கேள்வி 1: வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதால் காங்கிரஸ் தென் மாநிலங்களில் பலம் பெறுமா?
– மா.மாமல்லன், மல்லை
பதில் 1: பொதுவாக, காங்கிரசு கட்சி அகில இந்திய கட்சி என்ற நிலையில், அவர் எங்கு வேண்டுமானாலும் நிற்பது இயல்பானதே! நிச்சயம் காங்கிரஸ் கட்சிதான் எதிர்க்கட்சி – இந்தியா கூட்டணிக்கும் அதனால் ஒரு அனுகூலம் ஏற்படக்கூடும்!
கேள்வி 2: பிரதமராக பதவி ஏற்ற பிறகு மோடி மவுனத்தில் ஆழ்ந்துவிட்டாரே?
– வ.வீரசிங்கம், திருத்தணி
பதில் 2: முதலில் தியானம்; இப்போது மவுனம்! இன்னும் என்னென்ன கூத்தோ! பொறுத்துப் பார்ப்போம்!
கேள்வி 3: வாரத்திற்கு ஒரு நாளாவது மக்கள் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம், மறியல், ஊர்வலம் என பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்துவரும் இடதுசாரிகள் உள்ளிட்ட தேசிய, மாநில கட்சிகள் தேர்தலில் பெறும் வாக்கு சதவீதம் ஒற்றை இலக்கத்தில் இருக்கும்போது, இதுபோன்ற எந்தப் போராட்டக் களத்தையும் முன்னெடுக்காத ஒரு சில கட்சிகள் மட்டும் எப்படி இரட்டை இலக்கத்தில் வாக்கு வங்கியை பெற முடிகிறது?
– சித்தார்த்தன், உள்ளிக்கோட்டை
பதில் 3: கூட்டணி பலமும் இருக்கிறது. இன்னமும் இடதுசாரிகள் அவர்களது போராட்ட உணர்வை விட்டுவிடவில்லை. தேவைப்படும்போது போராடவே செய்கிறார்கள்!
கேள்வி 4: இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வில் முறைகேடு நடைபெறுகிறது என காலம் கடந்து ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒப்புக்கொண்டதை போன்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திலும் முறைகேடு நடைப் பெற்றுள்ளது என்பதை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒப்புக் கொள்ளும் காலம் வருமா?
– சங்கமித்ரா, மன்னார்குடி
பதில் 4: “அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்” என்பது பழைய பழமொழி.
கேள்வி 5: “நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. ஆனால். நீட் தேர்வை ரத்து செய்யமாட்டோம்” என்று ஒன்றிய கல்வி அமைச்சர் ஒருபுறம் கூறிக்கொண்டு இருக்கும் போது ‘நெட்’ தேர்வு மோசடியால் அத்தேர்வை ரத்து செய்துள்ளார்களே?
– ச.மோகனசுந்தரம், திண்டுக்கல்
பதில் 5: “எனக்கு பைத்தியம் தீர்ந்துவிட்டது; எங்கே அந்த உலக்கை? அதனை எடுத்து எனக்குக் கொடு” என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது!
கேள்வி 6: பீகாரில் 65 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அந்த மாநில உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது குறித்து நிதீஷ் குமார் ஒன்றும் சொல்லவில்லையே?
– தே.சந்திரசேகர், மதுரை
பதில் 6: “மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில்” வரும் என்று ஒரு செய்தி கூறியிருக்கிறாரே!
கேள்வி 7: தேர்தல் முடிந்ததும் மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், பழைய முறைகேடுகளுக்கு துணை நின்றவர்களே மீண்டும் அமைச்சர்களாகி உள்ளார்களே?
– க.தமிழ்வேந்தன், விருதுநகர்
பதில் 7: பெரிய மாறுதலை இப்போதைக்கு எதிர்பார்க்க முடியாது. இந்த ‘மைனாரிட்டி அரசு’ நீடிக்கும் வரை.
கேள்வி 8: “ராவணன் என்னை நல்ல இடத்தில் வைத்திருந்தான்” என்று நாடகத்தில் கூறியதற்காக ராமாயணத்தை இழிவுபடுத்திவிட்டதாக கூறி, “மும்பை அய்.அய்.டி. மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம், விடுதி வசதி ரத்து, விருதுகள் வழங்கப்படாது” என்று தண்டனை விதித்துள்ளது அய்.அய்.டி மும்பை நிர்வாகம். இதில் என்ன தவறைக் கண்டுபிடித்துவிட்டது அப்படி?
– க.காளிதாசன், காஞ்சி
பதில் 8: இராமாயணங்கள் பல உள்ளன. இவர்களுக்கு ஏனோ இப்படி ஒரு காவி புத்தி. இதை உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற வழக்குகளாக நடத்திட முற்போக்குச் சக்திகள் முனைய வேண்டும்!
கேள்வி 9: “இனி காங்கிரசுடன் கூட்டணி இல்லை” என்று அறிவித்த உடன் கெஜ்ரிவாலுக்கு பிணை கிடைத்துள்ளதே?
– கி.புத்தன், கோடம்பாக்கம்
பதில் 9: பலே பலே! நல்ல கோணத்தில் இந்தக் கேள்வியை அமைத்துக் கேட்டுள்ளீர்கள்!
இதழாளர்: சரவணா ராஜே ந்திரன்