தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேருந்து நிலையத்துக்கு அருகில் 4.7.2024 அன்று திராவிடர் கழகத்தின் தென்காசி மாவட்டத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, நடைபெற்ற நாற்பெரும் விழாவில், ஆசிரியர் முaதன்முதலாக அங்கு பேசினார். இதை அறிந்திருந்ததால் அந்த ஊரின் மக்கள், தங்கள் ஊரில் நடைபெறும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி இது என்பதை உணர்ந்து, திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவரான, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆசிரியர் மேடை ஏறியது முதல் பெண்கள், ஆண்கள், பொதுமக்கள் என சாரை சாரையாக ஆசிரியருக்கு மரியாதை செய்து மகிழ்ந்தனர். அவ்வளவு பேருக்கும் ஆசிரியர் அமர்ந்து அமர்ந்து எழுந்ததும், நின்று கொண்டே இருந்ததும் இது வரை காணாத காட்சியாகும். அதில் ஒரு பெண் ஆசிரியருக்கு மரியாதை செய்வதாக நினைத்து காலில் அணிந்திருந்த காலணியை மேடைக்கு கீழேயே விட்டுவிட்டு மேடை ஏறினார்.
அதைக் கண்ட ஆசிரியர், காலணியை அணிந்து கொண்டு வாருங்கள் என்று சொல்ல, அவரும் கீழே இறங்கி காலணியை அணிந்த பிறகு, மேலே சென்று ஆசிரியருக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்தார். ஆசிரியரின் அந்தச் செயல் அங்கிருந்தோருக்கு சிரிப்பையும், சிந்தனையையும் ஒரு சேரத் தூண்டிவிட்டது மட்டுமல்லாமல், திராவிட இயக்கத்தின் மூலக்கொள்கையான “சுயமரியாதையை” நினைவு படுத்தியது. அதேபோல பெரிய வர்களுடன் மேடை ஏறிய ஒரு சிறுவனுக்கு தனக்கு அணிவித்த பயனாடையை அணிவித்து ஆசிரியர் மகிழ்ந்ததும், மக்களிடையே ஆசிரியர் மீதான மரியாதையை மேலும் பல மடங்கு உயர்த்தியது.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் இந்திய கூட்டணி வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற இராணி சிறீகுமார் அவர்களுக்கு ஆசிரியர் மரியாதை செய்து அவரைப்பற்றி ஒரு அறிமுகம் போல் திராவிடர் இயக்கம் பெண் விடுதலைக்கு என்னென்ன செய்தது என்பது பற்றி பேசியதும், மக்களிடையே ஒரு பரவசமான மனநிலையை ஏற்படுத்தியிருந்தது.
நிகழ்ச்சி முடிந்த பிறகும் முக்கிய பிரமுகர்களும், மக்களும் மேடை மீது ஏறி ஆசிரியரிடம் ஒரு வார்த்தையாவது பேசிவிட மாட்டோமா என்று காத்திருந்து பேசியதும், ஆசிரியர் பிரியா விடை பெற்றுப் பிரிந்ததும் சாம்பவர் வடகரை நாற்பெரும் விழாவை திராவிடர் கழகத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய பகுதியாக மாற்றிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.