பாணன்
மார்ச் முதல் வாரம் பொதுத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானபோது மக்களிடையே எந்த ஒரு ஆரவாரமும் இல்லாததால் ஆளும் பாஜக சிறிது குழப்பத்தில் இருந்தது.
தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நடந்த முதல் வாக்குப்பதிவின் போது மோடிக்கு எதிரான அலை வீசுவது மோடிக்கும் பாஜகவினருக்கு கண்கூடாக தெரிந்தது.
முதல் வாக்குப்பதிவான 19.04.2024 வரை பொதுவாகவே பேசிவந்த மோடிக்கு முதல் வாக்குப்பதிவில் பாஜகவிற்கு எதிரான அலை முக்கியமாக மோடி ஆட்சியின் மீதானவெறுப்பு அதிகரித்துள்ளது என்று உளவுத்துறை அறிக்கை தெரிவித்தது.
அதுமட்டுமல்லாமல் அடுத்த அடுத்த தேர்தலில் வாக்களிக்கச்செல்லும் நாள் அன்று மக்கள் மனதில் பெரிய மாற்றம் ஏற்பட்டு மோடி அரசு படுதோல்வியை நோக்கிச்செல்லும் என்ற அறிக்கை – தொடர்ந்து அறிக்கைகள் செல்லவே மோடியின் பரப்புரை தொனி மிகவும் மோசமான மதவாதமாக மாறியது – இது தொடர்பான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
விஷமத்தனம்
சமீபத்திய தேர்தல் பிரசாரம் குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவர், “இதுபோன்ற தேர்தல் பிரசாரத்தை நான் பார்த்ததே இல்லை. இவர்களின் கருத்துகள் விஷமத் தனமாக உள்ளது. இப்படியெல்லாம் பேசு வார்கள் என்று கற்பனைகூட செய்து பார்க்கவில்லை” என்று கூறினார்.
‘இந்தப் போக்கு நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல’
மும்பை கலவரத்திற்குப் (1993) பிறகு அமைதியான சூழலை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட மும்பையின் சமூகம் மற்றும் மதச்சார்பின்மைக்கான ஆய்வு மய்யத்தின் பொறியாளர் இர்பானின் கூற்றுப்படி, “இதுபோன்ற தேர்தல் பரப்புரைகள் மக்கள் மத்தியில் பிரிவினையை அதிகரிக்கும். நாட்டின் எதிர்காலத்திற்கு இது நல்லதல்ல.” என்கிறார்.
”இதற்கு முன்பு நடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் `ஊழல் எதிர்ப்பு’, `இந்தியாவுக்கு நல்ல காலம் பிறக்கிறது (அச்சே தின்)’, `தேசியவாதம்’ உள்ளிட்ட வாக்கியங்களின் அடிப்படையில் தேர்தல் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. 2024 தேர்தல் இஸ்லாமியர்களுக்கு எதிரான’ கருத்துகளை முன்வைத்து நடத்தப்படுகின்றன,” என்றார்.
ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத் தில் பிரதமர் மோடி ஆற்றிய பிரச்சார உரை குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தலையங்கம் எழுதியிருந்தது , இந்தக் கட்டுரையின் தலைப்பு – “No, Prime Minister”.
ராஜஸ்தானில் ஒரு தேர்தல் பிரச்சாரத்தில், பிரதமர் மோடி, மேனாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பழைய உரையை மேற்கோள் காட்டி முஸ்லிம்களை பற்றி கருத்து தெரிவித்தார், அதில் முஸ்லிம்களை ‘ஊடுருவுபவர்கள்’ மற்றும் ‘அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்கள்’ என்று குறிப்பிட்டார்.
அடுத்தடுத்து வெளியான அறிக்கைகள் – இந்த பிரச்சார விவகாரம் இத்துடன் முடியவில்லை.
தவறானவை
கருநாடக பாஜக, இட ஒதுக்கீடு தொடர்பாக பதிவிட்ட ட்வீட், இஸ்லாமியர் களுக்கு எதிரான’ தேர்தல் விளம்பரம் ஆகியவை சர்ச்சையை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் பாஜக தலைவர்கள் பேசிய கருத்துகள் தவறானவை என்றும் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறி வருகின்றனர். இது தவிர, ‘‘தனிப்பட்ட சட்டம் மூலம் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவோம் என காங்கிரஸ் கூறுகிறது” என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஏஎன்அய் செய்தி நிறுவனத்திடம், “காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்தபோது, இது காங்கிரஸ் கட்சியின் அறிக்கையா அல்லது முஸ்லீம் லீக்கின் அறிக்கையா என்று யோசித்தேன்,” என்றார்.
மோடிதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை முஸ்லீம் லீக் அறிக்கை என்று அனைவருக்கும் முன்பாகவே பீகாரில் நடந்த தேர்தல் பரப்புரையில் கூறியிருந்தார்
தேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது உரையில், “காங்கிரஸ் இம்முறை தேர்தல் அறிக்கையில், மத சிறுபான்மையினருக்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்குவதை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது, இது நடைமுறைப்படுத்தப்பட்டால், அவர்களை ஆயுதப்படையில் சேர்க்கலாம்,” என்றார்.
உண்மைக்கு மாறாக
ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஒரு பேரணியில் பேசியபோது, “காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்தால், காங்கிரஸ் அந்நிய சக்திகளோடு கைகோர்த்திருப்பது தெரிகிறது. உங்கள் பிள்ளைகளின் சொத்துகளை முஸ்லிம்களுக்கு கொடுக்க நினைக்கிறார்கள்” என்று கூறினார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஷரியா, தாலிபன் போன்ற வார்த்தைகள் எங்குமே குறிப்பிடப்படவில்லை.
பிரதமர் மோடி, பன்ஸ்வாராவில் ஆற்றிய உரை குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது: “இந்தியா கூட்டணிக்கு, நாட்டு மக்களை விடவும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள்தான் முக்கியம்,” என்று குறிப்பிட்டார்.
வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்களை கொண்டவர்களின் கருத்து என்ன?
பாஜகவின் பிரச்சாரம் மீதான விமர் சனங்கள் குறித்து வலதுசாரி சுவ்ரோகமல் தத்தா பேசுகையில், “இந்த நாட்டில் இஸ்லாமிய மன்னர்களால் ஹிந்துக்களின் தலை துண்டிக்கப்பட்டது இல்லையா? கஜ்வா-இ-ஹிந்த் என்ற சித்தாந்தம் இந்த நாட்டிற்குள் வரவில்லையா? ஓட்டு ஜிகாத் இந்த நாட்டிற்கு வரவில்லையா? இந்த உண்மைகளை பிரதமர் அம்பலப்படுத்து கிறார், அவர் அப்படி என்ன குற்றம் செய்து விட்டார்?” என்றார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 16ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
பாகுபாடான நடுவர்
தேர்தல் ஆணையத்துக்கு சுமார் 200 புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவித் துள்ளது. இதில், 169 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. பாஜக சார்பில் 51 புகார்கள் அளிக்கப்பட்டு, அதில் 38 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸிடம் இருந்து 59 புகார்கள் பெறப்பட்டன, அவற்றில் 51 புகார்களில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
ஆனால், “விஷமத்தனமான கருத்து களை” உள்ளடக்கிய தேர்தல் பிரச்சாரங்கள் நடக்கும் இந்தக் காலகட்டத்தில், ஆளும் பாஜக தலைவர்கள் மீது தேர்தல் நடவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டுவதில்லை. பாஜக தலைவர்கள் பிரசாரத்தில் ராமன் படம், திரிசூலம் உள்ளிட்டவற்றை கொண்டு செல்கிறார்கள் – அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரெக் ஓ பிரையன், தேர்தல் ஆணையம் ஒரு “பாகுபாடான நடுவர்” போல் நடந்து கொள்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். மேனாள் தேர்தல் ஆணையர் ஒருவர் கூறுகையில், “கடந்த காலங்களில் சர்ச்சையான பிரச்சார உரைகளுக்கு தேர்தல் ஆணையம் கடுமை காட்டியிருந்தால் இன்று இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்காது.,’ என்றார்.
தேர்தல் ஆணையத்தால் நடைமுறைப் படுத்தப்பட்ட மாதிரி நடத்தை விதிகளின் படி, தேர்தல் பிரச்சாரத்தின்போது மத சின்னங் களை பயன்படுத்தி வாக்கு கேட்கக்கூடாது. மதம், ஜாதி அடிப்படையில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கக்கூடாது. தேர்தல் நடத்தை நெறிகளின்படி, எந்தவொரு மத அல்லது இன சமூகத்திற்கு எதிராக வெறுப்பு பிரசாரத்தை மேற்கொள்வது அல்லது முழக்கங்களை எழுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகளைக் காரணம் காட்டி, பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முதல்முறை
பிரதமர் மோடியின் பன்ஸ்வாரா பிரசாரப் பேச்சுக்கான தாக்கீது பிரதமருக்கு அனுப்பப்படாமல், கட்சித் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அனுப்பப்பட்டது கேள்விகளின் தீவிரத்தை மேலும் அதிகரித்தது. இப்படி நடப்பது இதுவே முதல் முறை.
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில் , “பிரதமரின் தரக் குறைவான கருத்துகளால் சாமானிய மக்கள் மத்தியில் சலசலப்பு எழுந்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் கைகள் கட்டிப் போடப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.
சமமாக நடத்துகிறோம் என்பதை நிரூபிக்க ராகுல் காந்தியின் கருத்துக்கும் தாக்கீது அனுப்பி உள்ளனர்? தேர்தல் ஆணையத்திற்கு இது அவசியமா? பாஜக தலைவர் ஹேமமாலினி குறித்து ஆட்சேபகரமான கருத்து தெரிவித்ததற்காக காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலாவை தேர்தல் ஆணையம் கண்டித்ததையும், அவரது தேர்தல் பிரசாரத்துக்கு 48 மணிநேரம் தடை விதித்ததையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இது தவிர, பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா சிறீநெட்-அய் குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்தது,” என்று குறிப்பிட்டார்
பிரதமர் மோடியின் பன்ஸ்வாரா பிரச்சார உரை, இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கு முன்பாகப் பேசப்பட்டது. வாக்குப்பதிவின் இரண்டாம் கட்டமாக கேரளா, கருநாடகா, ராஜஸ்தான், மகாராட்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பல தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் டவுன் பல்கலைகழகத்தில் பணிபுரியும் இந்திய அரசியல் துறை பேராசிரியர் இர்பான் நூருதீன் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளில், சில சந்தர்ப்பங்களில் கட்சியின் முக்கிய அடிப்படைக் கொள்கைகளை நிலைநாட்டும் வகையில் மறைமுகமாக பிரதமர் மோடி செயல்பட்டார். தீவிரமாக சர்ச்சைக்குரிய கருத்துகள் பேசுவதை மற்ற பாஜக தலைவர்களிடம் ஒப்படைத்தார், ஆனால் இந்த முறை எல்லாம் மாறிவிட்டது. பிரதமர் மோடியே மயானம் மற்றும் சுடுகாடு பற்றிக் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது,” என்று விவரித்தார்.
தனக்குத் தானே தீங்கு
“கிராமங்கள் மற்றும் நகரங்களில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் உள்ள சவால் ஆகியவை முக்கியமான பிரச்சினையாக இருப்பதால் பொருளாதாரம் தொடர்பான பேச்சுகள் வாக்காளர்களை ஈர்க்கவில்லை என்பதை பாஜக புரிந்து கொண்டது என்பதற்கு இதுவொரு அறிகுறி,” என்று பேராசிரியர் நூருதீன் கூறுகிறார்.
மேலும் பேசிய அவர், “தேர்தலுக்கு முன் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது, பாஜக கட்சியினர் மத்தியில், இது ஹிட்-விக்கெட் (hit-wicket) என்று ஒருதரப்பும் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டது என்று மற்றொரு தரப்பும் நம்பியது. இந்த நடவடிக்கை எதிர்க் கட்சிகளை ஒன்றிணைத்தது, ‘ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது’ என்ற முழக்கத்தை எழுப்ப வழிவகுத்தது.”
கேஜ்ரிவாலின் கைது பாஜகவின் அதீத நம்பிக்கையின் விளைவு என்று அவர் கருதுகிறார். “ராமன் கோவில் பிரதிஷ்டை விழாவின் மூலம் தேர்தலில் பலன் கிடைக்கும் என பாஜக எதிர்பார்த்தது. ஆனால் அது கிடைக்கவில்லை. மகாராட்டிராவில் கட்சிகள் உடைந்ததால் பலர் பாஜகவில் இருந்து விலகிச் சென்றனர்,’’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தின்போது, ராகுல் காந்தியை தாக்கும் வகையில் பேசிய பிரதமர் மோடி, அதானி மற்றும் அம்பானி பற்றிக் குறிப்பிட்டார். இதுகுறித்துப் பேசிய நூருதீன் “பாஜக-வுக்கு நெருக்கமானவர்கள் என நம்பப்படும் நபர்களை பிரச்சாரத்தில் குறிப்பிடுகிறார்.
இதெல்லாம் நம்பும்படி இல்லை,” என்கிறார்.
நாட்டின் தேசிய வளங்களில் சிறுபான்மை யினர், குறிப்பாக முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியது உண்மை கிடையாது,” மன்மோகன் சிங்கின் பேச்சை முன்வைத்து பாஜக தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பகிரும் கருத்தும், சூழலும் தவறானது அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூறுகையில், மேற்கத்திய ஊடகங்களில் இந்தியா மற்றும் இந்திய அரசியல் மற்றும் இந்திய ஜனநாயகம் குறித்து வரும் செய்திகள், பாஜக தலைவர்களின் பேச்சுகள், நிஜ்ஜார் படுகொலை தொடர்பான செய்திகளைப் பார்க்கும்போது உலக நாடுகளும் ஆளும் கட்சி மற்றும் பிரதமரின் மதவாதப்பேச்சுக்கள் பெரும் அதிர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெரிகிறது.”
வெறுக்கத்தக்க பேச்சு
“செய்திகள், கட்டுரைகள் அல்லது வேறு எந்தப் பதிவாக இருந்தாலும், இந்தியாவில் ஜனநாயகம் பலவீனமடைந்து வருவதாகவும், சிறுபான்மையினரின் நிலை சரியில்லை என்றும் மேற்கத்திய ஊடகங்களில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. சீனாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் உலக அரசியலில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்,” என்கிறார்.
“இந்தியா மதச்சார்பின்மையில் இருந்து விலகிச் செல்கிறது என்ற கவலை நீண்ட காலமாக இருக்கிறது, தேர்தல் பரப்புரை பேச்சுகள் இந்தியாவின் போக்கைப் பற்றிய கவலையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. ‘வெறுக்கத்தக்க பேச்சு’ என்றே சொல்லத் தோன்றுகிறது.”