நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்புப் பிரச்சினை:
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது!
சென்னை, மார்ச் 24 2026 ஆம் ஆண்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மேற்கொள்ளப்படும் தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கைப்படி தமிழ்நாட்டின் ஜனநாயக உரிமை, அரசியல் பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தோடு கூட்டப்ட்ட கூட்டத்தின் நோக்கம், சட்டமன்றத்தில் இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விளக்கி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (24.3.2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
பேரவை நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த நேரத்தில் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரக்கூடிய மரபிற்கிணங்க, “நியாயமான தொகுதி மறுசீரமைப்பு”க்கான கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் குறித்து மாண்புமிகு பேரவை உறுப்பினர்களுக்கு மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
2026 ஆம் ஆண்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கக்கூடிய தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தமிழ்நாட்டின் ஜனநாயக உரிமை, அரசியல் பிரதிநிதித்துவ உரிமை ஆகியவை பாதிக்கப்படும் அபாயத்தையும், மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டி, முன்கூட்டியே எச்சரிக்கை மணியடித்தும் இந்தியாவிலேயே முதன்முதலாக நம்முடைய தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14.2.2024 அன்று ஒருமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்.
மேலும் 30 ஆண்டுகளுக்கு.
அடுத்தகட்டமாக, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை கடந்த 5.3.2025 அன்று கூட்டி, “இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநி லங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய மக்கள்தொகை அடிப்படையிலான “நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பை” கடுமையாக எதிர்த்தும், “தற்போது இருக்கும் தொகுதி வரையறை 2026-லிருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டுமென்றும்; மாண்புமிகு பிரதமர் அவர்கள் நாடாளுமன்றத்தில் உறுதியளிக்க வேண்டும்; அரசமைப்புச் சட்டத்தில் அதற்குரிய சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்” எனவும், “நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், 1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படை யில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தியும்”, மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கும், பாதிக்கப்படும் மாநிலங்களுக்கும் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையை மக்களுக்கு வெளிப்படுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நமது நியாயமான கோரிக்கைகளையும், அவைசார்ந்த போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்லவும், ஒன்றிய அரசிற்கு மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், “கூட்டு நடவடிக்கை குழு” ஏற்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான முன்னெடுப்பில் மிகத்தீவிரமாகச் செயல்பட்டு, 22.3.2025 அன்று அந்தக் கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
கேரள மாநிலத்தினுடைய முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள், தெலங்கானா மாநிலத்தினுடைய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் மாநிலத்தினுடைய முதலமைச்சர் பகவந்த் மான், கருநாடக மாநிலத்தினுடைய துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய கட்சித் தலைவர்கள் நேரில் பங்கேற்க, ஒடிசா மாநிலத்தினுடைய மேனாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்து கொண்டார்.
மக்கள் தொகைக் கட்டுப்பாடுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது!
விரிவான ஆலோசனைக்குப் பிறகு “நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்து வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும்”; “1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்”; “மக்கள்தொகை கட்டுப்பாடுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது”; “உரிய அரசமைப்புச சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்”; “கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்”; “நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இதுகுறித்து பிரதமர் அவர்களுக்குக் கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பில் சந்தித்து கடிதம் அளித்து முறையிடுவது” என கூட்டாட்சி தத்துவம், ஜனநாயக உரிமை, அரசியல் பிரதிநிதித்துவ உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
தமிழ்நாடு முன்னெடுத்துச் செல்கின்ற தொகுதி மறு சீரமைப்பு குறித்த விழிப்புணர்வு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்காக இந்த முன்னெடுப்பிற்கு துணை நின்ற தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சி களுக்கும், கூட்டு நடவடிக்கைக் குழுவில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் தமிழ்நாடு மக்களின் சார்பில் இப்பேரவையின் வாயிலாக என்னுடைய இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு போராடும் – வெல்லும்!
“தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்” என்ற முழக்கத்தினை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்று நமது உரிமைகளை, நம் போல் பாதிக்கப்படும் மாநிலங்க ளின் உரிமைகளை மீட்டெடுத்திட, நியாயமான தொகுதி மறுசீரமைப்பைப் பெற்றிட தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.க்களை எல்லாம் அழைத்துச் சென்று மாண்புமிகு பிரதமர் அவர்களைச் சந்திக்கவிருக்கிறோம் என்பதையும் இந்த அவைக்குத் தெரிவித்து அமைகிறேன்.
– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேர வையில் உரையாற்றினார்.