பெண்களைப்பற்றிய கதை என்பதே ஒன்று கூட யோக்கியமானதாக இல்லையே! எல்லோரும் கற்பரசிகள் என்பான்; ஒன்றாவது வெளியில் தாய்மார்களை வைத்துக்கொண்டு சொல்லத்தக்கதாக இருக்காது; ஏன், கண்ணகி இல்லையா? என்பார்கள்.
கண்ணகியே ஒரு பரம அடிமையாகத்தானே நடந்திருக்கிறாள். அவள் புருஷன் (கோவலன்) இன்னொருத்தி பின்னால் போனான் என்பதற் காக, இவள் கீழே பாயில்லாமல் தரையில் எதற்குப் படுத்துத் தூங்கவேண்டும்? நீங்கள் யோசிக்கவேண்டும். இவள் இப்படிப் போயிருந்தால், அவன் அப்படி படுத்துக் கொண்டாயிருந்திருப்பான்? இதுதான் கற்பா? அடிமைத்தனம் என்பதைத்தவிர வேறு என்ன அர்த்தம்?
இரஷ்யாவில் கல்யாணமே இல்லை; கணவனும் மனைவியும் தொழிற்சாலைக்குப் போகும்போது, ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக் கொண்டு போவார்கள். திரும்பி அவன் வீட்டுக்கு வரும் போது, மேஜை மேல் ஒரு கார்டு இருக்கும்; நான் பிரிந்து கொள்ளுகிறேன் என்று எழுதிவைத்திருப்பார் அந்த அம்மையார். என்ன கெட்டுப் போச்சு? அங்கென்ன எல்லோரும் ஒழுக்கங்கெட்டா திரிகின்றார்கள்? இங்கு பெண்டாட்டிக்குப் பெரிய உரிமை கொடுத்திருக்கிறேன் என்று யாராவது சொன்னால், அவன் வைரநகை வாங்கிக்கொடுத்திருப்பான் அல்லது பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்திருப்பான் அல்லது அவள் இஷ்டப்படி சினிமாவுக்குக் கூட்டிக் கொண்டு போயிருப்பான். இதுதானே இங்கு ‘உரிமை’ என்பதெல்லாம்.
இந்த மாதிரித் திருமணங்கள் என்றால், அவைகளில் சிக்கனமுறை கையாளப்பட வேண்டும். படிப்படியாக ஆடம்பரங்களும் அவசியமற்ற காரியங்களும் குறைக்கப்பட வேண்டும். எனக்குச் சில நாட்களுக்கு முன் ஒரு பத்திரிகை வந்தது. ஒரு முஸ்லீம் நண்பர் திருச்சியிலிருந்து அனுப்பியிருந்தார். அதிலே இன்னாருக்கும் இன்னாருக்கும் திருமணம் நடந்தேறி முடிந்துவிட்டது. அழைப்பு அனுப் பினால் உங்களுக்கு அசௌகரியம் ஏற்படும். எதற்காக அந்த அசௌகரியம், ஆகவே, திருமணம் முடிந்து விட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அச்சுப் போட்டிருந்தார். இது ரொம்பப் பாராட்டப்பட வேண்டிய முறையாகும்.
குழந்தைபெறுவதைக் குறித்து நண்பர் கல்யாண சுந்தரம் அவர்கள் சொன்னார்கள் – குழந்தை பெறுவதைத் தடுக்கக்கூடாது; அவைகள் செல்வம்; நாட்டில் வசதியிருக்கும்போது, அப்படிச் செய்யவேண்டிய தேவையில்லை என்பதாக. எதுக்காகப் பிள்ளை பெறவேண்டும்? இங்கென்ன நாட்டிலே பாலும், தேனும் ஆறாக ஓடுகிறதா? அப்படியே பாலும் தேனும் ஆறாக ஓடினாலும், அதற்காகக் குழந்தைபெற வேண்டும் என்பது என்ன அவசியம்?
இல்லை. கொஞ்சுவதற்காகக் குழந்தை இருக்கவேண்டாமா? என்று சொல்லுவார்கள். கொஞ்சுவதற்காகக்
குழந்தைகள் இருக்க வேண்டும் என்பது என்ன அவசியம்? நாம் இன்னொருத்தர் குழந்தையைப் பார்த்துக் கொஞ்சுவதில்லையா? நாயைப் பார்த்தால் கொஞ்சுவதில்லையா. கன்றுக்குட்டியைப் பார்த்தால் கொஞ்சுவதில்லையா? அட கொஞ்சித்தான் ஆகவேண்டும் என்றால், ஏன் மனைவியினிடத்திலேயே கொஞ்சுகிறது? என்ன நட்டம்? இல்லை உலகத்துக்காக நாம் பிள்ளை பெறவேண்டும் என்றால், அதெப்படி ஒப்புக்கொள்ள முடியும்? இமயமலைபனியிலே காயுது என்றால் நீ ஏன் போர்வை எடுத்துப் போர்த்த வேண்டும்?
சொத்துரிமை என்பதைக் காப்பாற்றுவதற் காகத்தானே பிள்ளை இருக்கவேண்டும் என்பது தானே இந்த முறையின் அடிப்படை. இரஷ்யாவில் தனிப்பட்ட சொத்துரிமை முறை இல்லாததால், அங்கே குழந்தைகளைப்பற்றி அரசியலாரே அக்கறை எடுத்துக் கொள்ளுவார்கள். ஆனால் இங்கே நமது நாட்டில் தனிப்பட்டோருக்குச் சொத்துரிமை இருப்பதனால், அதே எண்ணம் எப்படிச் சரியானதாகும்? எனக்கு ஏதாவது தைரியம், உணர்ச்சி தோன்றுகிறது என்றால், அதற்குக் காரணம் எனக்குப் பிள்ளைக் குட்டி ஒன்றும் இல்லாததுதான்.
எந்தக் காரியத்துக்காகவோ ஏற்பட்ட இந்த குழந்தைகள் பெற வேண்டியது அவசியம் என்ற முறை பிறகு எப்படியோ மக்களுக்கு ஒரு பெரும் தொல்லையாக ஆகிவிட்டது.
நம் நாட்டிலே பணம் சம்பாதிக்கிறது ஒரு பெருமை. அதைக் காப்பாற்றுவது என்பது பெரிய சிரமம். ஆகவே, பக்குவப்படுத்தி அதை ஒழுங்காகப் பொதுக்காரியத்திற்குப் பயன்படும் வண்ணம் ஆக்கித் தொல்லையைக் குறைக்க வேண்டும்.
சிக்கனமாக இருக்கவேண்டும் என்று முன்பே சொன்னேன். சிக்கனம் என்றால் சம்பாதனை அதிகம் தேவை இல்லை. செலவைச் சுருக்கினால் போதுமானது. வரவைக் கணக்குப்பார்த்து பட்ஜெட் (திட்டம்) போட வேண்டும். அதிகச் செலவு ஒழுக்கத்தைக் கெடுத்துவிடும்.
இரண்டாவது, நம் இரண்டு பேருக்குத்தான் வாழ வேண்டும் என்று மணமக்கள் நினைக்கக் கூடாது. சோறில்லை, ஒருத்தன் பட்டினி கிடக்கிறான் என்றால், நாம் எவ்வளவு கொஞ்சமாகச் சாப்பாடு நம்மிடத்திலே இருந்தாலும், அதிலே கொஞ்சம் கொடுக்கிறோமோ அந்தக் குணம் இந்த உதவி பெறுபவர்களைவிட செய்கிறவர்களுக்கே பெரிய திருப்தி அளிக்கிறது. 4 பேர் உட்காரும் இடத்தில் இன்னொருவர் வந்துவிட்டால், நாம் இடத்தை நெருக்கிக் கொண்டாவது தருகிறோம் என்றால், அதில் ஒன்றும் கஷ்டம் தோன்றுவதில்லை. உதவி அளிக்கும் படியான வாய்ப்புக் கிடைத்ததே என்று மகிழ்ச்சியில் நாம் அதைப் பொருட்படுத்துவது கிடையாது. வாழ்க்கையில் அந்த உணர்ச்சியைப் பெற்று வாழ்ந்தால், பொது நலத்திற்கும் நாம் பயன்பட்டவர்களாய் இருக்க முடியும்.
(தந்தை பெரியார் அவர்கள் 25.01.1959 அன்று சேலத்தில் நடைப்பெற்ற வசந்தகுமாரி – ராசவேலு ஆகியோரது திருமண விழாவில் ஆற்றிய உரை) ‘விடுதலை’ 02.02.1959)