தேர்தலுக்காகத் தமிழ்நாட்டிற்கு நான் வருவது இதுவே கடைசிப் பயணம் என்று பிரதமர் கூறியுள்ளார்!
அவர் கட்சி (பா.ஜ.க.) ஆட்சிக்கு
இதுதான் கடைசி என்று பொருள் கொள்ளலாம்!
பேராவூரணியில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
பேராவூரணி, ஏப்.17 தேர்தலுக்காகத் தமிழ்நாட்டிற்குத் தான் வருவது இதுதான் கடைசிப் பயணம் என்று நெல்லையில் பிரதமர் மோடி கூறியுள்ளார். தமது கட்சி ஆட்சிக்கு இதுதான் கடைசி என்று இதற்குப் பொருள் கொள்ளலாம் என்று செய்தியாளர்களிடம் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக நேற்று (16-4-2024) பேராவூரணிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
மக்களுடைய வரவேற்பு
எப்படி இருக்கிறது?
செய்தியாளர்: நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியினுடைய வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கிறது? நீங்கள் பிரச்சாரத்திற்குச் செல்லுகின்ற இடங்களில் மக்களுடைய வரவேற்பு எப்படி இருக் கிறது?
தமிழர் தலைவர்: கடந்த 2 ஆம் தேதியன்று தென்காசியில் தொடங்கிய எங்களுடைய தேர்தல் பரப்புரைப் பயணம், நாளை (17-4-2024) தஞ்சையில் நிறைவடையவிருக்கிறது. இதுவரை ஏறத்தாழ 28 தொகுதிகளுக்குச் சென்றுவிட்டோம். சென்னையில் சில தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய முடிந்தது.
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் உள்ள இந்தியா கூட்டணியினுடைய வெற்றி மிகப் பிரகாசமாக உறுதி செய்யப்பட்ட வெற்றி யாக இருக்கிறது.
காரணம், கடந்த 10 ஆண்டுகளாக மோடியினுடைய ஆட்சி, கடுமையான வெப்ப சூழ்நிலையைவிட, கொடு மையான அரசியல் வெப்பத்தை அது தந்திருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
ஆகவே, நிச்சயம் தெளிவாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 39 தொகுதிகளிலும், புதுச்சேரி ஒரு தொகுதியிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
மோடிக்கு எதிரான அலைதான்
இந்தியா முழுவதும் வீசுகிறது!
அதுமட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலிருந்து வரக் கூடிய செய்தி – அது தென்மாநிலங்களானாலும், வட மாநிலங்களானாலும் 2014 இல் மோடிக்கு இருந்தது போன்று -இப்பொழுது எந்த அலையும் வீசவில்லை. அதற்கு மாறாக, மோடிக்கு எதிரான அலைதான் வீசுகிறது.
ஜூன் 5 ஆம் தேதிக்குப் பிறகு, ஒன்றியத்தில் ஒரு புதிய ஆட்சி – இந்தியா கூட்டணி ஆட்சி அமை யும் என்பதற்கு ஏராளமான தகவல்கள், தரவுகள் இருக்கின்றன.
பிரதமராக, இந்தியா கூட்டணியில்
யாரை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்?
செய்தியாளர்: இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வரும் என்று கருத்துக் கணிப்புகளும், மக்க ளிடையே வரவேற்பும் இருக்கிறது. பிரதமராக, இந்தியா கூட்டணியில் யாரை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்?
தமிழர் தலைவர்: தேர்ந்தெடுக்கப்படுகின்ற சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முழு உரிமை கொடுப்பது என்பதுதான் சரியான உண்மையான ஜனநாயகமாகும்.
தமிழ்நாட்டில் போணியாகாத தலைவர் ஒருவர் கேட்டிருக்கிறார், ”எங்கள் கூட்டணியில் பிரதமர் வேட் பாளர் மோடி; ஆனால், இந்தியா கூட்டணியில் யார் பிரதமர்?” என்று.
அந்தக் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சில நாள்களுக்கு முன்பு அருமையான பதில் சொல்லியிருக்கிறார்.
முன்மாதிரி அவர்களுடைய
வரலாற்றிலேயே இருக்கிறது!
”யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இப்போது யார் வரக்கூடாது என்கின்ற உணர்வு மக்களுக்கு வந்துவிட்டது. யார் பிரதமராக வரப் போகிறார் என்று சொல்லும்பொழுது, இந்தியா கூட்டணியினுடைய முகம்தான்” என்று தெளி வாகச் சொன்னார்.
இதற்கு முன்மாதிரி இருக்கிறதா, இல்லையா? என்றால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கே இந்த முன்மாதிரி இருக்கிறது.
அப்பொழுது பா.ஜ. கட்சி இல்லை. ஜனசங்கம்தான் இருந்தது. 1976 ஆம் ஆண்டு நெருக்கடி காலம் முடிந்த பிறகு, தேர்தல் நடைபெற்றது.
அந்தத் தேர்தலில் போட்டியிட்ட ஜனதா கட்சியில், யார் பிரதமர், என்று அறிவிக்கப்பட்டதா? அதற்குப் பிறகு, மொரார்ஜி தேசாய் தலைமையில் உருவாக்கி, அந்த அமைச்சரவையில்தான் வாஜ்பேயி, அத்வானி போன்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இடம்பெற்றார்கள்.
ஆகவேதான், இதற்கு முன்மாதிரி அவர்களுடைய வரலாற்றிலேயே இருக்கிறது.
இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பாற்றக் கூடிய இரண்டு மருத்துவர்கள்!
செய்தியாளர்: இந்தியாவைக் காப்பாற்றக் கூடியவர் கள் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி என்கிற இரண்டு மருத்துவர்கள்தான் என்று சொல்கிறீர்களே, எப்படி?
தமிழர் தலைவர்: இப்பொழுது இந்திய ஜனநாயகம் மரணப் படுக்கையில் இருக்கிறது; தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது. அதற்குப் போதுமான அளவிற்கு ஜனநாயக மருந்துகளைக் கொடுக்கவேண்டும்.
அந்த சக்தி, ஆற்றல் மக்கள் சக்தியாக இருக்க வேண்டும். அந்த மக்கள் சக்தியைத் திரட்டி, மக்கள் மத்தியில் அபரிமிதமான செல்வாக்குப் பெற்ற இரண்டு தலைவர்கள் என்று சொன்னால், ஒருவர், நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்; இன்னொருவர் இளந்தலைவர், துடிப்போடு செயல்படக்கூடிய, இந்தியா முழுவதும் உள்ள மக்களை ஈர்த்திருக்கக்கூடிய சிறப்பான தலைவர் ராகுல்காந்தி அவர்கள். இது மக்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
முடிந்துபோன பிறகு வென்ட்டிலேட்டரை வைத்து காப்பாற்றிக் கொண்டிருக்கின்ற டாக்டர் மோடி!
ஆனால், நம்முடைய மோடி போன்ற டாக்டர்கள் எப்படி என்று சொன்னால், முடிந்து போன பிறகு, வென்ட்டிலேட்டரை வைத்து காப்பாற்றிக் கொண் டிருக்கின்ற டாக்டர்கள் – டாக்டர்கள் அல்ல; அதுபோன்ற முறை; ஏனென்றால், டாக்டர்களைக் குறை சொல்வதாகக் கருதக் கூடாது.
தேர்தல் முடிவுகள் வரும்பொழுது நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
தமிழ்நாட்டு மக்களுக்குத்
திராவிடர் கழகம் கூறும் கருத்து!
செய்தியாளர்: நாளையோடு தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. தமிழ்நாட்டு மக்களுக்குத் திராவிடர் கழகம் சார்பாக என்ன சொல்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: தமிழ்நாட்டு மக்கள் மிகத் தெளி வாக இருக்கிறார்கள். நேற்று தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் அவர்கள் ஒன்றைத் தெளிவாகச் சொல்லி யிருக்கிறார்.
இதுவரை அவருடைய அரசியல் வாழ்வில், கடைந்தெடுத்த பொய்களையே சொல்லி சொல்லிப் பழக்கப்பட்டவர்; ஒரே ஒரு முறைதான், தமிழ்நாட்டில், அதுவும் நெல்லையில் ஒரே ஒரு உண்மையைப் பேசியிருக்கிறார். அந்த உண்மை என்னவென்றால், ”நான், தமிழ்நாட்டிற்குத் தேர்தல் ரீதியாக வருவது இதுதான் கடைசி பயணம்” என்று சொல்லியிருக்கிறார்.
தங்களுக்கு வாய்ப்பு இல்லை என்பதை அவர்களே ஒப்புக்கொண்டிருக்கின்றார்கள்!
ஆகவேதான், அவர் தேர்தலுக்கென்று வருவது கடைசி என்றால், அவருடைய கட்சி ஆட்சிக்கு வருவது என்பதும் அதற்குச் சேர்ந்த பொருள்தான்.
அதைத்தான் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அவர்களுடைய தேர்தல் அறிக்கையே, ”மோடி கி கேரண்டீ” என்பதுதான்.
நிச்சயம் தங்களுக்கு வாய்ப்பு இல்லை என்பதை அவர்களே ஒப்புக்கொண்டிருக்கின்றார்கள்.
ஆகவேதான், நிச்சயமாக ஜூன் 5 ஆம் தேதி ஒன்றிய பா.ஜ.க. ஆட்சிக்கு விடை கொடுத்து அனுப்பக் கூடிய நாள் என்பது மட்டுமல்ல – புதிய ஒன்றிய அரசை – இந்தியா கூட்டணியின் அரசை மக்கள் சந்திப்பார்கள்.
குஜராத்திலேயே பா.ஜ.க.விற்குப் பெரிய ஆதரவு இல்லை. வடபுலத்தில் ஆதரவு இல்லை. வடகிழக்கில் ஆதரவு இல்லை. அரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் ஆதரவு இல்லை. அதேபோன்று தென்னாட்டிலும் அவர்களுக்குக் கதவு சாத்தப்பட்டு விட்டது.
நாங்கள் சொல்வது கருத்துக் கணிப்பு அல்ல; மக்கள் கணிப்பாகும்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களிடையே கூறினார்.