தந்தை பெரியாரால் நடத்தப்பட்ட ஏடுகள், இதழ்களின் பெயர்களே – அவற்றின் கொள்கைகளை எடுத்த எடுப்பிலேயே பறையடித்து முழங்கும்.
‘குடிஅரசு’, ‘விடுதலை’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’, ‘உண்மை’, ‘தி ரிவோல்ட்’ என்று அடுக்கிக் கொண்டே போகலாம். தொடக்கத்தில் ஏடுகளுக்குத் தனித் தமிழில் பெயர் சூட்டியதும் அய்யா அவர்களையே சாரும்.
‘விடுதலை’ ஏடு தொடக்கத்தில் நீதிக்கட்சியால் வாரம் இருமுறை ஏடாக 1.6.1935 முதல் வெளி வந்தது. இரு இதழ்கள் வெளி வந்த நிலையில், அதைப்பற்றி ஒரு மதிப்புரை எழுதித் தருமாறு தந்தை பெரியாரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதன்படி தந்தை பெரியார் அளித்த அந்த மதிப்புறு வரிகளைக் கேளுங்கள்! கேளுங்கள்!!
“2,3 வருஷங்களாகவே பரிசுத்த வீர ரத்த ஓட்டமுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும் – இரவும், பகலுமாய் தமிழ்ப் பத்திரிகை! தமிழ்ப் பத்திரிகை!! தமிழ்ப் பத்திரிகை!!! என்கிற தாகத்துடன் அலைந்து கொண்டிருந்தும், அதை எந்தத் தலை வர்களும் கவனியாமல் அலட்சியமாய் இருந்ததும்; அதன் பயன்களைச் சமீப காலத்தில் ஏற்பட்ட பல தேர்தல்களின் மூலம் அனுபவித்ததும், மறுபடியும் புதிய முயற்சியில் முன்னிலும் அதிகமாக இரண்டு பங்குச் சப்தத்துடன் தமிழ்ப் பத்திரிகை! தமிழ்ப் பத்திரிகை!! தமிழ்ப் பத்திரிகை!!! என்று மக்கள் கூப்பாடு போட்டதுமான விஷயம் யாரும் அறியாததல்ல”
“அப்படிப்பட்ட நிலையில்” விடுதலை என்னும் பேரால் பத்திரிகை வெளியாகி இருப்பதைப் பார்த்து, எந்தப் பார்ப்பனரல்லாதாரும் தங்களுக்கு ஏதோ ஒரு “பாக்கியம்” கிடைத்ததாக மகிழ்ச்சி அடைவார்களே ஒழிய, இந்த மதிப்புரை வருகின்றதா? அது எப்படி வருகின்றது? என்று யாரும் கவனிக்க மாட்டார்கள்”
“விடுதலை” பத்திரிகை இன்று வாரம் இரு முறையாக வெளிவந்தாலும், கூடிய சீக்கிரம் தமிழ் மக்கள் ஆதரவுக்கு ஏற்பத் தினசரி ஆகும் என்பதில் நமக்கு அய்யமில்லை” (‘குடிஅரசு’ 7.6.1935)
என்று தந்தை பெரியார் தீட்டிய அந்த எழுத்துக்க ளில் எந்த அளவு பெரும் மகிழ்ச்சியும், உற்சாகமும், பார்ப்பனர் அல்லாதார் மக்களின் உரிமை வாழ்வில் மட்டிலா அக்கறையும் ததும்பி மேலோங்கி நிற்கிறது என்பதை அறிய முடிகிறது.
தந்தை பெரியார் எதிர்பார்த்தபடியே, எழுதிய படியே ‘விடுதலை’ நாளேடாக வந்தது உண்மைதான்! அதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் நாளேடாக, தந்தை பெரியாரின் மடியில் ஈராண்டு குழந்தையாகத் தவழ்ந்ததுதான்.
நீதிக்கட்சியால் நடத்தப்பட்ட ‘திராவிடன்’, குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தாக்குப்பிடிக்க முடியாமல் ‘தந்தை பெரியாரிடம் தானே வந்து சேர்ந்தது. ‘விடுதலை வந்து சேர்ந்ததும் அந்த அடிப்படையில்தான்! நெருக்கடி வரும் பொழுதெல்லாம், அதனை எதிர் கொண்டு தாங்கி சுமக்கும் தாய் சுவராக தந்தை பெரியார்தான் எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறார்.
இன்றைக்கு 90ஆம் ஆண்டில் ‘விடுதலை’ தன் வரலாற்றுப் பூர்வமான அடியை எடுத்து வைக்கிறது. உலகில் ஒரு பகுத்தறிவு – நாத்திக நாளேடு 90 ஆண்டு களாக நடைபோடுகிறது என்றால் அது ‘விடுதலை’ மட்டும்தானே!
இந்த நெடுங்கால கட்டத்தில், அது சந்தித்த இடர்ப்பாடுகளும், நெருக்கடிகளும், இழப்புகளும் விழுப்புண்களும் சாதாரணமானதல்ல. அவற்றை விரிக்கின் பெரும் காண்டமாக நீளும்! நெருக்கடி நிலை காலத்தில் ஒவ்வொரு நாளும் தணிக்கை என்ற பார்ப்பன நாகங்களின் கொத்துகள் ‘விடுதலை’யின்மீது எத்தனை எத்தனை! நமது ஆசிரியர் அவர்கள் ‘மிசா’ கைதியாக இருந்த நிலையில் அன்னை மணியம்மையாரின் (நோய் வாய்ப்பட்டு இருந்த நிலையிலும்) துணிவும், அஞ்சாமையும் ‘விடுதலையையும், இயக்கத்தையும், தோழர்களையும் கட்டிக் காத்ததை இப்பொழுது நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது.
1962ஆம் ஆண்டில் ஒரு நெருக்கடி, ‘விடுதலை’ ஆசிரியர் பொறுப்பை யார் ஏற்பது என்பதுதான் அது.
அந்தக் கால கட்டத்தில் கடலூரில் வழக்குரைஞராக தம் தொழிலைத் தொடங்கிப் பிரகாசித்துக் கொண்டிருந்த தருணத்தில், அன்றைய கடலூர் வீரமணி என அறியப்பட்ட 29 வயது நிறைந்த நமது ஆசிரியர் அவர்கள் தந்தை பெரியார் கட்டளைப்படி ‘விடுதலை’ ஆசிரியர் பொறுப்பினை ஏற்றார்.
அதுபற்றி தந்தை பெரியார் எழுதிய வரிகள் கவனிக்கத்தக்கவை.
“உண்மையைச் சொல்கிறேன், தோழர் வீரமணி இந்த முழு நேரத் தொண்டிற்கு இசையாதிருந்தால், “விடுதலை”யை நிறுத்தி வாரப் பத்திரிகையாக திருச்சியில் அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய்திருந்தேன்” என்பதுதான் அந்தச் செய்தி!
இன்றைக்கு விடுதலை 90ஆம் ஆண்டில் அடி பதிக்கிறது என்றால், அதற்காக தமிழுலகம் காலா காலத்திற்கும் நமது அருமைத் தலைவர் ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளது.
‘விடுதலை’ என்ற மூச்சுக் காற்று நின்று இருந்தால் நம் மக்களின் நிலை என்ன? நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் படபடக்கிறது.
தமிழ்நாடு தனித் தன்மையாக ஒளிர்கிறது என்கி றார்களே, அந்தப் பவிசு எங்கிருந்து வந்தது? இந்தியத் துணைக் கண்டத்திலேயே 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை ஒன்பதாவது அரசமைப்புச் சட்டப் பாதுகாப்போடு அனுப விக்கிறோமே – அதன் அச்சாணி ‘விடுதலை’யல்லவா!
இந்தியா முழுமையும் பிற்படுத்தப்பட்ட மக்கள் முதன் முதலாக 27 விழுக்காட்டை அனுபவிக்கிறார்களே – அந்தச் சாதனைக்குச் சக்கரமாகச் சுழன்றதில் ‘விடுதலை’யின் பங்கு எத்தகையது!
“தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம் ‘விடுதலை'” என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் சொன்னதையும் ‘விடுதலை’யும் ஸ்ரீமான் நாயக்கரும் என் அன்பார்ந்த எதிரிகள், என்று சி.ஆர். ஆச்சாரியார் கூறியதையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் ‘விடுதலை’யின் அருமையும் பெருமையும் தூலமாக விளங்கும்.
“இது உண்மையா?” என்று ஒரு பெட்டிச் செய்தி ‘விடுதலை’யில் வெளி வந்தால், அது ஆட்சியாளர்களின் கதவைத் தட்டுமே!
தந்தை பெரியாரிடம் இந்த அளவுக்கு நம்பிக்கை பெற்றவர்கள் இருந்திருப்பார்களா என்று எண்ணும் வகையில், ‘விடுதலை’யை வீரமணியின் ஏக போக ஆதிக்கத்தில் ஒப்படைக்கிறேன் என்றதும், ‘விடுதலை’ ஆசிரியரின் நாற்காலியில் (அப்பொழுது சென்னை சிந்தாதிரிப்பேட்டை பாலகிருஷ்ணன் பிள்ளைத் தெருவில் ‘விடுதலை’ அலுவலகம் இருந்தது) தந்தை பெரியாரே, நமது ஆசிரியர் வீரமணி அவர்களின் தோளை அழுத்தி அமர வைத்தாரே – இந்தப் பேறு வேறு யாருக்குக் கிடைத்திருக்கும்!
அய்யா வைத்த அந்த நம்பிக்கை பொய்க்க வில்லையே! ஆசிரியர் பொறுப்பை ஏற்றவுடன் அவரே பல மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து ‘விடுதலை’ சந்தாக்களைச் சேர்த்ததுண்டே!
அந்தக் காலத்து ‘விடுதலை’யின் தோற்றத்தையும், இன்றைய பொலிவையும், மூத்த பெரியார் பெருந் தொண்டர்கள் ஒப்பிட்டு அறிவார்கள்.
கையால் எழுத்துக் கோர்த்து (Hand Composing) வெளியான ‘விடுதலை’ எங்கே, இன்றைக்கு ஆஃப்செட்டில் (1990முதல்) பல வண்ணங்களில் ஒளி வீசும் ‘விடுதலை’ எங்கே! முதன் முதலில் தமிழ்நாட்டில் இணையத்தில் வெளிவந்த முதல் ஏடும் ‘விடுதலை’யே!
சென்னையில் மட்டும் வெளிவந்த ‘விடுதலை’ திருச்சியிலிருந்தும், இரண்டாவது பதிப்பாக வெளிவந்து கொண்டுள்ளதே! அரசியல் அதிகாரம், விளம்பரம் என்ற எந்த அனுசரணையும் இன்றி இந்த உயரத்தை ‘விடுதலை’ எட்டியிருக்கிறது. ஆம், அய்யா எதிர்பார்த்த அந்த முழு நம்பிக்கையையும் பரிபூர்ணமாகப் பூர்த்தி செய்துள்ளார் நமது ஆசிரியர்.
‘விடுதலை’யின் ஆசிரியராக 50ஆம் ஆண்டில் அவர் அடி எடுத்து வைத்த நேரத்தில் 50 ஆயிரம் சந்தா என்ற சாதனையை நிகழ்த்திக் காட்டியதில் கருஞ்சட்டை மெழுகுவர்த்திகளின் உண்மைத் தன்மையும் காலம் கருதா உழைப்பும், அர்ப்பணிப்பும் ஈடு இணையில்லாதவை!
திராவிடர் கழகம் ஓர் இயக்கம் – அதன் அதிகாரப் பூர்வ ஏடான ‘விடுதலை’யும் எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருந்து தீர வேண்டியது – சந்தா சேர்ப்பது என்பது எப்பொழுதுமே ஓர் இயக்கமாகவே நடத்தப்பட வேண்டியதே!
‘விடுதலை’க்கு ஏதோ ஒரு வகையிலாவது உதவிக்கரம் நீட்டி வந்திருக்கிற, தோள் கொடுத்து வந்திருக்கின்ற கடைக்கோடி மனிதனுக்கும், சந்தாதாரர்களுக்கும், முகவர் களுக்கும் ‘விடுதலை’யின் 90ஆம் ஆண்டில் நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
‘விடுதலை’யின் நூறாம் ஆண்டிலும் நமது தலைவர் ஆசிரியரிடம் நூறு ஆயிரம் சந்தாக்களை அளித்து மகிழ்வோம்! வெல்க ‘விடுதலை’யின் பணி!