அதானி குறித்து கேள்வி எழுப்பியதுடன் மோடியின் நிர்வாகத் தோல்வியை நாடாளுமன்றத்தில் தோலுரித்துக் காட்டிய – நேரடியாக மோடியை நோக்கி கைநீட்டிப் பேசிய மஹுவா மொய்த்திராவை பழிவாங்க அவரது மேனாள் காதலனை பயன்படுத்தியது என்பது இந்திய அரசியல் வரலாற்றில் மிகவும் கொச்சையான ஒரு நடவடிக்கை – இதை ஹிந்துத்துவா சக்திகள் மட்டுமே செய்யமுடியும்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா மக்களவையில் கடந்த நான்கரை ஆண்டுகளாக துணிச்சலான பல கேள்விகளை எழுப்பியுள்ளார். இதில் பெரும்பாலான கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் அதானிக்கு எதிராகமொய்த்ரா மிகவும் பலம்வாய்ந்த சான்றுகளோடு கேள்விகளை எழுப்பினார்.
இக்கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா இரண்டு கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது!
கருத்து வேறுபட்டு பிரிந்து சென்று – மொய்த்ராவை பழி வாங்கத்துடித்த மொய்த்ராவின் மேனாள் காதலர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் என்பவர் தான் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்தார்! இவரது குற்றச்சாட்டையே ஆதாரமாக்கி, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார்.
இந்த நிஷிகாந்த் துபே ஒரு குற்றப் பின்னணி உள்ளவர் தான்! லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக டில்லி காவல்துறையில் இவர் மீது 2015 ஆம் ஆண்டே வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர் படிக்காத படிப்புக்கு பட்டம் பெற்ற தகிடுத்ததங்கள் குறித்த புகார்களும் உள்ளன! உண்மையில் மொய்த்ரா ஹிராந்ததனிடமிருந்து ஸ்கார்ப்பும், சில உதட்டுச் சாயப் பொருட்களும் பெற்றுள்ளார். அதை மொய்த்ராவே பகிரங்கப்படுத்தி உள்ளார். சாதாரணமாக இது போன்றவற்றை தருவதும், பெறுவதும் எங்கும் நடப்பதே!
அதே சமயம் மொய்த்ரா ரூபாய் இரண்டு கோடி பெற்றார் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் இதுவரை பா.ஜ.க. வெளிப்படுத்தவில்லை. வங்கி இருப்பில் செலுத்தியதாகவோ அல்லது ரொக்கமாக பெற்ற வகையில் கண்டு பிடிக்கப்பட்டதாகவோ நிரூபிக்கவில்லை. பெறப்பட்ட நாள், இடம் அதற்கான சாட்சி அல்லது தரவுகள் எதையும் சொல்லவில்லை!
நடப்பு நாடாளுமன்றத்தின் வாழ்நாள், ஒன்று அல்லது இரண்டு கூட்டத் தொடருடன் முடிவடைய இருக்கும் நிலையில், இப்பதவிப் பறிப்பு என்பது, பா.ஜ.க.வின் பதற்றத்தையே காட்டுகிறது. மொய்த்ராவின் பதவியைப் பறித்ததில் நடந்த விசாரணை முறை, அதாவது ஒரு பெண்ணின் தனிப்பட்ட அந்தரங்கவாழ்க்கையை நக்கலாக விசாரித்த விதம், நாடாளுமன்றத்தில் இதை நேர்மையாக விவாதிக்க மறுத்து காட்டிய பிடிவாதம் ஆகியவை அனைவரையுமே கொந்தளிக்க வைத்தது! விசாரணை என்ற பெயரில் தன்னை இழிவுபடுத்திய செயல்திட்டமே அரங்கேறியது என மஹுவா மொய்த்ரா குமுறினார்!
ஜார்க்கண்ட் மாநிலம் கோடா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான நிஷிகாந்த் தூபே, ஒரு குற்றச்சாட்டை மொய்த்ரா மீது சுமத்தினார். இந்த தூபே மொய்த்ரா மீது சுமத்திய குற்றச்சாட்டு, துபாயை இருப்பிடமாகக் கொண்ட ஹிரானந்தானி குழுமத்தின் தலைவரான தர்ஷன் ஹிரானந்தானி என்பவருடையது – நாடாளுமன்ற இணைய தளத்தின் மூலமாக, கேள்விகள் கேட்கும் பொருட்டு, மொய்த்ராவின் மின்னஞ்சல் முகவரியையும், அதன் கடவுச் சொல்லையும் இவர் பெற்றுக் கொண்டதாகவும், அதற்காக, மொய்த்ராவிற்கு இவர் பரிசுப் பொருள்கள் அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், துபே சுமத்திய குற்றச்சாட்டுகளுக்குஎதிராக, இவை உண்மையில்லை என ஹிரானந்தானி குழுமத்தின் கண்டன அறிக்கை வெளியானது. எனினும், மக்களவையின் தலைவர், துபேயின் குற்றச்சாட்டுகளை கைவிடாமல், அறக் குழுவுக்கு அனுப்பி வைத்து ஆட்டத்தை ஆரம்பித்தார்.
அதற்காகவே அறக் குழு காத்திருந்தது போலத் தெரிகிறது. அது துபேயின் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை தரவுகள் உள்ளனவா என கேள்விக்கே உட்படுத்தாமல் அப்படியே ஏற்றுக் கொண்டது.
இதன் பிறகு தான் ஹிரானந்தானியின் வாக்குமூலம் பெறப்பட்டது. ஆனால், அதில் தெளிவில்லை. அவரை நிர்ப்பந்தித்து அல்லது பிளாக் மெயில் செய்து இப்படி ஒரு வாக்குமூலம் வாங்கப்பட்டதா..? என்ற அளவுக்கு அதில் முரண்கள்! முதலில் ஒரு மாதிரியும், பின்பு வேறொரு மாதிரியும் இரட்டை நிலைப்பாடு உடையதாக இவரது வாக்குமூலம் உள்ளது.!
தர்ஷன் ஹிரானந்தானியை நேரில் குறுக்கு விசாரணை செய்யக் கூட அழைக்காதது ஆச்சரியகரமானது. மேலும் அக்குழு, மஹுவா மொய்த்ராவின் தரப்பு விளக்கத்தை கேட்க மறுத்ததோடு, கட்டப் பஞ்சாயத்து முறையில் அவமானப்படுத்தியது. எவ்வித தரவுகளுமின்றி, சம்பந்த மில்லாமல் ஏதேதோவெல்லாம் எழுதி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை உடனடியாக ஏற்று மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார்!
எப்படி என்றால், நாடாளுமன்ற நெறிமுறைகள்குழுவின் தலைவர் விஜய் சோன்கர் 500 பக்க அறிக்கையை அவசரகதியில் மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது, திரிணமூல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் “500 பக்க அறிக்கையை படிக்க குறைந்தபட்சம் 3 நாட்கள் அவகாசம் வேண்டும். அதன் பிறகு விவாதிக்கலாம்’’ என்றனர். இதை அவைத் தலைவர் ஓம் பிர்லா ஏற்கவில்லை. இந்தவிவாதத்தின் போது மஹுவா மொய்த்ரா தனது கருத்தை எடுத்துரைக்க அனுமதி கேட்டதற்கு அவைத் தலைவர் மறுத்ததோடு ” நெறிமுறைகள் குழுவின் பரிந்துரை குறித்து மக்களவையில் கருத்துகளை எடுத்துரைக்க முடியாது. இதற்கு நாடாளுமன்ற விதிகளில் இடமில்லை” என்றார். இதனை ஆட்சேபித்து சபையை புறக்கணித்துஎதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பி.ஜே.பி.யின் அவசரம் – மொய்த்ரா இன்னும் சபையில் இருந்தால் 2024 தேர்தலுக்கு முன்னதாக இன்னும் மோடியின் முகத்திரையை நாடாளுமன்றத்தில் கிழித்து தொங்கவிடலாம். எனவே, விரைவில் விசாரணை என்ற பெயரில் ஒரு சடங்கை நடத்தி விரைந்து தீர்ப்பும் வழங்கிவிட்டதையே நிரூபிக்கிறது!
மஹுவா மொய்த்ரா தொடர்பான இவ்விசாரணையில், அரசும், நாடாளுமன்றமும், அறக் குழுவும் வழக்கத்திற்கு மாறான வேகத்தில் செயல்பட்டதை, ‘தி பிரிண்ட்’ இதழின் ஆசிரியரான சேகர் குப்தாவுமே கூட உறுதிப்படுத்தியுள்ளார்.
ஹிந்து தேசிய வாதத்தின் பெயரால், பெருநிறுவனமுதலாளிகளும், ஊழல் அரசியல்வாதிகளும் கைகோத்து நாட்டைச் சீரழிப்பதை, மொய்த்ரா உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியதைப் போல வேறு எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் செய்யவில்லை! மோடி- அதானி இருவருக்குமான தொடர்பை, கேள்விக்குள்ளாக்கும் எவரையும் பா.ஜ.க. விட்டுவைக்காது என்பதற்கு இந்த நடவடிக்கையை ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்!.
நாடாளுமன்றத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்டு, மோடி- அதானி தொடர்பை அம்பலப்படுத்தியதே மொய்த்ரா செய்த ‘குற்றம்’. துல்லியமான கேள்விகளாலும், கூர்மையான வாதங்களாலும், மோடியை நெருக்கடிக்கு உள்ளாக்கிய மொய்த்ராவை, பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்அவதூறுகளாலும், பொய்க் குற்றச் சாட்டுகளாலும் சிறுமைப்படுத்தியது நினைவிருக்கலாம். மோடிக்கு எதிரான குரல்களை, பாஜகவால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதையே இச்செயல் காட்டுகிறது.
நாடாளுமன்றத்துக்குள்ளேயே பகுஜன் சமாஜ்வாதிக் கட்சியின் டேனிஷ் அலி மீது, மத வெறுப்பை பகிரங்கமாக கக்கி,அச்சுறுத்திய பாஜகவின் உறுப்பினரான ரமேஷ் பிதூரி மீது அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுமே நடவடிக்கை கோரினர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் கடைசி வரை எடுக்கப்படவில்லை.
“தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது. நெறி முறைகள் குழு முழுமையாக விசாரிக்காமல் ஒருதலைப்பட்சமாக அறிக்கை அளித்துள்ளது” என தொடர்ச்சியாக கூறி வந்த மொய்த்ரா தற்போது உச்ச நீதிமன்றத்தை நாடி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டது ‘சட்டவிரோதம்’ என்று மனுவில் குறிப்பிட்டு நீதி கேட்டுள்ளார். அவர் லஞ்சம் வாங்கி இருக்கும் பட்சத்தில் இப்படி உச்ச நீதிமன்றத்தை நாடும் துணிவு அவருக்குஎப்படி ஏற்பட முடியும். லஞ்சம் வாங்கியது உண்மை எனில், நாட்டு மக்கள் அனைவருக்கும் பகிரங்கப்படுத்தும் வண்ணம் நீதிமன்றத்தில் வெளியிடட்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசு.
ஹிந்துத்துவத்தில் பெண்கள் சத்தமாக பேசக்கூடாது, திருமணமாகாத பெண்களும் கிட்டத்தட்ட விதவைப் பெண்களாகத்தான் பாவிக்கப்படுகின்றனர். இன்றும் திருமணமாகாத பெண்களை அவப்பெயரோடு குறிப்பிடும் சொல் உண்டு. திருமணமானால் கணவருக்கு அடங்கி நடக்கவேண்டும், கைம்பெண்ணாக்கி விட்டால் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. திருமணமாகாமல் இருந்தால் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளக்கூடாது ஆண்களுடன் பேசக்கூடாது இது போன்ற பல விதிகள் உண்டு குழந்தை பெறாத பெண்களையும் இழிவு படுத்தும் மனப்பான்மையை ஹிந்துத்துவம் வளர்த்து விட்டது.
அந்த ஹிந்துத்துவத்தின் விதிப்படி மஹுவா மொய்த்திரா ஆண்கள் நிறைந்த சபையில் – சகல சக்திகளைக் கொண்டவர் என்று தன்னைத்தானே கருதிக்கொள்ளும் – மோடியை பார்த்து கைநீட்டிப் பேசிவிட்டார்.
இதை தனக்கு நேர்ந்த அவமானமாகவே கருதிக்கொண்டாரோ என்னவோ? அத்தோடு தனது கார்ப்பரேட் நண்பர்களின் மோசடிகளையும் அவையில் தோலுரித்துக்காட்டியுள்ளார். இது அத்தனையும் சேர்த்து மஹுவா மொய்த்ரா பழிவாங்கப்பட்டுள்ளார். இது தனி ஒரு மஹுவா மொய்த்திராவிற்கு மட்டுமானது அல்ல, இதன் மூலம் இனி நாடாளுமன்றத்திற்கு வரும் பெண்கள் யாரும் ஆண்களை எதிர்த்துப்பேசக்கூடாது என்று ஒரு அச்சமூட்டலையும் நடைமுறைப்படுத்துக்காட்டியுள்ளார்கள்
இறுதியாக மஹுவா மொய்த்ரா கூறுகையில், இன்னும் 30 ஆண்டு எனது அரசியல் வாழ்க்கை உள்ளது. மீண்டும் வருவேன், இதைவிட வேகமாக வருவேன், கேள்விகள் இனி அக்னிக்குழம்பாக இருக்கும் – அதனை நீங்கள் எதிர்கொள்ள முடியாது ஓடிவிடுவீர்கள்.
நான் வருவேன் – மீண்டும் வருவேன் – நாங்கள் இந்தியச் சமூகத்தின் உரிமைக்கான பெண்களின் குரலாக மீண்டும் வருவேன் என்றார்.