சாம்பவர் வடகரை மட்டுமல்ல, வட கரையும் (வட நாடும்) நமக்கு வெற்றி அளித்திருக்கிறது!
‘‘இந்தியா கூட்டணி’’ என்பது வெறும் அரசியல் பார்வையல்ல; சமூகநீதிப் பார்வை!
தென்காசி. ஜூலை 5 சாம்பவர் வடகரை மட்டுமல்ல, வட கரையும் (வட நாடும்) நமக்கு வெற்றி அளித்திருக்கிறது! இந்தியா கூட்டணி என்பது வெறும் அரசியல் பார்வையல்ல; சமூகநீதிப் பார்வை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் நடைபெற்ற நாற்பெரும் விழாவில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு எழுச்சி உரையாற்றினார். தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி சிறீகுமார் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
தென்காசி மாவட்டம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு, மானமிகு சுயமரி யாதைக்காரர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த பெருமக்களுக்கு நன்றி பாராட்டு விழா என நாற்பெரும் விழாக்கள் நேற்று (4.7.2024) மாலை 5.30 மணியளவில் சாம்பவர் வடகரை பேருந்து நிலையம் அருகில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பெண்கள் உள்பட பொதுமக்கள் கூடியிருந்து கூட்டத்தை சிறப்பித்துக் கொடுத்தனர்.
நிகழ்ச்சியை தலைமை ஏற்றுச் சிறப்பித்தார் தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன். தி.மு.க. புதூர் பேரூராட்சி மன்றத் தலைவர், ஒன்றியச் செயலாளர் ரவிசங்கர் அனைவரையும் வரவேற்றுச் சிறப்பித்தார். சாம்பவர் வடகரை தி.மு.க. நகரச் செயலாளர் த.முத்து இணைப்புரை வழங்கி சிறப்பித்தார். ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தி.மு.இராஜேந்திரன், சாம்பவர் வடகரை பேரூராட்சித் தலைவர் சீதாலெட்சுமி முத்து, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ராணி சிறீகுமார், திராவிட தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் கரு. வீரபாண்டியன், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் உதயசூரியன், ம.தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் செல்வ சக்தி வடிவேல், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதீர் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றி சிறப்பித்தனர். தொடக்கத்தில் மாலை 5.30 மணியளவில் ஈட்டி கணேசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது.
சமூக பக்கவாதத்தைப் போக்கியது
திராவிட இயக்கம்!
நிறைவாக ஆசிரியர் உரையாற்றினார். அவர் தனது உரையை, “சாம்பவர் வடகரை மட்டுமல்ல, வடகரையும் (வடநாடும்) நமக்கு வெற்றி அளித்திருக்கிறது” என்று உற்சாகத்துடன் மக்களின் ஏகோபித்த கரவொலியுடன் தொடங்கினார். கூட்டத்தில் முன்வரிசை உள்பட ஏராளமான பெண்கள் அமர்ந்திருந்தைப் பார்த்த ஆசிரியர், திராவிடர் இயக்கத்தின் ஒரு நுட்பமான கருத்தை மக்கள் முன் வைத்தார். அதாவது, “பெரியார் மட்டும் பிறந்திருக்காவிட்டால் நமக்கு மான உணர்ச்சி வந்திருக்காது. அதைத்தான் அய்யா, ‘மானமும் அறிவும் மனிதர்க்கழகு’ என்றார்” என்று முன்னோட்டமாக சொல்லிவிட்டு, சுயமரியாதை இயக்கம் முன்னெடுத்த பெண் விடுதலை கோட்பாட்டை விவரித்தார். அதாவது, “சமூகத்தின் சரிபாதி இருக்கும் பெண்களை அடிமையாகவே வைத்திருந்தது ஹிந்து தர்மம். பெண்கள் படிக்கக் கூடாது, வேலைக்கு போகக்கூட்டது என்று முடக்கி வைத்திருந்தது.
இதை ஒழித்துக்கட்டத்தான் 1929 இல் செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் தந்தை பெரியார் பெண் விடுதலைக்கென ஏராளமான தீர்மானங்களை வடித்தெடுத்தார். அதில் ஒன்று பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு கேட்டார்” என்று சொல்லிவிட்டு, ஏன் 50 விழுக்காடு என்பதை நுட்பமான எடுத்துக்காட்டைக் கூறி விவரித்தார். அதாவது, “ஆண், பெண் சம உரிமை என்று சொல்லும் போது, நமக்கிருக்கும் இரண்டு கைகளில் ஒரு கை செயலிழந்தால், ஒரு கால் செயலிழந்தால் அது பக்க வாதம் அல்லவா? அப்படித்தான் சமூகத்தில் 50 விழுக்காடு உள்ள பெண்களை அடிமையாக வைத்திருப்பதும் என்று பெரியார் உணர்ந்து, அதை மாற்ற தீர்மானம் போட்டார். அதை இன்றைய ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் உள்ளாட்சி களில் நடைமுறைப்படுத்தியுள்ளார். இது பெரியாரின் தொடர்ச்சிதான்! அண்ணாவின் தொடர்ச்சிதான்! முத்தமிழ் அறிஞர் கலைஞரின் தொடர்ச்சி தான்!” என்று நிறுத்தினார். கரவொலிகள் பேருந்து நிலையத்தையே நிறைத்துவிட்டது.
ஆஸ்திக்கொரு பெண்ணாக மாற்றியது
திராவிடர் இயக்கம்!
தொடர்ந்து பேசிய ஆசிரியர், “ஆசைக்கொரு பெண்; ஆஸ்திக்கொரு ஆண் என்றிருந்த சமூகத்தை ஆஸ்திக்கொரு பெண் என்று ஆக்கியது திராவிடர் இயக்கம்” என்றார் கரவொலி முழங்க. முதலில் ஆசைக்கொரு பெண்; ஆஸ்திக்கொரு ஆண் என்று சொல்லும் போது சிரித்த பெண்கள், அடுத்து சொன்னதைக்கேட்டதும் மெய்சிலிர்த்துப் போய் உணர்ச்சிப் பெருக்குடன் கையொலி செய்தனர். இந்தப் பழமொழியை செங்கல்பட்டு மாநாட்டுடன் தொடர்புபடுத்தி பேசி, ஒன்றிய அரசில் அண்ணல் அம்பேத்கர் இந்து கோட் பில் கொண்டு வந்து நிறைவேற்ற முயன்று தோற்றுப்போனதைச் சுட்டிக்காட்டி, 1989 இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்று கொண்டு வந்ததையும், அதே கலைஞர் யுபிஏ அரசில் அங்கம் வகித்து, இந்தியா முழுவதும் இருக்கும் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை உண்டு என்று சட்டம் கொண்டு வருவதற்கு உறுதுணையாக இருந்த தைக் குறிப்பிட்டதும் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் சேர்த்து கரவொலி செய்தனர்.
மேலும் ஆசிரியர், “பெண்கள் நகை வேண்டும், புடவை வேண்டும் என்றுதான் கேட்டிருப்பீர்களே தவிர, சொத்தில் சமபங்கு கேட்டிருப்பீர்களா?” என்று கேட்டார். பெண்கள் வெட்கத்துடன் சிரித்தனர்.
‘‘நீங்கள் கேட்காமலேயே அதைச் செய்தது திராவிடர் இயக்கம்” என்று தொடர, மீண்டும் கரவொலி எழுந்து அடங்கியது. ‘‘இப்படி 50 விழுக்காடு இருக்கும் பெண்களுக்கு இன்று வரை பல்வேறு நலத்திட்டங்கள் செய்து வருவதால்தான் தமிழ்நாடு எல்லா வகையிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. அதனால் தான் தமிழ்நாட்டைக் கண்டால் சிலருக்கு அச்சமாக இருக்கிறது. தெற்கே நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைக் கண்டால் அஞ்சுகிறார்கள்.அதே போல் வடக்கே ராகுல் காந்தியைக் கண்டால் அஞ்சுகிறார்கள்” என்று சொல்லிவிட்டு, ‘‘அதனால் இந்தியா கூட்டணி என்பது வெறும் அரசியல் பார்வையல்ல, சமூகநீதிப் பார்வை. இப்படிப்பட்ட வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு நன்றி, ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி’’ என்று கூறி, திராவிடர் இயக்கத்தின் தேவையை, ஆளுமையை பெண் விடுதலை தொடர்பாக மட்டுமே குறிப்பிட்டு தனது உரையை நிறைவு செய்தார். ஆசிரியர் சாம்பவர் வடகரையில் முதன் முறையாக பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மாநில கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் ஒன்றிய அரசின் பல்வேறு தவறுகளைச் சுட்டிக்காட்டி பேசினார்.
பங்கேற்று சிறப்பித்தோர்!
நிகழ்ச்சியில் கழகக் காப்பாளர் டேவிட் செல்லத்துரை, தலைமைக் கழக அமைப்பாளர் இல. திருப்பதி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா. குணசேகரன், சுரண்டை தி.மு.க. நகரச் செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் அய்.இராமச்சந்திரன், பொன்ராஜ், ம.தி.மு.க. தணிக்கைக் குழு உறுப்பினர் இராமகிருஷ்ணன், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திகப் பொன்முடி, மாநில மாணவர் கழக செயலாளர் செந்தூரபாண்டியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சவுந்திரபாண்டியன், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் இனியன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர். இறுதியில் வடகரை நகர கழக செயலாளர் சண்முகம் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.