‘திராவிட இயக்கத்தின் முதுபெரும் தொண்டராகி, பிறகு படிப்படியாக உயர்ந்தவர் திரு.ஆர்.எம். வீரப்பன் அவர்கள். 1963 ஆம் ஆண்டு சத்யா மூவிஸ் என்ற திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார். 1995 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். கழகம் என்பதை நிறுவியவர் திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் (வயது 97). அரசியலில் ஒரு தனி இடத்தைப் பெற்ற அவர் இன்று (9.4.2024) மதியம் சென்னை மருத்துவமனை ஒன்றில் உடல்நலக் குறைவு, வயது மூப்பின் காரணமாக காலமானார் என்ற செய்தி அறிந்து, மிகவும் துயரமும், வேதனையும் அடைந்துள்ளோம்.
மறைந்த பெருமதிப்பிற்குரிய ஆர்.எம்.வீ. அவர்கள், திராவிடர் கழகத்தின் அடிநாட்களிலேயே இணைந்து, திராவிடர் இயக்கத் தலைவர் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., அதற்கடுத்து மேனாள் முதலமைச்சர்கள் செல்வி ஜெயலலிதா, ஜானகி எம்.ஜி.ஆர்., இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோடு நல்லி ணக்கத்துடன் திராவிட இயக்கத்தில் தொண்டாற் றியவர் – அமைச்சராகவும் சீரிய முறையில் பணியாற்றியவர்.
தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழ்நாடு அரசு, ஓராண்டு நடத்தியதில் பெரும் பங்காற்றியவர் – பெரியார் ஒலி, ஒளிக்காட்சியை மிக அற்புதமாக அமைத்த பெருமைக்குரியவர்.
தி.மு.க.வின் தோழமையை இறுதியில் ஏற்றவர்.
அவரது மறைவு, அக்குடும்பத்திற்கு மட்டுமல்ல, திராவிடர் இயக்கத்திற்கே ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பாகும்! அவரது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு நமது வீர வணக்கம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
9.4.2024