தமிழர் தலைவர் விழாவைத் தொடங்கி வைத்து சிறப்புரை
சென்னை,ஏப்.26- “சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு (1925 – 2024) தொடக்க விழா முதல் நிகழ்வு நேற்று (25.4.2024) மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.
அரிய செய்திகளை அறியும் நிகழ்வு!
“நாளை நான் சாகும்போது எனக்கு உணர்வு இருந்தால் நிம்மதியாகத்தான் சாவேனே ஒழிய, ஒரு குறையும் இருப்பதாக நான் கருத மாட்டேன். எதையும் நான் குறையாய் விட்டுவிட்டுப் போகிறேன் என்று அதிருப்திப்பட மாட்டேன். நான் ஜீவனோடிருப்பதால் அதற்கு ஒரு வேலை இருந்து தானே ஆக வேண்டும்! ஏதாவது ஒரு வேலை இல்லாமல் உயிர் வாழ முடியாதே என்று கருதி ஏதோ ஒரு வேலை என்பதில் – இதை அதாவது, ஜாதி மதமென்ற கொடுமை ஒழிவதும், கடவுள் என்ற மூடநம்பிக்கை ஒழிவதும் மனித சமூகத்திற்கு நன்மையானது என்கின்ற கருத்தில் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்ற கருதுகிறேனோ அந்த வேலையைச் செய்கிறேன். இந்த உணர்ச்சி வலுத்துத்தான் அதே முக்கியமானதும், முடிவானதுமான வேலையென்று இறங்கிவிட்டேன்.
இந்த எண்ணத்தின் மீது ‘சுயமரியாதை இயக்கம்’ ஆரம்பித்தேன்” – தந்தை பெரியார் (1937, “குடிஅரசு”). உலக வரலாற்றிலேயே பிறவி பேதத்தை ஒழித்து, மனிதத்தைக் காக்கவும், மனிதர்களை மனிதர்களாக மதிக்க செய்யவும் தோற்றுவிக்கப்பட்ட ஒரு இயக்கம் உண்டென்றால் அது சுயமரியாதை இயக்கம் என்ற நூற்றாண்டு கண்ட, தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. சுயமரியாதை இயக்கம் ஏன் தோற்றுவிக்கப்பட்டது? யாருக்காக தோற்றுவிக்கப்பட்டது?, இம்மண்ணில் அவ்வியக்கம் செய்த மாற்றங்கள் என்ன? ரத்தம் சிந்தாத அமைதிப் புரட்சியை அந்த இயக்கம் எப்படி சாதித்தது போன்ற அரிய செய்திகளை அறிந்து கொள்ளும் நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்தது.
மே 2 முதல் மே 7 வரை 100 கூட்டங்கள்:
2024 -ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை உலகம் முழுவதும் பல்வேறு வகைகளில் கொண் டாடுவது என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்க மே 2 முதல் 7 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 100 தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது என்ற செய்தியுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
“I teach Self – Respect” – சுயமரியாதை பாடம் எடுக்கும் ஆசிரியர்:
நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வரவேற்று கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன் வரவேற்புரை ஆற்றினார். அவரது உரையில் : சுயமரியாதை இயக்கம் ஏன் தோற்று விக்கப்பட்டது என்ற செய்தியுடன் தொடங்கி, சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது என்று அனைவரும் ஆராயக் கூடிய நோக்கினை விளக்கி, தந்தை பெரியார் பிறவியிலேயே சுயமரியாதை உணர்வுடையவர் என்பதை எடுத்துரைத்து, காங்கிரசில் சுயமரியாதை உணர்வோடு சமூகநீதிக்காக குரல் எழுப்பி அதை காங்கிரசில் ஏற்றுக்கொள்ளாத போது பெரியார் துணிச்சலோடு வெளியே வந்ததை குறிப்பிட்டார். ஒருவேளை காங்கிரசு தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்தால் வரலாறு வேறு மாதிரி திரும்பி இருக்கும் என்றார். சுயமரியாதை என்ற சொல் எவ்வளவு வலுவானது, ஆழமானது, தமிழ்நாட்டில் எத்தனை சட்டங்கள் வருவதற்கு காரணமாக இந்த இயக்கத்தின் தீர்மானங்கள் அமைந் திருக்கிறது என்பதை ஆதாரத்துடன் விளக்கினார். சுயமரியாதை என்ற சொல் உலகளவில் எப்படி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் கொண்டு சேர்க்கப்பட்டி ருக்கிறது என்பதை விவரிக்கும் நேரத்தில், 2017 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டில் கொலோன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநாட்டின் பெயரே பெரியார் சுயமரியாதை இயக்க மாநாடு என்றார்.
மேலும், அமெரிக்காவில் புகழ்பெற்ற நூலகத்திற்கு ஆசிரியர் அவர்கள் செல்ல இருந்த போது அந்த நூலகரிடம் ஆசிரியரின் வருகையைப் பற்றி விவரித்து அவரின் பெயர் ‘ஆசிரியர் கி. வீரமணி’ என்று கூறியதும், அந்த நூலகர் அது என்ன ‘ஆசிரியர்’ என்று கேட்டபோது, அவருக்குப் புரியும் வகையில் ஆங்கிலத்தில் டீச்சர் என்ற பொருளுடனும் அதே நேரத்தில் பத்திரிக்கை ஆசிரியராக இருப்பவர்களையும் ஆசிரியர் என்று தான் அழைப்பார்கள் என்பதையும் தோழர்கள் விளக்கியதைக் கூறி, ஆசிரியர் அவர்கள் அந்த நூலகத்திற்குச் சென்ற போது “இந்த வயதில் நீங்கள் ஆசிரியர் பணி செய்கிறீர்களா? ஆச்சரியமாக இருக்கிறது! என்ன பாடம் நடத்துவீர்கள்?” என்று அவர் கேட்டதும் சற்றும் தாமதிக்காமல் “I teach Self – Respect” நான் சுயமரியாதைப் பாடம் எடுப்பேன் என்ற ஆசிரியரின் ஆழமான பதிலை அவர் நினைவுப்படுத்தி, வருகை புரிந்த அனைவரையும் வரவேற்க அரங்கம் நிறைந்த கைத்தட்டலுடன் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா நிகழ்ச்சி தொடங்கியது.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நோக்கவுரை
கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் நூற்றாண்டு விழாவின் நோக்க உரை ஆற்றினார் .
அவரது உரையில் :
அனைவருக்கும் மகிழ்ச்சியான பொன்னாள்!
அனைவருக்கும் மகிழ்ச்சியான பொன்னாள் இந்நாள். இன்று உணர்ச்சிப் பெருக்கில் பதிவு செய்து இந்த சொற்கள் போகிற போக்கில் நாம் சொல்லக்கூடியவை அல்ல; மாறாக நம் வரலாற்றைப் புரட்டிப் போட்ட புரட்சிக்குரிய சொற்கள் என்று தனது உரையைத் தொடங்கினார். அடுத்த தலைமுறையும் பார்த்து இப்படி ஒரு நிகழ்வில் எனது தாத்தா பங்கேற்றார் என்று பார்த்து வியக்கும் ஒரு நிகழ்ச்சி தான் இது என்றார். சுயமரியாதை இயக்கம் எந்த நாளில் தோற்றுவிக்கப்பட்டது என்று மிகப்பெரிய ஆராய்ச்சியே நடக்கிறது. காங்கிரசில் இருந்த போதே குடிஅரசு இதழை மே 2 அன்று தந்தை பெரியார் தொடங்கினார். அதுவே சுயமரியாதை இயக்க தொடக்க நாள் என்றும், 1925 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காஞ்சிபுரத்தில், காங்கிரசை விட்டு பெரியார் வெளியேறிய நாள் தான் தொடக்க நாள் என்றும் இரு வேறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. ஆனால் 1925 ஆம் ஆண்டு தான் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது என்றார்.
பெரியார் இயற்கையின் புதல்வர்
அய்யா தனது சிறு வயதில் பள்ளி பருவத்தில் தனது ஓதுவார் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்த போது அந்த குவளையை ஒதுவாரின் மகள் தீட்டு கழித்து எடுத்துச் சென்றபோது அதைப்பற்றி அவர் சிந்திந்த நாள் சுயமரியாதை இயக்க தொடக்க நாளா? தனது வீட்டிற்கு வரும் பாகவதர்களை கேள்விகளால் பெரியார் துளைத்த நாளா? என்று பல வகையில் அய்யாவின் சுயமரியாதை உணர்வுக்கான சான்றுகளை எடுத்துரைத்தார். காங்கிரசில் இருந்த போதே சுயமரியாதை உணர்வோடு இராமாயணம், மகாபாரதத்தை கொளுத்த வேண்டும் என்றார், பெரியார். காங்கிரசில் இருந்துக்கொண்டே வைக்கம் போராட்டம் , சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் என்ற சுயமரியாதை உணர்வுமிக்க போராட்டங்களை நடத்தினார். இவற்றையெல்லாம் நாம் சீர்தூக்கிப் பார்க்கும் போது “பெரியார் இயற்கையின் புதல்வர்” என்ற வ.ராவின் கூற்றுதான் நினைவுக்கு வருகிறது என்றார். இயல்பிலேயே சுயமரியாதை உணர்வு கொண்டவர் தந்தை பெரியார் என்றார். உலகத்தில் உள்ள எல்லா அகராதிகளையும் புரட்டித் தேடினாலும் சுயமரியாதை என்று சொல்லுக்கு நிகராக வேறு ஒரு சொல்லை நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்றார் பெரியார்.
சுயமரியாதை இயக்கத்தின் தீர்மானங்களே பின் நாளில் சட்டங்கள் :
சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டபோது சுயமரியாதை அற்றவர்களால் தோற்றுவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு சற்றும் தாமதிக்காமல் சன்மார்க்க இயக்கம் என்றால் துன்மார்க்கம் கொண்டவர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்று அர்த்தமா? சோசலிச இயக்கம் என்றால், சோசலிசத்தின் மீது எதிர்ப்பு கொண்டவர்கள் தோற்றுவித்த இயக்கமா? என்ற பெரியாரின் விடையை எடுத்துரைத்தார். ஜாதி ஒழிப்பு, பெண் உரிமை,பொருளாதார ஏற்றத் தாழ்வு ஒழிப்பு, என்ற பல அர்த்தங்கள் சுயமரியாதை என்ற சொல்லில் இருக்கிறது என்றார். உலகத்திலேயே இப்படி ஒரு இயக்கம், அது நடத்திய மாநாடுகள், தீர்மானங்கள், போராட்டங்கள், மக்களை சென்றடைந்த விதம், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களே பின் நாளில் சட்டங்கள் ஆகின்ற வியப்பு ஆகிய பெருமைகள் வேறு எந்த இயக்கத்திற்கும் இல்லை என்றார். குறிப்பாக சுயமரியாதை திருமணச் சட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றம், ஹிந்திக்கு இடமில்லை என்ற இருமொழிக் கொள்கை, 69% சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு, ஒன்றிய அரசிலும் இட ஒதுக்கீடு ஆகியவை சட்டமாவதற்கான அடிப்படை சுயமரியாதை இயக்கத்தின் தீர்மானங்கள் தான் என்று எடுத்துரைத்தார்.
ஸநாதனமும் – சுயமரியாதையும்:
சுயமரியாதை இயக்கம் இந்த மண்ணில் செய்த மாற்றங்களையும், காந்தியாரையே குட்டிக்கரணம் போட வைத்தது என்று பெரியாரின் மொழியிலேயே எடுத்துரைத்தார். இன்றைய அரசியல் சூழலும், தேர்தல் காலகட்டமும் எப்படி இருக்கிறது என்றால் ஸநாதனத்திற்கும் சுயமரியாதைக்குமான போராட்டமாகத் தான் இருக்கிறது என்றார். இந்த போராட்டம் இன்று தொடங்கியது அல்ல, பெரியார் காலத்திலேயே தொடங்கியது என்றும், அய்யாவிற்கு சிருங்கேரி சங்கராச்சாரியார் தங்களது மடத்திற்கு வர அழைப்பு விடுத்த போது, ஸநாதனம் கெடாமலும் என்ற வார்த்தையை பயன்படுத்தியதை எடுத்துரைத்து, பெரியார் தான் வருவதற்கு வாய்ப்பில்லை காரணம் சங்கராச்சாரியார் ஸநாதனத்திற்கு எவ்வளவு ஆதரவானவர் என்பதை அய்யா விளக்கிய போக்கையும் ஆதாரங்களுடன் விளக்கினார்.
1931 ஆம் ஆண்டு லண்டனில் இருந்து வெளிவந்த ஆர்பிஏ பத்திரிக்கை இந்திய வரலாற்றில் சுயமரியாதை இயக்கம் எப்படிப்பட்ட மாற்றங்களை செய்திருக்கிறது என்பதையும், அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி இந்த மண்ணில் அவை செய்த புரட்சியை லண்டன் பத்திரிகையே வெளியிட்டது என்ற அறிய செய்தியை ஆதாரத்துடனும் எடுத்துரைத்தார். மேலும் 1977 ஆம் ஆண்டு அசோக் மேத்தா அவர்கள், தென்னகத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது பார்ப்பனர்கள் நடத்திய அந்த கொடுமைகளுக்கு எல்லாம் சுயமரியாதை இயக்கம் எப்படிப்பட்ட எதிர்வினையை ஆற்றியது என்றும், இந்த இயக்கத்தால் வட இந்தியாவிலும் மாற்றங்கள் காண முடிகிறது என்று அவர் எடுத்துரைத்ததையும் விளக்கினார். தந்தை பெரியார் அவர்கள் எந்த உணர்வோடு இந்த இயக்கத்தை ஏற்படுத்தினார் என்றும் , அவரை மட்டுமே நம்பி இந்த பெரும் பொறுப்பை அய்யா எப்படி சுமந்தார் என்பதையும் , இந்த இயக்கம் எப்படிப்பட்ட இயக்கமாக இருக்க வேண்டும் என்று அய்யா கூறிய வார்த்தைகளையும், அந்த உறுதி தான் இந்த இயக்கத்திற்கான வலுவாக அமைந்தது என்பதையும் எடுத்துரைத்தார்.
வரலாற்றில் இடம் பெறுகின்ற இயக்கம் அல்ல இது; வரலாற்றை உருவாக்குகின்ற இயக்கம் சுயமரியாதை இயக்கம்!
இந்தியாவில் தோன்றிய பல தலைவர்களுக்கு பின்னால் அவர்கள் ஆரம்பித்த இயக்கங்கள் நடைமுறையில் இல்லாமல் போனது. ஆனால் தந்தை பெரியார் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கம் இருக்கிறது; வலுவோடு இருக்கிறது; முன்பை விட இளைஞர்களை அதிகம் கொண்ட பாசறையாக இருக்கிறது என்ற சிறப்பு பெரியார் தோற்றுவித்த இந்த இயக்கத்திற்கு மட்டும்தான் உண்டு என்றார். இந்த இயக்கம் மனிதனுக்கு தேவையான பிராணவாயு போன்றது என்றும், பதவிகள் தன் வீட்டு வாசற்கதவை தட்டிய போதும் எல்லா மனிதர்களும் சறுக்கும் இடமான அந்த இடத்திலும் பெரியார் சறுக்காமல் இருந்ததின் விளைவுதான் இன்றைக்கு நம்முடைய இந்த நல்ல நிலைக்கு காரணம் என்றார். இப்படிப்பட்ட ஒரு தலைவரை, ஓர் இயக்கத்தை வேறு எந்த கட்சியோடும், இயக்கத்தோடும் ஒப்பிட முடியாது என்றார். வரலாற்றில் இடம் பெறுகின்ற இயக்கம் அல்ல இது; வரலாற்றை உருவாக்குகின்ற இயக்கம் சுயமரியாதை இயக்கம் என்று நிறைவு செய்தார்.
இது வெறும் விழா அல்ல ; விழாமல் மக்களை காக்கக்கூடிய ஒரு உபாயம்; ஒரு வாய்ப்பு !
வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வில் தனது 10 வயது முதல் 80 ஆண்டு காலம் ஒரே இயக்கம்; ஒரே தலைவர்; ஒரே கொடி என்று வாழ்ந்து வரும் ஒப்பற்ற தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவுரை ஆற்றினார் . ஆசிரியரின் உரையில் : இது ஒரு பேறு பெற்ற கூட்டம்; வாய்ப்பு பெற்ற கூட்டம் என்றார். இந்த கடுமையான வெப்பச் சூழலிலும் தமிழ்நாட்டில் ஆறு நாட்களில் 100 கூட்டங்கள் என்றால் ஏன் இப்படி ஓய்வில்லாமல் உழைக்கிறீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள் . நமது அறிவாசான் தந்தை பெரியார் 94 வயது நிரம்பிய நிலையிலும், மூத்திர சட்டியோடு பயணித்த போதும் ஓய்வு தற்கொலைக்கு சமம் என்றார். நான் தற்கொலை செய்து கொள்ள ஒருபோதும் விரும்புவதில்லை என்று அரங்கம் நிறைந்த கைத்தட்டலோடு ஆசிரியர் பதிவு செய்தார்.
தொடர்ந்து, சுயமரியாதை இயக்கம் தொடங்கிய வரலாற்றையும், சுயமரியாதை இயக்கம் இந்த மண்ணில் ஏற்படுத்திய மாற்றத்தையும், சுயமரியாதை இயக்கம் இல்லாவிட்டால் என்ன நேர்ந்திருக்கும் என்பதையும் வரலாற்றுச் சான்றுகளுடன் எடுத்துரைத்தார் . சுயமரியாதை இயக்க வெள்ளி விழா, பவள விழா அனைத்தையும் கண்டு இன்று சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையும் காணக்கூடிய பெரும் பேறு அவர் பெற்றிருப்பதாகவும் , இந்த நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வது இந்த கூட்டத்தில் இருப்பவர்கள் பெற்றிருக்கும் பேறு என்றும் விளக்கினார்.
இது வெறும் விழா அல்ல விழாமல் மக்களை காக்கக்கூடிய ஒரு உபாயம்; ஒரு வாய்ப்பு என்றார். உலக அளவில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரே இயக்கம், சுயமரியாதை இயக்கம் தான் என்றால் அது மிகையல்ல என்றும், சுயமரியாதை இயக்கத்தின் பார்வை மானுடப் பார்வை; மிகப்பெரிய அறிவு ப்புரட்சி , அமைதிப் புரட்சியை இந்த இயக்கம் சாதித்துக் காட்டியிருக்கிறது என்றும், அந்த புரட்சிக்கு தந்தை பெரியார் ஆயுதத்தை தூக்கவில்லை: அறிவாயுதத்தை தூக்கினார் என்றார். 2024 ஆம் ஆண்டு முழுவதும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை இதே உணர்வோடும், கொள்கை பற்றோடும் உலகம் முழுவதும் கொண்டாடுவதற்கான உற்சாகத்தை உத்வேகத்தை ஆசிரியர் அளித்தார்.
இறுதியில், வரவேற்புரை தொடங்கி நிறைவுரை வரை கூறப்பட்ட கருத்துக்களை தொகுத்தும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோரின் சொற்களை மேற்கோள் காட்டியும், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தி , வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறி கழகத்தின் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி நன்றியுரை கூறினார்.
கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்வில் இணைப்புரை வழங்கினார்.
கழகப் தோழர்களும், பல்துறைப் பெரு மக்களும் பெரும் அளவில் கூடி இந்த வரலாற்று நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்த்தனர்.
புத்தக வெளியீடு
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மற்றும் ‘குடிஅரசு’ நூற்றாண் டையொட்டியும், உலக புத்தக நாளையொட்டியும் 50 விழுக்காடு தள்ளுபடி விலையில் இயக்க வெளியீடுகள் அளிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
குடிஅரசு தொகுப்பு புத்தகங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து சைதை மு.ந.மதியழகன் பெற்றுக்கொண்டார்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மற்றும் ‘குடிஅரசு’ நூற்றாண் டையொட்டி, குடிஅரசு தொகுப்புகள், சுயமரியாதை இயக்கம்குறித்த புத்தகங்களை நேற்று மேடையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட்டார். ரூ.540 நன்கொடை மதிப்புள்ள புத்தகங்கள் ரூ.400க்கு வழங்கப்பட்டன. ஏராளமானவர்கள் புத்தகங்களை வரிசையில் சென்று பெற்றுக்கொண்டனர்.
வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, தே.செ.கோபால், தாம்பரம் ப.முத்தையன், பேராசிரியர் சுவாமிநாதன் தேவதாஸ், பொறியாளர் த.கு.திவாகரன், இரா.தமிழ்செல்வன், தென்மாறன், தகடூர் தமிழ்செல்வி, பழ.சேரலாதன், தங்க.தனலட்சுமி, ஆ.வெங்கடேசன், செல்வ.மீனாட்சிசுந்தரம், மு.ர.மாணிக்கம், சீர்த்தி, செ.பெ.தொண்டறம், தொழிலாளரணி திருச்சி சேகர்உள்பட ஏராளமானோர் புத்தகங்களைத் தமிழர் தலைவர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
கழக வெளியுறவு செயலாளர் கோ. கருணாநிதி வழக்குரைஞர் சு.குமாரதேவன், புலவர் பா.வீரமணி, விழிகள் வேணுகோபால், கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் பேராசிரியர் பெ.ஜெகதீசன், துணைப்பொதுச்செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, சி.வெற்றிசெல்வி, மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, இறைவி, பூவை செல்வி, பசும்பொன், த.மரகதமணி, மு.பவானி, தொண்டறம்,
தலைமைக்கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ், தென்சென்னை, வடசென்னை, தாம்பரம், திருவொற்றியூர், ஆவடி உள்ளிட்ட கழக மாவட்டங்களின் பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
மாவட்ட பொறுப்பாளர்கள் தாம்பரம் ப.முத்தையன், தென்சென்னை இரா.வில்வநாதன், செ.ரபார்த்தசாரதி, திருவொற்றியூர் வெ.மு.மோகன், ஆவடி கார்வேந்தன், க.இளவரசன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், புரசை சு.அன்புசெல்வன், தாம்பரம் சு.மோகன்ராஜ், விடுதலைநகர் ஜெயராமன், அயன்புரம் துரைராஜ், பெரம்பூர் கோபாலகிருட்டினன், கோ.வீ.ராகவன், மயிலை டி.ஆர்.சேதுராமன், இளைஞரணி மு.சண்முகப்ரியன், நா.பார்த்திபன், மணித்துரை, உடுமலை வடிவேல், ஆவடி தமிழ்மணி, ஊரப்பாக்கம் வேமண்ணா, க.தமிழினியன், பெ.செல்வராஜ், செம்பியம் கி.இராமலிங்கம், பூவிருந்தவல்லி பெரியார் மாணாக்கன், அவலூர்ப்பேட்டை ஏழுமலை, தாம்பரம் மா.குணசேகரன், கொடுங்கையூர் கோ.தங்கமணி, தொழிலாளர் கழகம் கூடுவஞ்சேரி மா.ராசு மற்றும் பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.