திண்டுக்கல், ஆக.7- திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் பாலகிருஷ்ணன் என்பவர் தேசிய கைத்தறி விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறும் தேசிய கைத்தறி நாள் விழாவின் போது இவருக்கு (Sant kabir) சந்த் கபிர் நேஷனல் அவார்ட் 2023 விருது வழங்கப்பட உள்ளது. பாலகிருஷ்ணன் பருத்தியில் நெசவு செய்த பருத்தி சேலைக்காக இவ்விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதிற்கு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 17 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதில், தமிழ்நாட்டிலிருந்து 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாலசுப்பிர மணியம், திண்டுக்கல்லைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கைத்தறி துறையின் கீழ் திண்டுக்கல்லில் செயல்படும் கற்பக விநாயகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தில் பாலகிருஷ்ணன் உறுப்பினராக இருந்து வருகிறார். பாலகிருஷ்ணன் கடந்த 30 ஆண்டுகளாக நெசவு தொழில் செய்து வருகிறார். இவர் நெசவு செய்யும் பருத்தி சேலைகளுக்குத் தேவைப்படும் மூலப் பொருட்கள் சங்கத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இங்கு நெசவு செய்யப்படும் சேலைகள் தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், பாலகிருஷ்ணன் நெசவு செய்த பருத்தி சேலையில் யானை, மயில், அன்னம், மாங்காய், வைரம் எனச் சொல்லப்படும் டிசைன்கள் பிரத்தியேகமாக 3 நாட்கள் செய்து இந்தியத் தேசிய கைத்தறி தேர்வு ஆணையத்திற்கு கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் மூலம் அனுப்பப்பட்டது.
தற்போது அந்த பருத்தி சேலை தான் அவருக்கு தேசிய கைத்தறி விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. இதுகுறித்து கைத்தறி நெசவாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “நான் கடந்த 30 ஆண்டு காலமாகக் கைத்தறி நெசவுத் தொழிலைச் செய்து வருகிறேன். எனது வீட்டிலேயே பருத்தி நூலைக் கொண்டு சேலைகள் நெய்து வந்தேன். எனக்குத் தேவையான மூலப்பொருட்களை எல்லாம் சங்கத்திலிருந்து வழங்கப்படும். நான் வடிவமைத்த சேலைக்காக ஒன்றிய அரசு விருது அளித்துள்ளதற்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார்.