1837 முதல் முதலாம் அலெக்சாண்டியா விக்டோரியா பிரிட்டனின் அரசியாக இருந்த போது 1848 முதல் 1856 வரை லார்ட் டல்ஹவுசி இந்தியாவின் கவர்னர் ஜெனரல் பொறுப்பில் இருந்தார்.
டல்ஹவ்சி பிரவு என்ற உடன் நினைவிற்கு வருவது, ஜான்சியின் ராணிலட்சுமி பாய் தான்!
ஜான்சி சமஸ்தான மன்னன் கங்காதர் ராவ், 1853இல் தன்னுடைய 56ஆவது வயதில் வாரிசு இல்லாமல் மரணம் அடைந்தார்.
அவருடைய மனைவி மணிகர்னிகா என்கிற லட்சுமிபாய்க்கு 24 வயது. மன்னர் இறக்கும் தறுவாயில் அவருடைய சகோதரரின் மகனான ஆனந்த் ராவை தத்தெடுத்துக் கொண்டார். அவருக்கு தாமோதர் ராவ் என்று பெயர் வைத்தார். இந்த தத்து எடுப்பை அங்கீகரிக்கக்கோரி புந்தேல்கண்ட் பிரதேசத்தில் இருந்த கிழக்கிந்திய கம்பனி நிர்வாக அதிகாரிக்கு மனு அனுப்பப்பட்டது.
முகலாயர்களின் ஆளுமை இருந்தாலும் அன்றைய இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் முழுமையாக கிழக்கிந்திய கம்பனியின் அதிகாரத்தின் கீழ் வந்தது. ஆகையால் தத்தெடுப்பு அதிகாரமும் கிழக்கிந்திய கம்பனிக்கே இருந்தது.
வாரிசு இழப்புக் கொள்கை
மன்னர் கங்காதர் ராவ், தன் தத்துமகன் தாமோதர் ராவை பற்றி அனுப்பிய இந்த தகவல் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு போய் சேரும் முன்பே, தத்தெடுத்த மறுநாளே மன்னர் இறந்துவிட்டார். தத்தெடுப்பு நடந்த போதிலும், அதற்கு அதிகாரபூர்வமான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால் இந்த தத்தெடுப்பை கணக்கில் கொள்ளாமல், “வாரிசு இழப்புக் கொள்கை ”(Doctrine of Lapse)” எனும் விதியை அமல் படுத்தி, ஜான்சி நாட்டை பிரிட்டிஷ் பேரரசின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
வாரிசு இழப்புக் கொள்கை(Doctrine of Lapse) என்பது இந்தியாவிலிருந்த பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தில் 1848இலிருந்து 1856 வரை ஆளுநராக இருந்த டல்கவுசி பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிணைப்புக் கொள்கையாகும்.
வாரிசு இழப்புக் கொள்கையின்படி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் நேரடிச் செல்வாக்குக்குட்பட்ட மன்னரானவர் ஆட்சி புரிவதற்குத் தகுதியற்றவராகவோ அல்லது நேரடி வாரிசு இன்றி இறந்து போனாலோ அம்மன்னராட்சி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சியில் இணைக்கப்படும்.
இந்தச்சட்டத்தின் படி பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி, சதாரா சமஸ்தானம் (1848), ஜெய்ப்பூர் சமஸ்தானம் (1849), சம்பல்பூர் சமஸ்தானம் (1849), நாக்பூர் சமஸ்தானம் (1854), ஜான்சி சமஸ்தானம் (1854), தஞ்சாவூர் சமஸ்தானம் (1855), உதயப்பூர் சமஸ்தானம் ஆகிய பகுதிகளை சொந்தமாக்கிக் கொண்டது. அவத் ராச்சியம் (இன்றைய அயோத்தி) ஜாதியக் கொடுமைகள் மற்றும் மக்களைக் கொடுமைப்படுத்துதல் போன்ற மோசமான ஆட்சி முறையையால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகவே அதனை 1858இல் பிரித்தானிய இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது.
ஆரியச்சட்டத்தினால் கைவிட்டுப்போன ஜான்ஸி
மன்னன் இறந்தால் என்ன, அவர் மனைவி ராணி லட்சுமிபாயை அரசியாய் அறிவிக்கலாமே?
மன்னன் அனுப்பிய செய்தி போய் சேருமுன் மன்னர் இறந்தால் என்ன, பிறகு ராணி லட்சுமிபாய் இந்த விவரத்தை தெரிவித்து, இந்த தத்து பத்திரத்தை உறுதி செய்திருக்கலாமே?
இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை செய்திருந்தாலும் கூட ஜான்ஸியின் சுதந்திரத்தை காப்பாற்றி இருக்கலாமே, ஏன் அப்படி செய்யவில்லை? என்ற கேள்வி எழலாம்.
உண்மையில் மன்னர் கங்காதர் ராவ் இறந்த பிறகு ராணி லட்சுமிபாய் தன்னுடைய தத்துப்பிள்ளைக்கு அரசு அமைக்கும் அதிகாரம் கோரி கிழக்கிந்திய கம்பனிக்கு மனு போட்டார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது காரணம் ஆரியச் சட்டத்தின் படி ராணி லட்சுமிபாய் வேதமத மரபில் வருபவர். அவருக்கு “ஆரியவிதி நூலான மனுஸ்மிருதி சட்டம்” ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை! மனுஸ்மிருதி சட்டம், கணவன் இல்லாத ஆரிய மத மரபைக்கொண்ட பெண்ணை தத்தெடுக்கவும் அனுமதிக்கவில்லை இந்த ஆரியர் வகுத்த சட்டத்தை வைத்து தான் இந்தியாவின் பல சமஸ்தானங்களை கைப்பற்றினார்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள்.
இந்த வாரிசு இழப்புக் கொள்கை சட்டத்தை வைத்து ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தையும் பிரிட்டிஷார் கைப்பற்ற முயன்றார்கள். 1846இல் தன் கணவனை இழந்த பர்வதவர்தினி நாச்சியார், 1862 வரை தானே ஆட்சி செய்தார்.
பிறகு அவரின் தத்துப் பிள்ளையான முத்துராமலிங்க சேதுபதி ஆட்சி அமைத்தார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இதை தடுக்க முயற்சி செய்ய, அதை எதிர்த்து முத்துராமலிங்க சேதுபதியின் சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது அவர் “நீங்கள் கையில் எடுக்கும் சட்ட விதி மனுஸ்மிருத்தியை அடிப்படையாகக் கொண்டது. மனு ஸ்மிருத்தியோ ஆரியர்களுக்கான புத்தகம். நாங்கள் திராவிடர்கள். எங்கள் ஊரில் பெண்கள் அரசியராய் அதிகாரம் செலுத்தும் மரபு உண்டு என்று வாதாடினார். அதாவது “எங்கள் சட்டம் Aryan school of law -வின் கீழ் வராது. நாங்கள் திராவிட இனத்தை சேர்ந்தவர்கள். எங்களுடைய சட்டம் Dravidian School of law எங்கள் திராவிட விதிகளின்படி அந்த தத்தெடுப்பு செல்லும்” என்று வாதாடி 1868-இல் வெற்றி பெறுகிறார்.
கவுன்சிலும் “இந்து மதம் வேறு; திராவிட இனம் வேறு; திராவிட இனம் இந்து மதத்தில் அடக்கமான ஒரு பிரிவு அல்ல” என்ற உண்மையை உணர்ந்து, வெள்ளைக்கார மதுரை ஆட்சியருக்கு எதிராகவே தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் காரணமாக இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதியே அரசராக நீடித்தார். அவருடைய சொத்துகளும் அவருக்கே உரியதானது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க முத்துராமலிங்க சேதுபதி Vs மதுரை கலெக்டர் வழக்கு Moores Journal என்ற ஆங்கில பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளது. இந்திய ஒன்றிய சட்டப்புத்தகத்தில் “இந்து குடும்ப சட்டத்திலும்” இவ்வழக்கு இடம் பெற்றுள்ளது.
ராணி லட்சுமிபாயை ஆட்சி செய்யவிடாமல் தடுத்தது, ஆங்கிலேயர்களின் சட்டம் அல்ல அது மனுஸ்மிருதிதான்
இதைத்தான் சீர்திருத்த வேண்டும் என்று நேருவும் அம்பேத்கரும் போராடினார்கள் என்பதை நினைத்துப்பாருங்கள்!
ஹிந்து சட்டத்தை திருத்திய அம்பேத்கர், “கணவனை இழந்த பிறகும் ஒரு பெண்ணுக்கு தனியாக ஒரு குழந்தையை தத்தெடுக்கும் உரிமை உண்டு” என்ற மாற்றத்தை ஏன் கொண்டுவந்தார் என்பது இப்போது இன்னும் தெளிவாக நமக்கு விளங்கும்! நடந்துகொண்டு இருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும் போது “இன்றளவும் மனுஸ்மிருதியை தூக்கிக்கொண்டாடும் கூட்டம் உள்ளது” என்று முழங்கினார்.
தந்தை பெரியார் தென்னாட்டில் மனுதர்மத்தை கொளுத்தினார். அண்ணல் அம்பேத்கர் வடநாட்டில் மனுதர்மத்தை கொளுத்தினார். ஏன் இருவரும் மனுதர்ம நூலை கொளுத்த வேண்டும்? ஈராயிரமாண்டுகளாய் இந்திய துணைக்கண்ட சமூகங்களில் இந்த நூல் உருவாக்கிய தாக்கம் என்ன? மானுடத்தை நேசித்த ஒடுக்கப்பட்ட சமூகங்களின் இரு பெரும் தலைவர்கள் முன்வந்து ஒரு நூலைக் கொளுத்துமளவுக்கு அதில் வஞ்சகம் இருந்தது.
ஹிந்துவாக மாற்றப்பட்டதால் தான் வர்ணாசிரமத்தின் நான்கு வர்ணத்திற்கு கீழான நிலையில் சூத்திரர்களாக மாற்றப்பட்டிருக்கிறோம். இந்துவாக இருக்கும் வரை நாம் சூத்திரன் என்றே இந்து சட்டமாக இருந்த மனுதர்மத்தில் கூறப்பட்டிருக்கிறது. மனுதர்மம வரையறுத்த 8-ஆவது அத்தியாயம் 415-ஆவது சுலோகத்தின்படி, சூத்திரன் என்பவர்கள் ஏழு வகைப்படுவார்கள்.
புறங்காட்டி ஓடுபவன்
யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்பட்டவன்
பார்ப்பனன் இடத்தில் பக்தியினால் ஊழியம் செய்கிறவன்
விபச்சாரி மகன்
விலைக்கு வாங்கப்பட்டவன்
ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
தலைமுறையாக ஊழியம் செய்கிறவன்
இவையெல்லாம் இந்து மத சட்டமான மனுதர்மம் சூத்திரனாக வரையறுக்கும் நமக்கு வைத்த பட்டங்கள். இதைத் தான் கேள்விக்குட்படுத்தினார் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா.
1837-ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட இந்திய குற்றவியல் சட்டத்திற்கு முன்பு வரை இந்திய சமஸ்தானங்களில் பார்ப் பனருக்கு மரண தண்டனை இல்லை என்ற பாதுகாப்பே நீடித்தது. இந்தச் சலுகை அளிப்பதை பொதுமக்கள் எதிர்த்தபோது அவர்களை சமாதானப்படுத்த திருவாங்கூர் சமஸ்தானத்தின் பார்ப்பனரான திவான், ஒரு சாமர்த்தியமான வழியை கண்டார். பார்ப்பனர்களுக்கு தூக்குத் தண்டனை அளிப்பதை தவிர்ப்பதற்காக தூக்குத் தண்டனையை ஒழித்து விட்டார்.
இதே மனுதர்மத்தைக் கொண்டு அரசர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு பார்ப்பனர்கள் தங்களுக்கு சலுகைகளை எழுதிக் கொண்டனர். தனக்கு கீழ்ப் படிநிலையில் இருப்பவர்களாக மனுதர்மத்தில் எழுதி வைத்த சத்திரியர், வைசியர், சூத்திரர்களுக்கு தண்டனைகளையும் சட்டமாக எழுதி அதனை அரசர்களை ஏற்றுக் கொள்ள வைத்தனர் பார்ப்பனர்கள்.
இதில் கொடுமை என்னவென்றால், வட நாடுகளில் இருப்பவர்கள் தான் பார்ப்பனனுக்கு கீழ் நிலையில் உள்ள சத்திரியன், வைசியன், சூத்திரன் பிரிவுகளெல்லாம். தென்னாடுகளில் இருப்பவர்கள் அனைவரையும், அதாவது திராவிடர்களை சூத்திரர்கள் என்றே குறித்தனர். மனுதர்மத்தின் படி நாமனைவரும் சூத்திரர்களே.
மனுதர்ம நூலில், பாதிக்கும் மேற் பட்டவை பார்ப்பனர்களை உயர்த்தியும், மற்ற வர்ணத்தவரை தாழ்த்தியும், குறிப்பாக சூத்திரர்களையும் – பெண்களையும் அடிமைகளாகவும் நிலை நிறுத்துவதையே நீதியாக போதித்திருக்கிறது. இதற்காகவே பெரியார், அம்பேத்கர் மனுதர்ம நூலை கொளுத்தினார்கள்.
இந்த மனுவை எரிக்காமல் அதனைக் காத்து நிற்கும் பார்ப்பனியத்தை எதிர்க்காமல் சுயமரியாதை கொண்டவர்களால் எப்படி இருக்க முடியும்? இதைத் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களும் எதிர்த்து நின்றார்.
இப்படி நம்மை இழிவுபடுத்திய மனுதர்மத்தைத் தான் கொளுத்தினார்கள் சமூகநீதிக் காவலர்களான, இரு பெருந் தலைவர்கள் பெரியாரும், அம்பேத்கரும். 1928ஆம் ஆண்டு “மனுசாஸ்திரத்தை எரிக்க வேண்டும், ஏன்?” என்ற குடியரசு இதழ் கட்டுரையில்,
“தமிழ்நாட்டில் தற்காலம் தோன்றி யிருக்கும் சுயமரியாதைக் கிளர்ச்சியின் பலனாக இந்துமதமென்பதைப் பற்றியும், அதற்கு ஆதாரமாகவும் உள்ள வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம் என்பனவற்றைப் பற்றியும், வருணம், தர்மம் என்பனவற்றைப் பற்றியும் மக்களுக்குள் பரபரப்புண்டாகி அவற்றைப் பற்றித் தீவிரமாக ஆராய்ச்சி செய்தலும், அவற்றின் புரட்டுகளை வெளியாக்கி தைரியமாய் கண்டித்தலும், அவற்றால் ஏற்பட்ட கொடுமைகளை ஒழிக்க ஆங்காங்கு தீவிரப் பிரசாரம் செய்தலும், கொடுமைக்கு ஆதரவளிக்கும் ஆதாரங்களைத் தீயிட்டுக் கொளுத்துதலுமான பிரச்சாரங்கள் மும்முரமாய் நடப்பதைக் கண்டு பார்ப்பனர்கள் தங்கள் வாழ்வுக்கே ஆபத்து வந்தெனக் கருதி இவைகளுக்கு விரோதமாக எதிர்ப் பிரச்சாரம் செய்வதும், பார்ப்பனரல்லாதாரிலேயே சிலரை ஏவிவிட்டு இடையூறு செய்விப்பதும், வேறு மார்க்கத்தில் வாழ முடியாதவர்கள் இவ்வெதிர்ப் பிரசாரத்திற்கு ஆதரவளித்து வாழ்வதுமான காரியங்கள் நடை பெற்று வருவதும் யாவரும் அறிந்த விசயயாகும்.” என்று பெரியார் எழுதுகிறார். இன்றளவும் இதைத் தான் பார்ப்பனர்கள் செய்து வருகிறார்கள். பார்ப்பனல்லாதவர்களை தூண்டி இந்துக்களின் மனம் புண்பட்டு விட்டதாக கூறி கலவரத்தில் ஈடுபட வைக்கின்றனர்
1927ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள் மகாத் (சாவதர்) பொதுக்குளத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் நீர் அருந்தும் உரிமைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகாத் அமைதி வழி கிளர்ச்சி போராட்டத்தில், அம்பேத்கர் அவர்கள் போராட்டக்காரர்களுடன் மனுதர்மத்தை எரித்தார். “பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சதுர்வர்ணாவை (வர்ணாசிரமம்) நான் நம்பவில்லை, ஜாதி வேறுபாடுகளை நான் நம்பவில்லை, தீண்டாமை என்பது இந்து மதத்திற்கு ஒரு களங்கம் என்று நான் நம்புகிறேன், அதை முற்றிலுமாக அழிக்க நான் நேர்மையாக முயற்சிப்பேன்” போன்ற பல உறுதிமொழிகளை எடுத்து மனுதர்மம் எரிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில்,
“மனு ஸ்மிருதி தஹான் பூமி” (மனுஸ்மிருதிக்கான தகனம்).
தீண்டாமையை அழியுங்கள்.
பார்ப்பனியத்தை அடக்கம் செய்யுங்கள்.
போன்ற பதாதைகளை வைத்திருந்தனர். “மனுஸ்மிருதியைப் படித்ததன் மூலம் சமூக சமத்துவம் என்ற கருத்தை தொலைதூரத்தில் கூட அது ஆதரிக்கவில்லை என்பது எனக்கு உறுதியானது” என தனது இதழில் எழுதி மனுதர்ம நூலை எரித்ததற்கான நியாயங்களை அண்ணல் அம்பேத்கர் எடுத்துரைத்தார்.
தந்தை பெரியார் அவர்களோ, “நம் மக்களில் அனேகர் எவர் எப்படி செய்தா லென்ன? நம் ஜீவனத்துக்கு வழியைத் தேடுவோம் என்று இழிவையும் சகித்துக் கொண்டு உணர்ச்சியில்லா வாழ்க்கையில் ஈடுபட்டிருந்ததால் தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் இத்கொடுமைகள் ஒழிய வழியில்லாது இருந்து வந்திருக்கின்றது. இதற்கு முன்னால் பல பெரியவர்கள் தோன்றி ஜாதிக் கொடுமைகளையும், வித்தியாசங்களையும் ஒழிக்கப் பாடுபட்ட போதிலும், அவர்களும் மதத்தின் பெயராலும் வேறு சூழ்ச்சிகளாலும் அடக்கி துன்புறுத்தப்பட்டு இருக்கின்றனர். ஒவ்வொருவரும் நமக்கு என்ன? நம் ஜீவனத்துக்கு வழியைப் பார்ப்போம் என்று இழிவுக்கு இடம் கொடுத்து கொண்டு போகும் வரை சமூகம் ஒரு காலத்திலும் முன்னேறாது. ஜாதிக் கொடுமைகள் ஒரு போதும் ஒழிய மார்க்கம் ஏற்படாது என்பது திண்ணம்.” என சூத்திரப் பட்டத்தை தாங்கியும் நம்முடைய அலட்சியமான போக்கினைக் கண்டு கொதித்தெழுந்தார்.
மனுதர்மத்தை கொளுத்திய அண்ணலை அரசியல் லாபத்திற்காக ஜீரணிக்கத் துடிக்கும் ஹிந்துத்துவம் தந்தை பெரியாரை நெருங்கமுடியாமல் அவரது பெயரைக் கேட்டாலே அனலில் போட்ட புழுவாக துடித்துக்கொண்டு இருக்கிறது.
தென்னாடு என்றாலே திராவிடம் இங்கே ஆரிய சட்டத்திற்கும் ஆரிய ஆதிக்கத்திற்கும் இடமில்லை என்பது 200 ஆண்டுகளுக்கு முன்பே லண்டன் பிரிவியூ கவுன்சில் வரை சென்று வெற்றிபெற்ற வரலாறு உணர்த்துகிறது.
ஆகையால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் தந்தை பெரியாரின் கருத்தை நாடாளுமன்றத்தில் எடுத்தியம்பியதும் ஆரியக் கூட்டம் கூச்சலிட்டு குய்யோ முறையோ என்று கத்தியதும் அல்லாமல் தந்தை பெரியாரின் பெயரையே அவைக்குறிப்பில் இருந்து நீக்கியுள்ளது.