1927ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி, மகாராட்டிராவின் மஹத்தில் உள்ள ஒரு பொதுக் குளத்திலிருந்து ‘தீண்டத்தகாதவர்கள்’ தண்ணீரைப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக, பாபாசாகெப் அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்திற்குத் தலைமை தாங்கினார். இது நடந்து தொண்ணூற்றேழு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பிரபலமான செயலி உணவு வழங்கப்படுவதற்கு முன் ‘சுத்த சைவ உணவு’ அதாவது பார்ப்பனர்களுக்கு மட்டுமான அவர்களின் ஆச்சாரம் இருப்பதை உறுதி செய்வதற்கான சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. சொமேட்டோவின் இந்த திட்டம் இங்குள்ள கோரமான தீண்டாமை அடையாளத்தை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. இதன் மூலம் நவீனங்களிலும் ஜாதிய பாகுபாடு ஊடுருவும் அபாயம் ஏற்பட்டுள்ளது
‘சுத்த சைவம்’ என்கிற இந்த புதிய ‘ப்யூர் வெஜ்’ பயன்முறையின் சொமேட்டோவின் மிகவும் சிறப்பான திட்டம் என்றே விளம்பரம் செய்தார் சொமேட்டோ நிறுவனர் – சி.இ.ஓ தீபிந்தர் கோயல்.
“சுத்த சைவம் (ப்யூர் வெஜ்) பயன்முறையானது முழுமையான சைவ உணவுகளை மட்டுமே வழங்கும் உணவகங்களின் உணவு எடுத்துச்செல்ல சுத்த சைவ உணவுப் பெட்டிகளில் [தனிப்பட்ட பச்சை சீருடைகளில்] இந்த சுத்தமான சைவ உணவகங்களிலிருந்து மட்டுமே ஆர்டர்களை வழங்கும். இதைக் கையாளும் பணியாளர்களும் சிறப்பாக தேர்ந்தெடுக்கப்படுவார்களாம்.
அதாவது அசைவ உணவு அல்லது அசைவ உணவகம் வழங்கும் சைவ உணவுகளுடன் எங்களின் சுத்த சைவ (ப்யூர் வெஜ்) சாப்பாட்டு பெட்டிகள் பச்சை நிற உணவுப் பெட்டிக்குள் ஒன்றாக செல்ல மாட்டார்களாம்.
சைவ உணவைக் கொண்டு செல்ல குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே நியமிக்கப் படுவார்கள் – அவர்களுக்கு அசைவ உணவை கொண்டு செல்லும் பணி கொடுக்கப்படாதாம்.
இந்த நிலையில் இவர்களின் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது, பச்சையான தீண்டாமையை கடைப்பிடிக்கிறது, குறிப்பிட்ட ஜாதியினரின் உணவு பழக்கவழக்கத்திற்கு தனியான சிறப்பு நபர்கள் உணவு கொண்டு செல்லும் முறை என்பது தீண்டாமை தானே? என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது
சுத்த சைவ உணவு பெட்டிக்குப் (ப்யூர் வெஜ் பெட்டி) என்பது இந்தியாவில் அதிகம் உள்ள அசைவம் சாப்பிடாத மக்களைக் கருத்தில் கொண்டே செயல் படுத்தப்பட்டது என்றும் அவர் களுக்கு அவர்களின் உணவைக் கொண்டு வருபவர்கள் அசைவம் சாப்பிடாத நபராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் அல்லவா என்று சொமாட்டோ சாக்கு போக்கு கூறுகிறது.
இந்த நிலையில் சைவ உணவை கொண்டு செல்லும் நபர்களுக்கான சிறப்பு ஆடையை மட்டும் நீக்கி அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே ஆடை என்ற உத்தரவை மட்டும் பிறப்பித்துள்ளது.
மேலோட்டமாகப் பார்த்தால், இது நியாயமானது என்று தோன்றும். ஆனால் இந்தியாவில் இன்றளவும் தீண்டாமை உள்ளது.
இதில் அசைவம் சாப்பிடுபவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்ற ஒரு எண்ணம் குறிப்பாக வட இந்தியாவில் உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் சில பள்ளிகளில் பிள்ளைகள் இறைச்சி உணவு உண்டால் அன்றைய நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள் என்று மறைமுகமாக பெற்றோர்களுக்கு உத்தரவிட்ட நிகழ்வும் உண்டு.
இறைச்சி உண்பவர்களுக்கு வீடுகள் மறுக்கப்படுகின்றன. பள்ளிகளில் குழந்தைகள் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் சமைத்த உணவை சாப்பிட மறுத்துள்ளனர். இறைச்சி உணவு கொண்டு வந்த சக மாணவனை பள்ளி கழிப்பறையில் தள்ளி பூட்டிய கொடுமைகளும் மகாராட்டிராவில் நடந்துள்ளது.
நாகரீகம் வளர வளர – பணம் பண்ணுவதற்கான – தீண்டாமையை ஊக்குவிக்கும் இது போன்ற திட்டங்களை தனியார் நிறுவனங்கள் நிறுத்தவேண்டும்.