம் பலனாருடன் சுப்பிரமணியமும் ஏறிக்கொள்ள, உடனே கார் அங்கிருந்து ரெயில் நிலையத்தை நோக்கிப் பறந்தது.
ரெயில் நிலையத்தில் அவசரமாக கீழே இறங்கிய பொன்னம்பலனார் தன்னுடன் சுப்பிரமணியத்தை யும் இழுத்துக்கொண்டு உள்ளே ஓடி, அங்கே தயாராக நின்ற ரெயிலில் ஏறினார்.
ரெயில் புறப்பட்டபிறகே பொன்னம்பலனாரிடம் இருந்து விஷயங்களை சுப்பிரமணியம் அறிய முடிந்தது. திருமணம் நடந்து விட்டபிறகும் கூட, எதிர்ப்பாளர் கோஷ்டி மாப்பிள்ளையைக் கடத்திக்கொண்டு போக திருச்சிக்கே வந்து விட்டார்களாம்…
அந்தத் தகவலை எப்படியோ அறிந்துவிட்ட பெரியார்,உடனே சுப்பிரமணியத்தை அழைத்துக் கொண்டு ஈரோடு போய் விடுங்கள் … என்று பொன்னம்பலனாருக்கு உத்தரவிட்டிருக்கிறார் …
ரெயில் குழித்தலையை நெருங்கிக் கொண்டிருக்கும் போது,”ஆமாம் இந்த பரபரப்பில் நமக்கு டிக்கெட் எப்போது எடுத்தீர்கள்?” என்று சுப்பிர மணியம் கேட்டார்.
டிக்கெட்டா? யார் கொடுத்தார்கள்? ‘உடனே புறப்படுங்கள்’ என்று பெரியார் விரட்டியதும் உங்களை இழுத்துக்கொண்டு ஓடி வந்துவிட்டேனே தவிர போகிற பயணத்துக்குப் பணம் வேண்டுமே என்ற சிந்தனை எல்லாம் யாருக்கு இருந்தது?” என்றார்
பொன்னம்பலனார்…
ஏற்ெகனவே சுப்பிரமணியம் கூறியது உண்மை தானே … இயக்கத் தலைவர் ஆணையிட்டுவிட்டால் அந்தக் காலத்தில் தங்கள் வசதிக் குறையை யாரும் சிந்தித்ததாய் தெரியவில்லையே? ஆக ‘டிக்கெட் எடுக்கவில்லை’ என்று பொன்னம்பல னார் கூறிய பதிலைக் கேட்டு சுப்பிரமணியம் திடுக்கிட்டுப் போனார்.
“என்னங்க இது… ஏற்ெகனவே காரைக்குடியில் இருந்து என்னைக் கடத்தி கல்யாணத்துக்கு திருச்சிக்கு கொண்டு வந்தீங்க… இப்போ திருச்சியில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி அழைச்சிட்டுப் போறீங்க… இந்த நிலையில் நாம டிக்கெட்டு எடுக்கலைங்கிறது தெரிஞ்சு இனி ரெயில்வேக்காரங்க மூணாவது தடவையா என்னைக் கடத்தி லாக்கப்பில் வச்சுட்டா? அப்புறம் யார்கிட்ட நான் பிடிபடக் கூடாதோ அவங்க கையிலேயே மாட்டிக் கொள்வேன்.அதனால குளித்தலையில் முதல்ல இறங்கி அடுத்து செய்ய வேண்டியதை யோசிப்போம் என்று பிடிவாதமாகக் கூறிவிட்டார். வேறு வழியின்றி பொன்னம்பலனார் குளித்தலை ஸ்டேஷன் வந்ததும் சுப்பிரமணியத்துடன் இறங்கிக் கொண்டார்…
ஏற்ெகனவே உள்ள திட்டப்படி பெரியாரும் அவருடன் வந்தவர்களும் அடுத்த ரெயிலில் இதே வழியாக ஈரோட்டுக்குப் போவதாக இருந்தது. எனவே அந்த ரெயில் வந்ததும் பெரியாரிடம் சொல்லி டிக்கெட் எடுத்து அவருடனே ஈரோடு போய்விடலாம் என்று பொன்னம்பலனார் திட்டம் போட்டுக்கொண்டார்.
ஆகவே அடுத்த ரெயில் வரும் நேரத்தை அங்கே விசாரித்தார்கள். இன்னும் மூன்று மணி நேரம் ஆகுமெனத் தெரிந்தது.
“அந்த ரெயில் வர்றதுக்கு மூணு மணி நேர இடைவெளியில் ஒரு மூணு காபியாவது சாப்பிட்டாத்தான் எனக்குத் தெம்பு இருக்கும்” என்று சுப்பிரமணியம் முணுமுணுத்தார்…
“அவ்வளவுதானே. கவலைப்படாதீங்க” என்று சொன்னவாறு பொன்னம்பலனார் தனது ஜிப்பா பைக்குள் கைவிட்டவாறு அங்கிருந்த காபி கடையை நோக்கி நடந்தார்.சிறிது நேரத்தில் இரண்டு காபியுடன் திரும்பினார்.
‘அட இந்த சில்லரை செலவுக்காவது இவர் காசு வைத்திருக்காரே’ என்ற எண்ணத்துடன் சுப்பிரமணியம் காபியை ஆசையாய் குடித்தார்…
‘’இப்படி அந்த மூணு மணி நேரத்தில் அரை மணிக்கு ஒரு தடவை பொன்னம்பலனார் காபி வாங்கிக்கொண்டு வந்து தந்துவிட்டதால், அந்நேரப் பசியையும் குளிரையும் சுப்பிரமணியம் தாங்கிகொண்டார்…
அவர்கள் எதிர்பார்த்த ரெயிலும் வந்தது. அங்கும் இங்கும் ஓடி பெரியாரை தேடினார்கள். ஒரு பெட்டியில் இருந்து தற்செயலாய் தலையை வெளியே நீட்டி பெரியார் இவர்களைக் கண்டுவிட்டு குரல்கொடுத்தார்…!
பொன்னம்பலனாரும் சுப்பிரமணியமும் அந்தப் பெட்டி அருகே ஓடி வந்தார்கள்.
“ஈரோட்டுக்குப் போகச் சொன்னா. இங்கே நிக்குறீங்களா?” என்று விசாரித்தார் பெரியார். எல்லா விவரங்களையும் அவசரமாகச் சொன்ன பொன்னம்பலனார். “ரெண்டு டிக்கெட்டுக்குப் பணம் தாருங்கள்” என்று கையை நீட்டினார்….
“இப்போ ரெயில் புறப்படப்போற நேரத்தில் எப்படிப் போய் டிக்கெட் எடுப்பீங்க… நாங்க மொத்தம் அறுபத்தி மூணுபேர் ஈரோட்டுக்கு டிக்கெட் எடுத்திருக்கிறோம்… அந்த கூட்டத்தோட நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துடுங்க… அவ்வளவு தான்…ம்.. வண்டியில் ஏறுங்க” என்றார் பெரியார். அதற்கு மேல் என்ன? பொன்னம்பலனாரைத் தொடர்ந்து சுப்பிரமணியமும் அந்தப் பெட்டியில் ஏறினார்… அப்போது பொன்னம்பலனார் காதில், “இன்னைக்கு தர்மப்பிரயாணம்தான்!” என்று கிசுகிசுத்தார் சுப்பிரமணியம்…
“ரெயில் பிரயாணம் மட்டுமா? இந்த மூணு மணி நேரம் மாறி மாறி சாப்பிட்ட காப்பியும் தர்மச் செலவுதான்” …. என்று ஒரு போட்டார் பொன்னம்பலனார்.
சுப்பிரமணியம் திகைத்து அவரைப் பார்த்த போது அவர் சொன்னார்.
அந்த ஸ்டேஷனில் திரும்பத் திரும்ப வாங்கி சாப்பிட்ட காபியும் தர்ம செலவு தான் என்ற பொருள்பட பொன்னம்பலனார் சொன்ன பதிலைக் கேட்டு இராம. சுப்பிரமணியம் திகைத்தார். அல்லவா….
அவருக்குப் புரியும்படி கிசு கிசு குரலில் பொன்னம் பலனார் அது பற்றிய விவரங்களைச் சொல்ல ஆரம் பித்தார்….
‘ஏற்ெகனவேதான் என்கிட்ட காசே இல்லேன்னேனே… உங்களுக்கோ காபி அவசியப்பட்டுட்டு. அதனால ஜிப்பா பைக்குள்ள கைய விட்டபடியே அந்த கடைக்காரன்கிட்ட போனேன் ‘‘ஏம்பா எங்க ரெண்டு பேருக்கும் அடுத்த ரெயில் வர்ற வரையில் அப்பப்போ காபி வேண்டியிருக்கு. மொத்தமா முதல்லயே காசை வாங்கிக்கிறியா … இல்ல காபி எத்தனை ஆச்சின்னு கடைசியில் கணக்குப் பார்த்து காசு வாங்கிக்கிறியான்னு — கேட்டேன். அவன் என்னை ஏறிட்டுப் பார்த்தான். பெருமதியான ஆள் தான் என்று தோன்றிற்று போலும்.. நீங்க கடைசி யில் காசு கொடுங்கோ போதும்னு சொல்லிட் டான்” என்றார் பொன்னம்பலனார்…
இந்த சம்பவத்தை சொல்லி முடித்த இராம. சுப்பிர மணியம் கேள்விக் குறியோடு ஒன்றைக் குறிப்பிட்டார்.
“இது நடந்து ஐம்பது வருடத்தை தாண்டிப் போயிட்டுது… நான் அப்புறம் குளித்தலையில் அந்த காபிக்கடைக்காரனை சந்திக்கிற சான்சே வரலை. பொன்னம்பலனார் சந்திச்சாரா… கடனை அடைச் சாரா. அதுவும் தெரியாமலே போச்சு… என்றார்.’’
நூல்: ‘பெண்குல விளக்கு நீலாவதியார்’
ஆசிரியர்: டாக்டர் என். கற்பகம் எம்.பி.பி.எஸ்.
வெளியீடு: கங்கை புத்தக நிலையம், சென்னை – 17
சுயமரியாதை வாழ்வின் தொடக்கம்
– தொல்லை யானாலும்
சுயமரியாதை வாழ்வே பிறகு சுகவாழ்வுதான்!
முன்னே புளித்து
பின்னே இனிக்கும்
முது நெல்லிக்கனி போன்றது!