
காட்சி-1
மகன்: ஏம்மா, மேலே பறக்கற அந்தப் பருந்தைப் பார்த்து, கன்னத்திலே போட்டுக்கிட்டு கும்பிடுறீங்க?
தாய்: அது பருந்தல்ல! நமது திருமாலின் வாகனம்!
மகன்: அப்படீன்னா, அதைக் கண்டால் பய பக்தியோடு கும்பிடனுமாம்மா?
தாய்: ஆமாம்! அந்தக் கருடாழ்வாரைப் பார்ப்பதே பெரிய புண்ணியம்! கட்டாயம் நாம் அதைப் பயபக்தியோடு கும்பிடனும்.
காட்சி-2
மகன்: அம்மா! நேற்று நீங்க காட்டிய அந்தக் கருட பகவான் இன்று நம்ம வீட்டிலேயே வந்து உட்கார்ந்திருந்தாரம்மா!
தாய்: அப்படியா! நமக்கு ஏதோ நல்ல காலம் வந்திருக்கு! சரி! நீ என்ன செய்தே!
மகன்: நீங்க சொல்லிய அறிவுரைப்படி அந்த கருடபகவானை பயபக்தியோடு கும்பிட்டேன்!
தாய்: (தனக்குள்) அடடா! இந்த சின்ன வயதில் எவ்வளவு பக்தி உணர்வு!
மகன்: அப்புறம் நம்ம கருட பகவான் கீழே வந்து நம்ம கோழிக்குஞ்சு ஒன்றை தூக்கிக்கிட்டு மேலே போனார் - நம்ம கருடபகவான்தானே என்று நானும் மகிழ்ச்சியோடு பார்த்துக்கிட்டு நின்றேனம்மா!
தாய்: அட, தடிப்பயலே! அந்தப் பருந்தை அடிச்சு விட்டாமே பார்த்துக்கிட்டு நின்றேன் என்கிறாயே! அருமையா வளர்த்த கோழிக்குஞ்சு போச்சே! உனக்கு அறிவு இருக்கா?
மகன்: !......?.....!.......?
காட்சி -3
மகன்: அம்மா! இன்று மீண்டும் அந்தக் கருட பகவான் வந்தாரு!
தாய்: சனியன்! நேற்று கோழிக்குஞ்சை தின்ன ருசியில் இன்று வந்திருக்கு! சரி! அப்புறம் என்ன நடந்தது?
மகன்: மீண்டும் கோழிக்குஞ்சை தூக்கப் போனப்ப, நீங்க சொல்லியபடி கல்லெடுத்து ஒரே அடியா அடிச்சுட்டேன்.
தாய்: அப்புறம் என்ன ஆச்சு?
மகன்: கருட பகவான் இதோ செத்துக் கிடக்காரும்மா!
தாய்: !............?..............!..........?