எங்க அப்பாவைவிட நான் புத்திசாலி. என்னைவிட என் மகன் புத்திசாலியாக இருக்கிறான். தொலைக்காட்சி, செல்போன், வீடியோகேம்ஸ் எல்லாம் இப்பவே அத்துப்படி இப்படி பேசாதவர்கள் அரிது. ஆண்டுகள் போகப் போக மனிதனின் அறிவு, புத்திக்கூர்மை அதிகரிக்கிறது என்பது இவர்களது கொள்கை, நம்பிக்கை. இதைத் தகர்க்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு.
மனிதனின் மூளைபற்றி அமெரிக்காவின் விஸ்கோன்சின் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தெரியவந்த தகவல்கள்: 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை, மனிதனின் மூளை, படிப்படியாக வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது. கடந்த 20 ஆயிரம் ஆண்டுகளாக மூளையின் அளவு படிப்படியாக குறைந்துவிட்டது. 1,500 கன செ.மீ. பரப்பு இருந்த மூளை தற்போது 1,350 கன செ.மீ.தான் இருக்கிறது.
ஏறக்குறைய கிரிக்கெட் பந்துஅளவு காலியாகியிருக்கிறது என்கிறது அந்த ஆய்வு. அளவுதான் சுருங்கியதே தவிர, திறமையும் கற்பனைத் திறனும் புத்திக் கூர்மையும் அதிகரித்திருக்கிறது என்று ஒரு தரப்பு விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.