♦ சொன்னதை செய்யாத ஓர் ஆட்சி உண்டென்றால், அது பி.ஜே.பி. ஒன்றிய அரசுதான்!
♦ சமூகநீதி என்ற சொல் பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் உண்டா?
♦இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர் சின்னத்திற்கு எதிரே உள்ள பொத்தானை அழுத்துங்கள் – பச்சை விளக்கு எரியும் – உங்கள் வீட்டிலும், நாட்டிலும் விளக்கெரியும்!
வெல்லப் போவது இந்தியா கூட்டணி ஆட்சிதான், வெற்றி நமதே!
தஞ்சை தேர்தல் நிறைவுப் பிரச்சாரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் நம்பிக்கை உரை!
தஞ்சை, ஏப்.18 ‘‘சொன்னதை செய்யாத அரசு ஒன்றிய பி.ஜே.பி. அரசு – செய்த அரசு ‘திராவிட மாடல்’ அரசு! சமூகநீதி என்ற சொல்லே இடம்பெறாதது பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை! வெல்லப் போவது இந்தியா கூட்டணி தான் – இந்தியா கூட்டணி வேட்பாளரின் சின்னத்திற்கு எதிரே உள்ள பொத்தானை அழுத்துங்கள் – பச்சை விளக்கு எரியும்; உங்கள் வீட்டிலும் விளக்கு எரியும், நாட் டிலும் விளக்கு எரியும்” என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தஞ்சையில் தேர்தல் பரப்புரையின் நிறைவு கூட்டம்
நேற்று (17.4.2024) மாலை 4 மணியளவில் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ச.முரசொலி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார். அவரது சிறப்புரை வருமாறு:
வேட்பாளர் ச.முரசொலியை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் தேர்தல் பரப்புரை
திராவிட இயக்க வரலாற்றில் எப்பொழுதுமே வெற்றிக் களத்தை உறுதி செய்துகொண்டிருக்கக் கூடிய கொள்கை நஞ்சையான இந்தத் தஞ்சை மண்ணிலே இந்தியாவிற்கே எடுத்துக்காட்டான நம்முடைய ஒப்பற்ற நாயகர், திராவிட நாயகர் – முதலமைச்சர் என்பதைவிட, மக்கள் மத்தியில், மக்கள் தலைவராக, இன்றைக்கு எல்லோராலும் நேசிக்கப்படக் கூடிய மிக முக்கியமான தலைவராக – இந்தியாவிற்கே வழிகாட்டியது மட்டுமல்லாமல், இந்தியா கூட்டணி உருவாவதற்கே கருவாக அமைந்திருக்கக்கூடிய நம்முடைய தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட வேட்பாளர் நம்முடைய அருமை சகோதரர், திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் சார்பாக, இந்தியா கூட்டணியின் சார்பாக நிறுத்தப்பட்டு இருக்கின்ற வெற்றி வேட்பாளர் ச.முரசொலி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும், ஏன்? என்பதை விளக்குவதற்கான இந்தப் பரப்புரைக் கூட்டத்திற்குத் தலைமையேற்று இருக்கக்கூடிய கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அவர்களே,
வரவேற்புரையாற்றிய மாவட்டச் செயலாளர் தோழர் அ.அருணகிரி அவர்களே,
இவ்வளவு சிறப்பான ஏற்பாடுகளை கண்துஞ்சாது ஒவ்வொரு நிமிடமும் சுறுசுறுப்போடு மிக வேகமாக இயங்கி, இந்த சாதனைப் பட்டியலிலே இதோ உங்கள் மகுடத்தில் ஒரு சிறப்பு முத்து – இதோ இந்தத் தஞ்சை யிலிருந்து அளிக்கிறோம் என்ற பெருமைக்குரிய அள விற்கு, உழைப்புமிகு, ஆற்றல்மிகு தி.மு.க. மாவட்டச் செயலாளர் அன்புச் சகோதரர் வழக்குரைஞர் துரைசந்திரசேகரன் எம்.எல்.ஏ., அவர்களே,
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்ற, பாடுபடுகின்ற தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் அன்புச் சகோதரர் உழைப்புமிகு டி.கே.ஜி.நீலமேகம் அவர்களே, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களே,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் நீலமேகம் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற் குழு உறுப்பினர் பெருமைக்குரிய தோழர் செல்வம் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநகர செயலாள ரும், வணக்கத்திற்குரிய மேயருமான அருமைச் சகோதரர் சன்.இராமநாதன் அவர்களே,
வணக்கத்திற்குரிய துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்களே, காங்கிரஸ் மாநகர மாவட்டத் தலைவர் கொள்கை யாளர் அன்பிற்குரிய சகோதரர் ராஜேந்திரன் அவர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களே,
திராவிடர் கழகக் காப்பாளர் அய்யனார் அவர்களே, மன்னை மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் அவர்களே, மன்னை மாவட்ட செயலாளர் கணேசன் அவர்களே, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பா ளர்கள் தோழர்கள் இரா.ஜெயக்குமார் அவர்களே, இரா.குணசேகரன் அவர்களே, மற்றும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற, அரும்பாடுபடக் கூடிய கூட்டணியினுடைய பெருமைமிகு பொறுப்பாளர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா ளர் ஜெய்சங்கர் அவர்களே,
முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் வேல்விழி அவர்களே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் உத்ராபதி அவர்களே, மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர் பா.சேகர் அவர்களே, தொகுதிப் பொறுப்பாளர் தோழர் சங்கர் அவர்களே,
இங்கே வெள்ளம்போல் திரண்டிருக்கக் கூடிய தாய்மார்களே, பெரியோர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கே தொடங்கினாலும்,
தஞ்சையில் தான் நிறைவு பெறும்!
வெய்யில் கொளுத்திக் கொண்டிருக்கிறது – இந்த வெப்பத்தில்தான் நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை, இங்கே சொன்னதுபோல, ஒரு நாள் இடைவெளிகூட இல்லாமல், கடந்த 2 ஆம் தேதி தொடங்கி, தஞ்சை யில்தான் எப்பொழுதும் முடிப்போம் என்கிற அந்த வழமையை மாற்றாமல், நிறைவு கூட்டத்தை இங்கேயே நடத்துகின்றோம்.
நம்முடைய மேயர் அவர்கள் உரையாற்றும்பொழுது சொன்னார், ‘‘அவருக்கு ரொம்ப ராசி உண்டு” என்று. அது உங்கள் ராசி அல்ல; அது மக்கள் ராசி.
பதவிக் கூட்டணியல்ல –
மக்களுக்கான உதவிக் கூட்டணி
மக்கள் எப்பொழுதும் திராவிட இயக்கத்தின் பக்கமே இருக்கிறார்கள்; இந்தியா கூட்டணியின் பக்கமே இருக் கிறார்கள். ஆகவே, அதனை உறுதி செய்துகொண்டே இருக்கிறார்கள். அதற்கு அடிப்படை மற்ற அமைப்புகளில் இருப்பது போல, இது பதவிக் கூட்டணியல்ல – இது மக்களுக்கான உதவிக் கூட்டணி என்ற பெருமையோடு, திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி, கொள்கைக் கூட்டணியாக உருவாகியிருக்கிறது.
அதன் காரணமாகத்தான் மிகப்பெரிய வெற்றியை நாம் பெறப் போகிறோம்; அதற்குமுன் இங்கே வந்து அதிக நேரம் பேசவேண்டிய அவசியமில்லை. நீங்கள் முடிவோடு வந்திருக்கின்றீர்கள். இங்கே இருக்கின்றீர்கள் மட்டுமல்ல, தஞ்சை தொகுதியில் இருக்கின்ற அத்துணை வாக்காளர்களும், இந்தியா காப்பாற்றப்படவேண்டும் என்று யார் யார் நினைக்கிறார்களோ, ஜனநாயகம் காப்பாற்றவேண்டும் என்று யார் யார் நினைக்கிறார்களோ, எதேச்சதிகாரம் வீழ்த்தப்படவேண்டும் என்று யார் யார் நினைக்கிறார்களோ, சமூகநீதிக் கொடி தலைதாழாமல் பறக்கவேண்டும் என்று யார் யார் நினைக்கின்றார்களோ, அனைவருக்கும் அனைத்தும் என்ற தத்துவத்தை யார் யார் ஏற்றுக்கொள்கிறார்களோ, அதேபோலத்தான், இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டு, இவர்களால்தான் இது முடியும் என்பதற்காகத்தான் இங்கே வந்திருக் கிறார்கள்.
நம்முடைய வேட்பாளர் வருவதே
கிராமத்திலிருந்துதான்!
உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. நம்முடைய தி.மு.க. தலைவர் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தவுடன், வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. இங்கே நம்முடைய மாவட்டச் செயலாளர், வேட்பாளர் முர சொலியைப்பற்றி சொல்லும்பொழுது, எல்லா கிராமங் களுக்கும் சென்றுவிட்டுத்தான் வந்திருக்கின்றார் என்றார். எல்லா கிராமங்களுக்கும் அவர் சென்றுவிட்டு வந்தது புதுமையல்ல; அவர் வருவதே கிராமத்தி லிருந்துதான் – எல்லோருக்காகவும் வருகிறார்.
ஆகவேதான், கிராமத்தைப் புறக்கணிக்காது இந்த இயக்கம்; கிராமத்தை உயர்த்தும்; கிராமம்தான் நம்முடைய உள்ளம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஒவ்வொரு ஊரையும் சென்று பார்த்த இயக்கம். அதிலும் தஞ்சை மாவட்டத்தில் சொல்லவேண்டிய அவசியமே கிடையாது.
முரசொலி என்று வந்தால்,
ஒரே ஒரு முரசொலிதான்!
அப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களுக்குச் சென்று வந்திருக்கின்றோம் நாங்கள். அங்கேயெல்லாம் ராமசாமி, குப்புசாமி, நடராஜன் என்று அந்தப் பெயரில் இரண்டு பேர் இருப்பார்கள். இங்கேயே பார்த்தீர்களேயானால், நீலமேகம் என்று இரண்டு பேர் இருக்கிறார்கள். ஆனால், முரசொலி என்று வந்தால், ஒரே ஒரு ‘முரசொலி’தான்; எப்படி ஒரே ஒரு ஏடு, ஆட்சிகளையே மாற்றியிருக்கிறது. அந்த முரசொலி பாளையங்கோட்டையைக் கண்டு பயப்படாது.
கலைஞரின் மூத்த பிள்ளை ‘முரசொலி’ ஏடு!
அந்த முரசொலி ஏடு என்பது சாதாரணமான ஏடல்ல. அந்த முரசொலியைப்பற்றி கலைஞர் என்ன சொல்வார் என்றால், ‘‘என்னுடைய மூத்த பிள்ளை” என்று.
மற்ற பிள்ளைகள் எல்லாம் இளைய பிள்ளைகள்தான்.
எனவே, தஞ்சைத் தொகுதிக்கு கலைஞரின் மூத்த பிள்ளையை, மக்களின் செல்ல பிள்ளையான நம்மு டைய முதலமைச்சர் அவர்கள், உங்கள் சார்பாக டில்லிக்கு அனுப்பவேண்டும் என்று வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார். இதைவிட ஒரு பெரிய வாய்ப்பு யாருக்கு இருக்க முடியும்?
ஓர் ஆட்சியை மாற்றுவதற்கான அறப்போர் போர் வாளாகும்.
1965 ஆம் ஆண்டு ராணுவச் சட்டம் பாய்ந்தது. கலைஞர் அவர்களை பாளையங்கோட்டை சிறையில் வைத்தார்கள். அவர் பாளையங்கோட்டைக்குச் சென்ற தால்தான், அடுத்ததாக சென்னை கோட்டையில் ஆட்சி வந்தது என்று சொல்லக்கூடிய அளவிற்கு அண்ணா ஆட்சிக்கு வந்தார்.
அப்படிப்பட்ட ஒர் அற்புதமான வரலாற்றை உள்ளடக்கியது.
தமிழ்நாட்டில் இரண்டு அணிகள்தான்!
இப்பொழுது தமிழ்நாட்டில் இரண்டு அணிகள் மிக முக்கியம். மற்ற அணிகளைப்பற்றியெல்லாம் நாம் கவலைப்படவேண்டிய அவசியமில்லை.
நம்முடைய கொள்கைக் கூட்டணி. வேட்பாளர்கள் எல்லாம் ஒருபக்கத்தில் பெருமைக்குரியவர்கள். ஆனால், வேட்பாளர்களைப்பற்றி நினைப்பதைவிட, இந்தத் தேர்தலுடைய முக்கியத்துவம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென்னாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழு வதும் கவனிக்கவேண்டிய மிக முக்கியமான ஓர் அடிப் படை என்னவென்றால், இரண்டு வேட்பாளர்களுக்கு மத்தியில் அல்ல இப்போது நடைபெறக்கூடிய தேர்தல்; இரண்டு தத்துவங்களுக்கு இடையில் – இரண்டு கொள்கைகளுக்கு இடையில் லட்சியப் போராட்டமாக, ஓர் அறப்போராக, ஒரு யுத்தமாக நடந்துகொண் டிருக்கின்றது. அதைத்தான் நம்முடைய தி.மு.க. தலைவர் மட்டும் சொல்லவில்லை; காங்கிரஸ் பேரியக்கத்தின் இளந்தலைவர் ராகுல்காந்தி அவர்கள், ‘‘இரண்டு தத்துவங்களுக்கிடையே போர்” என்று சொன்னார்.
இரண்டு தலைவர்களைக் கண்டால்
மோடிக்கு சிம்மசொப்பனம்!
பிரதமர் மோடி அவர்களுக்கு இரண்டு தலைவர் களைக் கண்டால்தான் சிம்மசொப்பனம். இரண்டு துடிப்பு மிகுந்த அந்தக் கொள்கையாளர்களைப் பார்த் தால்தான் அவருக்கு அண்ட பிண்டமெல்லாம் கலக்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது. அதில் மிக முக்கிய மானவர்கள் இருவர்தான். ஒருவர், இந்தியா கூட்டணி உருவாவதற்கு அடித்தளமாக அமைந்த நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.
இன்னொருவர், இந்தியா கூட்டணியின் நம்பிக்கை நட்சத்திரம் என்று இங்கே சொன்னார்களே, அந்த நம்பிக்கை நட்சத்திரமான இளந்தலைவர் ராகுல்காந்தி அவர்கள்.
ஒன்று, பெரியார் தத்துவம்;
இன்னொன்று ஆர்.எஸ்.எஸ். தத்துவம்!
தமிழ்நாட்டிற்குத் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த ராகுல் காந்தி அவர்கள், நெல்லையிலும், கோவையிலும் நடைபெற்ற கூட்டங்களில் உரையாற்றினார்.
அவர் உரையாற்றும்பொழுது, ‘‘இப்பொழுது இரண்டு தத்துவங்களுக்கிடையேதான் போராட்டம்” என்றார்.
அந்த இரண்டு தத்துவங்கள் என்னவென்றால், ஒன்று, பெரியார் தத்துவம்; இன்னொன்று ஆர்.எஸ்.எஸ். தத்துவம் என்றார்.
பெரியாருக்கும் – ஆர்.எஸ்.எஸ்.சுக்கும்தான் இப் பொழுது போட்டி.
இன்றைக்கு எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டுமா? அல்லது இன்னாருக்கு இதுதான் என்பது வேண்டுமா?
மக்கள் குரலை மதிக்கவேண்டும் என்று சொல்லு கின்ற தத்துவம் வெற்றி பெறவேண்டுமா?
அதற்கு எதிராக, மாறாக இருக்கக்கூடிய எதேச் சதிகாரம் வெற்றி பெறவேண்டுமா? என்பனவற்றுக்கே நாம் போராடுகின்றோம்.
6 மணிவரையில்தான் உரையாற்றவேண்டும் என்று சொன்னாலும், 10 நிமிடத்திற்கு முன்பாகவே என் உரையை முடித்துவிடுவேன். காரணம் என்னவென்றால், தேர்தல் ஆணையம்.
என்னுடைய கடிகாரமும், உங்களுடைய கடிகாரமும் – தேர்தல் ஆணைய கடிகாரத்துடன் ஒத்துப்போக வேண்டும். தேர்தல் ஆணையம் இப்பொழுது எப்படி நடந்துகொண்டிருக்கிறது என்பதுபற்றி உங்களுக் கெல்லாம் தெளிவாகத் தெரியும்.
மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டான ‘திராவிட மாடல்’ ஆட்சி!
ஏராளமான செய்திகளை இங்கே உரையாற்றியவர்கள் சொன்னார்கள். அளித்த வாக்குறுதியை, ‘‘சொன்னதை செய்துவிட்டு, வாக்குக் கேட்பதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி”யாகும். உங்களைப் பார்த்து, ‘‘இன்னின்ன சாதனைகளை கடந்த மூன்றாண்டுகளில் செய்திருக் கின்றோம்; இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன, மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு. இன் னும் இரண்டாண்டுகள் இருந்தாலும்கூட, அதற்குள் அவ்வளவு வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கின் றோம்; மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றோம்.
தி.மு.க. – காங்கிரஸ் கட்சிகளின்
தேர்தல் அறிக்கைகள்!
திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை என்பது மிகச் சிறப்பு வாய்ந்ததாகும். சொன்னவற்றை செய்துவிட்டு, வாக்குக் கேட்கக்கூடிய தேர்தல் அறிக்கை.
அதேபோல, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை யும் சிறப்பு வாய்ந்ததாகும். தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் தனித்தனியே தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இரண்டு தத்துவங்களுக்காக, தி.மு.க. – காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை எடுத்துச்சொல்ல கடமைப்பட்டு இருக்கின்றேன்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில், செய்த சாதனைகளைச் சொல்லியிருக்கிறார்கள். இங்கே மகளிர் எல்லாம் இவ்வளவு மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கிறார்கள். எப்படி?
என்னுடைய உடல் ஒத்துழைக்கவில்லை என்றாலும், என்னுடைய உள்ளம் உறுதியாக இருக்கிறது!
நாங்கள் கடந்த 2 ஆம் தேதி தொடங்கி, இன்றுவரை யில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை நடத்தி வருகின்றோம். என்னுடைய உடல் ஒத்துழைக்கவில்லை என்றாலும், என்னுடைய உள்ளம் உறுதியாக இருக்கிறது.
எனக்கு 91 வயது, 91 வயது என்று சொன்னார்கள். உங்களையெல்லாம் பார்க்கும்பொழுது உற்சாக வெள்ளத்தில் என்னுடைய வயது 19 தான்.
எந்த விலையையும் கொடுப்பதற்கு எல்லோரும் தயாராக இருக்கவேண்டும்!
ஏனென்றால், மக்களுடைய உற்சாகத்தைப் பார்க்கும் பொழுது, மக்களுடைய உறுதியைப் பார்க்கும்பொழுது எல்லாவற்றையும்விட, நமக்கு முன் உள்ள ஆபத்தான ஓர் ஆட்சி – அதை அகற்றியே தீரவேண்டும் என்பதற் காக எந்த விலையையும் கொடுப்பதற்கு எல்லோரும் தயாராக இருக்கவேண்டும்.
ஏனென்றால், அந்த ஆட்சி அகற்றப்படவில்லை யானால், இதுதான் இந்திய நாட்டின் கடைசித் தேர்தலாக இருக்கும். காரணம், இப்பொழுது ஜனநாயகம் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது. அந்தத் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடும் நோயோடு போராடிக் கொண்டிருக்கின்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுகின்ற ஒரு மருத்துவர் குழுதான் இந்தியா கூட்டணி. இன்றைக்கு அந்த மருத்துவர் குழு ஒன்றுதான் தெளிவாக இருக்கிறது.
சொன்னதை செய்யாத அணிக்குப் பெயர்தான் மோடி அணி;
அதுதான் பா.ஜ.க. அணி!
எனவே, இது வெறும் ஓட்டுக் கேட்கும் நிகழ்ச்சி யல்ல; வெறும் தேர்தலுக்காகக் கூடியிருக்கின்ற கூட்டமல்ல; லட்சியங்கள் வெற்றி பெறவேண்டும்; அது நமக்காக அல்ல; இனி வரக்கூடிய தலை முறையினருக்குக் கல்விக் கொடுக்கவேண்டும் அல்லவா! ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வர்கள் உத்தியோகத்திற்குப் போகவேண்டாமா? சமூகநீதி வெற்றி பெறவேண்டும் என்று சொல் லக்கூடிய அளவிற்கு, சொன்னவற்றைச் செய்து, செய்வதையே சொல்லி, இன்னுங்கேட்டால், அந்த வாக்குறுதிகள் ஒரு பக்கத்தில் இருந்தாலும், சொன் னதைத்தான் மற்றவர்கள் செய்திருக்கிறார்கள்; சொன்னதையும் செய்யாத அணிக்குப் பெயர்தான் மோடி அணி; அதுதான் பா.ஜ.க. அணி.
மோடியினுடைய உத்தரவாதம் என்ன என்று எல்லோருக்கும் தெரியும்; மேடையில் இருப்பவர் கள் அவற்றையெல்லாம் சொன்னார்கள். அதையே திரும்பவும் சொல்கிறேன் என்று நினைக்கவேண்டாம்.
ஓராண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம்.
ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம். அதற்கு நீங்கள் வங்கிக் கணக்கைத் தொடங்குங்கள் என்று சொன்னார்.
கிராமத்தில் உள்ள தாய்மார்கள், மற்றவர்கள் எல்லாம் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை, சுருக்குப் பையில் சேமித்த பணத்தை, அரிசிப் பானையில் சேமித்து வைத்தப் பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு போய், வங்கிக் கணக்கைத் தொடங்கினார்கள்.
என்னாயிற்று?
15 லட்சம் ரூபாய் அந்த வங்கிக் கணக்கில் விழுந்ததா? என்றால், இல்லை. வெறும் 15 ரூபாயாவது விழுந்ததா? என்றால், அதுவும் இல்லை.
பதில் சொல்ல முடியாத அளவிற்குக் கேள்விகளை அடுக்கிக் கொண்டிருக்கிறார் நம்முடைய முதலமைச்சர்!
நம்மூரில் ஒரு பழமொழியைச் சொல்வார்கள், ‘‘நரி இடம் போனால் என்ன? வலம் போனால் என்ன? மேலே விழுந்து பிறண்டாமல் இருந்தால் சரி” என்பது போல, பா.ஜ.க. நரியினுடைய ஆட்சியின் விளைவு என்னாயிற்று என்று சொன்னால், நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு நாளும் பிரதமர் மோடி அவர்கள் பதில் சொல்ல முடியாத அளவிற்குக் கேள்விகளை அடுக்கிக் கொண்டிருக்கிறார்.
தொடங்கிய வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் வரவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், அந்த வங்கிக் கணக்கில் ‘‘மினிமம் பேலன்ஸ்” இல்லை என்று அபராதம் போட்டார்கள். ஏழைத் தாய்மார்களிடமிருந்து, ஏழை, எளியவர்களிடமிருந்து, கிராம மக்களிடமிருந்து அபராத மாகப் பிடுங்கிய தொகை எவ்வளவு தெரியுமா?
21 ஆயிரம் கோடி ரூபாய்.
இதுதான் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி; இதுதான் மோடி ஆட்சி.
இந்தியாவிற்கே சமூகநீதியைக் கற்றுக்கொடுக்கின்ற இயக்கம்!
தி.மு.க. தேர்தல் அறிக்கையில், 44 ஆவது பக்கத்தில் சமூகநீதி என்ற தலைப்பில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்தியாவிற்கே சமூகநீதியைக் கற்றுக்கொடுக்கின்ற இயக்கம் இருக்கிறது என்றால், அது நம்முடைய திராவிடர் இயக்கம், திராவிட ஆட்சிதான்.
கலைஞர் அவர்கள் மறைந்தபொழுது, சில அரசியல் பைத்தியக்காரர்கள் சொன்னார்கள், ‘‘தமிழ்நாட்டில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது; சுலபமாக நாம் போய் அமர்ந்துவிடலாம்” என்று.
அப்பொழுது நாங்கள் சொன்னோம், ‘‘தமிழ்நாடு வெற்றிடமல்ல; இனிமேல்தான் அது கற்றிடம் என்று மற்றவர்கள் உணரக்கூடிய அளவிற்கு, உலகமே கற்றிடத்திற்குப் போகப் போகிறது” என்று.
நேரமின்மையால் அதற்கு ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். தமிழ்நாட்டு திராவிட மாடல் அரசின் ‘‘காலைச் சிற்றுண்டி திட்டம்”.
திராவிட மாடலைத் தவிர, வேறு எங்கேயாவது காலைச் சிற்றுண்டித் திட்டம் உண்டா?
‘‘குஜராத் மாடல், அந்த மாடல், இந்த மாடல்” என்று சொல்கிறார்களே, திராவிட மாடலைத் தவிர, வேறு எங்கேயாவது காலைச் சிற்றுண்டித் திட்டம் உண்டா?
ஒவ்வொரு தேர்தல் பரப்புரைக் கூட்டங்களிலும் நான் பார்க்கிறேன்; இரவு 10 மணிவரை தாய்மார்கள் அமர்ந்திருக்கிறார்கள். இதற்கு முன்பு நடந்த தேர்தல் களில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்களில் அது போன்று கிடையாது.
கடந்த 50 ஆண்டுகளாக கூட்டங்களில் உரையாற்றும் பொழுது, ‘‘தாய்மார்களே!” என்று சொல்வோம்; ஆனால், அங்கே தாய்மார்கள் இருக்கமாட்டார்கள்; ஆனால், இப்பொழுது அப்படியில்லை; தாய்மார்கள் சிரித்துக் கொண்டு மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். பொன் நகையைவிட, இன்றைக்கு அவர்களின் முகத்தில் புன்னகைதான் அதிகமாக இருக்கக்கூடிய வாய்ப்பைப் பார்க்கிறோம்.
காரணம் என்ன?
அவர்கள் கவலையை மறந்து இருக்கிறார்கள்.
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லியிருக்கிறார்கள்?
இப்பொழுது புதிதாக ‘மோடியின் கேரண்டீ’ என்று சொல்கிறார்கள். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லியிருக்கிறார்கள்?
பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்திருக்கின்றவர்கள் எல்லாம் பதில் சொல்லவேண்டும்.
நம்முடைய மாணவச் செல்வங்களின் உயிர்களைப் பலிவாங்கிய ‘நீட்’ நுழைவுத் தேர்விற்கு எதிராக தமிழ் நாடு சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவந்து, இரண்டு முறை நிறைவேற்றி,
இங்கே ஆளுநர் என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் குறுக்கே உட்கார்ந்தார். சட்டம் அவருடைய காதைப் பிடித்துத் திருகி சொன்னவுடன், வேறு வழியில்லாமல், குடியரசுத் தலைவருக்கு அனுப் பினார்.
இப்பொழுது, குடியரசுத் தலைவர் மாளிகையில் கிடப்பில் கிடக்கிறது. நம்முடைய கடமையை நாம் செய்துவிட்டோம்.
ஒன்றியத்தில் அமையப் போவது இந்தியா கூட்டணியினுடைய ஆட்சிதான்!
நீங்கள் எல்லாம் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்; ஜூன் 5 ஆம் தேதிக்குப் பிறகு ஒன்றியத்தில் அமையப் போவது இந்தியா கூட்டணியினுடைய ஆட்சிதான். இது எழுதப்பட்ட வரலாற்று முடிவு – தவிர்க்க முடியாதது.
அப்பொழுது நீட் தேர்விற்கு விதிவிலக்கு வரும்.
எதையும் ஆதாரத்தோடு சொல்லி பழக்கப்பட்ட வர்கள் நாங்கள். அந்த அடிப்படையில், தி.மு.க. அறிக் கையில், ‘‘நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு வாங்குவோம்” என்று சொல்லியிருக்கிறார்கள்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘‘எந்தெந்த மாநிலம் கல்வித் துறையில் எதை விரும்புகிறதோ அதைத்தான் செய்வோம். நீட் தேர்விற்கு விலக்கு கேட்கின்ற மாநிலங்களுக்கு, விலக்குக் கொடுப்போம்; ஜாதி வாரிக் கணக்கெடுப்பு எடுத்து சமூகநீதியை கொண்டு வருவோம்” என்று சொல்லியிருக்கிறார்கள்.
பா.ஜ.க. கூட்டணியில் சில கட்சிகள் அச்சுறுத்தலால் இணைந்திருக்கின்றன!
பா.ஜ.க.வில் அல்லது மோடியுடன் தாசானதாசர்கள் அல்லது சில கட்சிகள் அந்தக் கூட்டணியில் பல காரணங்களால் அச்சுறுத்தலால் இணைந்திருக்கிறார்கள். ஏனென்றால், மோடி கைகளில் இருக்கின்ற சக்தி வாய்ந்த திரிசூலத்தைப்பற்றி உங்களுக்கெல்லாம் தெரியும். அந் தத் திரிசூலத்தின் ஒருமுனை சி.பி.அய்.; இரண்டாவது முனை வருமான வரித் துறை; மூன்றாவது முனை அமலாக்கத் துறை. இதை வைத்துத்தான், இந்த ஆயுதத்தை வைத்துத்தான் மற்றவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அந்த ஆயுதங்கள் அவருக்கு மட்டும் சொந்தமல்ல; இந்த அரசாங்கம் நீடிக்கக் கூடிய அரசாங்கம் அல்ல என்று தெளிவாகத் தெரிந்தபொழுது, பல செய்திகள் வெளிவருகின்றன.
உண்மை எப்பொழுதும் சிறியதாக இருக்கும் திருக்குறள் போன்று; பொய் எப்பொழுதும் பெரிதாகத்தான் இருக்கும்!
தி.மு.க. தேர்தல் அறிக்கையும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் சிறிய புத்தகமாகவும், மென் மையான புத்தகமாகவும் இருக்கும். ஆனால், பா.ஜ.க. தேர்தல் அறிக்கை மொத்தமாகவும், பெரி தாகவும் இருக்கும். ஏனென்றால், உண்மை எப்பொழுதும் சிறியதாக இருக்கும் திருக்குறள் போன்று; பொய் எப்பொழுதும் பெரிதாகத்தான் இருக்கும்.
ஏனென்றால், பொய்யைத் தவிர மோடி அவர்களுக்கு மெய்யைச் சொல்லி பழக்கமே கிடையாது. உலக மகா பொய்யர் என்று சொல்லக் கூடிய அளவிற்கு ஒரு பரிசு கொடுக்கவேண்டும் என்றால், அது மோடி அவர்களுக்குத்தான் பொருந்தும்.
அதை இன்றைக்கு எல்லா மக்களும் உணர்ந் திருக்கிறார்கள். 2014 ஆம் ஆண்டுமுதல் கடந்த 10 ஆண்டுகால மோடியினுடைய கோரத்தாண் டவம் நடந்தது என்று சொல்லக்கூடிய அளவில் தான் இந்திய நாட்டின் நிலை உள்ளது.
ஓர் இடத்தில்கூட சமூகநீதி என்ற வார்த்தையைக் கண்டுபிடிக்க முடியாது!
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில், எங்கேயாவது ஓர் இடத்தில்கூட சமூகநீதி என்ற வார்த்தையைக் கண்டுபிடிக்க முடியாது. இந்த அறிக்கையில் சமூகநீதி இருக்கிறது என்று யாராவது சொல்லுங்கள், அவருக்கு என் கையில் என்ன கிடைக்கிறதோ, அதைக் கொடுக் கிறேன். அதற்காக லட்சம் ரூபாய் கொடுக்கிறேன் என்று சொல்ல முடியாது; ஏனென்றால், நாங்கள் எல்லாம் சாதாரணமானவர்கள்.
ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில், சமூகநீதி யைக் குழிதோண்டி புதைக்கின்ற அணியா? அல்லது சமூகநீதியை இந்தியா முழுவதும் கொண்டு போய், ‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்று சொல்லக்கூடிய நம்முடைய திராவிட அணியா? என்பதுதான் வருகின்ற 19 ஆம் தேதியன்று நாம் அளிக்கப் போகின்ற வாக்கின் அடையாளம்.
ஆகவேதான் தோழர்களே, இது வெறும் ஒரு ஓட்டுக்குரல் என்று நினைக்காதீர்கள்.
தேர்தல் பரப்புரைக்காக நான்கு சிறிய புத்தகங்கள்!
குறுகிய நேரத்தில் எல்லாவற்றையும் சொல்ல முடியாது என்பதற்காகத்தான்; நான்கு சிறிய புத்தகங் களை தேர்தல் பரப்புரைக்காகக் கொண்டு வந்திருக் கின்றோம். இதுவரை லட்சக்கணக்கான பிரதிகளை மக்களிடம் பரப்பி இருக்கின்றோம்.
1. 2024 இல் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை (தி.மு.க. அணியை) ஆதரிக்கவேண்டும் ஏன்?
‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளை எல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கின்றோம் இந்தப் புத்தகத்தில்.
அதற்கடுத்து,
2. மக்கள் விரோத பா.ஜ.க. அரசை விரட்டியடிப்போம்!
அதற்கடுத்து, பிரதமர் மோடியைப்பற்றி நிறைய தகவல்கள் வெளிவரவில்லை. அப்படிப்பட்ட செய்தி களையெல்லாம் 16 பக்கத்தில் ஒரு புத்தகம் வெளியிட் டுள்ளோம்.
3.பிரதமர் மோடிக்கு கருஞ்சட்டைக்காரனின் திறந்த மடல்! என்ற ஒரு சிறிய நூல்தான். அதை பேருந்தில் ஏறி அமர்ந்து, இறங்குவதற்கும் படித்து முடித்துவிடலாம்.
4. பா.ஜ.க.வின் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு ஊழல்கள் தேர்தல் பத்திர முறைகேடுகள் என்ற புத்தகத்தில் அவர்களுடைய ஊழல்களையெல்லாம் பட்டியலிட்டு வெளியிட்டு இருக்கின்றோம்.
ஊழலை ஒழிப்பதற்காகவே நான் ‘அவதாரம்’ எடுத்திருக்கிறேன் என்று சொல்கிறார் அல்லவா, மோடி -அவருடைய உலக மகா ஊழல் பட்டியலை வெளியிட் டுள்ள நூல்தான் இது. இதை நாங்கள் சொல்லவில்லை; நாங்கள் அதை வெளிக்கொணரவில்லை. உச்சநீதி மன்றம், ஒன்றிய பா.ஜ.க. அரசின் காதைப் பிடித்துத் திருகி வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் தேர்தல், ஜூன் ஒன்றாம் தேதிவரை நடைபெறுகின்ற தேர்தல், பத்திரமாக நடக்கவேண்டும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், மோடி அவர்கள் என்ன நினைக்கிறார் என்றால், தேர்தலையே பத்திரத்தை வைத்து நடத்தலாம் என்று.
இவர்கள்தான் ஊழலை ஒழிக்கக் கூடிய உத்தமர்கள்!
நட்டத்தில் இயங்குகின்ற கம்பெனிகள்கூட நன் கொடை கொடுக்கிறார்கள். இல்லாத கம்பெனிகளிடம் வசூல் செய்கிறார்கள். இல்லாத கம்பெனிகளிடம் இருந்து எப்படி நன்கொடை வருகிறது? இவர்கள்தான் ஊழலை ஒழிக்கக் கூடிய உத்தமர்கள். பா.ஜ.க. மட்டும் வாங்கி யிருக்கின்ற நன்கொடை 6 ஆயிரத்து 610 கோடி ரூபாய். இது ஒரு பகுதிதான். இன்னும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆகவே, அவர்கள் ஊழலை ஒழிக்கிறேன் என்று சொல்வது இருக்கிறதே, அதைவிட கேலிக்கூத்து வேறு கிடையவே கிடையாது.
பா.ஜ.க. கொடுத்துள்ள விளம்பரத்திற்கு நாங்கள் சொல்லும் பதில்!
இன்றைய நாளேடுகளில் பா.ஜ.க. விளம்பரம் கொடுத் திருக்கிறது. அவர்கள் விளம்பரத்தில் உள்ளதற்கு மட்டு மல்ல மற்றும் பலவற்றுக்கும் நாங்களும் பதில் சொல் கிறோம்.
ஏனென்றால், எதிர்க்கட்சியாக இருக்கின்றவர்களின் வாதத்தையும் எடுத்துச் சொல்லி, அதற்கு வேண்டிய பதிலைச் சொல்வதுதான் எங்களுடைய வேலை.
பா.ஜ.க.வின் விளம்பரத்தில்,
‘‘மூன்று ஆண்டுக்கே மூச்சு முட்டுதே!” என்ற ஒரு தலைப்பு.
ஏம்பா, எழுதிக் கொடுத்திருக்கிறார்களே அவர்களி டம் கேட்டிருக்கவேண்டாமா? இந்தத் தலைப்பை நியாயமாக யார் போடவேண்டும்? நாங்கள் போட வேண்டிய தலைப்பாகும்.
‘‘மூன்று ஆண்டுகளிலே ஸ்டாலினுடைய ஆட்சி – திராவிட இயக்கத்தினுடைய ஆட்சியைக் கண்டு உங்கள் மூச்சு முட்டுதே, மூச்சு நின்றுவிடப் போகிறது” என்று சொல்லவேண்டியவர்கள் நாங்கள், நீங்கள் அல்ல!
ஏனென்றால் மகிழ்ச்சியில் இருக்கின்றவர்களுக்கு மூச்சு முட்டாது. மூச்சு தாராளமாக வரும்.
மூச்சு என்பதை நம்முடைய கலைஞர் எப்படி கவிதையாகப் பாடினார் என்று உங்களுக்கெல்லாம் தெரியாது.
நாங்கள் படித்ததை எப்பொழுதும் மறப்பதில்லை; மறப்பதுபோன்று எதையும் படிப்பதில்லை!
எங்களைப் போன்ற பழைய ஆள்களுக்குத்தான் தெரியும். நாங்கள் படித்ததை எப்பொழுதும் மறப்ப தில்லை; மறப்பதுபோன்று எதையும் படிப்பதில்லை.
நம்முடைய வேட்பாளர் முரசொலிக்கும் இது தெரியவேண்டும்.
‘முரசொலி’ ஏட்டின் முகப்புரையில் கலைஞர் அவர்கள் ஒரு வார்த்தையைப் போட்டிருப்பார்; தலை யங்கத்திற்குமேல் அந்த வார்த்தை இருக்கும். அது ‘முரசொலி’ ஏட்டினுடைய முகப்புரையாகும்.
கொள்கைக்காக களமாடும் இயக்கம் என்பதற்கு அடையாளம்!
கொள்கையில் எவ்வளவு தீவிரமாக இருக்கும் இயக்கம் இது! வெறும் பதவிக்காக இருக்கும் இயக்கமல்ல இது! கொள்கைக்காக களமாடும் இயக்கம் என்பதற்கு அடையாளம் கலைஞர் எழுதுகிறார்; நம்முடைய நூற்றாண்டு விழா நாயகர் சொல்லுகிறார் – நம்முடைய திராவிட மாடல் ஆட்சியை இந்தியாவில் வலுப்படுத்திய கலைஞர் அவர்கள், ஒப்பற்ற முதலமைச்சர், முத்தமிழறிஞர், தமிழ்மொழியை செம்மொழி என்றாக்கிய கலைஞர் அவர்கள் எழுதுகிறார், பாருங்கள்.
‘‘காதலிலே, கவிதையிலே
களம்போகும் பேச்சு”
காதலாக இருந்தாலும், கவிதையாக இருந் தாலும் களத்தைப்பற்றித்தான் பேசவேண்டும்; போராட்டத்தைக் களத்தைப்பற்றித்தான் பேச வேண்டும் என்கிறார்.
‘‘காதலிலே, கவிதையிலே
களம்போகும் பேச்சு
கணவனுக்கும், மனைவிக்கும்
திராவிடமே மூச்சு!”
ஆகவே, இந்த மூச்சு, எங்கள் மூச்சு ஒருபோதும் நிற்காது. நாங்கள் மூச்சுவிட்டால், நீங்கள் கிட்டே இருக்கமாட்டீர்கள். இந்த மூச்சே இந்த ஆட்சிக்கு மிகப்பெரிய அளவிற்குப் பாதுகாவலனாக வரக் கூடிய வாய்ப்புகள் நிறைய உண்டு.
இப்பொழுது பா.ஜ.க.விற்கு 400 இடங்கள் என்று யாராவது சொன்னால், அவர்கள் ‘‘420 பேர்வழி’’ என்று அர்த்தம்!
ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன், இதற்குமுன் வரை பா.ஜ.க. வருகின்ற தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறும் என்று சொன்னார்கள். ஆனால், இப்பொழுது 400 இடங்கள் என்று யாராவது சொன்னால், அவர் ‘‘420 பேர்வழி” என்று அர்த்தம்.
வழக்குரைஞர்களுக்கெல்லாம் தெரியும்; ‘‘சிறீமான் 420” என்றால் என்ன அர்த்தம் என்று சொன்னால், ஏமாற்றுப் பேர்வழி என்று அர்த்தம் கிரிமினல் லாவில்.
பிரதமர் மோடி, தன் வாழ்நாளில் சொன்ன முதல் உண்மை!
ஏனென்றால், நாளுக்கு நாள் மோடியினுடைய சுருதி அடங்கி வருகிறது. இதுவரை உண்மையே பேசாத நம்முடைய மோடி அவர்கள், தமிழ்நாட்டிற்கு ஒன்ப தாவது முறையாக நெல்லைக்கு வந்தபொழுது, ‘‘இளை ஞர்களே, இந்த ஒருமுறையாவது எங்களுக்கு ஓட்டுப் போடக்கூடாதா?” என்று பேசிவிட்டு, கடைசியாகச் சொல்கிறார், ‘‘இதுதான் எனது தேர்தல் பிரச்சாரத்தில், தமிழ்நாட்டிற்கு நான் வரக்கூடிய கடைசிப் பயணம்” என்றார்.
இதுதான் அவர் வாழ்நாளில் சொன்ன முதல் உண்மையாகும்.
ஆம்! இதுதான் தேர்தலைப் பொருத்து அவருடைய தமிழ்நாட்டின் கடைசிப் பயணம். இனிமேல் அவர் தமிழ் நாட்டிற்கு வரவேண்டிய அவசியமே இல்லை. தமிழ் நாட்டில் அவர்கள் என்ன செய்தாலும், அவர்களால் பெற்ற பெற முடியாது.
ஏன் ராகுல் காந்திமீது அவர்களுக்கு அவ்வளவு கோபம்? நாடாளுமன்றத்திற்கே அவர் வரக்கூடாது என்று அற்ப வழக்கைப் பெரிதாக்கி, அவருக்கு மூன்றாண்டு காலம் தண்டனைக் கொடுத்தது கீழமை நீதிமன்றம். அதற்குப் பிறகு மேல்முறையீடு செய்வதற் கான வாய்ப்புகள் இருந்தும், உடனடியாக அவர் வசித்த வீட்டை 24 மணிநேரத்தில் காலி செய்யவேண்டும் என்று சொன்னார்கள்.
இதுபோன்று ஜனநாயகத்திற்கு விரோதமாக இருக்கக்கூடிய ஒரு கொடுமையான ஒன்றிய ஆட்சி, உலகத்தில் வேறு எங்கும் கிடையாது.
நூறாண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டை உங்கள் வயப்படுத்த முடியாது. அது பெரியார் மண், சமூகநீதி மண்!
ராகுல் காந்திமீது ஏன் அவர்களுக்கு அவ்வளவு கோபம் என்றால், நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது ராகுல் காந்தி அவர்கள் ஓர் உண்மையைச் சொன்னார். பிரதமர் மோடி அமர்ந்திருக்கும்பொழுது.
‘‘மோடி ஜி, நீங்கள் எத்தனை முறை தமிழ்நாட்டிற்குச் சென்றாலும், நூறாண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டை உங்கள் வயப்படுத்த முடியாது. அது பெரியார் மண், சமூகநீதி மண்” என்றார்.
அந்த வெறுப்பில்தான் அவர்மீது வழக்குத் தொடுக் கப்பட்டு, மூன்றாண்டு தண்டனை கொடுக்கப்பட்டது. நல்வாய்ப்பாக உச்சநீதிமன்றம் அதற்குத் தடை விதித்து, தண்டனை செல்லாது என்று தீர்ப்பளித்தது.
ஆகவேதான் நண்பர்களே நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள்; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 40-க்கும் 40 நமது என்று சொன்னால் அதில் வித்தியாசம், வேறுபாடு கிடையாது.
தமிழ்நாட்டில் மட்டும் நாம் வெற்றி பெற்றுவிட்டால் போதுமா? என்று நீங்கள் எல்லாம் நினைக்கலாம்.
காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை நடத்தாதது ஏன்?
ஆகவேதான், காஷ்மீரில் மட்டும் சட்டமன்றத் தேர்தலை நடத்த அவர்கள் தயாராக இல்லை. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்று சொல்கின்றவர்கள், அங்கே சட்டமன்றத் தேர்தலையும் நடத்தியிருக்கவேண்டுமா, இல்லையா? அய்ந்து நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மட்டும்தான் தேர்தல் நடக்கிறது காஷ்மீரில்.
மணிப்பூர் நிகழ்வை உலகமே கண்டித்தது!
வடகிழக்கு மாநிலங்களுக்குப் பிரதமர் மோடி போகவே மாட்டார். இதைச் சொல்வதற்குத் தாய்மார்கள் மன்னிக்கவேண்டும்; சகோதரிகள் மன்னிக்கவேண்டும்; மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டு, பழங்குடியின சமுதாய பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, இரண்டு கிலோ மீட்டர் தெருத் தெருவாக இழுத்துச் செல்லப்பட்டனர். இதைவிடக் கேவலமான, அசிங்கப்படக் கூடிய, அருவருப்பு அடையக்கூடிய அரசியல் வேறு உண்டா? அதைப் பார்த்து உலகமே கண்டனக் குரல்களை எழுப்பியது. ஆனாலும், இந்த நாட்டின் பிரதமர்மோடி, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாரா? இல்லையே!
வித்தைக்காரர் மோடி. அந்த வித்தைக்காரரான மோடி என்ன சொன்னார் என்றால், ‘‘140 கோடி மக்களும் என் குடும்பம்” என்றார். நன்றாக டிராமா செய்பவர், வித்தை காட்டுபவர் அவர்.
ஜூன் 5 ஆம் தேதிக்குப் பிறகு இந்தியா கூட்டணியிலிருந்துதான் பிரதமர் வரப்போகிறார்
‘‘140 கோடி மக்களும் என் குடும்பம்” என்று வெறுப்பு அரசியல் நடத்தாமல், பொறுப்பு அரசியல் நடத்தக்கூடிய ஒரு பிரமதர் வரப் போகிறார்; அந்தப் பிரதமர் ஜூன் 5 ஆம் தேதிக்குப் பிறகு இந்தியா கூட்டணியிலிருந்துதான் வரப்போகிறார்.
தமிழ்நாட்டில் வரலாறு காணா மழை, புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மக்களும் அடைந்த பாதிப்புகளை சொல்லி மாளாது.
தமிழ்நாட்டிற்கு நிவாரண நிதியாக ஒரு பைசாகூட தரவில்லை ஒன்றிய பா.ஜ.க. அரசு!
மழை, புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி களை பார்வையிடுவதற்காக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தமிழ்நாட்டிற்கு வந்து போனார் கள். ஒன்றிய அரசின் நிவாரணக் குழு இரண்டு வந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, அறிக்கை யையும் அளித்தது.
ஆனாலும், இதுவரையில் ஒரு பைசாவாவது நிவாரண நிதியாகக் கொடுத்திருக்கிறதா ஒன்றிய பா.ஜ.க. அரசு?
எங்களுடைய பணம் ஜி.எஸ்.டி. என்ற பெயரில் ஒரு ரூபாயை நாங்கள் ஒன்றிய அரசுக்குக் கொடுத்தால், அவர்கள் திரும்பக் கொடுப்பது வெறும் 29 காசுதான்.
இதுதான் சுயமரியாதை இயக்கத்தின் பின்னணி!
நிதி நெருக்கடியிலும் எங்கள் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ‘திராவிட மாடல்’ அரசு மகளிருக்கு மாதம்தோறும் வழங்கும் 1000 ரூபாயை, பிச்சைக்காசு என்றார்கள். இதுபோன்று யாரும் சொல்லி விடக் கூடாது என்பதற்காகத்தான், அந்தத் திட்டத்திற்கு என்ன பெயர் வைத்தார் தெரியுமா, நம்முடைய முதலமைச்சர் அவர்கள்; மகளிர் பெறுவது சலுகையல்ல; அதிகாரிகளுக்கே தெரியவேண்டும் என்பதற்காகத்தான் ‘‘மகளிர் உரிமைத் தொகை” என்று. இதுதான் சுயமரியாதை இயக்கத்தின் பின்னணி! அவர்களின் சுயமரியாதை காப்பாற்றப்படுகிறது.
குஜராத்தில் பா.ஜ.க.வின் நிலை என்ன தெரியுமா?
அவர்களுடைய குஜராத்தில் என்ன நிலை தெரி யுமா? எந்த ஜாதியை அவர்கள் உயர்வாக மதித்துச் சொன்னார்களோ, அந்த ஜாதிதான் இன்றைக்கு அவரைக் கட்டிப் பிடித்திருக்கிறது.
ஒன்றிய அமைச்சராக இருக்கக்கூடிய பட்டிதார் இனத்தைச் சேர்ந்த ஒருவரை நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தியது பா.ஜ.க. அவர் என்ன செய்தார் தெரியுமா?
அங்கே இருக்கக்கூடிய இராஜபுத்திரர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களைப்பற்றி கேவலமாகப் பேசியுள்ளார். ‘‘வௌளைக்காரர்களுக்கு இவர்கள்தான் பெண் கொடுத் தார்கள்” என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
அதைக் கேட்டு இந்தியாவிலிருக்கும் அத்தனை பேரும் கொதித்து எழுந்தார்கள். இவர்கள் புலிவாலைப் பிடித்த நாயர் போன்று ஆனார்கள். முதலமைச்சர் அவர்களும், அதற்காக மன்னிப்பு கேட்டார்.
முதலமைச்சரின் மன்னிப்பு எங்களுக்கு வேண்டாம்; அந்த வேட்பாளரை மாற்றுங்கள் என்று சொல்கிறார்கள் இராஜபுத்திர சமுகத்தினர்.
எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளரை மாற்றக்கூடாது என்று பட்டிதார் சமுதாயத்தினர் சொல் கிறார்கள். அப்படி மாற்றினீர்கள் என்றால், நாங்கள் உங்களுக்கு வாக்களிக்கமாட்டோம் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
‘குஜராத் மாடல்’ என்பது இப்போது ஆறிப்போன மாடலாகிவிட்டது!
எனவே, குஜராத் மாடல் என்பது இப்போது ஆறிப்போன மாடலாக இருக்கிறதே தவிர, அது நிறைவேறுகிற மாடலாக இல்லை.
குஜராத்தில் இந்த நிலை; மகாராட்டிரத்தில் இந்தியா கூட்டணி சிறப்பாக அமைந்திருக்கிறது.
ஆகவே நண்பர்களே, நன்றாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள், மீண்டும் ஒன்றியத்தில் மோடியின் ஆட்சி என்பது கிடையாது.
எஸ்.ஒய்.குரேஷியின் டுவிட்டர் பதிவு!
தேர்தல் ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற எஸ்.ஒய்.குரேஷி அவர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே அவருடைய டுவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
‘‘முதலில் 400 என்று சொல்வார்கள்; பிறகு அது 300 ஆகும்; 200 ஆகும்” என்று சொல்லிவிட்டு, ‘‘நான் அல்போன்சா மாம்பழத்தைச் சொன்னேன்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
பா.ஜ.க. 150 இடங்களில்கூட வெற்றி பெறாது; எதிர்க்கட்சியாகதான் இருக்கும்!
நேற்று (16.4.2024) ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் அவர்களுடைய கணவர் பர்கலா பிரபாகர் அவர்கள், சென்னையில் உரையாற்றும்போது, ‘‘வரு கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 150 இடங் களில்கூட வெற்றி பெறாது; எதிர்க்கட்சியாகதான் இருக்கும்” என்று சொல்லியிருக்கிறார்.
மோடி வித்தை என்பது என்னவென்று உங்களுக் கெல்லாம் தெரியும். கீரிக்கும் – பாம்புக்கும் சண்டை விடப் போகிறேன், சண்டை விடப் போகிறேன் என்று சொல்லி, கடைசிவரையில் ‘‘கீரியையும், பாம்பையும் சண்டைக்கு விடாமல், நாளைக்கு விடுகிறேன்” என்று சொல்வார்கள்.
இதுதான் இன்றைய பா.ஜ.க.வின் நிலை. ஆகவே, வாக்காளப் பெருமக்களே, நீங்கள் செய்யவேண்டிய வேலை என்னவென்றால், நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தி.மு.க. கூட்டணி அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியின் சார்பாக நிறுத்தப்பட்டு இருக்கின்ற நம்முடைய வெற்றி வேட்பாளர் ச.முரசொலி அவர்களின் பெயர் வாக்குப் பெட்டியில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. வாக்குப் பெட்டி இயந்திரத்தில் இரண்டாவது, வெற்றி பெற்றவுடன் நாம்தான் முதலில் இருப்போம் என்பதில் சந்தேகமேயில்லை.
பச்சை விளக்கு எரிந்தால், நாட்டில் விளக்கு எரியும்!
ஆகவே, தாய்மார்கள், சகோதரிகள் வாக்குச் சாவடிக் குள் நுழைந்தவுடன், வாக்குப் பெட்டி இயந்திரத்தில் இரண்டாவதாக இருக்கும் ச.முரசொலி பெயருக்கும், உதயசூரியன் சின்னத்திற்கும் நேராக இருக்கும் பொத்தானில் கையை வைத்து அழுத்துங்கள்; உடனே விரலை எடுத்துவிடாதீர்கள்; பச்சை விளக்கு எரிகிறதா? என்று பாருங்கள். அங்கே பச்சை விளக்கு எரியும். அங்கே பச்சை விளக்கு எரிந்தால், அங்கே மட்டும் விளக்கு எரியாது தாய்மார்களே, தோழர்களே, உங்கள் நாட்டில் விளக்கு எரியும்; நாட்டில் விளக்கு எரியும். இந்திய நாடு புதிய ஆட்சியை சந்திக்கும்.
‘‘வேண்டாம் மோடி; வேண்டும்
இந்தியா கூட்டணியின் ஆட்சி!’’
ஜனநாயகம் மீண்டும் உயிர்பெறும்; எதேச்சதிகாரம் வீழும்.
எனவேதான், ‘‘வேண்டாம் மோடி; வேண்டும் இந்தியா கூட்டணியின் ஆட்சி!”
வெற்றி பெறவேண்டியது முரசொலி!
முரசொலிப்போம், முரசொலிப்போம், திராவிட முரசொலிப்போம்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
மகளிர் எல்லாம் மகிழ்ச்சியுடன் இருப்பதற்குக் காரணம் என்ன?
நாளை காலையில் பள்ளிக்கூடம் செல்லும் தம் பிள்ளைகளுக்கு காலைச் சிற்றுண்டிக்கு என்ன செய்வது? சீக்கிரம் பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்குச் செல்லவேண்டுமே? என்கிற கவலையிலேயே உழன்று கொண்டிப்பார்கள் முன்பு. ஆனால், இன்றைக்கு அந்தக் கவலை மகளிருக்கு வேண்டாம்; அது என்னு டைய கவலை என்று சொன்ன ஒரே முதலமைச்சர், இந்தியாவிலேயே ஒரே முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்தான்.
அவருடைய ஆட்சிதான் காலைச் சிற்றுண்டித் திட்டத்தைக் கொண்டு வந்தது.
அறுசுவை நிறைந்த, சுகாதாரமான சிற்றுண்டி!
‘‘தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்”
என்று புரட்சிக்கவிஞர் சொன்னார்.
இப்பொழுது சிலை மாதிரி இல்லை. கலகலவென்று சிரித்துக்கொண்டே மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடத் திற்குப் போகிறார்கள். அதற்குக் காரணம் என்ன?
அங்கே அறுசுவை நிறைந்த, சுகாதாரமான சிற் றுண்டி இருக்கிறது. தங்களுடைய சக மாணவர்களோடு, தோழர்களோடு, தோழிகளோடு அமர்ந்து மகிழ்ச்சியாக சாப்பிடுகிறார்கள்.
ஜாதியும் ஒழிந்தது; மத பேதமும் கிடையாது!
அதனால் இரண்டு பயன்கள்.
ஒன்று, வருகை பதிவு அதிகமாகியிருக்கிறது.
கல்வியும் பரவுகிறது; தாய்மார்களுக்கும் கவலை யில்லை. அதைவிட இன்னொன்று, ஜாதியும் ஒழிந்தது; மத பேதமும் கிடையாது.
யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை. அத்தனைப் பொறுப்பையும் எடுத்துக்கொண்ட ஆட்சிக்குப் பெயர் தான் ‘‘திராவிட மாடல்” ஆட்சி.
அவர்களுடையது குஜராத் மாடல், விளம்பர மாடல்தான்.
பா.ஜ.க.வினுடைய தேர்தல் அறிக்கையைப் பாருங்கள்; அதில் தலைப்பு என்ன தெரியுமா? ‘‘மோடி கி கேரண்டீ” என்பதுதான்.
அதற்கு முன்பு குஜராத் டீ; ஆனால், அதனால் பயன் இல்லை. டிக்காஷன் இல்லாமலேயே அவர் போட்டார். வாயால் வடை சுடுவது என்று எல்லோரும் சொல் வார்கள். ஆனால், குஜராத் டீ இருக்கிறதே, அதில் பாலும் கிடையாது, டிக்காஷனும் கிடையாது.
மற்றவர்கள் கொடுக்கும் டீயில், பிளாக் டீ, க்ரீன் டீ இருக்கும். ஆனால், குஜராத் டீ-யில் ஒன்றுமில்லை.
நம்முடைய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வகுத்த அரசியல் வியூகம்!
நம்முடைய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வகுத்த அரசியல் வியூகம் இருக்கிறதே, மிக அற்புதமான வியூகம். அதுதான் இந்தியா கூட்டணியாகும்!
‘‘எது நம்மைப் பிரிக்கிறது என்பது முக்கியமல்ல; எது நம்மை இணைக்கிறது என்பதுதான் மிக முக்கியம்” என்ற அடிப்படையில் எல்லோரையும் அவர்கள் ஒன்று சேர்த்தார்கள்.
இன்றைக்கு இந்தியா கூட்டணி உருவாயிற்று. அதில் அவர் இணைய மாட்டார், இவர் இணைய மாட்டார் என்றெல்லாம் சொன்னார்கள்.
ஆனால், அவர்களுடைய கனவு பலிக்கவில்லை. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரசும், சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவும் எதிர் எதிராக தேர்தலில் நின்றார் கள்; அதனால், அங்கே ஓட்டுகள் பிரிந்தது. ஆகவே, அங்கே பா.ஜ.க. அன்றைக்கு வெற்றி பெற்றது.
சமூகநீதிக்கான கட்சிகள் எல்லாம்
இப்போது ஒன்று சேர்ந்திருக்கின்றன!
இந்தியா கூட்டணியின்மூலம் அங்கே காங்கிரசும், சமாஜ்வாடி கட்சியும் இணைந்திருக்கின்றன. சமூகநீதிக் கான கட்சிகள் எல்லாம் அங்கே ஒன்றாக இருக்கின்றன.
எதை எதையோ சொல்லிப் பார்த்தார் மோடி; அவருடைய பாச்சா அங்கே பலிக்கவில்லை.
பீகாரில், நிதிஷ்குமார் தனித்துப் போனதைத் தவிர, வேறொன்றுமில்லை.
அரியானாவில் பா.ஜ.க.வினுடைய ஆட்சியே இல்லை.
ஒடிசாவில், இதற்குமுன் பா.ஜ.க.வும் – பிஜு பட் நாயக் கட்சியும் கூட்டணி வைத்திருந்தார்கள். இப்போது அந்தக் கூட்டணி கிடையாது. தனித்தனியே நிற்கிறார்கள்.