வி.சி.வில்வம்
நான் பிறந்து, வளர்ந்தது கோயம்புத்தூர். எனினும் அம்மா, அப்பா பூர்வீகம் கேரளா. பாலக்காடு அருகே கிடாசேரி என்றொரு கிராமம். அப்பா காலத்திலேயே தமிழ்நாடு வந்துவிட்டோம். இப்போது எனக்கு 58 வயதாகிறது. தருமபுரியில் வசிக்கிறோம். இணையர் பெயர் கதிர்.
காதல் திருமணம்!
நாங்கள் பக்தி மிகுந்த குடும்பம். எனினும் ஜாதி மறுப்பில் தான் திருமணம் நடந்தது. உறவினர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்ததால் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம்!
அதாவது 45 ஆண்டுகளுக்கு முன்பே காதலித்து திருமணம் செய்தோம். 1972 ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு முடித்து, ஒரு அச்சகத்தில் வேலை பார்த்தேன். அங்கு மேலாளராகப் பணிபுரிந்தவர் தான் கதிர் அவர்கள். எங்கள் காதலை இரு வீட்டாரும் ஏற்காத காரணத்தால் 5 ஆண்டுகள் பொறுமை காத்து, திருமணம் முடித்தோம்!
இயக்கக் குடும்பம்!
ஒரே மகன், செந்தில்குமார். பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்து முடித்து, தற்போது ஆசிரியராக வேலை செய்கிறார். இயக்கத்தில் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவராக உள்ளார். இவருக்கு ஜாதி, மத மறுப்புத் திருமணம் செய்து வைத்தோம். மருமகள் விமல் சோபியாவும் ஆசிரியராக இருக்கிறார். மகள் பெயர் சங்கரி. அவரும் ஆசிரியர் தான்!
குடும்பமே இயக்கம் என்கிற அளவில் நாங்கள் இருக்கிறோம்! எங்களது மகள் திருமண வரவேற்பு திருத்தணி பன்னீர்செல்வம் இசை நிகழ்ச்சியுடன், சுயமரியாதைச் சுடரொளிகள் அய்யா சு.அறிவுக்கரசு, அம்மா பிறைநுதல் செல்வி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது!
ஆன்மிக வாழ்க்கை!
தருமபுரி நகராட்சி அலுவலகம் எதிரே “கதிர் அச்சகம்” எனும் பெயரில் தொழில் செய்து வந்தோம். இணையரும், நானும் பார்த்துக் கொண்டோம். இன்றைக்கு ‘சன்’ செய்தித் தொலைக்காட்சியில் செய்திப் பிரிவு தலைவராகப் பணிபுரியும் குணசேகரன் அவர்கள் நமது அச்சகத்திற்கு அடிக்கடி வருவார். 1979இல் எனக்குத் திருமணம் முடிந்தாலும், 1992இல் தான் கொள்கையைப் புரிந்துக் கொண்டேன். சுமார் 13 ஆண்டுகள் ஆன்மிகத்தில்தான் பொழுது கழிந்தது.
அந்தக் காலத்தில் தருமபுரி பூ மார்க்கெட் தெப்பக்குளம் அருகே தந்தை பெரியார் கூட்டம் ஒன்று நடந்தது. பள்ளி முடிந்து நாங்கள் வந்து கொண்டிருந்தோம். நண்பர்கள் சிலர் பெரியாரைப் பார்க்க வேண்டும் என்று கூறினார்கள்.பெரியார் இராமரைச் செருப்பால் அடித்தார் என்று சிலர் சொன்னதை நம்பி, அவரைப் பார்த்தாலே “பாவம்” என நண்பர்களை அழைத்து வந்துவிட்டேன். அப்போது எனக்கு வயது 16. பிற்காலத்தில் தந்தை பெரியார் குறித்து அறிந்து, நான் மிகவும் மன வேதனை அடைந்தேன்.
நாத்திக வாழ்க்கை!
திருமணத்திற்குப் பிறகும் சாமி, சாமி என்று இருந்தும், என் வாழ்விணையர் எந்தக் குறுக்கீடும் செய்யவில்லை. பிற்பாடு பெரியார் கொள்கைக் குறித்துப் புரிய ஆரம்பித்தது. தருமபுரி பெரியார் திருமண மண்டபத்தில் சமூகநீதி மாநாடு ஒன்று நடந்தது. முழுமையாக அதில் கலந்து கொண்டேன். அதிலிருந்து எங்கு மாநாடுகள், நிகழ்ச்சிகள் என்றாலும் பங்கேற்கத் தொடங்கினேன்.
ஆத்திகத்தில் எவ்வளவு ஈடு பாட்டுடன் இருந்தேனோ, அதைவிட நாத்திகக் கருத்துகளில் புரிதலுடன் இருந்தேன்.
பகுத்தறிவு வாழ்க்கையில் சுய சிந்தனைக்கு அதிக இடம் இருந்தது. உடல்நிலை சரியில்லை என்றால் முதலில் கோயிலுக்குப் போகிற நான், பிற்பாடு மருத்துவமனை மட்டுமே போகத் தொடங்கினேன். அதேபோல வாழ்க்கையில் இன்னும் அதிக முன்னேற்றம் பெறுவது எப்படி என்கிற யோசனை அடிக்கடி வருகிறது. ஆத்திக வாழ்க்கையில் இப்படியான சிந்தனைகள் எல்லாம் இல்லை.
பக்குவம் தந்த பகுத்தறிவு!
அதேபோல ஆன்மிக வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள், துரோகங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. மன வேதனையாக இருக்கும். இப்போது அதுபோன்ற சூழல் குறைந்துவிட்டது. ஒருவேளை அவ்வாறு ஏற்பட்டால், கவலை கொள்வதில்லை; அதைப் பொருட்படுத்துவதும் இல்லை! அந்தப் பக்குவத்தை இந்தக் கொள்கை ஏற்படுத்தி தந்துள்ளது!
“உங்கள் பிள்ளைகள் படித்து நல்ல வேலைக்குப் போய்விட்டதால் நீங்கள் நாத்திகம் பேசுகிறீர்கள்”, எனச் சிலர் கூறுவார்கள். அப்படியென்றால் பணம் இருப்பவர்கள் எல்லாம் நாத்திகமா பேசுகிறார்கள்? பகுத்தறிவு கொண்டு சிந்தித்தால் மட்டுமே நாத்திகர் ஆக முடியும் என்று நான் கூறுவேன்.
ஆத்திக வாழ்வு, நாத்திக வாழ்வு இரண்டையும் நான் விரும்பி வாழ்ந்துள்ளேன். அதில் நாத்திக வாழ்வு தான் தனித்தன்மையோடும், பெருமிதத்தோடும் இருக்கிறது! பொருள் பொதிந்ததாகவும் இருக்கிறது! நமக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உறவினர்களை விட, கொள்கையாளர்கள் முதலில் வந்து நின்று விடுகிறார்கள்.
நான் மதிக்கும் தலைவர்!
பெரியாரைப் பார்க்க வாய்ப்பு இருந்தும், இளம் வயதில் தவறிவிட்டேன். பிறகு இயக்கத்திற்கு வந்த பிறகு ஆசிரியரைச் சந்தித்தேன். தருமபுரி சுற்றுவட்டாரப் பகுதிக்கு வந்தால் குடும்பத்துடன் சென்று சந்தித்து வருவோம். ஆசிரியரைச் சந்திக்கிற போது ஒரு ஆறுதலும், மகிழ்ச்சியும் கிடைக்கும்! ஒருமுறை ஆசிரியர் அவர்களுக்கு நானும், மருமகளும் உணவு பரிமாறும் வாய்ப்புக் கிடைத்தது. மறக்கவே முடியாத, அருமையான தருணம்!
தருமபுரி, வெண்ணாம்பட்டியில் 2015ஆம் ஆண்டு, எங்களது “யாழ் இனியன்” புது இல்லத்தை ஆசிரியர் அவர்கள் தான் திறந்து வைத்தார்கள்! பேரன், பேத்திகளுக்கு அவர்கள் தான் பெயர் வைத்தார்கள். பரந்துபட்டு யோசித்த வகையில், “நான் மதிக்கும் ஒரே தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அய்யா தான்!”.
வாழ்வியல் சிந்தனைகள்!
அய்யாவின் வாழ்வியல் சிந்தனை களை ரசித்துப் படிப்பவர்களில் நானும் ஒருவர். அவரைப் போல வர முடியாது. இதுமாதிரி தலைவர் கிடைத்தது பெரு வாய்ப்பு என்று தான் சொல்ல வேண்டும்! எவ்வளவு உயரத்தில், எவ்வளவு புகழில் ஆசிரியர் இருக்கிறார். ஆனால் தொண்டர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து, அவர்களுக்கென்ற செய்தியைச் சுட்டிக்காட்டி, நலம் விசாரிப்பார்! வேறு யாரிடம் இந்தச் சிறப்புகளை நாம் காண முடியும்?
பகுத்தறிவு வாழ்க்கையில் செலவுகள் குறைவு. நாங்கள் கொண்டாடும் ஒரே விழா தமிழர் திருநாள் பொங்கல் தான்!
என்றும் இயக்க வழியில்!
அனைத்து ஜாதி அர்ச்சகர், மனுநீதி நகல் எரிப்பு உள்ளிட்ட 3 போராட்டங்களில் சிறை சென்றுள்ளேன். சுயமரியாதைத் திருமணத் தகவல் மய்யத்திற்கு தருமபுரி மாவட்டப் பொறுப்பாளராக இருந்தேன். அதேபோல மகளிர் மற்றும் மகளிர் பாசறை மாவட்டத் தலைவராகவும் இருந்துள்ளேன். தொடர்ந்து இயக்கப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன்”, என நளின குமாரி கூறினார்.