கேள்வி 1: 2024-2025ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் எப்படி இருக்கிறது?
– செ.செல்வம், செங்கல்பட்டு
பதில் 1: ‘ஒன்றிய’ பட்ஜெட்டாக இல்லாமல், ஆந்திரா, பீகாருக்கான தனி (Special) பட்ஜெட்டாக இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் முழங்கும் பட்ஜெட்டாக உள்ளது.
மக்களைக் காப்பாற்றும் மக்கள் நல பட்ஜெட் என்ற தத்துவம் மாறி தங்களைக் காப்பாற்றும் பதவி நிலைப்புக்கான பட்ஜெட்டாகவே உள்ளது!
தமிழ்நாடு போல பல மாநிலங்களிலும் – எதிர்க்கட்சிகள் ஆளுவதால் வஞ்சிக்கும் “ஓர வஞ்சனை பட்ஜெட்”டாகவே காணப்படுகிறது!
– – – – –
கேள்வி 2: பெரியார் விஷன் ஓடிடி என்றால், என்ன?
– கு.கல்பனா, நெல்லிக்குப்பம்
பதில் 2: ‘விடுதலை’யில் விளக்கம் வந்துள்ளது! OTT என்ற முறைமூலம் சமூக நீதிக்கான திரைப்படங்கள், உரைகள், நிகழ்வுகள், கருத்தாடல்களை விருப்பம் போல் குடும்பத்துடன் கண்டுகளித்து மகிழலாம். அதில், வெளியாகாத பல முற்போக்கு திரைக் காவியங்களும் உங்களுக்கு கிடைக்கும். சந்தா மிகக் குறைவு – கருத்தாடல் களமாகவும் உங்களுக்கு நல்ல அறிவு உணவைத் தரும். உடனே சந்தாதாரர் ஆகுங்கள்!
– – – – –
கேள்வி 3: நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி தமிழ்நாடு அரசைத் தொடர்ந்து கருநாடக அரசும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதே?
– பா.முகிலன், சென்னை-14
பதில் 3: ‘தமிழ்நாடு மட்டும்தானே எதிர்க்கின்றது’ என்று கேலி பேசியவர்கள் – இப்போது என்ன சொல்வார்கள்? ‘நீட்‘ தேர்வு முறையே வேண்டாம் என்று அனைத்து இந்திய மாநிலங்களும் இப்போது ஓங்கிக் குரல் தருகின்றன!
பெரியார் மண்ணின் வெளிச்சம்தான் அவர்களது இருளைப் போக்கி ஒளியூட்டுகிறது!
– – – – –
கேள்வி 4: ஒன்றிய அரசின் பட்ஜெட்டை எதிர்க்கட்சியான அ.தி.மு.க. எதிர்த்துள்ளது; ஆனால், ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், அன்புமணி ராமதாஸ் போன்றோர் ஆதரிக்கிறார்களே?
– நெ.குமார், கன்னியாகுமரி
பதில் 4: விபீடண, பிரகலாத, சுக்ரீவ, அனுமார்கள், சிரஞ்சீவிகள் என்ற புராணக் கூற்றின் சாட்சியங்கள். தங்களை வழக்குகளிலிருந்து விடுவித்துக் கொள்ள இப்படி ஒரு ‘ஜில், ஜிங்’ தமிழ்நாட்டு நலன் உரிமையை விட அவரவர்கள் நலன்தானே அவர்களுக்கு முக்கியம். முன்னுரிமை அதனால்தான்!
– – – – –
கேள்வி 5: பீகார் சட்டப்பேரவை நிகழ்வின்போது, பெண்களுக்கு என்ன தெரியும் என்ற தொனியில் முதலமைச்சர் நிதிஷ் பேசியிருக்கிறாரே?
– க.சரவணகுமார், கள்ளக்குறிச்சி
பதில் 5: அவரது நிலைதடுமாறிய நிலை துவங்கி நெடுநாள் ஆயிற்றே; அதன் சமீபத்திய வெளிப்பாடுதான் நீங்கள் குறிப்பிட்டது! பரிதாபம்! பரிதாபம்!!
– – – – –
கேள்வி 6: ஒன்றிய அரசின் பட்ஜெட்டை, தமிழ்நாடு முதலமைச்சர் ஏ டூ பி பட்ஜெட் – ஆந்திரா, பீகாருக்கான பட்ஜெட் என்று சொல்லியிருப்பது குறித்து தங்கள் கருத்து?
– கே.ஏழுமலை, நீலகிரி
பதில் 6: முதல் கேள்விக்கான பதிலே இதற்கும் விடை!
– – – – –
கேள்வி 7: உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய், தந்தை பெரியாரின் சிறப்பைப்பற்றி ஒரு நிகழ்வில் கூறியுள்ளது எதைக் காட்டுகிறது?
– க.இளங்கோ, வந்தவாசி
பதில் 7: ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்து உழைப்பாலும் – அறிவாலும் உயர்ந்தவர் நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள். மராத்திய மண்ணிலிருந்து (அம்பேத்கர் களம்) வந்த சட்டமேதை – சமூக நீதி நெறியாளர்!
அடுத்த தலைமை நீதிபதியாகும் வாய்ப்பும் பெற்றவர். அவரது ஆழ்ந்த சமூகநீதி வரலாற்று அறிவைக் காட்டுகிறது!
– – – – –
கேள்வி 8: மூடநம்பிக்கைகள் ஒழிப்புப் பிரச்சாரம் குறித்து தங்களின் அடுத்த கட்ட பணிபற்றி….?
– மு.வெங்கட், பெங்களூரு
பதில் 8: ஆகஸ்ட்டில் குடந்தை பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டு, உடனடியாக செயல்வடிவம் எடுக்கும்.
– – – – –
கேள்வி 9: சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பகுத்தறிவு, மனவளம், உடற்பயிற்சி மூன்றுக்கும் ஆசிரியர் வீரமணிதான் என்று நடிகர் சத்யராஜ் சொல்லியது குறித்து….?
– ப.ரமேஷ், நெல்லை
பதில் 9: ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?’ என்பதால். என்னை மேலும் கடுமையாக உழைக்க வைக்கும் முதுகு தட்டல்கள் – அவ்வளவே! அவ்வளவே!!
– – – – –
கேள்வி 10: பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரியைக் குறைத்ததால், நாட்டின் வளம் உயருமா?
– கி.அசோக், கோவை
பதில் 10: அதன் ஏற்றுமதியும் பெருகி, இருவழிப்பாதையானால் நாட்டின் வளம், பொருளாதார பலம் இரண்டும் உயரும்!