
நிறம் மாறும் பச்சோந்தி பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அடிக்கடி நிறத்தை மாற்றிக் கொள்ளும். செடிகொடிக்குள் நின்றால் தன் உடலை பச்சை, மஞ்சளாகவும், மரப்பட்டையில் நிற்கும்போது கருப்பும், காபி வண்ணமும் கலந்ததுபோல உடலின் நிறத்தை மாற்றித் தப்பித்துவிடும்.
இதுபோல சில கடல் வாழ் மீன்களும் எதிரி மீன்களிடம் இருந்து தப்பிக்க சிறப்பு அமைப்புகளைப் பெற்றிருக்கின்றன. அவற்றில் மிக விந்தையான உடலமைப்பைப் பெற்ற மீன்கள் இரண்டு. ஒன்று இலை மீன். மற்றொன்று வேதாள மீன். இவற்றை மீன் என்று யாரும் எளிதில் கண்டுபிடித்து விட முடியாது. இலை மீன் அசல் இலைபோன்ற வடிவத்திலும், நிறத்திலும் காணப்படும். அதேபோல சீ டிராகான் (கடல் வேதாள மீன்) என்ற மீன், இலை நரம்புகள் போன்ற தோற்றத்திலும், வேதாளம் போன்ற வினோத உருவம் கொண்டதாகவும் இருக்கும். எதிரி மீன்களுக்கு இவற்றை சரியாக இனம் காண முடியாது. அதனால் இவை பகை மீன்களிடமிருந்து எளிதில் தப்பித்துக்கொள்கின்றன.
படத்தில் இருக்கும் மீன்களைப் பாருங்கள் அதன் உடலமைப்பு ஆச்சரியமாகத்தானே இருக்கின்றன? இவைபோல ஜேக்னைப் என்ற மீனும், ஏஞ்சல் என்ற மீன் இனமும் தன் உடலில் பெற்றுள்ள வண்ண பட்டைகளை ஒளிவீசச் செய்து எதிரி மீன்களை திசை திருப்பி விடுகின்றன.