18ஆவது மக்களவைத் தேர்தலின் கடைசிக் கட்ட தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.
நடந்து முடிந்த தேர்தல்களில் பி.ஜே.பி. கூட்டணியின் தோல்வி உறுதி என்று ஆகிவிட்ட நிலையில், கடைசிக் கட்ட தேர்தலில் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க இன்று முதல் மூன்று நாட்களுக்குக் கன்னியாகுமரி – விவேகானந்தர் சிலை இருக்கும் தியான மண்டபத்தில் மோடி தியானம் செய்ய இருக்கிறாராம்.
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போதும் கேதார்நாத்தில் இதைப் போன்றே நரேந்திர தாமோதர தாஸ் மோடி தியானம் செய்தார் என்பதை நினைவூட்டுகிறோம்.
தியானத்தின் நோக்கம் என்ன?
மன அழுத்தம், பதற்றம், மனச் சோர்வு மற்றும் வலியைக் கணிசமாகக் குறைக்க இந்தத் தியானம் பயன்படும் என்று கூறப்படுகிறது.
கடவுள் பக்தியும் மதவெறிக் குணமும் மூர்க்கத்த னமாக குடி கொண்டு இருக்கும் நரேந்திர மோடி – தியானத்தின் நோக்கத்தை வைத்துப் பார்க்கும் பொழுது ஒன்று மட்டும் தெளிவாகவே தெரிகிறது.
18ஆவது மக்களவைத் தேர்தல் நரேந்திர மோடிக்கு மன அழுத்தத்தையும், பதற்றத்தையும், வலியையும் பெரும் அளவுக்குக் கொடுத்துள்ளதால் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள இந்தத் தியானத்தை மேற்கொண்டுள்ளார் என்று எடுத்துக் கொள்ளலாம்.
இன்னும் புரியும்படி எளிதாகச் சொல்ல வேண்டு மானால், நடந்து கொண்டிருக்கும் தேர்தலில் தம் கட்சிக்குப் பெருந் தோல்வி என்பது உறுதியாகி விட்டதால் (பிரதமருக்கு இருக்கும் வாய்ப்பு வசதிகள் காவல்துறையின் நுண்ணாய்வு பிரிவுகள் மூலம்) கடைசிக் கட்டமாக பக்தி மூடத்தனம் என்ற துரும்பைப் பிடித்துக் கரையேறலாம் என்ற தவிப்பின் தாக்கம்தான் இந்தத் தியானம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
கடவுள் நம்பிக்கையால், பக்தியால், ராமன் கோயில் கட்டுவதால், எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்ற மூடநம்பிக்கையால், தாம் நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும் என்றால், ஏழு கட்டமாகத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் இல்லையே! இந்தியா முழுவதும் ஓடி ஓடி மோடி பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியமில்லையே!
மக்களிடத்தில் மண்டியிருக்கும் பாமரத்தனமான பக்தி கை கொடுக்கும் என்று நினைத்தால், அதைவிடப் பைத்தியக்காரத்தனம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.
மதவெறியைத் தூண்டினால், அதன் மூலம் மக்களைத் தம் பக்கம் ஈர்க்கலாம் என்ற கணக்குக் கடந்த தேர்தல்களில் கை கொடுத்து இருக்கலாம்.
ஆனால் மக்கள் இப்பொழுது விழித்துக் கொண்டு விட்டார்கள்.
ஓர் அரசிடம் இருந்து மக்கள் எதிர்பார்ப்பது பக்தியோ, மத சமாச்சாரங்களோ அல்ல. தங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து இருக்கிறதா மோடி அரசு? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று நீட்டி முழக்கினாரே மோடி, அதனை செயல்படுத்திக் காட்டினாரா?
விவசாயிகளுக்கு இரு மடங்கு வருவாய் கிடைக்கும் என்றார்களே, அது நடந்ததா?
குறைந்தபட்சம் மக்களுக்கு அடிப்படையான சமையல் எரிவாயு உருளை ஒன்றின் விலை இரட்டிப்பாகிடவில்லையா? பெட்ரோல், டீசல் விலையின் கடும் ஏற்றத்தால், இன்றியமையாத பொருள்களின் விலை எல்லாம் இறக்கை கட்டிப் பறக்கிறதே!
இவற்றையெல்லாம் நாட்டு மக்கள் ஆராய்ச்சி செய்தா கண்டுபிடிக்க வேண்டும்? அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அடியும், மக்களைப் பெரு மூச்சுவிடச் செய்கிறதே!
ஆளும் பிஜேபியோ மத சமாச்சாரங்களை கை முதலாகக் கொண்டு மக்களைச் சந்திக்கிறது. எதிர்த்து நிற்கும் இந்தியா கூட்டணி கட்சிகளோ மக்கள் பிரச்சினைகளைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளன. இதுதான் கள யதார்த்தம்!
ஏழைகளிடம் பல வகைகளிலும் பணத்தைப் பறித்து, வங்கிக் கடன் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கி, கடைசியில் அதனைத் தள்ளுபடியும் செய்கிறது.
இதை எல்லாம் நாளும் யதார்த்தமாகக் கண்டு கொண்டு இருக்கும் நாட்டு மக்கள் பிஜேபியின் மாய்மாலத்தைப் புரிந்து கொண்டு விட்டார்கள்.
சிதறிக் கிடந்த எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு விட்டன. புதிய நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்.டி.ஏ.) எதுவும் இல்லை.
கை இணைத்து நின்றவர்களும் கை கழுவி விட்டனர். இந்தியா கூட்டணியிலோ – ஏற்கெனவே பிளவுபட்டு இருந்த கட்சிகள் உண்மை நிலையை உணர்ந்து ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.
தியானம் என்பதெல்லாம், ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டவர்களின் ‘கண்கட்டு வித்தை?’
அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது நலத் திட்டங்களே தவிர, கோயில் கட்டுவதும், பிரதமராக இருப்பவர் பூசாரி வேலை பார்ப்பதும் அல்ல.
போதும் போதாததற்கு தந்தை பெரியார் காற்று வடக்குத் திசை நோக்கி சுழன்று அடிக்க ஆரம்பித்து விட்டது. இந்தியா கூட்டணியின் குறிப்பாக ராகுல் காந்தியின் முழக்கங்கள் மக்களின் இதயங்களை மீட்டும் நிலையைப் பார்க்கிறோம்.
தந்தை பெரியாரைப் பற்றிப் பேசுகிறார். சமூகநீதிக் கொடியை உயர்த்திப் பிடிக்கிறார்.
பிரதமர் மோடியோ தியானம் செய்து கொண்டு இருக்கிறார் – இதுதான் யதார்த்த நிலை!
ஜூன் 4 நன்னம்பிக்கை உள்ள பொழுதாக விடியப் போகிறது – வரவேற்போம்!